வெள்ளி, டிசம்பர் 28, 2007

கருவிப்பட்டை ஆலோசனை

இத்தனை நாளா தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை இடுகையோட தலைப்புக்குப் பக்கத்தில வச்சிருப்பீங்க (ஆலோசனைகள் / உதவிப்பக்கங்களைப் பார்த்து).
அதுல ஒரு சிக்கல் என்னன்னா, <script> எனப்படும் நிரல்கள் அவை தரவிறங்கற வரைக்கும் வேறெதைவும் தரவிறங்க விடாதுங்களாம். இங்க Yahoo!வோட நிபுணர் என்ன சொல்லியிருக்காருன்னு கொஞ்சம் படிச்சிப் பாருங்க. குறிப்பா:
  • With scripts, progressive rendering is blocked for all content below the script. Moving scripts as low in the page as possible means there's more content above the script that is rendered sooner. (அதாவது, ஒரு நிரல் தரவிறங்கும்போது, அதுக்குக் கீழே இருக்கற மத்த பகுதிகள் தரவிரங்கறதுக்கு 'தடா' விதிக்கப்படுது. ஆனா, நிரலை பக்கத்துக்கு எவ்வளவு கீழே நகர்த்த முடியுமோ அவ்வளவு கீழே நகர்த்திட்டோம்ன்னா, அதுக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு விரைவா தரவிறங்கறதுக்கான வாய்ப்பு கிடைக்குது)
  • While a script is downloading, however, the browser won’t start any other downloads, even on different hostnames. (அதாவது, ஒரு நிரல் தரவிறங்கிகிட்டு இருக்கும்போது, மற்ற பகுதிகளை தரவிறக்கறதுக்கு முயற்சி கூட செய்யாது நம்ம உலாவி)
அதைப்படிச்சதும் ஒரு யோசனை. அண்மையில் கூட ரொம்ப பேசிக்கிட்டாங்க இந்தக் கருவிப்பட்டையை பத்தி ;). மேல குறிப்பிட்டிருக்கிற நிபுணரின் ஆலோசனைப்படி கருவிப்பட்டையை பக்கத்தின் கீழ்ப்பகுதிக்கு அனுப்பிட்டா, அதுக்கு முன்னாடி, பதிவின் மத்த பாகங்கள் தரவிறங்கிடுமில்லையா? அந்த ஆலோசனையை என்னோட இந்தப் பதிவுலயும் செயல்படுத்தியிருக்கேன். இதை எப்படிச் செய்யறதுன்னு இப்பொ பாக்கலாம்:
  • (Matrixஐப் போல்) Part 1, Part2ன்னு இருக்கிற எல்லா தமிழ்மண நிரலோட பாகங்களையும் ஒண்ணா சேருங்க.
  • அதை அப்படியே கீழே படத்துல காட்டியிருக்கிற இடத்தில் (பின்னூட்டப் பகுதியில் கடைசியில்) ஒட்டுங்க. (</Blogger> என்பதற்கு முன் உள்ள </ItemPage>க்கு சற்று மேலே.)
இதை செஞ்சா, இடுகைகள் இன்னமும் வேகமா திறக்கும்ன்னு எதிர்பார்க்கலாம். அதோட, வெள்ளம், புயல், கடவுளின் கைங்கர்யம் (acts of God), போன்ற காரணங்களால தமிழ்மண வழங்கி செயல்படாம போனாலும், உங்கள் பதிவு எந்த பாதிப்புமில்லாம திறக்கும். (இப்பொ மட்டும் என்ன பாதிப்புன்னு கேட்டீங்கன்னா அதுக்கு எனக்கு விடை தெரியாது. நான் சொல்றது, அப்படி பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் இருந்துதுன்னாலும் அந்த சாத்தியமும் இல்லாமல் நீங்கிடும்ங்கறதுதான்)

பிற்ச்சேர்க்கை: இன்றுதான் இப்பதிவை Bloggerஇன் புதிய பதிப்புக்கு (with "Blogger Layouts") மேம்படுத்தினேன். அதற்கான கருவிப்பட்டையைக் கீழ் நகர்த்தும் செய்முறை பின்வருமாறு:
  • (கீழே படத்திலிருப்பது போல்) Expand widget templates என்பது தேர்வு செய்திருக்க வேண்டும்
  • Comment block இருக்குமிடத்தைக் கண்டு கொள்ள வேண்டும். Templateஇல் <b:include data='post' name='comments'/> என்ற வரிதான் அது.
  • இந்த comment blockஇற்கு அடுத்த வரியில் தமிழ்மண கருவிப்பட்டைக்கான மொத்த நிரலையும் சேர்க்க வேண்டும் (கீழே படத்தில் காட்டியுள்ளதைப் போல்).

  • நிரலை தமிழ்மணத்தின் இந்தப் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். (ஆனால் அதில் part 1, part 2 என்றிருக்கும் பாகங்களை ஒன்றாக சேர்த்து மேலே காட்டியுள்ளபடி ஒட்ட வேண்டும்.)

சனி, டிசம்பர் 22, 2007

தமிழ்மணத்திற்கு தமிழ்மணம் authorityதான்

என்னை / என் பின்னூட்டத்தைக் குறிப்பிட்டு ஒரு இடுகை வெளிவந்துள்ளது. அவ்விடுகையின் கருத்துகளுடன் நான் பெரும்பாலும் உடன்படாத காரணத்தால், என்னைப் பற்றிய குறிப்பிடல்களை (மட்டுமாவது) நீக்கக் கோரி தனிமடல் அனுப்பியிருந்தேன். தான் netizenஆக இருப்பதால் அவ்வாறு குறிப்பிடும் உரிமை தனக்கு உள்ளதென்று விடை கிடைத்தது :) போனால் போகிறதென்று நட்பு காரணமாக என் பெயரை மட்டும் நீக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. நான் வேறொரு இழையில் தெரிவித்த கருத்துகள் out of contextஅக இன்னமும் அவ்விடுகையில் இடம்பெற்றுள்ளன (எனக்கு விருப்பமில்லாத போதிலும்). யோசித்துப் பார்த்ததில் நானும் netizenதானே என்று புலப்பட்டது. ஆகவே, என் பங்குக்கு எனது netizenshipஐப் பயன்படுத்திக் கொள்வதென்று முடிவு செய்திருக்கிறேன்.

அவ்விடுகையின் பின்னூட்ட இழையில் ஒருவர் குறிப்பிட்டது போலவே, பெரிதும் அயர்ச்சியை ஏற்படுத்தியது அவ்விடுகை. பல பிரச்சனைகள் netizenஆக சிந்திப்பதால் வருபவை என்று தோன்றுகிறது. அவ்வாறில்லாமல் வெறும் citizenஆக மட்டுமே யோசித்திருந்தால் பல அடிப்படைத் தெளிவுகள் கிடைத்திருக்கக் கூடும்.

(இந்த நடை போரடிக்குது. இயல்பு நடைக்கு மாறிக்கறேன்)

எழவு, சாப்பிடப் போனாக்கூட உணவு விடுதியின் வாசலில் 'admissions reserved'ன்னு பலகை நம்மளப் பாத்து சிரிக்குது. அதுக்கு அர்த்தம் என்னன்னா, எப்போ வேணா உங்கள கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ள எங்களுக்கு உரிமை இருக்குன்றதுதான். அதைப் புரிஞ்சிக்கிட்டுதான் உள்ள போறோம். கழுத்துப் பிடிச்சி வெளில தள்ளினாலோ, மாவாட்ட சொன்னாலோ அந்த அனுபவத்தை வாங்கிக்கிட்டுதான்
வர்றோம். சாமானியனுக்கும் புரியற இந்த எளிமையான உண்மை netizenகளுக்கு ஏன் புரியறதில்லையோ தெரியல.

என்னதான் netizenship பேசினாலும், இணையமும் நடைமுறை உலகத்தைப் போன்றதுதான். தெருவில் கிடைக்காத எந்த உரிமையும் இங்க மட்டும் கிடைச்சிடாது. எந்த வலைத்தளத்துக்குள்ள போனாலும் அங்க 'admissions reserved' பலகை தொங்கறதா நினைச்சிக்கிட்டு உள்ள போங்க. ஏன்னா, அப்படி தொங்காட்டாலும், உண்மை அதுதான்.

உங்க வீட்டு gateல "No parking in front of this gate - Hanu Reddy Real Estates" அப்படீன்னு ஒருத்தன் பலகையை மாட்டிட்டு போறான். உங்க real estateல வந்து அவன் இப்படி இலவச விளம்பரம் செய்யறது உங்கள உறுத்திச்சுன்னா அதை நீக்கறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. "என்னங்க 'சிறு பத்திரிகை' மனப்பான்மையோட செயல்படறீங்க?" அப்படீன்னு அவன் பதிலுக்கு கேட்டான்னா, அதுக்கு சிரிக்கிறதா அழறதான்னு முடிவு பண்ண வேண்டிய 'அவல' நிலைதான் ஏற்படும்.

சரி, இந்தப் பதிவை எழுதறதுக்கு கூட எனக்கு அயர்ச்சியா இருக்கு. Publish பண்ணிட வேண்டியதுதான்.

புதன், நவம்பர் 14, 2007

பிழைப்பு

சில (ஒரு பக்க) விவாதங்களைப் படிக்க நேர்ந்ததன் விளைவுதான் இந்த இடுகை. பிரஞ்சுப் புரட்சி நடந்த காலக் கட்டத்தில், மக்கள் உண்பதற்கு ரொட்டியின்றி திண்டாடுகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, விவரம் புரியாத அப்பாவியாக இருந்த அந்நாட்டு ராணி 'அப்படியென்றால் அவர்கள் கேக் உண்ணலாமே?' என்று கேட்டாளாம். அதற்கு நிகரான ஒரு வாதம் தமிழ்மண விவாதக் களத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. OMG..... how can people be so insensitive என்பதுதான் அதைப் பார்த்தபின் எனக்குத் தோன்றிய முதல் எண்ணம்.

விஷயம் இதுதானங்க. தமிழ் படிச்சி வேலை கிடைக்காதவங்க டீக்கடை வச்சி பிழைச்சிக்கலாம்ங்கற அருமையான யோசனையை 'ஓசை' செல்லா சத்தமா முன்மொழிஞ்சிருக்காரு. அதையே பலரும் வழி மொழிஞ்சிருக்காங்க. இப்போதைக்கு அது விவாதமே இல்லாதக் களமாத்தான் இருக்கு. (அங்க நான் போட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகல)

டீக்கடை வைக்கிறது அவ்வளவு சுலபமானதா, அதை வெற்றிகரமா நடத்துறதுக்கான திறமை எல்லாருக்கும் இருந்துடுமான்னு அவ்வளவு நிச்சயமா தெரியல. ஒரு டீ எவ்வளவு விலை, அதிலிருந்து எவ்வளவு வருமானம் பாக்க முடியும், ஒரு மதிப்பான தொகையை அந்தத் தொழில்லருந்து பாக்கணும்ன்னா எவ்வளவு டீ ஒரு நாளுக்கு வித்தாகணும், வரப்போற போட்டிகளையும், எதிர்ப்புகளையும் சமாளிக்கறதுக்கு ஆகக்கூடிய செலவுகள், தேவைப்படும் சக்தி எவ்வளவுன்னு ஒரு ஆராய்ச்சிக்கான மேட்டரே அதுல அடங்கியிருக்கு. இல்லன்னா எல்லாரும் டீக்கடை வச்சி வாழ்வாதாரப் பிரச்சனைகள்ன்னா என்னன்னு கேக்கற நிலமைக்கு நாம எப்பவோ போயிருப்போம்.

படிப்புங்கறது பலருக்கு வேண்டா வெறுப்பான ஒரு விஷயம். சிலருக்கு அதுவே தங்கள் கனவுகளை அடையக்கூடிய ஒரு வாய்ப்பு. ஒரு துறையை விரும்பி ஒருத்தன் படிக்கறான்னா அந்தத் துறையில் ஜொலிக்கணும்ங்கிறதுக்காகதாங்க. ஒரு தமிழய்யாவைப் பாத்து தானும் அவரைப் போலவே மதிப்பான ஒரு ஆளா இந்த சமூகத்தில் வளைய வரணும்ன்னு நினைக்கிறான். அந்தக் கனவுக் கோட்டைக்கான வாசல் கதவுதான் அவனோட தமிழ் MA பட்டம். அவனை ஒரு 250 ரூபாய்க்கு வக்கில்லாதவனாதான் இந்த சமூகம் வச்சிருக்குங்கறதுதான் அந்தப் படம் சொல்ற செய்தி. "மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்ற கருத்தை மாணவர்களுக்கு ஒரு உதாரணத்தோட விளக்கிட்டு ("எல்லாரும் பாத்துக்கிட்டு இருக்கும் போது ஒன்ன ஒரு போலிஸ்காரன் பொடனியில ஒண்ணு போட்டு இழுத்துக்கிட்டு போனான்னா எவ்வளவு அவமானமாப் போகும்?" etc etc) , அடுத்த காட்சியில் அந்த உதாரணத்தையே மாணவர்களுக்கு எதிரில் (காவல்துறையினரால் அவமானப் பட்டு) வாழ்ந்து காமிக்கிற அவல நிலைமையைத்தான் இந்த சமூகம் அவனுக்கு பரிசா தருது. இதைத்தான் படம் விமர்சிக்குதுங்கிறது என்னோட புரிதல். ஒரு டீக்கடை வச்சி எவ்வளவு கப் டீ ஆத்தினாலும் இந்த ரணத்தை அவனால ஆத்த முடியுமா?

மனிதர்களுக்கான அடிப்படையான தேவை எதுன்னா அது மதிப்பு / மரியாதை என்பதுதான் (உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க உறைவிடம் ஆகியவை தவிர்த்து). காலகாலமா அத்தகைய மதிப்பு அவனது தனித்துவத்திற்காக கிடைத்து வந்தது - அவனது கல்விக்காக, வலிமைக்காக, வீரத்திற்காக, போர்குணத்திற்காக, கலைத் திறனுக்காக, இப்படி பலவித காரணங்களுக்காக. அண்மைக் காலங்களில் (மேற்கத்தியத் தாக்கத்தால்?) ஒருவனுக்கு மதிப்பு / மரியாதை கிடைப்பது அவனிடம் இருக்கும் செல்வத்தைப் பொறுத்தே, என்றாகி விட்டது. ஆகவே, கவரிமான் குணம் என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமே உரிய ஆடம்பரமாகி விட்டது. மற்றவர்கள், அவர்கள் அனுபவிக்கும் மிதிபாடுகளிலிருந்து எழுந்து தூசியைத் தட்டி விட்டுக் கொண்டு, நடையைக் கட்ட வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

இந்த உண்மையை அழுத்தமாக வெளிப்படுத்தியதற்காக அந்தப் பட இயக்குனர் எவ்வித விளக்கங்களும் அளிக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து. வழங்கப்படும் (மேலோட்டமான) விமர்சனங்கள் குறித்த அவரது எதிர்வினையும் நியாயமாகவே படுகிறது. ஆசியாவின் சிறந்தப் படங்களில் ஒன்று என்ற அங்கீகாரத்திற்கு ஒரு வேளை இப்படம் தகுதியில்லாமல் போகலாம். ஆனால் அத்தகைய அங்கீகாரத்தை வழங்கியவர் தமிழில் தரமான படங்களை வழங்கிய வெகு சில இயக்குனர்களில் ஒருவர் என்பதால், அவரது கருத்துக்கு நம்மைப் போன்ற 'சொகுசு நாற்காலி விமர்சகர்களை' விட அதிக மதிப்புண்டு.

சனி, நவம்பர் 03, 2007

சில சுட்டிகள், பின்னூட்டங்கள்........

சில நாட்கள் முன்பு வவ்வால் என்ற பதிவருடன் அவரது சேதுசமுத்திரம் பற்றிய இடுகை குறித்து விவாதம் செய்து கொண்டிருந்தேன். அதில் நான் இட்ட பின்னூட்டம் ஒன்றின் ஒரு பகுதி:
உங்களது தங்க நாற்கர உதாரணம் குறித்து - நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு துரிதமாக இணைப்பதற்கு அந்தத் திட்டம் உதவலாம். அதனால், நாடெங்கிலுமுள்ள விவசாய மற்றும் இதர உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுவது போன்ற ஆதாயங்கள் கிடைக்கலாம். (அத்திட்டத்தைப் பற்றியும் எனக்கு விமர்சனமுள்ளது. ஆனால் அது குறித்து வேறொரு சமயம் பேசுவோம்)

ஆனால் சேது திட்டத்தால் சென்னையும் தூத்துக்குடியும் இணையப்போவதில்லை என்று நினைக்கிறேன். கடல்வழிப் பாதையை விட மேலான சாலைவழி / இரயில் வழிப்பாதைகள் இவ்விரு நகரங்களையும் ஏற்கனவே இணைத்துக் கொண்டுதான் உள்ளன. கடல்வழி என்பது உலகின் இதர பகுதிகளுக்குச் சரக்குகளை அனுப்புவதற்கு அல்லது பெறுவதற்குத்தான். அத்தகைய பயணங்கள் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் நீடிப்பவை. அப்பயணத்தில் ஒரு இருபத்தி நான்கு மணி நேரங்கள் குறைவதால், ஒரு சிறு சதவிகித லாபம் அக்கப்பல் முதலாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு லாபம் கிடைத்தாலும் அது அவர்களது நலனுக்கே அல்லவா? மேலும், நீங்களே கூறியிருப்பது போல், நம் துறைமுகங்களின் செயல்பாடுகள் காரணமாக பெட்டங்களை ஏற்றி இறக்குவதற்கே எப்படியும் வாரக்கணக்கில் தாமதம் ஏற்படும் நிலையில், ஒரு இருபத்தி நான்கு மணி நேர சேமிப்பினால் யாருக்கென்ன ஆதாயம் பெரிதாகக் கிடைத்து விடப் போகிறது?

இது போன்ற கேள்விகளால், ஒரு சாமானியனுக்கு எவ்வகையிலும் இத்திட்டத்தால் பலனில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.
இதைத் தொடர்ந்து, Sondham என்பவர் ஆங்கிலத்தில் ஒரு பின்னூட்டத்தை வழங்கியிருந்தார். அது கீழ்வருமாறு:

At 12:48 PM, Sondham said…

Around 30 years ago, Dubai was a desert in the Arabian Gulf. Now, due to the government's effort to create infrastructures, it is a hot spot in the world map. It was possible because of many many mega projects, for that the government poured billions of Dirhams. Now many ships passing Dubai and there is no major Airline that did not touch Dubai. Import and export became a major source of income for the government. World major events being hosted in Dubai and the International Cricket Board shifted from England to Dubai and so on. Dubai became the hub between West and the East. Example of finished and ongoing projects in Dubai: (search in internet by name for details):

Dubai dry dock
Dubai Internet City
Dubai Gold City
Dubai Airport
World Class Hotels (Burj al Arab)
Dubai Media City
Dubai Palm Island
Dubai World Trade Centre
Dubai Knowledge village
Dubai Educationalal city
Dubai Property
Dubai Sports City
Dubai International City
Burj Tower
Mega Malls
dubai Marina Area
Dubai Land
Discovery Gardens
The Palm Jumeirah
Palm Diera
Hydropolis
Dubai Water front
The Lagoons
The Business Bay
Aqua Dubai
Dubai Maritime City
Dubai Techno Park
The Lost City
Dubai Aviation City
Silicon Oasis
Jabel Ali New Airport
Ski Doom at Dubailand
formula one world theme park
The world (300 man mand islan)
Exhibition City
Golf City
Dubai Metro (12.45 Billion Dirhams)
Bridges & tunnel over 2 km sea bay

...
many more

As I knew, most of the finished projects are successful ones and the ongoing too attracting the world to invest.

If the government calculate about 'individual citizen's benefit out of these projects' or 'profit and loss by Dirhams and Fils', before executing them - could it be achieved??

What we are talking is not even one percent of the total cost of the above projects where we are second largest populated country in the world.

அதற்கு வவ்வாலின் விமர்சனமற்ற ஆமோதிப்பு கீழ்வருமாறு:

At 4:49 PM, வவ்வால் said…

சொந்தம் ,
நன்றி!

அருமையான ஒரு கருத்தை சுருக்கமாக சொல்லி இருக்கிங்க, நான் பக்கம் பக்கமா தமிழில் சொன்ன பிறகும் அது எப்படினு ஆரம்பபுள்ளிக்கே திரும்ப வராங்க மக்கள் இதுல நீங்க ஆங்கிலத்தில சில உதாரணங்கள் காட்டி சொல்வதை எப்படி புரிந்துக்கொள்வார்கள் என்று தெரியல?

இப்படி சொர்க்கபுரியாக விவரிக்கப்படும் (மற்றும் நாமும் அதை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படும்) துபாய் குறித்து சில தகவல்கள் அண்மையில் வெளிவந்துள்ளன. சில சுட்டிகள் நிலைமையை புரிய வைக்க உதவலாம்:
சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சிக்குப் பின்னால், நம் தெற்காசிய நாடுகளிலிருந்து பிழைப்பு தேடிச் சென்ற மலிவுக் கூலி உழைப்பாளிகளின் அவல நிலை மறைந்திருக்கிறது. அவர்களைச் சுரண்டாமல் இந்நாடுகள் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது என்றே கூறலாம்.

நாமும் இந்நாடுகளைப் பின்பற்ற வேண்டும், மாபெரும் திட்டங்களை அதிரடியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்ற அடிப்படையில் செயல்படும் நமது வலதுசாரி அரசுகளும், அவற்றின் கொள்கைகளுக்கு சாமரம் வீசும் பதிவர்களும் விரைவில் உண்மை நிலையை உணருவார்கள் என்று நம்புவோம் :)

திங்கள், அக்டோபர் 01, 2007

கனம் கோர்ட்டார் அவர்களே!

தற்போது தமிழகத்தில் பந்த் நடத்தலாமா கூடாதான்னு ஒரு வழக்கு நடந்து அதுக்கு எங்க ஊரு உயர்நீதி மன்றத்தில ஒரு தீர்ப்பும் வழங்கினாங்க (மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாம நடத்தலாம்ன்னு) . இந்த குழப்பவாதத் தீர்ப்பைப் பத்தி நான் எதுவும் சொல்லப் போறதில்லை. சரி, பிரச்சனைக்கு முடிவு கிடச்சிடுச்சின்னு நினைச்சிக்கிட்டு இருந்தப்போ, அவசர அவசரமா நீங்க சுப்ரீம் கோர்ட்ல ஞாயித்திக் கிழமையெல்லாம் வேலை செஞ்சி, அந்தத் தீர்ப்பை மாத்திச் சொன்னீங்களாம் -அதாவது, பந்த் நடத்தக்கூடாது, அது சட்ட விரோதமானதுன்னு.

என்னடா நம்ம கோர்ட்டாருங்க இப்படி ஞாயித்திக் கெழமையெல்லாம் வேலை செய்யறாங்களேன்னு அப்படியே புல்லரிச்சி நிக்கும்போது, உங்களப் பத்தின வேற சில தகவல்கள் ஞாபகம் வந்து உறுத்த ஆரம்பிச்சுது. அதாவது, உங்கள மாதிரி கோர்டடு்களோட ஆமை வேக செயல்பாட்டால நம்ம நாட்டுல மூணு லட்சம் பேர் குற்றம் நிருபிக்கப் படாமலேயே சிறையில் வருஷக் கணக்கா வாடிக்கிட்டிருக்காங்க என்பது போன்ற தகவல்கள். நிலம இந்த மாதிரி இருக்கும்போது, இந்த தமிழக பந்த் விவகாரத்தில் மட்டும் ஏன் உங்களோட அதீத ஈடுபாடுன்னு கொஞ்சம் யோசிக்க வச்சிட்டீங்க. இப்படி ஞாயித்திக் கிழமையெல்லாம் வேலை செஞ்சி உங்களோட மத சார்பின்மையை காட்டிக்கிட்டது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதுதாங்க. பொதுமக்கள் நலனில் உங்களுக்கு இருக்கற அக்கறையை நான் மெச்சிக்கறேன்.

இன்னிக்கி காலையில சில செய்திகளை படிச்சேங்க. எங்க கலைஞர் ஐயா இந்தியில பேசினாராம், உண்ணாவிரதம் இருக்காராம். மாநிலம் முழுவதும் பல உழைப்பாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யறதுனால, தமிழகத்தில் கிட்டதட்ட பந்த் சூழ்நிலைதான் நிலவுது, அப்படியிப்படீன்னு கேள்விப்பட்டேங்க. அதாவது, நீங்க ஓவர்டைம் செஞ்சி குடுத்த தீர்ப்பு, கிட்டத்தட்ட செல்லுபடியாகாத மாதிரிதாங்க. வருத்தமான செய்திதான், என்ன பண்ணறது?

இப்பிடி செய்திகள மேஞ்சிக்கிட்டே வரும்போது இது கண்ணுல பட்டுதுங்க - அதாவது இன்னிக்கி நீங்க புடுங்கி மாதிரி ஏதோ பேசியிருக்கீங்களாம் (SC pulls up TN govt என்பதன் தமிழாக்கம் ;-) ) , மக்கள் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்க்கணும் அது இதுன்னு. மறுபடியும் சில தகவல்கள் ஞாபகத்துக்கு வந்து உறுத்துதுங்க. அதான், முன்னாடி காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியார் பிரச்சனைன்னெல்லாம் வந்தப்போ எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய தண்ணி பத்தி நீங்களும் தீர்ப்பு சொன்னீங்க. அப்போ, சம்மந்தப் பட்ட எதிர் தரப்பு மாநிலங்கள் உங்க தீர்ப்பை நிராகரிச்சி, உங்க ஆணைய செயல்படுத்தாம முரண்டு பிடிச்சாங்க. இப்போ நீங்க தமிழக அரசை குற்றம் சாட்டற அதே contempt of courtதான் அவங்களும் செஞ்சாங்க. இப்போ தமிழக அரசை கலைக்கணும்ன்னு கூக்குரல் விடற நீங்க, அப்போ மட்டும் என்ன சிறைச்சிக்கிட்டா இருந்தீங்க?

புதன், செப்டம்பர் 05, 2007

புகைப்படம்

பொது வாழ்வில் இல்லாத தனிநபர்களின் புகைப்படங்களை பதிவுகளில் வெளியிடுவது எத்தகைய அநாகரீகமான செயல்? பல தனிநபர்கள் ஊடக வெளிச்சத்தை விரும்புவதில்லை. அல்லது, தாம் விரும்பும் அளவுக்கு மட்டும் தங்களை பொதுவில் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். (போவோர் வருவோரெல்லாம் தங்கள் உருவப்படத்தைப் போஸ்டர் அடித்து ஒட்டும் நிலையை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.) அதுவும் சம்மந்தப்பட்டவர் பெண் எனும்போது அதானால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். நம் சூழலில் பெண்களுக்கு எல்லாத் தளங்களிலும் நிலவும் பாதுகாப்பின்மை காரணமாக (உ-ம், ஒரு அநாமதேயம் உருவப்பட நபரின் தோற்றத்தை வர்ணித்து போட்டுவிட்டுப் போகும் எச்சமும் ஒரு பாதுகாப்பின்மையின் வடிவம்தான், என் பார்வையில்), தம்மை பொதுவில் வெளிப்படுத்திக் கொள்ள அவர்கள் கூடுதல் தயக்கம் காட்டுவதையே அதிகம் காணமுடிகிறது, மற்றும் அதனைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. இந்த அடிப்படைப் புரிதல் கூட பலருக்கு இல்லையோ, அல்லது இருந்தும் ஆணவத் திமிரோ என்னவோ, பதிவுலகில் மற்றவர்களின் புகைப்படத்தைப் போஸ்டர் அடித்து ஒட்டுவது சகஜமாகி விட்டது. பதிவுலகில் இயங்காத அப்பாவிகளும் (பதிவரின் மனைவி, மகள், இத்யாதி) விட்டு வைக்கப்படுவதில்லை இந்த வக்கிரச் சிந்தனையாளர்களால்.

தற்போது ஒரு சகப் பதிவரின் உருவப் படத்தை அதிகம் காண முடிகிறது. முதல் ஓரிரு முறைகள் அதற்கான எதிர்ப்பை அவர் தெரிவித்த பின்னரும் கூட அவருக்குத் திமிரான எதிர்வினைகளே கிடைத்தன என்று நினைக்கிறேன். அதன் பிறகு அவர் அமைதியாகி விட்டாலும், இப்போது இச்செயல்களுடன் அவர் உடன்படுகிறாரா என்பது தெரியவில்லை, தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை. தனது உருவப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்க ஒருவருக்கு தார்மீக உரிமையுண்டு. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின், அதை மதித்து நடப்பதுதான் அம்மனிதருக்கு நாம் காட்டும் மரியாதை.

ஞாயிறு, ஜூலை 15, 2007

வெற்று விவாதங்கள் தரும் அயர்ச்சி

இணையத்தில் தமிழை முதலில் வலையேற்றியது யார் என்று ஒரு விரிவான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவற்றின் ஆயிரக்கணக்கான சொற்களையும் பின்னூட்டங்களையும் சுட்டிகளையும் படித்த பின்னரும் எந்த ஒரு பயனுள்ள தகவலோ, அந்நேரத்தைச் செலவழித்ததற்கான நியாயப்படுத்தலோ இல்லாமல் ஒரு வெற்றுணர்வே ஏற்பட்டிருக்கிறது. எழுத்துலகப் பெருந்தலைகளுக்கும் வலையுலகப் பெருந்தலைகளுக்கும் நடக்கும் பனிப்போரும் அதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டமுமாக, ஒரு நுட்ப விவாதம் நடத்திச் செல்லப்படுவது தமிழர் முன்னேற்றம் குறித்த நம்பிக்கையின்மையையே ஏற்படுத்துவதாக உள்ளது.

முதலில் நம் தமிழ்ச்சூழலில் புழங்கும் அடைமொழிக் கலாச்சாரம். ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட என்று அக்காலத்தில் அரசர்களுக்குத் துதி பாடிய கேவலமான செயலின் நீட்சியாக இன்றும் ஒவ்வொருவருக்கும் அடைமொழி அளித்துக் கொள்ள வேண்டிய தேவை தொடருகிறது. ஆகவே, புரட்சித் தலைவர், புரட்சிக் கலைஞர், சொல்லின் செல்வர், சிலம்புச் செல்வர், மெல்லிசை மன்னர் போன்ற வெத்துப் பட்டங்கள் சராமாரியாக வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அக்காலாச்சாரம் இணையத்திலும் புகுந்து, தமிழ் இணைய பிதா, மாதா என்று தனது அவல முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. நாளடைவில் இன்றைய முன்னணி இணைய பெர்சனாலிடிகளுக்கெல்லாம் இத்தகைய அடைமொழிகள் வந்துவிடக்கூடிய வேடிக்கையான சூழல் ஏற்படும் நாள் வெகு தொலைவிலில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. Sycophancy என்பது நமது ரத்தத்தில் ஊறிவிட்ட ஒரு சமாச்சாரமாக இருக்கும் வேளையில் இது குறித்து எதுவும் செய்ய இயலப்போவதில்லை.

தமிழை வலையேற்றுவது அத்தகைய அரிய செயலா? அது ஒரு விஞ்ஞான / தொழில்நுட்பக் கண்டுபிடிப்பா என்றெல்லாம் நம்மை நாமே கொஞ்சம் கடினமான கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நலம். எல்லா மொழிகளும் தமது எழுத்துக்களை கணிமைப் படுத்திய பின், தமிழர்களுக்கே உரிய வேகத்துடன் ஆற அமர நமது எழுத்துக்களையும் கணிமைப்படுத்தி உள்ளோம். இதற்காக எதுவும் புதிய நுட்பங்களை உருவாக்கியிருக்கத் தேவை இருந்திருக்காது. மற்ற மொழிகளில் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு, அதை நமது மொழிக்கும் localize செய்ய வேண்டியிருந்திருக்கும். ஒரு சில நாட்களில், இரவு உணவுக்குப் பின் படுக்கப்போகுமுன் சில மணி நேரங்களுக்கு சில சோதனைகளைச் செய்து அதில் வெற்றி கண்டுவிடக்கூடிய ஒரு வேலைக்கு "இணைய பிதா" போன்ற பில்டப்புகள் தேவையா? அது யாராக இருந்தால் என்ன? இந்தப் பிதா இல்லையென்றால் வேறொரு பிதா அதைச் செய்திருப்பார். இந்த நுட்பங்களெல்லாம் ராணுவ ரகசியங்களல்ல. நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் எளிதாகவே பரிமாறிக் கொள்ளப்படுபவைதான் இவையெல்லாம்.

இவ்வளவு புளகாங்கிதமடைகிறோம் நமது தமிழ்க் கணிமையைக் குறித்து. ஆனால் உண்மை நிலையென்ன? ஆங்கிலம் தெரியாத ஒருவரால் கணினியைப் பயன்படுத்த முடியாது என்ற கசப்பான உண்மைதான் இன்றும் நிலவுகிறது. தேநீர்க் கடையில் தினத்தந்தி வாசிக்கும் பாமரன் கணினியைப் பயன்படுத்த முடியப் போவது எப்போது? அவரது கணினிப் பயன்பாட்டுக்குத் தடையாயிருப்பது அவரது பொருளாதார நிலை மட்டும்தானா? கணினிகளின் விலை குறைந்து கொண்டே வருகின்றன. ஒரு சிறிய வங்கிக் கடனை வாங்கி, அதில் ஒரு கணினியை வாங்கிப் போடுவது அவருக்கு அப்படியொன்றும் கடினமான செயலாக இருக்காது. அதைவிட அவருக்குப் பெரிய தடைக்கற்களாக இருக்கக்கூடியவை அக்கணினியிலுள்ள ஆங்கில QWERTY விசைப்பலகையும், Start > Program Files என்று விளிக்கும் ஆங்கில இடைமுகமும்தான். அதன்பிறகு அவர் தமிழ்மணத்திற்கோ தினமலர் தளத்திற்கோ வரவேண்டுமென்றாலும் அதற்கு அவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய ஆங்கில URL முகவரிகளும்தான். ஆகவே,
  • முற்றும் முழுவதுமாகத் தமிழ் பேசும் கணினி தேவை (அது 'ழ' கணினியோ அல்லது 'ஙே' கணினியோ :) )
  • அதன் விசைப்பலகையின் விசைகளில் தமிழெழுத்துக்கள் பொறித்திருக்க வேண்டும் என்பது ஒரு obvious தேவை. (பாமினி, ஷாலினி என்று ஆயிரத்தெட்டு வகையறாக்கள் இல்லாமல், ஆங்கிலத்தில் QWERTY என்று ஒன்று இருப்பது போல், அனைவருக்கும் ஏற்புடைய ஒரு வடிவமைப்பில்)
  • URL transliterator: இப்போதைக்கு தமிழில் URLகள் வரப்போவதில்லை. ஆனால் ஒரு பயனர் தனக்கு வேண்டிய வலைத்தள முகவரியைத் தமிழில் தட்டச்சு செய்தால், அதை ஒரு ஆங்கில http வேண்டுகோளாக மாற்றுவது சாத்தியமே. இதுவும் ஒரு அத்தியாவசியத் தேவை.
  • OpenOffice முற்றும் முழுவதுமாக தமிழ் இடைமுகத்துடன்
  • நெடுங்கால இலக்கு - பயனர் ஆங்கில வலைத்தளங்களைக் கோரினாலும் குத்துமதிப்பாகவாவது machine translation செய்து அவற்றைத் தமிழில் வழங்கும் தொழில்நுட்பம். அது போலவே, ஆங்கில ஆவணங்களை (குத்துமதிப்பாகவாவது) தமிழில் மொழிபெயர்க்கும் OpenOffice plugin.
'தமிழிணைய வேந்தர்கள்', 'செந்தமிழ்க் கணிமைப் புரவலர்கள்' (என் பங்குக்கு சில அடைமொழிகள்) ஆகியோர் இத்திசைகளில் சிந்தித்தால் கொஞ்சம் நன்றாயிருக்கும் - பழைய பல்லவிகளைப் பாடுவதை விடுத்து.

வெள்ளி, ஜூலை 13, 2007

தமிழ்த்திரையில் பெண்கள் பற்றிய விவாதம்

அண்மையில சில சுவாரசியமான விவாதங்களைப் பார்க்க முடிஞ்சுது - குறிப்பா லட்சுமி மற்றும் மோகன்தாசுக்கு இடையில் நடைபெற்று வரும் / வந்த 'சிவாஜி' குறித்த விவாதங்கள். அந்தப் படத்த நான் இன்னும் பாக்கல்ல - பாக்கறதா உத்தேசமும் கிடையாது. லட்சுமியோட வாதம் முதலில் கவனத்தை கவர்ந்தது. அவர் கூறும் கருத்து - பெண்களை (அல்லது ஒரு குறிப்பிட்ட பெண்ணை) 'கொஞ்சமே கொஞ்சம்' புத்திசாலித்தனத்துடனாவது இப்படத்தில் சித்தரித்திருக்க வேண்டும் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். அதுக்கு மோகன்தாஸ் எதிர்வினையாற்றி மொத்த ஆண்குலத்தின் சார்பா சில கருத்துகளைத் தெரிவிச்சதில் எனக்கு அவ்வளவா உடன்பாடு கிடையாது. ஒரு ஆண் என்ற முறையில், திறமையுள்ள பெண்களையே விரும்பியிருக்கிறேன், தொடர்ந்து விரும்பவும் செய்வேன் என்ற உறுதிமொழி அளித்துவிட்டு (அப்படியே மோகன்தாசின் கூற்றில் உண்மையில்லை என்பதையும் நிரூபித்துக் கொண்டு) எனது வாதத்தைத் தொடர்கிறேன்.

இங்க நான் உதாரணமா குறிப்பிட விரும்பும் ஒரு படம் Kill Bill. படம் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டது. அவளது எதிரிகளும் பெண்களே. படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் வரும், நன்றாகப் படமாக்கப்பட்டிக்கும். கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சீங்கன்னா, அவள் ஆண்களை வெகு சுலபமா வீழ்த்தி விடுவாள். அவர்கள் நூற்றுக்கணக்கா வந்தாலும் அவர்களையெல்லாம் ஒரு சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவாள். ஆனா எதிரில் சண்டையிடுவது பெண் என்னும்போது மட்டும் வெகு நேரப் போராட்டத்துக்குப் பிறகே அவளால வெற்றியடைய முடியும். இது ஏன் அப்படின்னா, அதைப் படைத்தவரின் மனநிலையை ஒத்தே அவர் வெளியிடும் படைப்பும் அமையும்ன்னு அதை அப்படியே ஏத்துக்க வேண்டியதுதான். பெண்களை சண்டைக்கலையில் திறமை மிக்கவர்களாகக் காட்ட வேண்டும் என்ற படைப்பாளியின் முடிவை நாம கேள்வி கேட்க முடியாது, அப்படி கேள்வியில்லாமல் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம் (படத்தை வெற்றியாக்கியதன் மூலமாக). Crouching tiger........, Charlie's Angels, போன்ற படங்களிலும் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அவையும் வெற்றியடைந்தனன்னு நினைக்கறேன்.

இது என்ன அநியாயம்? ஆண்களை விட அவ வலு மிக்கவளாகவே இருக்கட்டும்....... ஆனாலும், அவளை சில நிமிடங்களாவது தாக்குப் பிடிக்கக் கூடியவர்களா ஆண்களை சித்தரிச்சிருக்க'லாம்', 'லாம்'ன்னு பல லாம்களை அடுக்குவது எவ்வளவு அபத்தமானதா இருக்கு? இன்னைக்கு பெண்களை 33% ஆவது புத்திசாலிகளா காட்டணும்ன்னு கேப்போம். அப்பறம், சிறுபான்மையினரை குற்றவாளிகளாவோ, தீய பழக்கம் உடையவர்களாவோ காட்டக்கூடாதுன்னுவோம். அதுக்கு அப்பறம் எரிபொருள் சேமிக்கிறதுக்காக இனிமே ஹீரோக்கள் பஸ்லயோ, டிரெயின்லயோ பயணம் செய்யற மாதிரிதான் காட்சி அமைக்கணும், கார்ல போற மாதிரி காட்டினா நல்ல 'முன்மாதிரி'யா இருக்காதுன்னுவோம். ஏற்கனவே, சினிமால புகை பிடிக்கக்கூடாது, தண்ணியடிக்கக்கூடாது, முத்தம் குடுத்துக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டு தடை செஞ்சாச்சு. தமிழ்ல பேர் வைக்க'லாமே'ன்னு (வன்மையாவே) அறிவுறுத்தியாச்சு. இவ்வளவு விதிகள் / வழிகாட்டுதல்களையும் கடந்து ஒரு படைப்பாளிக்கு புனைய எதாவது கதை மிஞ்சுமான்னு பாக்கணும்.

Stereotypeகள் தொடரணும்ன்னு சொல்லல்ல. பெண்கள் சில குறிப்பிட்ட நடிகர்களின் படங்களில் சற்று சாமர்த்தியம் குறைந்தவர்களாகக் காட்டப்படுகிறார்கள்ன்னா அதை ஒத்துக்கறேன். ஆனா, ஒட்டு மொத்த தமிழ் சினிமால வர்ற பெண் பாத்திரங்கள் எல்லாமே அவ்வாறுதான் சித்தரிக்கப்படுகிறார்கள்ன்னா அதை என்னால நிச்சயமா மறுக்க முடியும். (நடிகை) லட்சுமி, சுஜாதா, ஸ்ரீதேவி, சரிதா, சுகாசினி, ரேவதி, ராதிகா போன்ற நடிகைகள் பல படங்களில் சுயசிந்தனையாளர்களா காட்டப்பட்டிருக்காங்க. அவங்கல்லாம் பாலசந்தர் பட நாயகிகள் எனப்படும் 'தாழ்த்தப்பட்ட' கேட்டகிரில வர்றாங்களான்னு தெரியல. ஒரு சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்த '16 வயதினிலே', அதே இயக்குனரின் 'சிகப்பு ரோஜாக்கள்'ன்னு நிறைய top-of-the-mind உதாரணங்களைத் தர முடியும். 'மிஸ்டர் சுகாசினியின் பெண்கள்' அப்படீன்னு மதுரா ஒரு தனிப்பதிவே போடுமளவுக்கு உதாரணங்கள் உண்டு.

பழைய எம்ஜியார் படம் ஒண்ணு டிவில போய்க்கிட்டு இருந்தது. பேர் தெரியல. ஆனா கதை என்னன்னா, ஒரு துஷ்டப் பெண்ணரசி, பகடை விளையாட்டுல தந்திரம் செஞ்சி வேற்று நாட்டு அரசர்களை எல்லாம் தனக்கு அடிமைகளாக்கி, அவர்களது நாடுகளையும் தன்வசப்படுத்துகிறாள் என்பதுதான். இன்னொரு உதாரணம் - "வாராய் நீ வாராய்............. போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய்........" என்ற பாட்டின் காட்சியமைப்பு ஞாபகமிருக்கும்ன்னு நினைக்கிறேன். தன்னை மலையிலிருந்து தள்ளிவிடப்போகும் கணவனை தந்திரத்தால் வென்று உயிர் தப்பும் பெண்ணை பற்றிய காட்சி அதுன்னு நினைக்கிறேன். ஆக, பெண்களை அறிவுக் கூர்மை மிக்கவர்களாக (பெண்ணியமெல்லாம் பேசப்படாத) அந்தக்காலத்திலிருந்தே காட்டி வந்திருக்கிறார்கள் என்பதுதான் இதிலிருந்து நான் நிறுவ முயலுவது.

ஒரு பாத்திரப் படைப்பு என்பது முற்றும் முழுவதுமாக ஒரு படைப்பாளியின் உரிமை. சரஸ்வதி நிர்வாணமாக இருக்கிறாளா என்பது அவளைப் படைப்பவன் கையிலேயே உள்ளது. அவ்வாறு இருந்திருக்கக் கூடாது என்பதெல்லாம் கலை வன்முறையே. அதே போலத்தான் ஒரு படைப்பாளியின் பாத்திரப் படைப்பை கேள்விக்குள்ளாக்குவதுவும்.

சனி, ஜூலை 07, 2007

ஒரு வேற்று மொழியில் சில வெளிப்பாடுகள்

^\$[0-9]+(\.00)?$ - இதைப் பார்த்தால் என்னவெல்லாமோ தோன்றலாம். ஆனால் இது பயப்படும்படியான விஷயமல்ல. சொல்லப்போனால் இது ஒரு விருப்பத்தின் வெளிப்பாடாகும். அதாவது, ஒரு ஆவணத்தில் எங்கெல்லாம் (டாலர்களில்) பணம் குறிப்பிடப்பட்டிருக்குன்னு தேடி நமக்குச் சொல்லுவதற்குத்தான் இப்படி ஒரு வெளிப்பாடு (expression). இது எவ்வகையான வெளிப்பாடு என்று யோசனையில் மூழ்குவதற்கு முன் நானே கூறிவிடுகிறேன். இவை regular expressions அல்லது சுருக்கமாக regex எனப்படுபவை.

இதே மாதிரி இன்னொரு regexஐப் பார்க்கலாம்:
^(http://)?.*(blog|wordpress|typepad|livejournal).*$ - இதைப் பார்த்தா ஏதோ வலைப்பதிவுகள் சம்மந்தப்பட்டதுன்னு புரிஞ்சிருக்கும். ஒரு பக்கத்தில் இருக்கும் எல்லா வலைப்பதிவு முகவரிகளையும் தேடிக் குடுக்கத்தான் இந்த regex. குறிப்பிட்ட பதிவு / தளத்தில் எந்தெந்த வலைப்பதிவுகளுக்கெல்லாம் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதுன்னு தேட விரும்பினா இதை பயன்படுத்தலாம்.

இதப் பாருங்க: .*[;:]-?[)\*pD]$ இது என்னவா இருக்கும்ன்னு நினைக்கறீங்க? இதை வச்சி உங்களுக்கு வந்த ஒரு மடலில் அதை அனுப்பியவர் என்னல்லாம் சொல்லி உங்க கிட்ட வழிஞ்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கலாம் ;) (இதோ, இந்த மாதிரிதான்)

இப்படி, சிக்கலான வேலைகளையும் சுருக்கமான குறிப்புகளைக் கொண்டு சாதிக்கும் ஆற்றல் படைத்தவை இந்த regexகள். அவற்றின் புரியாத மொழியை எப்படி புரிஞ்சிக்கிறது?

அ, ஆ, இ, ஈ, யிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். அவற்றுடைய எழுத்துக்கள் இவைதான்:
^ - ஒரு பொருளின் தொடக்கம் (இதில் பொருள் என்பது இடத்திற்குத் தகுந்தாற்போல் சொல் / வாக்கியம் / பத்தி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) . உ-ம். ^தமிழ் - தமிழ் என்று தொடங்கும் அனைத்துப் பொருட்களையும் குறிக்கும்.

$ - ஒரு பொருளின் முடிவு. உ-ம். வடை$ - வடை என்று முடியும் அனைத்து பொருட்களையும் குறிக்கும் (இட்லிவடை, சட்னிவடை, etc.)

. - எந்த ஒரு குறியீடாகவும் இருக்கலாம்
உ-ம். ப.ம் எனபது பணம் என்பதற்கும் பொருந்தும், பலம் / பதம் என்பவற்றுக்கும் பொருந்தும். பயணம் என்பதற்குப் பொருந்தாது, ஏன் என்பதை ஊகித்துக் கொள்ளவும்.

* - இதற்கு முன் இடம்பெறும் குறியீடு ஒரு முறையும் வராமலிருக்கலாம் அல்லது , ஒரு முறையோ பலமுறைகளோ கூட வரலாம்.
உ-ம். க.*னி. இதற்குப் பொருந்தக் கூடிய சொற்கள் 'கனி' (ஒரு குறியீடு கூட இல்லாதிருக்கலாம் அல்லவா?), கணினி (நடுவில் ஒரு குறியீடு), கவிதாயினி (நடுவில் பல குறியீடுகள்)

+ - இதற்கு முன் இடம் பெறும் குறியீடு ஒரு முறையோ அல்லது அதற்கு மேலோ வரலாம். உ-ம். (லக)+ எனபது லகலகலகலகலகலக என்று எவ்வளவு 'லக-லக'க்களை வேண்டுமானாலும் குறிக்க வல்லது.

? - இதற்கு முன் வரும் குறியீடு ஒரு முறை வரலாம் அல்லது வராமலே போகலாம்.
உ-ம். இ?ராமன். ராமனுக்கு முன் 'இ' போட்டாலும் போடாவிட்டாலும் பொருத்தமே.

[ ] - இவற்றுக்குள் இருக்கும் குறியீடுகளில் ஒன்றைக் குறிக்கும்
உ-ம். க[லரடணன]ம் எனபது கலம், கரம், கணம், கனம், கடம் ஆகியவற்றைக் குறிக்கும். கரணம் என்பதைக் குறிக்காது.

இந்த சதுர அடைப்புக்குறிகளுக்குள் ஒரு rangeஐயும் குறிப்பிடலாம்.

உ-ம் ^[அ-ஔ] என்பது உயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்குப் பொருந்தும். அவ்வாறு வேண்டாமென்பதையும் குறிப்பிட இயலும்
உ-ம் ^[^அ-ஔ] என்பது உயிரெழித்துக்களில் தொடங்கும் சொற்களைத் தவிர இதர சொற்களைத் தருமாறு வேண்டுவதற்காகும். caret(^) சின்னம் சதுர அடைப்புகளுக்குள் வரும்போது அதன் பொருள் வேறுபடுவதைப் பார்க்கலாம்.

( ) - இவற்றுக்குள் இருக்கும் குறியீடுகள் அப்படியே கூட்டாக இயங்கும் எனபதை முந்தைய லகலக உதாரணத்திலேயே பார்த்தோம். அதோடு, இது ஒரு தற்காலிக நினைவகமாகவும் செயல்படுகிறது. அதாவது, இந்த அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவற்றை $1, $2, $3...... போன்ற பெயர்களைக் கொண்டு இதர வெளிப்பாடுகளில் பயன்படுத்த இயலும்.

| - மேலுள்ள கூட்டெழுத்துகளுக்கு options கொடுக்க இந்தக் குறியீடு பயன்படும்.
உ-ம் .*\.(mp3|wav|wma|ogg|ram|aac)$ என்பது எல்லா விதமான ஒலிக்கோப்புகளையும் தேடிப் பெறுவதற்கு உபயோகப்படும்.

\ - மேலுள்ள குறியீடுகளையே regex கொண்டு தேடணும்ன்னா, அவற்றை அப்படியே கொடுக்க முடியாது. ஆகவே, இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி, அவைகளைத் தேடணும். உ-ம். \$[0-9]+(\.00)? $1000.00 என்பதைத் தேடிப் பெறணும். ஆனா $க்கும் .க்கும் regexல வேற பொருள் இருக்கு. ஆகவே \$, \. அப்படீன்னு குறிப்பிட்டு, அதுக்கு regexக்கான பொருளை எடுத்துக் கொள்ளாமல், வழக்கமான பொருளை எடுத்துக் கொள்ளும்படி குறிப்பிடுவதற்குத்தான் இந்தக் குறியீடு. இந்த உத்தியை escape செய்வது என்பார்கள். தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதிலிருந்து பிழைத்துக் கொள்வது என்று எடுத்துக் கொள்ளலாம்.

அ, ஆ, இ, ஈ தெரிஞ்சாச்சி இல்லையா? இனி படைப்பிலக்கியத்தில் இறங்கி விட வேண்டியதுதான். வாங்க, கொஞ்சம் regex வெளிப்பாடுகளை நாமும் வெளிப்படுத்தலாம்.


(\+[0-9]+[- ])?\(?[0-9]+\)?[- ][0-9]+([- ][0-9]+)? - இந்த அழகான expressionஐக் கொண்டு ஒரு ஆவணத்தில் இடம்பெறும் எல்லா தொலைப்பேசி எண்களையும் பெறலாம்.

^.*sort.*\(.*\).*{$ - இது கோடாளிகளுக்கு. வரிசைப்படுத்தும் (sorting) நிரல்களை தேடிப் பிடிக்கலாம் (hopefully).

^.*(எட்|8)டு?.*.*$ - எல்லா எட்டு போட்ட பதிவுகளின் தலைப்புகளும் ('டு'வுக்கு அடுத்துள்ள கேள்விக்குறியை கவனிக்க! எட்டப்பன், எட்டாக்கனி, எட்டிய உயரங்கள்ன்னு எல்லா சாத்தியங்களையும் cover பண்ணணுமில்லையா?)

^.*(போதும்)+.*(ஐயோ)*.*(அம்மா)*!? - இப்பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களின் இப்போதைய மனநிலை இப்படி இருக்காது என்று நம்புகிறேன்.

Regexஐ எங்கே பயன்படுத்துகிறார்கள் என்றால், பொதுவாக மென்பொருள்களில் அதிகமாக இது உபயோகப் படுத்தப் படுகிறது. Markup மொழிகளில் உள்ள ஆவணங்களிலிருந்து வேண்டிய தகவலைப் பிரித்தெடுப்பதற்கு (இதை ஆங்கிலத்தில் parsing என்பார்கள்) இது பயன்படுகிறது. மென்பொருள்களுக்கு அப்பாலும், வழக்கமான தேடலை விட மிகத் துல்லியமான விடைகளை அளிக்கும் சாத்தியத்தை regex நமக்கு அளிக்கிறது. ஆகவேதான், OpenOfficeஇல் இதைக் கொண்டு தேடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. Microsoft Officeஇன் தற்போதைய பதிப்பில் எப்படியென்று தெரியவில்லை. கூகிள் போன்ற இணையத் தேடல்களிலும் இத்தகைய தேடல் வசதியை வழங்கலாமென்று தோன்றுகிறது.

இன்னொரு பயன்பாடு, வலைத்தளங்களின் URLஐ அழகுபடுத்துவதற்கு. வெளியுலகுக்கு ஒரு வலைப்பக்கத்தின் URL www.domain.com/abcd/efgh/ijkl என்று அழகாக வழங்கப்பட்டிருக்கும். ஆனால் பக்கம் இருப்பதுவோ www.domain.com/cgi-bin/abcd.cgi?x=efgh&y=JwwpxU4852&z=ijkl என்று எதாவதொரு கந்திர கோளமான முகவரியில். கொடுக்கப்பட்ட URLஐயும் பக்கம் உண்மையில் இருக்கும் URLஐயும் எப்படி பொருந்த வைப்பது? இதற்குத்தான் web serverஇல் ^/([^/]+)/([^/]+)/([^/]+)$ என்பதைப் போன்ற ஒரு regex எழுதப்பட்டிருக்கும், அதற்குப் பொருந்தும் http வேண்டுகோள்களை இவ்வாறு மாற்றி எழுதுவதற்கு: ^/cgi-bin/$1\.cgi\?x=$2&y=JwwpxU4852&z=$3$. இந்த மாற்றியெழுதுதலுக்கு URL rewriting என்று பெயர். இதற்கு regex பெரிதும் பயன்படுகிறது.

வேறெதுவும் பயன் இருக்கிறதா என்றுத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு சாமர்த்தியமான ஒரு நுட்பம் இது என்பதில் சந்தேகமில்லை. மிகவும் பயனுள்ள செயல்பாடுகளை இதனால் நாம் அடையக்கூடும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.

ஞாயிறு, ஜூன் 03, 2007

தலைக்கவசம்

சில வருடங்களுக்கு முன் ஹைதராபாத் நகரிலிருந்த போது கட்டாய helmet சட்டம் அங்கு அமலுக்கு வந்தது. Helmet அணிந்து முன் பின் பழக்கமில்லாததால் ஒரே வெறுப்பாக இருந்தது. helmet அணிய விருப்பமில்லாமல் சில மாதங்கள் எனது இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தாமலேயே வைத்திருந்தேன். பிறகு கட்டாயத்தின் பேரில் helmetஐ வாங்கி பயன்படுத்தவும் ஆரம்பித்தேன். அவ்வளவு சுகமாக இருக்கவில்லை. இருந்தாலும், வாகன வசதி வேண்டி அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தச் சட்டத்தின் காரணகர்த்தாவாகக் கருதப்பட்டவர் அப்போது ஹைதராபாத்தின் போக்குவரத்துத் துணைக் கமிஷனராக இருந்த திருமதி. தேஜ்தீப் கௌர் மேனன்.

அவர் இந்த அமலாக்கத்தைச் செயல்படுத்திய விதம் புதுமையானது. Helmet இல்லாமல் பிடிபடும் ஓட்டுனர்களை பிடித்துக் கொண்டு போய் ஒரு வகுப்பில் உட்கார வைத்து, அவருக்கு helmet அணிவதனால் என்ன பயன் என்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு விரிவுரை வழங்கப்படும். அந்த விரிவுரையைக் கேட்ட பின்னரே, பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார், ஆனால் அவருக்கு வேறெந்த அபராதமோ, தண்டனையோ விதிக்கப்பட மாட்டாது. இது ஒரு பரவலான jokeஆக அனைவராலும் பேசப்பட்டது. இந்த வகுப்பில் உட்காருவதற்கு பயந்தே அனைவரும் அவசர அவசரமாக helmet வாங்கி அணியத் தொடங்கினார்கள். Helmet எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்தன - எப்படியென்றால், பேருந்தில் செல்வதற்குக் கூட helmet அணிந்து கொண்டு இச்சட்டத்தை நக்கலடிப்பது போன்ற உத்திகளைக் கொண்டு. இது பற்றி ஈ-டிவி, மா-டிவியிலெல்லாம் பரபரப்பாக செய்திகள் வெளியாயின. பொதுமக்கள் பேட்டி எடுக்கப்பட்டார்கள். helmet அணிந்தால் தலை வலிக்கிறது, கழுத்து வலிக்கிறது என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகப் புலம்பினார்கள். "ஓ, அப்படியா? உலகெங்கும் helmet அணிகிறார்களே, அவர்களுக்கு வராத தலைவலி, கழுத்து வலியெல்லாம் இவர்களுக்கு வந்து விட்டதா?" என்று தொலைகாட்சித் திரையில் தோன்றி பதிலடி கொடுத்தார் மேற்கூறிய துணை கமிஷனர். கடமையைச் செய்யும் காவலதிகாரிகள் தூக்கியடிக்கப் படுவதைப் போல், இப்போது அவர் எந்தத் துறையில் தூக்கியடிக்கப்பட்டுள்ளார் என்றுத் தெரியவில்லை. ஆனாலும், அவரது சிறப்பான பணிக்காக ஒரு சர்வதேச விருது கிடைத்த செய்தியை இங்கு காணலாம்.

வேண்டா வெறுப்புடன் அணிய ஆரம்பித்திருந்தாலும், பழக்கமாகிவிட்ட காரணத்தால் தொடர்ந்து helmetஐப் பயன்படுத்துகிறேன். பெங்களூருக்கு மாற்றல் ஆகி வந்த போது இங்கும் helmet கட்டாயமாக்கப்பட்டது. ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருந்ததால் பிரச்சனையில்லை. ஆனால் வேறொரு மாற்றம் நிகழ்ந்தது. முன்பு scooter ஓட்டிக் கொண்டிருந்ததிலிருந்து இப்போது bikeஇற்கு மாறியிருக்கிறேன். இந்த அனுபவம் புதிதென்பதால் கொஞ்சம் பழக்கமாவதில் பிரச்சனை இருந்தது. ஒரு முறை கடும் மழையில் இரவு 3 மணிக்கு அலுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கையில், எதிரே வந்த கார் கொஞ்சம் zig-zagஆக என்னை நோக்கி வர, அதனால் கலக்கமடைந்து நான் முன் பிரேக்கை அழுத்த, வண்டி சறுக்கிக் கொண்டு விழுந்தது. விழுந்த அந்த கணத்தில் எனது தலை நேராக சாலையில் போய் மோதியது. அன்று helmet அணிந்திருக்காவிட்டால் விளைவுகளை எண்ணிப் பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது. வேறெந்தச் சேதமுமின்றி எனது பயணத்தைத் தொடர்ந்தேன். அதே போல் மழை நேரத்தில் முன் பிரேக்கை அழுத்தி மேலும் இரு முறை சறுக்கி விழுந்திருக்கிறேன். கடைசி முறை ஏற்பட்ட அனுபவத்தை விரிவாக இவ்விடுகையில் விளக்கியுள்ளேன் :)

இப்போது தமிழகத்தில் கட்டாயத் தலைக்கவச நிபந்தனை அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக அறிகிறேன். அது பற்றி வலைப்பதிவுகளில் பல விதமான கருத்துகள் :) ஒரு இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்ய helmet அவசியமே என்று எனக்குப் படுகிறது (அதன் வேகம், அதிகரிக்கும் விபத்துகள் / உயிரிழப்புகள், போன்ற காரணங்களால்). இந்த அடிப்படை ஒழுங்கை உறுதி செய்வதற்குக் கூட ஒருவர் பொது நல வழக்கு தொடுக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்தால் விரக்தியாக உள்ளது. இப்போது அரசும் பின்வாங்கிக் கொண்டுள்ளது.

வாங்கிய helmetஐ என்ன செய்வது என்று குழம்பிப் போயிருப்பவர்களுக்கு ஒரு யோசனை: அதை நீங்கள் அணிந்து கொண்டு பாதுகாப்பாகவே பயணம் செய்யலாம். இந்த யோசனை உங்களுக்கே தோன்றியிருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும்..........

வெள்ளி, மே 18, 2007

கறுப்பு ஞாயிறு

எனது விசிறித்தனத்தை இப்படி அப்பட்டமாகப் பறைசாற்றிக் கொள்வதற்கு மன்னிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக இந்த Black Sabbath (BS? no way) எனப்படும் இசைக்குழுவின் இசையில் மூழ்கித் திளைத்திருக்கிறேன். இப்பொ என்ன Black Sabbath என்று நினைத்தீர்களென்றால் அதில் நியாயமுள்ளது. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்க வேண்டிய இடுகையை இப்பொழுது எழுதுவதற்கு வலுவான காரணங்கள் இருந்தாக வேண்டும். அத்தகைய வலுவான காரணம், இந்த இசைக் குழு மீண்டும் இணைந்திருப்பதுதான். இணைந்து Heaven & Hell என்ற பெயரில் tour செய்து கொண்டிருக்கிறார்கள். (Black Sabbath என்ற பெயரை உபயோகிப்பதில் சில சட்டம் சார்ந்த சிக்கல்கள்.) அதை முன்னிட்டு The Dio Years என்ற அவர்களது தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், எனக்கு Black Sabbath குறித்து அதிகம் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். அவர்களது இசை மீது வெறித்தனமான விருப்பமேற்பட்டிருந்தாலும், அவர்களது ஒவ்வொரு தொகுப்பையும் வாங்கி அடுக்குமளவுக்கு மோசமான நிலையை இன்னமும் எட்டவில்லை.

இன்றைய heavy metal எனப்படும் இசைக்கு முன்னோடி என அறியப்படுபவர்கள் இந்த Black Sabbath குழுவினர்கள். எழுபதுகளில் தொடங்கி, தொடர்ந்து இசை ஆல்பங்களை வெளியிட்டு வந்திருக்கிறார்கள். எண்பதுகளில் அதன் முன்னணிப் பாடகரான Ozzy Osbourne குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக Ronnie James Dio அந்த இடத்தைப் பிடித்தார். Dio அதன் பிறகு பல முறை குழுவிலிருந்து வெளியேறி, மீண்டும் இணைந்து கொண்டுள்ளார். இப்போதைய இணைப்பும் அத்தகையதே. எது எப்படியோ, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான் இத்தகைய கூட்டுறவுகளால். Black Sabbath பற்றி பேசும்போது Ozzy Vs. Dio ஓப்பீட்டைச் செய்யாமலிருக்க முடியாது. Ozzy இருந்த காலத்தில்தான் குழுவின் ஆரம்பக் கால hit பாடல்கள் வெளிவந்தன. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அவரது ஈடுபாடு / திறமை / பங்களிப்பு ஆகிவை கேள்விக்கிடமாகியிருக்கலாம். குழுவுக்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்பட்ட போது அவரது வெளியேற்றம் தேவையானதொரு மாற்றமாக இருந்தது. அவருக்கு மாற்றாக வந்த Dio ஏற்கனவே Rainbow இசைக்குழுவின் முன்னணிப் பாடகராக இருந்து, அதிலிருந்து வெளியேறியவர். (Rainbowவின் hit பாடல்களெல்லாம் Dio பாடியவைதான் என்பது எனது தாழ்மையான கருத்து. Black Sabbath விஷயத்திலும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் Ozzy பாடிய அவர்களது பல ஆரம்ப காலப் பாடல்கள் வெகு அருமையானவை) அவர் வந்து இணைந்ததும் வெளியான Heaven & Hell என்ற வெளியீடு பல உச்சங்களை எட்டியது. நிச்சயமாக Dio ஒரு சிறப்பான பாடகர் என்பதில் எந்தவொரு ஐயமும் கிடையாது. Ozzy பற்றி அப்படியெல்லாம் எதுவும் கூற விரும்பவில்லை :)

Black Sabbathஇன் இசைக்குச் செல்வதற்கு முன் கொஞ்சம் அவர்களது ஆன்மீகத்தைப் பற்றி: அபாரமான இசைத் திறமையைப் பெறுவதற்கான உத்திகளில் ஒன்று, சாத்தானிடம் ஆன்மாவை விற்பது (sell your soul to the devil), அதற்கு பதிலாக வேண்டிய கலைத் திறமையைப் பெற்றுக் கொள்வது, என்று மேற்குலகில் (விளையாட்டாக) ஒரு ஐதீகமுண்டு. விளையாட்டு வினையாகி விடுவது போல், பல இசைக்குழுக்கள் சாத்தானிய சடங்குகளில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. பாடல் வரிகளிலும் உட்பொருள் வைத்து சாத்தானின் மகிமைகளைப் போற்றிக் கொண்டிருந்தன இசைக் குழுக்கள், அல்லது அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டன. இந்தக் கதைகளில் தனி கவனம் செலுத்திக் கொண்டு ஒரு கும்பல் அலைந்து கொண்டிருந்தது. இந்த வகையில், சாத்தானுடன் தொடர்பிருந்ததாக நம்பப்பட்ட குழுக்களில் ஒன்று இந்த Black Sabbathஉம் ஆகும். அவர்களது பாடல்களின் சிலிர்க்க வைக்கும் தொனியிலிந்து இது உண்மையாக இருக்கலாம் என்ற உணர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Black Sabbathஇன் தலைவர் என்று கருதப்படக்கூடியவர் அதன் கித்தார் கலைஞர் Tony Iommi. அவரது சிறப்புத்தன்மை அவரது ஆபாரமான, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் riffs. riff - இதைத் தமிழ்ப்படுத்தணும்ன்னா, ஒரு பாடலோட இதயத்துடிப்பு மாதிரி திரும்பத் திரும்ப ஒலிச்சிக்கிட்டே இருக்குமே, அதுதான். ரிதம்ன்னு தவறா புரிஞ்சுக்காதீங்க. ரிதம் வெறும் தாளம் மட்டும்தான். riff அந்தத் தாளத்துக்கு மேல வர்ற அமைப்பு. ஒரு மெட்டை உள்ளடக்கிய, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ஒலியமைப்பு. ஒரு பாடலின் moodஐ நிர்ணயிப்பது இந்த riffதான். Tonyயின் வாசிப்பில் இந்த riff பிரதானமாக ஒலிப்பதைக் காணலாம். Black Sabbathஇன் பல பாடல்களின் வெற்றிக்கு அவற்றின் கவர்ச்சிகரமான riffsஏ காரணம். (Ozzy அல்ல ;) ) riffs மட்டுமல்லாமல், அவரது solosஉம் (அதாங்க, தனி ஆவர்தனம்ன்னு சொல்வோமே, அது) நம்மை உயரங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. சொல்ல முடியாத உணர்வுகளையெல்லாம் ஏற்படுத்தக் கூடியவை.

Bill Ward இக்குழுவின் drums கலைஞர். பல பாடல்களில் அவரது அசத்தலான வாசிப்பைக் கேட்கலாம். ஒரு Jazz drummerஐப் போன்ற சுதந்திரமான, கலக்கலான வாசிப்பு, variations, அவ்வப்போது ஆச்சரியப்படுத்துவது, என்று, பாடல்களுக்கு drums ஒரு தனி பரிமாணத்தை வழங்குவதை மறுக்க முடியாது. அதே போல், குழுவின் bass guitar கலைஞரான Geezer Butlerஇன் வாசிப்பையும் கூர்ந்து கவனித்தால், அது பாடல்களுக்குப் புதுப் புது அர்த்தங்களைக் கற்பிக்கும். அருமையான (bass) solos, மற்றும் பாடல்களுக்கு வித்தியாசமான backing........ பல இடங்களில் leadஉடன் சேர்ந்து ஒலிப்பது, வேறு பல இடங்களில் leadஇலிருந்து தனித்து வேறு notes ஒலிப்பது, அப்படி இரு வேறு ஓலிகள் ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் பாதிப்பு, என்று உன்னிப்பாகக் கேட்டால் கூடுதல் பயன்களைப் பெறலாம்.

தனித்தனியாக குழுவினரின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு விட்டேன். மொத்தக் குழுவின் இசை எப்படி என்றுக் கேட்டீர்களென்றால், ஒரு eerie, அச்சமேற்படுத்தக் கூடிய தொனியில், அதே சமயம், மனதைக் கவரும் இசையை வழங்கியுள்ளனர் இந்த Black Sabbath குழுவினர். அடிமைப்படுத்தும் இசை. கவர்ந்திழுக்கும் தீமை (evil) :)

என்னிடமுள்ள இவர்களின் குறுவட்டுகள்:
இரண்டையுமே பரிந்துரைக்கிறேன். இவர்களைப் போன்ற பிற இசைக்குழுக்கள்: Deep Purple, Rainbow, Whitesnake, Uriah Heep..... (இவற்றில் எதாவது உங்களுக்குப் பிடித்திருந்தால், Black Sabbathஐ நம்பிக்கையுடன் கேட்கலாம். அல்லது Black Sabbath பிடித்துப் போனால் இவற்றையும் முயற்சிக்கலாம்).

உங்கள் வசதிக்காக, சில Black Sabbath பாடல்களை இணைத்திருக்கிறேன், கேட்டு மகிழுங்கள்.

Ozzy பாடிய Wicked World (பாடல் மட்டுமே, நிகழ்படம் கிடையாது):



Dio ஒரு live நிகழ்ச்சியில் பாடிய Die Young என்ற பாடலின் ஒளிப்பதிவு:



ஒன்றே குலம், ஒருவனே சாத்தான்!

ஞாயிறு, ஏப்ரல் 22, 2007

ஐப்பீ

செல்வராஜின் பதிவை ஆவலுடன் படித்துக் கொண்டே வந்ததில் கீழ்க்கண்ட வரிகள் சற்று நெருடலாக இருந்தன:

"“ஓ… என் ஐ.பி முகவரியை நீ ஏன் சொன்னாய்”, என்று பொங்குவதில் அவ்வளவு விஷயம் இல்லை. அப்படி ஒன்றும் அது அதி இரகசியம் இல்லை. நீங்கள் செல்லுகிற ஒவ்வொரு இடத்திலும் ஐ.பி முகவரியைச் சொல்கிறீர்கள். நீங்கள் பின்னூட்டம் இடும் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் முத்திரையையும் அடையாளத்தையும் விட்டு வருகிறீர்கள்."

இதில் மூன்றாம், நானகாம் வாக்கியங்களில் முழு உடன்பாடு. (இரண்டாம் வாக்கியத்தைப் பற்றி, பிறகு) ஆனால் அவற்றைக் கொண்டு முதல் வாக்கியத்தை நியாயப்படுத்த முடியாது என்பது எனது கருத்து. செல்லுமிடமெல்லாம் ஐப்பீ முகவரியைத் தெரிவிப்பது எனது சொந்தத் தேர்வின் விளைவு (result of my personal choice) - எனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளங்களுக்கு மட்டுமே செல்கிறேன், அவற்றிற்கு எனது கணினியின் முகவரியைத் தெரிவிக்க வேண்டும் என்ற முழுமையான புரிதலின் பேரில், மற்றும் அவை அதனை துஷ்பிரயோகிக்க மாட்டா, என்ற நம்பிக்கையின் பேரில்.

இப்போது இரண்டாம் வாக்கியம். அப்படி ஒன்றும் அது அதி இரகசியம் இல்லைதான் - நானே அதைத் தெரிவிக்கும் பட்சத்தில். நான் தெரிவிக்காத ஒரு நபருக்கு அது தெரியவருமானால், எனது பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதாகவே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு ஆட்டோ அனுப்பக் கூடிய ஒருவரை எனது வீட்டு முகவரி சென்றடையுமானால் அது எவ்வளவு பாதுகாப்பான ஒரு நிலைமையோ, அவ்வளவு பாதுகாப்பான நிலைமையே, எனது ஐப்பீ, நான் தராத ஒருவரிடம் சென்று தஞ்சமடைவது. எனது ஐப்பீயைக் கொண்டு ஒருவர் என்னவெல்லாம் செய்யக்கூடும்? முதலில் எனது கணினியை ஊடுருவ முயற்சிக்கக் கூடும். அது முடிந்தால் அதில் spyware, malware, நிறுவக்கூடும். பிறகு எனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் கூடும். எனது சொந்தத் தகவல்களை (அலுவலக மின்னஞ்சல் / வங்கிக் கடவுசொற்கள், இத்யாதி) எனது அனுமதியின்றி பெற்றுக் கொண்டு, மோசடிகளை நிகழ்த்தக் கூடும். அல்லது எனது கணினியை ஒரு spam mail serverஆக மாற்றக்கூடும் :) இவையெல்லாம் செய்ய முடியாத படிக்கு எனது கணினியைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதுதான். இருந்தும் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக புதுப் புது வகையான ஊடுருவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில், நமக்குத் தெரியாதவர்களை நமது சொந்தத் தகவல்கள் (ஐப்பீயும் இதில் அடக்கம்) சென்றடையா வண்ணம் உறுதி செய்து கொள்வதே சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை.

இப்போது முதல் வாக்கியம். மேற்கூறிய காரணங்களால், எனது ஐப்பீ unauthorized நபர்களை அடைவது பற்றி நான் கவலையாவது கொள்ள வேண்டும். அது குறித்து பொங்கலாமா, கூடாதா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது. என்னுடன் வணிக உறவு வைத்திருக்கும் ஒரு சேவை வழங்குனர் எனது பாதுகாப்பை சமரசம் செய்தால் ஒரு வேளை அவரிடம் பொங்குவேனோ என்னவோ. அப்படி எந்தவொரு உறவும் இல்லாத இடங்களில் எனது சொந்தத் தகவல்களை (மீண்டும், ஐப்பீயும் இதில் அடக்கம்) வெளியிடுவது at my own riskஏ ஆகும், அவை எந்த நேரமும் சமரசம் செய்யப்படலாம் என்ற முழூ புரிதலின் பேரில்.

திங்கள், ஏப்ரல் 16, 2007

வியர்டுரை

எச்சரிக்கை - Proxyvon எனப்படும் ஒரு sedative மருந்தின் பாதிப்பில் இந்த இடுகையை எழுதுவதால், weirdness அதிகம் தென்பட வாய்ப்புள்ளது.

முதலில், எனது வினோதங்களைப் பிரஸ்தாபிக்கும்படி அழைப்பு விடுத்த லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நன்றி.

பிறகு, ஒரு சிறிய flashback - அதிகம் பின்நோக்கிப் போக வேண்டியதில்லை, ஒரு நான்கைந்து நாட்கள், அவ்வளவே. இடம் - Madras Bank Road, Bangalore. நேரம் - இரவு சுமார் எட்டரை மணி. வளைந்து நெளிந்து செல்லும் சாலை. லேசாகத் தூறல் போட்டிருந்தது. சிக்னல் கிடைத்ததுதான் தாமதமென விர்ரென முன்னோக்கிப் பாய்ந்தது ஒரு மோட்டார் பைக். அதில் அப்போதுதான் gymமில் (இரண்டாவது நாளாக) workoutஐ முடித்து விட்டு வரும் ஒருவன். work out தந்த உற்சாகம் / தன்னம்பிக்கை / over-confidence (இதில் நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம்) -இன் காரணத்தால், சிறு மழையைக் கண்டு எச்சரிக்கை அடைவதற்கு பதிலாக, மேலும் உற்சாகமடைகிறான். (சிறுமழையைக் கண்டு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் ஏன் எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் கட்டாயம் இவ்விடுகையை மேற்கொண்டு படிக்க வேண்டும்). அவனது உற்சாகத்தை வண்டியின் accelerator பிரதிபலிக்கிறது. தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வாகனமாகக் கடந்து அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறான் நமது candidate. (candidate - ஆந்திர வழக்கின்படி, person / ஆள் என்பதைக் குறிக்கும்)

நம் ஆள் எப்போதும் தனக்கு முன்னால் செல்லும் வண்டியை மட்டும் பார்ப்பது கிடையாது, அதற்கும் முன் சில வண்டிகள் எவ்வாறு செல்கின்றன, எவை வேகத்தைக் குறைக்கின்றன என்றெல்லாம் sub-consciousஆகவே கவனித்துக் கொண்டு செல்லும் பேர்வழி ஆவான். அப்படி, தனக்கு ஓரிரு வாகனங்களுக்கு முன் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர், திடீரென்று வேகத்தைக் குறைத்து, நேராகப் போவதா அல்லது வலது பக்கம் (Museum roadக்குள்) திரும்புவதா என்று குழம்பிக் கொண்டிருந்ததை நம் candidate தனது ஞானக் கண்ணாலேயே அறிந்து விடுகிறான். அப்படியே, தான் சென்று கொண்டிருக்கும் வேகத்தில் தொடர்ந்தால் அந்தக் குழப்பவாதியின் (வண்டியின்) பின்புறத்தை சேதப்படுத்துவதுதான் நடக்குமென்றும் ஆழ்மனதில் உணர்ந்து விடுகிறான். உடனே, தனது முன் பின் சக்கரங்களுக்கான பிரேக்களை அழுத்தி, வேகத்தைக் குறைக்க முயலுகிறான்.

ஆனால், மழை நீராலும் எண்ணைக் கசிவுகளாலும் ஈரம் தோய்ந்த சாலையில், அவனது பைக் சறுக்கிக் கொண்டு தனது vertical நிலையிலிருந்து horizontal நிலைக்கு மாறி, தனது பயணத்தை சிறிது தூரம் தொடர்ந்து விட்டு, பிறகு நிற்கிறது. நம் ஆளுக்கு இவ்வண்ணம் நிகழ்வது இது மூன்றாவது முறை. சென்ற இரு முறைகளும் தனது உள்ளங்கைகளில் land ஆகி, எலும்பு முறிவு எதுவும் ஆகாமல் தப்பித்ததால், எப்படி விழ வேண்டுமென்பது கிட்டத்தட்ட அவனுக்கு பழக்கமாகி விட்டிருந்தது. இப்போதுதான் வினோதத்திலும் வினோதம் நடந்தது.

அவனைப் பின் தொடர்ந்து மேலும் மூன்று மோட்டார் பைக்குகள் அவனைப் போலவே சறுக்கிக் கொண்டு விழுந்தன. அவற்றில் ஒன்று விழுந்து கிடக்கும் நம் ஆளின் மீதே வந்து விழுந்தது. அதன் காரணமாக, சேதமின்றி விழ முடிந்தவனால் சேதமின்றி எழுந்திருக்க முடியாமல் போய்விட்டது. சரி, யாராவது இந்த பைக்கை முதுகின் மீதிருந்து எடுப்பார்கள் என்று காத்திருந்தான். சிறிது நேரமாகியும் யாரும் எடுக்காமல் போகவே, 'somebody pls take this bike off me' என்று கூச்சலிட்டான். (Bob Dylan 'Ma, take this badge off of me' என்று பாடிய மனநிலையில்தான் நம் ஆளும் அப்போது இருந்திருப்பானோ என்று எனக்கு ஒரு ஐயம்) அது யாருக்காவது கேட்டதோ இல்லையோ. கொஞ்சம் நேரம் கழித்து தன் மீதிருந்த பாரம் அகற்றப் பட்டு, அவனால் எழுந்திருக்க முடிந்தது.

எழுந்ததும் gymமில் warm up செய்வது போல் தனது கைகளையும் கால்களையும் நீட்டி மடக்கிப் பார்த்துக் கொண்டான், எலும்புகளெல்லாம் நலமா என்று. இடது கை கொஞ்சம் படுத்தியது. சறுக்கிய வீரர்கள் அனைவரது வண்டிகளும் வரிசையாக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டார்கள். எல்லாரும் நலமே என்று தெரிந்த பின், வண்டிகள் மீண்டும் பிரயாணப் பட்டன. நம் ஆளும் தனது 200கிலோ எடையுள்ள வண்டியை, படுத்தும் இடதுகையையும் பொருட்படுத்தாது, வீட்டை நோக்கிச் செலுத்தினான்.

இடதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்ததில், ஒன்றும் பாதிப்பில்லை என்று தெரிய வந்தது. வண்டியை விற்று விட வேண்டும், இனி அது தேவையில்லை என்றெல்லாம் தோன்றியது. மறுநாள் செய்தித்தாளை வாசித்ததில், முன்தினம் பெய்த லேசான மழையால் மற்றும் பெங்களூரின் எண்ணை தோய்ந்த சாலைகளால்), இது போன்ற நிகழ்வுகள் நகரின் பல இடங்களிலும் ஏற்பட்டு, கிட்டத்தட்ட முப்பது இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் இது போல் சறுக்கினார்கள் என்று தெரிய வந்தது. சே, வண்டியைக் குறை சொல்லி விட்டோமே, நாம்தான் பார்த்து ஓட்டியிருக்க வேண்டும்.
சக்கரங்களின் காற்றழுத்தத்தையும் சரிபார்த்திருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தான்.

இப்போது ஒரு வார ஓய்வில் இருந்து கொண்டு, இடது கை வலியை மட்டுப்படுத்த Proxyvonகளை விழுங்கிக் கொண்டு (மருத்துவர் ஆலோசனைப் படிதான் - இதுல வேற எதுவும் weirdness கிடையாது. இந்த மாதிரின்னெல்லாம் நினைச்சிடாதீங்க) இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கிறான் நம் candidate, எப்போது தன்னால் மீண்டும் வண்டியை ஓட்ட முடியும் என்ற ஆதங்கத்துடன்.

இக்கதை நமக்கு அளிக்கக்கூடிய படிப்பினை............. வேண்டாம், இதற்கு மேல் சொதப்பப் போவதில்லை. :)

செவ்வாய், மார்ச் 13, 2007

இணையத்தை ஊக்க மருந்தில் இயங்க வைக்க.... (Internet on Steroids)

ஒரு dial-up இணைப்பைக் கூட, ஒரு அகலப்பாட்டை இணைப்பைப் போல் வேகமாக செயல்பட வைப்பதற்கான வழிமுறை இங்கே வழங்கப் பட்டுள்ளது.

உங்கள் இணைய இணைப்பின் settings பற்றி கொஞ்சம் பரிச்சியமிருந்தால் இதைச் செய்வது மிக எளிது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்:


மேலே காட்டியுள்ளதைப் போல் connection properties என்ற dialogஐத் திறக்க வேண்டும். இதை Windows நிறுவப்பட்ட கணினிகளில், Control Panel > Network Connections வழியாக அடையலாம். இதிலிருந்து Internet Protocol என்பதைத் தேர்வு செய்து, அதன் propertiesஐத் திறக்க வேண்டும். அதற்கான dialog கீழே காட்டப்பட்டுள்ளது.


மேலுள்ள படத்தில், DNS server settingsஐ கவனிக்கவும். 208.67.222.222 என்பது பிரதான DNS serverஆகவும், 208.67.220.220 என்பது மாற்று DNS Serverஆகவும் இடப்பட்டுள்ளது. உங்கள் கணினிக்கும் இதே DNS server முகவரிகளை வழங்குங்கள். பிறகு OK செய்து உங்கள் தேர்வை உறுதி செய்யுங்கள். அதன் பிறகு மின்னல் வேக இணைய இணைப்பை அனுபவியுங்கள்். விரல் சொடுக்கும் நேரத்தில் பக்கங்கள் திறக்கும் அதி அற்புதத்தைக் கண்டு மகிழுங்கள்.

இது பற்றிய மேல்விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்.

திங்கள், மார்ச் 05, 2007

(பி/இ)றந்த நாள் விழா

கனவுலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சில நபர்களால் நனவுலகைத் தாக்குப் பிடிக்க முடியாமல் போய் விடுவது ஒரு பரிதாபமான உண்மை. அதை அழகாகச் சித்தரித்துக் காட்டிய ஒரு திரைப்படத்தைப் பற்றிய எனது தொடர் விவரிப்பின் மூன்றாம் பாகம் இவ்விடுகை. (முந்தைய இடுகைகள்: முதல் பாகம், இரண்டாம் பாகம்)

திரைப்படத்தின் உச்சக் காட்சியாக இந்தப் பிறந்த நாள் விழா அமைகிறது. ஒரு மூத்த வயது, அழகான, கவர்ச்சிகரமான பெண்ணின் பிறந்த நாள் விழா நள்ளிரவில் தொடங்குகிறது. அவரது இளம் வயதுக் காதலன், அவரது வளர்ப்பு மகள், மற்றும் காதலனின் (நடிப்பில் ஆர்வமுள்ள) நண்பன் என்று அடக்கவொடுக்கமான பங்கேற்புதான் அவ்விழாவில். நகர்ப்புறத்துச் சலசலப்பெல்லாம் இல்லாத ஒரு நாட்டுப்புறப் பண்ணை வீட்டில் வெறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆனால் கொண்டாட்டத்துக்கென்னவோ குறையில்லாது ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அப்பகுதி வட்டார வழக்கப்படி ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, எல்லாருடைய கண்களும் கறுப்புத் துணியால் கட்டி விடப்படுகின்றன. அவ்வாறு கட்டிய நிலையிலேயே, வீட்டின் வெளியே ஒரு மரத்தில் தொங்க விடப்பட்ட ஒரு பொம்மை உருவத்தைத் தேடிக்கண்டு பிடித்து, கையில் வைத்திருக்கும் ஒரு குச்சியால் அந்த பொம்மையை அடித்து நொறுக்க வேண்டும். வெற்றிகரமாக யாரால் அவ்வாறு கண்டுபிடிக்க முடிகிறதோ அவரே வெற்றி பெற்றவர். இருண்ட நிலையில் அனைவரும் தடுமாறுகையில் முதிய பெண் வெற்றிகரமாக அதனைச் செய்து முடிக்கிறார். அவரது இள வயதுக் காதலனும், அவரது வளர்ப்பு மகளும் கண்கள் கட்டி விட்ட நிலையிலும் தடுமாறிச் சென்று ஓரிடத்தில் இணைகிறார்கள். அதை, அவர்களிடையே உள்ள இயற்கையான ஈர்ப்பைக் குறிப்பதாகக் கருத வாய்ப்பிருக்கிறது. (இளைஞருக்கு முதிய பெண்ணுடனான காதல் ஆட்டங்கண்டு கொண்டிருப்பதையும், அவர் இளம் பெண்ணின்பால் ஈர்க்கப் பட்டுக் கொண்டிருப்பதையும் முன்பு விவரித்திருந்தேன்).

ஆட்டம் முடிந்ததும் வீட்டின் உள்ளே சென்று கேக் வெட்டும் படலம் நடத்தப்படுகிறது. ஏற்பாடு செய்யப்பட்ட ஹிஸ்பானிய இசைக் கலைஞர்கள், தங்கள் கித்தார்களைக் கொண்டு இசை விருந்து படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுடன் சேர்ந்து பாடுகிறார்கள் விழாக் கொண்டாடுபவர்கள். சிறிது நேரம் இந்தக் கச்சேரி தொடர்கிறது. பிறகு வளர்ப்பு மகள் எழுந்து கொள்கிறார், தூங்கச் செல்வதாக. அவரை தடுத்துப் பார்க்கிறார்கள் அனைவரும். அவர் வேலையிருப்பதால் செல்வதாக உறுதியாகக் கூறிவிட்டு, தன் அறைக்குச் செல்கிறார். பிறகு முதிய பெண்ணும் அவரது காதலனும், தாங்களும் செல்வதாக அறிவிக்கிறார்கள். எஞ்சியிருப்பது இளைஞனின் நண்பர் மட்டுமே. குதூகலங்களில் கலந்து கொள்ளாது அனைவரும் விடைப் பெற்றுச் சென்றதால் அவருக்குப் பெருத்த ஏமாற்றமேற்படுகிறது. இசைக் கலைஞர்களிடம் இசையை நிறுத்துமாறு கூறிவிட்டு, தனது அறைக்கு வந்து தொலைக்காட்சியை இயக்குகிறார்.

தொலைக்காட்சியில் Godfather படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகா, என்று பார்க்கத் துவங்குகிறார். கிட்டத்தட்ட அதில் வரும் மொத்த வசனமும் அவருக்கு மனப்பாடமாகியிருப்பதால், படத்தின் கூடவே தானும் வசனம் பேசுகிறார், ஏதோ தானே படத்தில் நடிப்பதாக நினைத்துக் கொண்டு. வெளியே இடியுடன் கூடிய மழை பெய்கிறது. முதிய பெண்ணுக்கு அவரது காதலனிடமிருந்து ஒரு பிறந்த நாள் பரிசு கிடைக்கிறது - காதல் முறிவு என்னும் பரிசு. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பது நமக்கு சன்னல் கண்ணாடி வழியாகக் காட்டப்படுகிறது (வாக்குவாதப் பேச்சு ஒலிகளின்றி). மற்றொரு சன்னல் வழியாக இளம் பெண் கறுப்பு உடையிலிருந்து வெண்மை உடைக்கு மாறி, வெளியே கிளம்பும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது காட்டப்படுகிறது. மெதுவாக அவர் இறங்கி வருகிறார். பின்னணியில் Godfather வசனங்கள், உரத்த குரலில். வீட்டை விட்டு வெளியேறி மழையில் நடக்கிறார். ஒரு பேரிடி இடிக்க, அவர் கொண்டு போன குடையோ வேறொரு பொருளோ, ஒரு இடிதாங்கியைப் போல் செயல்பட்டு, அவரை எரித்துச் சாம்பலாக்குகிறது. தன் முடிவை விரும்பித் தேடிக் கொண்டு, தனது கனவு வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார் இளம் பெண்.

அவரது தற்கொலைக்கான காரணம் புரியாது போகலாம். இளைஞருக்குத் தன்மீது வந்த புதிய காதல் பற்றி சந்தேகமிருந்திருக்கலாம். மரம் விட்டு மரம் தாவும் குரங்கைப் போன்ற தன்மையுடைய இளைஞரின் காதலை ஏற்பதை விட சாவதே மேல் என்று நினைத்திருக்கலாம். அல்லது தனது வளர்ப்புத் தாயின் இழப்பின் மீது தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் விருப்பமில்லாதிருக்கலாம். பல்வேறு காரணங்களால் இளைஞரை உண்மையாகக் காதலித்த இளம் பெண் குரூரமான ஒரு முடிவைத் தேரந்தெடுத்து, தன் கனவுலக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். இளைஞரோ, தனது மாஜி காதலியின் பிறந்த நாளன்று, தனது உண்மைக் காதலியை இழக்கிறார்.

அடுத்த காட்சி - இளைஞர் தனது மாமனின் தூசி படிந்த கார் காட்சியறைக்குத் திரும்புகிறார். முதலில் கண்ட மீன், மீண்டும் காற்றில் நீந்துகிறது.

அதற்கடுத்த காட்சி - முதல் காட்சியில் வந்த எஸ்கிமோக்கள் மீண்டும் உரையாடுகிறார்கள். உரையாடலில் மீன் பிடிப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். கனவுகள், சாதனைகள், வாழ்க்கையின் குறிக்கோள்களைப் பற்றியெல்லாம் பேச்சுக்களில்லை. (Arizona Dream - 1993).

ஞாயிறு, மார்ச் 04, 2007

எனது சிறந்தத் திரைப்படம் (தொடர்ச்சி)

கனவுகளே மனிதரைச் செலுத்தும் உந்து சக்திகளாகத் திகழ்கின்றன. கனவுகளைச் சுமந்து திரியும் எல்லாரும் தம் இலக்கை அடைந்து விடுவதில்லை. கனவுகளோடு, அதைச் செயல்படுத்தும் நரித்தனமான சந்தர்ப்பவாதமும் இருந்தாலொழிய, கனவுகள் கனவுகளாகவே நின்று விடுகின்றன. பெரும்பாலான கனவுகள் நிறைவேறுவதில்லை. இறுதியில் ஒரு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது பலருக்கும். ஆனால், கனவு காண்பது அவசியமாக்கப்படுகிறது. "Dream on, dream on till your dreams come true" என்று கூரை மீது நின்று கொண்டு கூவுகின்றனர் சிந்தனைச் சிற்பிகள். அவர்களால் பரப்பப்படும் வெற்றிக்கதைகளே எங்கும் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில், தோல்விக்கதைகளும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவையே பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இனி, சென்ற இடுகையின் தொடர்ச்சி..........

இளம் பெண்ணுடன் ஏற்பட்ட நெருக்கமான நிகழ்வினால் குழம்பிப் போயிருக்கிறார் இளைஞர். அந்த நேரம் பார்த்து ஒரு துக்கச் செய்தி. தன் கனவுகளில் பின்னடைவு ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் இளைஞரின் மாமன் (கார் விற்பனையாளர்). அவரது மரணப் படுக்கையில் அவரிடம் வாக்கு கொடுக்கிறார் இளைஞர், அவரது வணிகத்தையும், விதவையையும் நன்கு கவனித்துக் கொள்வதாக. அவரது இறுதிச் சடங்குகள் முடிந்து பல நாட்களாக நகரத்திலேயே இருந்து விடுகிறார் இளைஞர். ஆனாலும், விட்டுச் சென்ற காதலுறவு அவரை மறுபடியும் நாட்டுப்புறப் பண்ணை வீட்டிற்கே துரத்துகிறது. அங்கு அவருக்காக வெகு நாட்களாகக் காத்திருந்து ஏமாற்றமடைந்த காதலியின் கடுமையான கோபத்தை எதிர்கொள்கிறார். கோபம் கைகலப்பாக மாறி, பிறகு புணர்ச்சியில் முடிவடைந்து, சமாதானம் திரும்புகிறது. மீண்டும் பறக்கும் திட்டம் தொடரப்படுகிறது. இம்முறை வெற்றிகரமாக இயந்திரம் செயல்பாட்டு நிலையை அடைகிறது. வளர்ப்பு மகள் சாந்தமடைந்து, எந்த நாச வேலையிலும் இறங்காதது ஒரு காரணமாக இருக்கக் கூடும். முதிய பெண் கனவு நனவான மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். அந்த வெற்றிக்குக் காரணமான இளைஞருக்கோ குழப்பங்களே மிஞ்சுகின்றன. தனது காதல் முடிவை மீள் பரிசீலனைக்குட்படுத்தும் மனநிலையிலிருகிறார் அவர்.

கனவுகளின் பாரத்தைத் தயக்கமின்றிச் சுமந்து திரியும் மற்றொருவர், அந்த இளைஞரின் நண்பர். அவரது கனவு - ஒரு நடிகனாக வேண்டுமென்பது. இளைஞரின் முறை தவறிய காதலை அங்கீகரிக்காவிட்டாலும், அவருக்கு உறுதுணையாகத் திகழ்கிறார். ஒரு கலை நிகழ்ச்சியில், ஒரு விமானத்தால் துரத்தப் படுவது போல் (பல முறை தரையில் விழுந்து எழுந்து) நடித்துக்காட்ட, அது பார்வையாளர்களிடமிருந்து போதிய வரவேற்பைப் பெறாது போக, அவர்களின் ரசனையைக் குறை கூறுகிறார். பிறகு, முதிய பெண் வெற்றிகரமாக பறக்கும்போது, அந்தக் காட்சி உண்மையில் நடந்தேறுகிறது - அதாவது, அப்பெண்ணின் பறக்கும் இயந்திரத்தால் துரத்தப்பட, நம் நடிகர் அதிலிருந்து தப்புவதற்காகப் பலமுறை தரையில் விழுந்து எழுவது, ஒரு புன்னகையை வரவழைக்கும் காட்சி. இவரது பாத்திரம் கதைக்கு அதிக வலு சேர்க்காவிட்டாலும், 'வெற்றுக் கனவுகள்' என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு அவரது கதை உதவுகிறது.

இளைஞருக்கும் இளம் பெண்ணுக்குமுள்ள இடைவெளி மேலும் குறைகிறது. முதிய பெண்ணுடனான காதல் கொஞ்சங் கொஞ்சமாகக் கசந்து விட, இளம் பெண்ணின் பால் ஈர்க்கப்படுகிறார் இளைஞர். தனது காதல் தேர்வில் தவறிழைத்து விட்டதாக அவரிடம் ஒப்புக் கொள்கிறார். முதிய பெண்ணால் தான் பயன்படுத்தப்பட்டதாகவே உணர்வதாகக் கூறுகிறார். அவரது மேம்போக்கான குணத்தை இப்போதே உணர முடிந்ததாகத் தெரிவிக்கிறார். இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு எங்காவது ஓடிவிடத் தயாராக இருப்பதாகவும் தன்னுடன் வரும்படியும் இளம்பெண்ணை அழைக்கிறார். அவரோ, சில business விவகாரங்களை கவனிக்க வேண்டியிருப்பதால், தன்னால் அந்த அழைப்பை ஏற்று வர இயலாது என்று விடையளிக்கிறார்.

இந்நேரத்தில் முதிய பெண்ணின் பிறந்த நாள் வருகிறது. படத்தின் நீஈஈஈஈண்ட காட்சியும் உச்சக்கட்டமும் அதுதானென்பதால், அதற்கென ஒரு தனியிடுகை........ அடுத்த முறை மூட் வரும்போது :)

எனது சிறந்தத் திரைப்படம்

கனவுகள் - வித விதமானவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை. ஒரு படத்தின் கதாநாயகன், கதாநாயகி, வில்லன், வில்லி, குணச்சித்திர நடிகர் / நடிகை ஆகிய எல்லாமே இக்கனவுகள்தான். கனவுகளுக்கிடையே நடக்கும் போராட்டங்கள், முரண்பாடுகள், ஒத்திசைவுகள்........... என்று படத்தின் எல்லா நிகழ்வுகளையும் நிர்ணயிப்பது இக்கனவுகள்தான். ஆரம்பமும் ஒரு கனவுக் காட்சியே.

இரு எஸ்கிமோ இனத்தைச் சார்ந்த நபர்கள் பனி படர்ந்த ஒரு குளத்தில் தூண்டிலிட்டு மீன் பிடித்துக் கொண்டிருகிறார்கள். ஒருவர் முதியவர். மற்றொருவர் இளைஞர். இளைஞருக்குப் பல சந்தேகங்கள். அவற்றை அவர் எஸ்கிமோ மொழியில் பெரியவரிடம் கேட்க, தனது எல்லாம் தெரிந்தத் தொனியில் அக்கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருக்கிறார் முதியவர். மீன் பிடித்தலில் ஆரம்பித்து, உரையாடல் வாழ்வியல் தத்துவங்களையெல்லாம் தொட்டுவிட்டுத் திரும்புகிறது (என்று subtitles தயவில் தெரிய வருகிறது). அதற்குள் தூண்டில் வலுவாக இழுபட, இருவரும் சேர்ந்து இழுக்கிறார்கள். இதுவரை கண்டிராத அளவுக்குப் பெரிய மீன் ஒன்று தூண்டிலில் சிக்கி, தண்ணீரிலிருந்து போராடிக் கொண்டே வெளிவருகிறது. தம்மிடமுள்ள சுத்தியலால் அதனை ஒரு போடு போடுகிறார்கள் - போராட்டம் நின்று மீன் தரையில் கிடத்தப் படுகிறது. அதை எப்படி கூறு போடலாம் என இருவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், மீன் உயிர்த்தெழுந்து காற்றில் நீந்தத் தொடங்குகிறது. நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இருவரையும் கடந்து ஒயிலாக ஒரு சுற்று சுற்றி, தூசான் (Tucson) நகருக்குப் பயணிக்கிறது, மீனும் கதையும்.

முன்பு கண்ட இரு நபர்களும் மறுபடியும் தோன்றுகிறார்கள், ஆனால் நவீன நகரத்து ஆட்களாக. முதியவர் கார் விற்பனையாளர். அவரோடு உள்ள இளைஞர் அவரது மருமகன். தொழில் கற்றுக் கொள்வதற்காக மாமனிடம் தஞ்சம் புகுந்தவர், பெற்றோர்களை விட்டு வெளியேறிய பின். மாமனின் கனவு, கார்களாக விற்றுத் தீர்த்து விடவேண்டுமென்பதே. அப்படி விற்ற கார்களை வரிசையாக நிறுத்தினால் அவை பூமியிலிருந்து சந்திர மண்டலம் வரை உள்ள தூரத்தை நிரப்ப வேண்டும். அவ்வாறாக கார்களை விற்று, பெரும் பணக்காரராக மாறி, சமூகத்தில் மதிப்பு மிக்க நிலையை அடைந்து விட வேண்டுமென்பதே அவரது குறிக்கோள். தனது கனவுலக வாழ்வின் நீட்சியாக, தனக்கு வயதில் மிகவும் குறைந்த ஒரு மாடல் பெண்ணையும் மணந்து கொள்கிறார். இந்தச் சூழலில் இளைஞர் தனது வாழ்க்கைப் பாடங்களை பெறுகிறார். அவர்களது கார் காட்சியறைக்கு வருகை தரும் இரு மேட்டுக்குடிப் பெண்களிடம் அவருக்குப் பரிச்சயமேற்படுகிறது.

அவ்விரு பெண்களில் ஒருவர் சற்று வயதானவர், ஆனால் கவர்ச்சியான தோற்றமுடையவர். அவர் ஒரு விதவை, மற்றும் அவருடன் வரும் இள வயதுப் பெண்ணின் வளர்ப்புத் தாய். இருவரும் தங்கள் நாட்டுப்புற பண்ணை வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஏதோ காரணத்தால் இளைஞருக்கு இப்பெண்களுடன் சென்று அந்தப் பண்ணை வீட்டில் வசிக்கும் வாய்ப்பேற்படுகிறது. அந்த மூத்தப் பெண்ணுடன் ஏற்படும் காதலும் ஒரு காரணமே. தலைமறைவாகும் மருமகனைத் தேடி வருகிறார் அவரது மாமன், கூடவே இளைஞனின் நண்பனும். முதிய பெண்ணிடம் பேசிப் பார்க்கிறார் தனது மருமகனை விடுவிக்கும் படி. பழைய காருக்கருகே ஒரு புதிய காரை நிறுத்தினால் எப்படியிருக்கும் என்றெல்லாம் உவமையளித்துப் பார்க்கிறார். (தனது சொந்தக் கதையை சௌகரியமாக மறந்துவிட்டு). "உனது மகனாக இருப்பதற்கேற்ற வயதுடையவன் அவன்" என்று சொல்லிப் பார்க்கிறார். "ஆனால் அவன் எனது மகன் கிடையாது, திருவாளரே, அவன் எனது காதலன்" என்று விடை கிடைக்கிறது. சலிப்படைந்து போய் வலுக்கட்டாயமாக மருமகனை இழுத்துக் கொண்டு போகப் பார்க்கிறார் மாமன், இளைஞனது நண்பனின் உதவியுடன். அப்போது அப்பெண்ணின் துப்பாக்கி பேசுகிறது. நீளமான வேட்டைத் துப்பாக்கியால் ஓட ஓட விரட்டப் படுகிறார் மாமன். இளைஞரின் நாட்டுப்புற வாசம் தொடர்கிறது.

தன் காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதாக இளைஞர் வசனம் பேச, அவர் முன் தனது கனவை விரிக்கிறார் அப்பெண்மணி. அவரது கனவு - ஆகாயத்தில் பறப்பது, ஒரு சுதந்திரப் பறவையைப் போல். விமானத்தில் அல்ல, தன் பட்டறையிலேயே உருவாக்கப்பட்ட ஒரு பறக்கும் இயந்திரத்தில். அவரது கனவை நனவாக்கும் வேலையில் இளைஞர் ஈடுபடுகிறார். ஆதிகாலத்தில் விமானத்தைக் கண்டுபிடிக்க என்னென்ன செய்தார்களோ, அனைத்தையும் தனது காதலிக்காக மீள் கண்டுபிடிப்பு செய்யும் பணியில் நாட்களைக் கடத்துகிறார். பல்வேறு காரணங்களால் இக்கண்டுபிடிப்பு தாமதப் படுகிறது. காதலியின் வளர்ப்பு மகளுக்கு இந்த விளையாட்டுகள் பிடிக்காததால், அவ்வப்போது இரவு நேரமாகப் பார்த்து, இயந்திரத்தை உடைத்து போடுகிறார் அப்பெண். அல்லது புயல் மழையால் அந்த இயந்திரத்தின் சிறகுகள் தாமாகவே பிய்த்துக் கொண்டு விடுகின்றன. அல்லது, சோதனையின் போது இயந்திரம் சிறிது தூரம் எழும்பி, மீண்டும் தரையிறங்கி விடுகிறது. ஒரு முறை, இயந்திரத்தை மூத்த பெண் செலுத்திக் கொண்டு செல்கையில், அட்டகாசமாக மேலெழும்பி, நன்றாகப் பறந்து விட்டு, கொஞ்சம் பலமாகக் காற்றடித்ததால் கட்டுப்பாடிழந்து வானுயரத்திலிருந்து தரையிலிருக்கும் ஒரு மரத்தின் கிளைகளின் மீது வந்து விழுகிறது (பெண்ணுடன் சேர்ந்து). உடல் முழுக்க கட்டுகள் போடப்பட்டு கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்படுகிறார் அப்பெண்.

வளர்ப்பு மகள் - தனது வளர்ப்புத் தாயின் போக்குகளுடன் கொஞ்சமும் உடன்பாடில்லாதவர். எப்பொழுதும் ஒரு அக்கார்டியன் இசைக்கருவியை வைத்துக் கொண்டு அதே ராகத்தைத் திரும்பத் திரும்ப இசைத்து, எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். இளைஞருக்கு அவர் மீது இயற்கையாகவே ஒரு வெறுப்பு மேலிடுகிறது. ஒரு இரவு நேரத்தில் எங்கோ கிடைத்த ஒரு கைத்துப்பாக்கியுடன் இந்த வளர்ப்பு மகளின் அறைக்குள் நுழைந்து விடுகிறார். தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து, முதுகைக் காட்டிப் படுத்திருக்கும் அப்பெண்ணைச் சுடுவதற்குக் குறி பார்க்கிறார். பிறகு கொஞ்சம் தயங்குகிறார். "ஏன் தயங்குகிறாய்? சுட்டு விடு!" என்று கட்டளையிடுகிறார் பெண் (அவருக்கென்ன முதுகிலும் கண்கள் உள்ளனவா என்று ஆச்சரியப் படவைக்கும் விதத்தில்.) இளைஞர் மறுத்து விட, "சரி அப்படியானால் வா, ஒரு மரண விளையாட்டு விளையாடலாம்" என்று இளைஞரை மேசைக்கு அழைக்கிறார். கைத்துப்பாக்கியிலுள்ள தோட்டாக்களில் ஒன்றை மட்டும் விட்டு வைத்து, மற்றவைகளை நீக்கி, இளைஞரை Russian roulette ஆட அழைக்கிறார். இளைஞர் மறுபடியும் தயங்க, "சரி, முதலில் எனது முறை" என்று தன் தலையைக் குறிவைத்து சுட்டுக் கொள்கிறார். துப்பாக்கி வெடிக்காது, உயிர் பிழைக்கிறார் இளம் பெண். அடுத்து உன் முறை என்று துப்பாக்கியை இளைஞரிடம் நீட்ட, இளைஞர் "எனக்கு இறந்து போக விருப்பமில்லை" என்கிறார். அது விளையாட்டு விதியை மீறுவதாகும் என்று கூற, இளைஞர் முதலில் தயங்கி, பின் ஒரு முறை சுட்டுக் கொள்கிறார். வெடிக்காததால் சலிப்பேற்பட்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை சுட்டுக் கொள்ள (அவையும் வெடிக்காமல் போக), பெண் அவரை நோக்கிப் பாய்ந்து அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைக் காப்பாற்றி, அவர் விளையாட்டு விதியை மீறியதாகக் கடிந்து கொள்கிறார். இச்சம்பவம் இருவருக்குமுள்ள உறவை மாற்றி ஒரு நட்புணர்வை ஏற்படுத்துகிறது. அந்த இளம் பெண்ணுக்கு, இளைஞரின் மீதுள்ளக் காதலும் வெளிப்படுகிறது.

(மூட் வரும்போது தொடரப்படும்)

சனி, பிப்ரவரி 17, 2007

கணினிகளுக்கான கவிதைகள்

நான் ஒரு கவிஞன். கவிதை எழுதுவது எனக்குப் பிடித்தமானவொரு பொழுதுபோக்கு. மனதில் இருக்கும் ஒரு கருத்தை கவிதையாக வடித்து முடித்து விட்டால் ஒரு பாரம் இறங்கியதைப் போன்ற ஒரு நிம்மதியைப் பெறுவேன். என் கவிதைகள் இலக்கணச் சுத்தமானவை. ஒரு காற்புள்ளி அறைப்புள்ளியைக் கூட தவற விடாது சேர்த்து விட்டால்தான் என் மனம் நிறைவடையும் (என் வாசகர்களின் மனங்களும்).

என் வாசகர்களை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. மிகக் கறாரான பேர்வழிகள். ஆனால், பெரும் அறிவாளிகள். எத்தகைய சிக்கலானக் கருத்தை முன்வைத்தாலும், நொடிப்பொழுதில் அதை உள்வாங்கிக் கொள்வதில் தீரர்கள். மேலும், பலமொழிப் புலமையுடையவர்களென்பதால் அவர்களுக்கு எம்மொழியும் சம்மதமே. எனவே, அவர்களுக்காக நான் பல மொழிகளில் கவிதையெழுதுவதுண்டு. ஆனால் எல்லா வாசகர்களையும் ஒரே மாதிரி எடை போட்டு விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. அந்தத் தனித்தன்மையை மதிக்காவிட்டால் என் கவிதை அவர்களிடம் செல்லுபடியாகாது. ஆகவே, ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனியாகக் கவிதையெழுதுவேன். அவர்களனைவரும் நிறைவடைந்தாலே எனக்கு மகிழ்ச்சி.

கவிதையெழுதுவதற்கு நேரம் காலம் கிடையாதென்பார்கள். அது எனக்கும் பொருந்தும். எனது முழு நேரத்தொழிலுக்கு மத்தியில் கள்ளத்தனமாகக் கவிதையெழுதுவது, கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒரு அனுபவம் - ஒரு கள்ளக் காதலியுடன் சரசமாடுவதைப் போல். அதேபோல் நடுநிசியில் தூக்கம் கெட்டுக் கவிதை எழுதுவதும் ஒரு சுகமான அனுபவம்தான். கண்கள் தூக்கத்தில் தானாக மூடிக்கொள்ள, மனமோ அகலமாய் விழித்துக் கொண்டு, கவிதை வரிகளை விரல் நுனிகளுக்குச் செலுத்திக் கொண்டிருக்கும் அந்தப் போராட்ட நிலையை உணர்ந்தாலன்றி விவரிக்க இயலாது. பேசாமல் கவிதை எழுதுவதையே முழு நேரப்பணியாகக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்போது கவிதை மீது இவ்வளவு நாட்டம் வந்திருக்குமா என்பது சந்தேகமே. 'வயிற்றுப் பிழைப்புக்கு வேறு தொழிலிருக்க, மனநிறைவுக்காகக் கவிதை' என்பதே சிறந்த ஏற்பாடாகும்.

சில சமயம் இந்தக் கவிதை எழுதுவதால் சலிப்பேற்படுவதுமுண்டு. சொல்ல விரும்பும் கருத்தை சரியான வகையில் சொல்வதற்குள் தாவு தீர்ந்து விடும். என்னதான் முயன்று பார்த்தாலும் சரியான சொற்பிரயோகங்கள் தட்டுப்படாமல் திணற வைத்துவிடும். அவ்வப்போது முழு நிறைவில்லாவிட்டாலும் கவிதையை ஒப்பேற்றி விடுவதுண்டு. அழகியலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல், கவிதையின் இறுதி இலக்கிற்கு முன்னுரிமை அளித்து இவ்வாறு இத்துயரத்தை முடித்துக் கொள்வதுண்டு. ஒரு கவிதை அதன் முடிவை அடைந்தே தீர வேண்டும் என்று நாமே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டு விடுவதால் ஏற்படும் நிலைமை இது. ஒரு முடிவுறாதத் தொடராகக் கவிதை நீண்டு கொண்டே போகுமானால், வாழ்வின் அத்துனை ரகசியங்களையும் அது வெளிக் கொணர்ந்து விடுமோ என்னவோ. ஆனால் அதற்கெல்லாம் மனிதப் பிறப்புகளான நமக்குப் பொறுமையிருப்பதில்லை.

நான் எழுதும் கவிதைகள் பெரும்பாலான மானிடர்களுக்குப் பிடிப்பதில்லை. பெரும்பாலும், அவை monitorகளுக்கு மட்டுமே. :) நான் அண்மையில் எழுதிய சில கவிதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.