செவ்வாய், செப்டம்பர் 27, 2005

வீடடுப் பெண்களும் வீதிப் பெண்களும்

நம்மிடையே பாலியல் விவகாரங்கள் பற்றியத் திறந்த மனப்பான்மையும் பார்வைகளும் வேண்டுமென்று எழுப்பப்பட்டக் கோரிக்கை தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. பண்பாட்டுப் பொய்ப் பிரச்சாரங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட அறிவுக் கொழுந்துகள் எழுப்பும் கண்டனங்களும் கேள்விகளும் நேர்ச் சிந்தனை கொண்டவர்களைத் திக்குமுக்காடச் செய்கின்றன. இதனைப் படித்து யாரும் மனம் மாறப்போவதில்லையென்றாலும், அந்த வாய்ப்பையாவது அளிப்போமேயென்ற நல்லெண்ணத்தில் இதைப் பதிகிறேன்.

பாலியல் உறவுகள் பற்றி நம் மரபு, பண்பாடு, மதபோதனைகள் என்ன சொல்கின்றன? சில மூலங்கள் (sources) பலதார மணத்தை அங்கீகரிக்கின்றன, இன்னும் சில இதை எதிர்க்கின்றன. சில, விவாகரத்திற்கும் கருத்தடுப்பிற்கும் தடை விதிக்கின்றன. சில, திருமணம் என்ற பந்தத்திற்குள்தான் ஆணும் பெண்ணும் உறவாடலாம் என்றொருக் கட்டுப்பாட்டை விதித்து, ஆனால் கருத்தரிக்க இயலவில்லையென்றால் யாராவது ரிஷியின் உதவியுடனோ அல்லது இளவட்டத்தின் உதவியுடனோ கருத்தரிக்கலாமென்று அங்கீகாரம் வழங்குகின்றன. திருமணமாகாதக் கோவலனும், மாதவியும் உடன்வாழ்ந்து மணிமேகலையைப் பெற்றெடுத்தப் பழம் பண்பாடுதான் நம் தமிழ்ப் பண்பாடு. இவ்வாறு, ஒரு முரண்பாட்டு மூட்டைதான் மிஞ்சுகிறது நம் மரபையும் பண்பாட்டையும் ஆராய்ந்தால். இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒழுக்கம், சுத்தம், களங்கம், மாசு என்றுப் பிதற்றிக் கொண்டிருக்கின்றன நம் அறிவுக் கொழுந்துகள்.

பாலியல் சுதந்திரம், பொறுப்புணர்வு ஆகியவை குறித்த புரிதல்கள் இன்று அத்தியாவசியமாகின்றன, எய்ட்ஸ் என்றக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல் சமூக நலன் என்ற வகையிலும். குடும்பம், திருமணம் போன்ற ஏற்பாடுகளின் வருங்காலமும் இன்று கேள்விக்குறியாகிக் கொண்டு வருகிறது. தனிமனித உரிமைகள், அவற்றை உறுதிப்படுத்துவது என்றக் கோணங்களில் நோக்கினால் திருமண வாழ்க்கை இவைகளில் அதிக மதிப்பெண்கள் பெறுமா என்பது சந்தேகமே. மேலும், நம் பண்பாடுகள் வழிமொழிந்த படி, திருமணம் என்பது free sexஆ, licence to sexஆ? என்றக் கேள்வியும் தோன்றுகிறது. Isn't marriage an overkill, if all you want is just sex? (இதைத் தமிழ்ப்படுத்த முடியவில்லை :) ) திருமணத்தை விட எளிமையானத் தீர்வு இருக்கக் கூடுமல்லவா இதற்கு? இத்துடன் இன்று ஓரினச்சேர்க்கை என்றப் பரிமாணமும் சேர்ந்து கொண்டுள்ளது, ஆண் - பெண் திருமண உறவு என்ற ஏற்பாட்டைக் கேள்விக்கிடமாக்கும் வகையில். இவைகளைக் குறித்த மனம் திறந்த விவாதங்கள் இன்றைய நிலையில் தேவைப்படுகின்றன. பாலியல் உறவு என்பதே திருமணம் என்ற அமைப்பிற்குள்தான் நடைபெற வேண்டுமென்றக் கற்காலச் சிந்தனை நலிவடைந்து வருகிறது உலகின் பெரும்பாலானப் பகுதிகளில் (நம் பகுதியிலல்ல - நாம்தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தைச் சேர்ந்தவர்களாயிற்றே)

இந்நிலையில், இக்கருத்தை நேர்மையான முறையில் ஒருவர் முன்வைக்க, அவருடன் உடன்பட்டவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, நம் அறிவுக் கொழுந்துகள் எழுப்பினரே ஒருக் கேள்வியை. அதன் சாரம், "வீதிப் பெண்களுக்குப் பரிந்துரைக்கும் நியாயத்தை உம் வீட்டுப் பெண்களுக்கும் பரிந்துரைப்பீர்களா?" முட்டாள்த்தனமான இந்தக் கேள்வியை பெரும்பாலோர் சட்டை செய்யாததால் ஏற்பட்டத் துணிச்சலில், இக்கேள்வி பலரால் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்கப் பட்டு வருகிறது. இதற்கு விடையளிப்பதற்கு பதிலாக, இக்கேள்வியின் அடிப்படைக் காரணிகளை ஆராய்வது பொருத்தமானச் செயல்.

தனிமனிதச் சுதந்திரம் என்றால் அது அனைவருக்கும் பொருந்தக்கூடியதே என்பதே பொதுவானப் புரிதல். ஆண்களுக்கு மட்டும் என்றோ, பெண்களுக்கு மட்டும் என்றோ, மேலும் பாகுபடுத்தி உங்கள் வீட்டுப் பெண், எங்கள் வீட்டுப் பெண் என்றெல்லாம் தேர்ந்தெடுத்து வழங்கப் படுவதல்ல இவ்வுரிமை. இவ்வாறிருக்க, இத்தகைய பாகுபாடுகளை நினைவுப் படுத்தி ஏனிந்தக் கேள்விகள்? வீட்டுப் பெண்ணுக்கும் வீதிப்பெண்ணுக்கும் என்ன வேறுபாடு கண்டீர்கள்? வீட்டுப் பையன்களைப் பற்றியும் ஏன் கவலையுடன் விசாரிக்கவில்லை? நான் கேட்கிறேன், உங்கள் மகனோ, தமையனோ (தந்தையோ) திருமணமற்றப் பாலியலுறவு கொண்டால் அதில் உங்களுக்கு முழுச் சம்மதம்தானா? ஆமென்றால், பெண்களுக்கு மட்டும்தான் பண்பாட்டு வேலிகளா? வீட்டுப்பெண்ணைத் தங்கக் கூண்டுக்குள் அடைத்து விட்டு, வீதிப் பெண்ணைச் சூறையாடும் மனோபாவத்தைத்தானே உங்களை அறியாமலே வெளிப்படுத்துகிறீர்கள், உங்கள் 'புத்திசாலித்தனமானக்' கேள்வியால்? உங்கள் கேள்விக்கு விடையளிக்க வேண்டுமென்றால் நாங்களும் உங்களைப் போலவே சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில், எங்கள் ஆற்றாமையை மட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். மன்னித்துப் பொறுத்தருளுங்கள், நன்றி.

புதன், செப்டம்பர் 14, 2005

ஹமாஸ¤க்கு நன்றி!

தொலைக்காட்சியில் சானல் மேய்ந்து கொண்டிருக்கும் போது மாட்டியது இச்செய்தி. கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் - பாலஸ்தீனச் சூழ்நிலையை கவனித்து வருபவர்களுக்கு இஸ்ரேலின் அண்மைய காஸா வெளியேற்றம் பற்றித் தெரிந்திருக்கலாம். அரசியல் உள்நோக்கங்கள் எல்லாவற்றையும் கடந்து, இது பாராட்டப்பட வேண்டிய செயல். கடந்த 38 வருடங்களாகத் தனது ஆக்கிரமிப்பில் இருந்த காஸா பகுதியை ஒரு வழியாகக் காலி செய்து, பாலஸ்தீனர்களிடமே ஒப்படைத்தது இஸ்ரேல். இதற்கு யூத மதவெறியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டு காஸாவுக்குள் அநியாயமாகக் குடிபுகுந்தவர்களும் இவர்களே. இவர்களைக் கட்டாயப்படுத்தி, காலி செய்ய வைத்தது இஸ்ரேலிய அரசு.

ஆனால் வெளியேற்றத்திற்கு முன்நிபந்தனையாக, இஸ்ரேல் காஸாவின் எகிப்துடனான எல்லையைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றுக் கூறப்பட்டு வந்தது. இஸ்ரேல் அதனைக் கைவிட்டிருக்கும் போலத் தெரிகிறது. எல்லைப் பாதுகாப்பு பாலஸ்தீன அரசிடமே விடப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினர் எல்லைச் சுவரை குண்டுகள் கொண்டு தகர்த்திருக்கின்றனர். இவ்வாறு திறந்து விடப்பட்ட எல்லையைக் கடந்து, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களும் எகிப்தியர்களும், 38 வருடங்களுக்குப் பிறகு ஓருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றனராம். மலிவு விலையில் ஆடுகள் வாங்க என்றொரு கூட்டம், மறந்து போன உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள என்றொருக் கூட்டம், சும்மா வேடிக்கை பார்க்க என்று மற்றொருக் கூட்டம், இப்படி கிளம்பிய மக்கள் அலையை அடக்குவதற்கு அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர் எகிப்திய மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள்.

நாளடைவில் நிலைமை 'கட்டுக்குள்' வரலாம். எல்லைச் சுவர் மீண்டும் ('அந்த' ஒப்பந்தம், 'இந்த' ஒப்பந்தம் என்று காரணங்காட்டி) புதுப்பிக்கப்படலாம், படாமலும் போகலாம் (பெர்லின் சுவரின் வீழ்ச்சியை நினைவில் கொள்க). ஆனால் இன்று அம்மக்களுக்கு சுவாசிக்கக் கிடைத்தது, முப்பத்தியெட்டு வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த ஓர் சுதந்திரக் காற்று. தடுப்புச்சுவர் இல்லாமல், தடையேதுமில்லாமல், மறுபக்கம் சென்று வர ஓர் அரிய வாய்ப்பு. இது பற்றிய செய்தித்துண்டுதான் நான் சானல் மேய்ந்த போது காணக்கிடைத்தது. இதோ செய்திக் குறிப்பு மற்றும் காட்சி. இக்காட்சியில், எல்லையைக் கடந்து வந்த இளைஞர் ஒருவரை அழைத்து கருத்து கேட்கிறார் நிருபர். அவரைக் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு, பிறகு மண்டியிட்டு தரையை முத்தமிடுகிறார் இளைஞர். விடாது பின்பற்றும் நிருபருக்கு பதிலளிக்க முயன்று ஆனால் முடியாமல், பொங்கி வரும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்று அதிலும் தோற்றுப்போய், தன்னால் பேச முடியவில்லை என்று நிருபரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார் அந்த இளைஞர்.

அதிகாரம் படைத்த மூடர்களால் இவ்வுலகம் எவ்வளவு சிக்கல் மிகுந்ததாக ஆகி விட்டது!

வியாழன், செப்டம்பர் 08, 2005

எரிபொருள் விலையுயர்வு - மாற்று யோசனைகள்

தனது எரிபொருள் தேவையில் எழுபது சதவிகிதத்தை இந்தியா இறக்குமதிகளைக் கொண்டே சமாளிக்கிறது. உலகச் சந்தைகளில் அதன் விலை ஏறிக்கொண்டே போவதால், அரசுக்கும் அதன் விலையை ஏற்ற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து சிலக் கூட்டணிக் கட்சிகளும் பல எதிரணிக் கட்சிகளும் போர்க்கொடியை உயர்த்தியுள்ளன. முன்பிருந்த administered pricing mechanism (APM) என்ற முறையை நீக்கி, உலகச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து உள்நாட்டு எரிபொருள் விலையும் அமையும் வகையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது முந்தய அரசைச் சேர்ந்த, தற்போது எதிர்ப்பைத் தெரிவிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளே. அரசியலில் இதுவொன்றும் பெரிய விஷயமல்ல என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நாம் உணர வேண்டியது, முந்தய அரசின் நடவடிக்கை சரியானதே என்பதைத்தான் (அவர்களே இப்போது அதை எதிர்க்கும் முரண்பாட்டையும் தாண்டி). ஏனென்றால், அரசு தன் வரிப்பணத்தையோ, இலாபங்களையோ குறைத்துக் கொண்டால்தான் விலையேற்றத்தைத் தடுக்க முடியும். அவ்வாறு செய்தால் நிதி ஒதுக்கப்பட்ட எத்தனையோத் திட்டங்களுக்குப் பற்றாக்குறையேற்பட்டு, அவை நிறைவேற்றப்படாமல் போகும் சாத்தியமுள்ளது. மேலும் மேல்தட்டு வர்க்கத்தினரின் சொகுசு வாழ்க்கைமுறையை (குளிர்சாதனக் கார்கள், டீசல் ஜெனரேட்டர்கள் etc) அரசே மானியம் வழங்கி ஆதரித்தது போலாகும். மக்களின் வரிப்பணத்தை இதைவிட மேலான வகைகளில் செலவிடலாமல்லவா?

எரிபொருளின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது போலுள்ளது. ஆகவே, இதனை எதிர்கொள்ள மாற்று எரிபொருட்களைத் தோற்றுவிக்க வேண்டும், அல்லது தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாற்று எரிபொருட்கள் என்றுப் பார்த்தால் மின்சாரக் கார்கள், ஸ்கூட்டர்கள் என்றொருப் பக்கம் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விவசாய விளைப்பொருட்களிலிருந்துத் தயாரிக்கப்படும் ethanol போன்றவை பெட்ரோலுக்கு பதிலாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டு வருகிறன (இதன் சாத்தியக்கூற்றைக் குறித்து எனக்குச் சந்தேகமாகத்தான் உள்ளது). மாற்று எரிபொருட்கள் பாராட்டப்பட வேண்டியவையென்றாலும் பரவலானதொரு தீர்வை அளிக்கக்கூடுமா என்பது சந்தேகமே. எரிபொருள் சிக்கனம் / தேவைகளைக் குறைப்பது என்பதே நீடித்த தீர்வை அளிக்குமென்றுத் தோன்றுகிறது. தேவைகளைக் குறைப்பதென்றால் பயணத்தை அல்லது போக்குவரத்தைக் குறைப்பதன்று. அதே செயல்பாடுகளை, குறைந்தளவு எரிபொருள் செலவில் நிறைவேற்றுவது என்று பொருள் கொள்ளலாம். இன்றைய எரிபொருள் தேவையை ஆராய்ந்தால், பெரும்பாலும் அது சரக்கு வாகனங்களுக்கும், மக்கள் பயணிக்கும் கார், மோட்டர் சைக்கிள், பேருந்து போன்ற வாகனங்களுக்கும் தேவைப்படுகிறது.

மக்கள் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், பேருந்தைத் தவிர மற்ற வகையான வாகனங்கள் செலவிடும் எரிபொருளின் அளவு நியாயப்படுத்த முடியாததே என்றுக் கூறலாம். ஒருவரோ அல்லது இருவரோ அலுவலகம் சென்று திரும்புவதற்குள் எரிபொருள் சில லிட்டர்கள் செலவாகி விடுகிறது. இந்தச் செலவு அவர்களால் எளிதில் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால், விஷயம் அத்துடன் நின்று விடுவதில்லை. அவர்களது ஆடம்பரத்திற்காக அரசு அகலமானச் சாலைகள் போடவேண்டும், போக்குவரத்தைச் சமாளிக்க வேண்டும், விபத்துக்கள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நேர்ந்தால் அவசர மருத்துவ உதவி போன்ற வசதிகளைத் தயார்ப் படுத்த வேண்டும், பெருமதிப்புள்ள அந்நியச் செலாவணியைச் செலவழித்து (நாட்டின் வர்த்தகச் சமன்பாட்டைக் குலைக்கும் வகையில்), வெளிநாடுகளிலிருந்து எரிபொருளைத் தருவிக்க வேண்டும், பிறகு இவ்வாகனங்கள் உமிழும் நச்சுப் புகையால் ஏற்படும் பின்விளைவுகளை இச்சமூகமே ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ள வேண்டும். ஆக, சில லிட்டர்களுக்கானப் பணத்தை வீசியெறிந்துவிட்டுச் சென்று விடுவதால் தம் கடமை / பொறுப்பு முடிந்துவிட்டது என்று எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள முடியாது.

இதற்கு நேரெதிராக, வெகுஜனப் போக்குவரத்து வாகனங்களான பேருந்துகள், புறநகர் இரயில்கள் ஆகியவை குறைந்த எரிபொருள் செலவில் வெகு அதிகமான எண்ணிக்கையில் மக்களை ஏற்றிக் கொண்டு செல்வதைக் காணலாம். இவற்றை வலுப்படுத்துவதில்தான் இருக்கிறது அரசின் திறமை, பொறுப்பு ஆகியவை. இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நம்பத் தகுந்தச் சேவைகளாக இவற்றை உருமாற்ற அரசு ஆவன செய்ய வேண்டும். பேருந்துச் சேவையில் தனியார்மயமாக்கம் அல்லது போட்டியிடும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி, போன்ற நடவடிக்கைகள் பலனளிக்கக்கூடும். அது போலவே, இரயில்களும் அதிகரிக்கப்பட்டால் (மற்றும் தற்போது இல்லாத நகரங்களில் அது நிறுவப்பட்டால்) அதன் குறைவானப் பயண நேரம் காரணமாக அது சிறந்தவொரு போக்குவரத்துச் சாதனமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. எல்லா இடங்களையும் இரயில் சேவையைக் கொண்டு இணைப்பது இயலாததே. ஆகவே, last mile இணைப்பிற்கு (பேருந்து போன்ற) சாலைப் போக்குவரத்து வசதி வழங்கப்பட வேண்டும். இவையிரண்டின் கூட்டுக் கலவை, ஒரு நம்பகமான, விரைவான மற்றும் சுகமானப் பயண அனுபவத்தை மக்களுக்கு அளிக்கும் வாய்ப்பிருக்கிறது.

மேற்கூறிய மாற்று ஏற்பாடுகளைச் செய்த பின்னர், மக்கள் தம் சொந்த வாகனங்களை விட வெகுஜன வாகனங்களையே நாடும் சூழ்நிலை உருவாகலாம். அதனை உறுதிப்படுத்தும் வகையில், மற்றும் மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பு கிடைக்காத வகையில், அவற்றின் மீது அதிகப்படியான வரிகளை விதிக்க வேண்டும். கடுமையான நடவடிக்கையாகத் தோன்றினாலும், இது சிங்கை போன்ற இடங்களில் நடைமுறையில் உள்ளச் சட்டமே என்று அறிகிறேன். பலரும் தம் சொந்த வாகனத்தைத் துறந்துவிட்டு, வெகுஜனப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால், அதனாலுண்டாகும் பலன்கள் பலப்பல - எரிபொருள் சேமிப்பு, சாலைகளில் நெரிசல் குறைவு, மாசுக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம், வாகனம் ஓட்டும் பரபரப்பில்லாமல் மக்கள் நிம்மதியாகத் தம் பயணங்களை மேற்கொள்வதால் கிடைக்கும் உடல்நலம் மற்றும் மனஅமைதி, என்று நீளமாகப் பட்டியலிடலாம்.

இன்னொரு நடவடிக்கை, மக்கள் மத்தியில் மிதிவண்டிகளின் பயன்பாட்டை ஆதரிப்பது, அவற்றைக் கொண்டு மக்கள் அருகாமையிலிருக்கும் இடங்களுக்குப் பயணிக்க ஊக்குவிப்பது. இவற்றின் மீதுள்ள விற்பனை வரிகளை விலக்கலாம். வெகு இலகுவாக ஓட்டக்கூடிய அதி நவீன (geared) மிதிவண்டிகளைத் தயாரிக்க, அல்லது இறக்குமதி செய்ய உதவலாம். நான் அண்மையில் கேள்விப்பட்ட (மற்றும் இணையத்தில் மேய்ந்த) ஓரு அருமையானச் சாதனம் - கனக்குறைவான, மடக்கக் கூடிய மிதிவண்டிகள். சுமார் 10 கிலோ எடையுள்ள இவற்றை மடக்கி, கையோடு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடுமாம். இரயில் / பேருந்து நிலையம் வரை இந்த மிதிவண்டியில் சென்று, பின்னர் அதனை மடக்கிக் கையிலெடுத்துக் கொண்டு இரயிலிலோ பேருந்திலோ பயணத்தைத் தொடரலாம். மறுமுனை வந்ததும் மடக்கிய மிதிவண்டியை விரித்துக் கொண்டு அதனை மிதித்தே போகுமிடத்தைச் சென்றடையலாம். இத்தகைய மாற்று வசதிகள் இருக்கும்போது, சொந்தக் காரில் சென்று எரிபொருளை விரையம் செய்வது அநியாயமாகப் படுகிறது. மிதிவண்டிகளை ஓட்டுவதால் கிடைக்கும் உடற்பயிற்சியைக் குறித்து இங்கு விளக்கத் தேவையில்லையென்று எண்ணுகிறேன்.

இப்போது சரக்குப் போக்குவரத்தில் எரிபொருள் சிக்கனத்தைப் பற்றிப் பார்ப்போம். அதிகம் கூறுவதற்கில்லை, ஆனாலும் என்னைக் கவர்ந்த ஒரு திட்டம் இதோ. லாரிகள் சாலைகளில் ஓடாமல் ஜம்மென்று இரயில்களின் மீதேறி சவாரி செய்வதேனோ? அங்குதான் புதுமையே. நெடுஞ்சாலைகளில் ஓடி, டீசலை விரையம் செய்து, புகையைக் கக்கி, காற்றை மாசு படுத்தி, மெதுவானப் பயணத்தால் சரக்குச் சொந்தக்காரர்களின் நேரத்தையும் வீணாக்கி....... என்று பழைய முறையில் சரக்கைச் சேர்ப்பித்த காலம் மாறிக் கொண்டு வருகிறது. கொங்க்கன் இரயில்வே அறிமுகப்படுத்திய இத்திட்டத்தின் கீழ், லாரிகள் இரயில்களிலேறிக் கொண்டு, வெகு விரைவில் மறுமுனைக்குக் கொண்டுச் செல்லப் படுகின்றன. அங்கு சென்றதும் அவை இறங்கிக் கொண்டு, தாம் செல்ல வேண்டிய முகவரிக்கு, சாலை வழியாகச் சென்று விடுகின்றன. நம் நாட்டில் இத்தகைய திட்டத்தைத் தீட்டுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல், golden quadrilateral போன்ற அறிவுஜீவித்தனமானத் திட்டங்களைத் தீட்டுபவர்களும் இருக்கிறார்கள், என்ன செய்வது?

திங்கள், செப்டம்பர் 05, 2005

சமன்படாத உலகம்

சென்றப் பதிவில் திரு.Thomas Friedmanஇன் சமன்படும் உலகம் பற்றிய எனது மேலோட்டப் பார்வையை வழங்கியிருந்தேன். இன்று, அவரது நூலைத் தொடர்ந்துப் படித்து முடித்ததன் விளைவாக, ஒரு கருத்தியலை முழுமையாகப் புரிந்து கொண்டதோடல்லாமல், அதற்கு என் மனதில் எழுந்த எதிர்வினைகளையும் தொகுத்து வழங்குகிறேன். உலகம் சமன்படுவதைப் போற்றிப் பாடிய பின், இச்சமன்படுதலில் பங்குபெற முடியாத அல்லது விரும்பாத மக்கள், மற்றும் அதன் பரவலுக்குப் பாதகமானச் சூழல்களைக் குறித்தும் நூலாசிரியர் விவரிக்கிறார். என்னால் ஏற்றுக்கொள்ள இயலாதப் பலக் கருத்துக்களின் தெளிப்பாக அமைந்தன இவ்விவரிப்புகள். ஆகவே இப்பதிவைக் கொஞ்சம் காட்டமாகவே எழுத வேண்டியுள்ளது.

முதலில் இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா போன்றப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள். Too sick என்று ஆசிரியரால் அழைக்கப் படும் இவர்களை, முன்னேற்றமும் சமன்படும் உலகமும் அண்டுவதில்லை. இவர்களின் பிரச்சினைகளாக நோய், பசி, தீண்டாமை, வாய்ப்பின்மை என்றெல்லாம் பட்டியலிட்டு விட்டு, இதற்குப் பரிகாரமாக Bill Gates Foundationஇன் நன்கொடை / மேம்பாட்டு முயற்சிகள், இதர NGOக்கள் கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் தருமப் பணிகள் போன்றவற்றை முன் வைக்கிறார். அதாவது, சமன்பட்ட உலகில் பெருவெற்றியடைந்தோர், பின்னர் மனமிறங்கி, பின்தங்கிய சமூகங்களுக்குப் போடும் பிச்சையால் உண்டாகும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, சமன்படாத உலகிலுள்ளோர் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு இவர்களும் சமன்பட்ட உலகில் பங்கு பெற்றுப் போட்டியிடக் முடியுமாம். இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் தீர்வுக்கு பதிலாக, எனக்குத் தோன்றும் நேரடியானத் தீர்வானது, மக்களால் ஆட்சியில் அமர்த்தப்படும் அரசுகள் பல்நாட்டு நிறுவனங்களுக்கும் முதலாளித்துவ முதலைகளுக்கும் அடிவருடிகளாகச் செயல்படாமல், பின்தங்கியவர்களின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டு அவர்களுக்குரிய நியாயமான (கல்வி, மருத்துவ வசதிகள், விளைநில விநியோகம், போன்ற) வாய்ப்புக்களைப் பெற்றுத் தருமானால், அதுவே பலரை வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வர வழி வகுக்கலாமல்லவா? இதற்குத் தேவையான accountability, transparency ஆகியவை அரசுகளிடம் உள்ளதா, இல்லையென்றால் அதனைச் சரிபடுத்துவது எப்படி, என்ற வகையிலல்லவா ஆராயவேண்டும்? மேலும் அரசுகள் தாமாகவே இத்திசையில் எடுத்து வைக்கும் ஒன்றிரண்டு சிறு அடிகளையும் welfare policy / dole out என்றெல்லாம் இழிவு படுத்துபவர்களும் இந்நூலாசிரியரைப் போன்றவர்கள்தானே? "The world would be entirely flat only if all these people are brought into it" என்ற முத்தை உதித்திருக்கும் ஆசிரியர், welfare stateஐ ஆதரிக்காததேன்? Bill Gatesஐயும், NGOக்களையும் விட welfare stateகளால் அதிகம் சாதிக்க முடியுமென்பதை அறியாதவரா அவர்? அல்லது welfare stateகளால் முதலாளித்துவத்திற்கு இடைஞ்சல்கள் அதிகம் என்பதனாலா? இதுவே முரண்பாடு #1.

அடுத்ததாக, சமன்படாத உலகில் வாழ்பவர்கள் என்று ஆசிரியரால் அடையாளங் காணப்படுபவர்கள் too disempowered என்று விவரிக்கப்படும் அதிகாரமற்ற வர்க்கத்தினர் - கிராமப்புறங்களில் விவசாயக் கூலி வேலை மற்றும் இதரக் கீழ்மட்ட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். வறுமைக் கோட்டிற்கு மேல், ஆனால் கணிமைக் கோட்டிற்குக் (digital divide) கீழ் என்றத் திரிசங்கு உலகில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். உலகின் மிகப் பெரிய மக்கட்தொகையைக் கொண்ட குழுவும் இதுதான். இவர்களிடம் சமன்பட்ட உலகில் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள், வசதிகள், ஆற்றல்கள் ஆகியன இல்லாததால் இவர்கள் மிக அதிக அளவில் பின்தங்கி விடும் சாத்தியமுள்ளது. இதற்கும் நம் ஆசிரியர் வழங்குவது NGO மருந்தே. நல்ல வேடிக்கை. மேற்கூறிய அதிகாரமற்ற வர்க்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் வெனிசுயேலா அரசாங்கம் போன்ற உதாரணங்கள் குறிப்பிடப்படாததும் ஏற்றுக்கொள்ள முடியாததே.

மூன்றாவது வகையினர் too frustrated எனப்படும் அல் கயீதா வகைத் தீவிரவாதிகள். அவர்களுக்கு மேற்கத்திய நாடுகள் என்றாலே Britney Spearsஇம், Jennifer Lopezஉம்தான் கண்ணில் படுகிறார்களாம். அவர்களின் பார்வையில் மேற்கத்தியர்கள் அளவற்ற சுதந்திரம் படைத்தப் பாழடைந்த சமூகமாக, சாத்தானின் வழித்தோன்றல்களாகத் தெரிகின்றனராம். நல்ல சப்பைக்கட்டு. இஸ்ரேல் என்ற ஒரு சக்தி குறித்தும் பாலஸ்தீனர்கள் என்ற சமூகத்தைக் குறித்தும் ஆசிரியர் வசதியாக மறந்து விடுகிறார். நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கத்திய சக்திகள் மத்தியக் கிழக்கில் மேற்கொண்டுள்ளத் தேவையில்லாத் தலையீட்டின் விளைவே அல் கயீதா என்று யாராவது அவரிடம் சென்று உரக்கக் கூறவேண்டும். ஈராக் போர் அமெரிக்காவால் நியாயமற்ற அநாகரீக முறையில் மேற்கொள்ளப் பட்டது என்ற உண்மை அவரால் குறிப்பிடப்படவுமில்லை. அதிகப்பிரசங்கித்தனமாக மற்றவர்களின் மனநிலை குறித்து ஆராய்ச்சிகள் வேறு. அவரது அமெரிக்க அயோக்கியத்தனம் வெட்டவெளிச்சமாகத் தென்படுவதென்னமோ உண்மை - மனநிலை பற்றிப் பேச்சு வந்ததால் கூறுகிறேன்.

நான்காவதாக அவர் குறிப்பிடுவது, too many Toyotasஆம். "எங்கள மாதிரியே நீங்களும் காரோட்ட ஆரம்பிச்சிட்டா எல்லாரும் பெட்ரோலுக்கு எங்க போறதாம்?" என்ற நியாயமானக் கேள்வியை முன்வைக்கிறார். ஆகவே, மூன்றாம் உலகப் பொதுமக்களே, உங்கள் காரோட்டல்களைக் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். அவரது உயர்ந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் குதர்க்கம் செய்யும் என்னைப் பார்த்து எனக்கே அவமானமாகவுள்ளது. அவர் சுற்றுப்புறச் சூழல் என்றக் கோணத்தில்தான் அவ்வாறு கூறுகிறார் என்பதைத் தெளிவுப் படுத்தி விடுகிறேன். இப்பொழுதும் உலகில் மிகுதியாக மாசடைந்த இருபது நகரங்களில் பதினைந்து சீனாவில்தான் உள்ளனவாம். இவ்வாறு அமெரிக்கர்களுக்கு இணையாக சீனர்களும் இன்னும் சில வருடங்களில் இந்தியர்களும் ருஷ்யர்களும் சேர்ந்து கொண்டு இவ்வுலகின் காற்று மண்டலத்தை மாசுப் படுத்தினால், நாம் நம் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் உலகம் விரும்பத்தக்க ஒன்றாக இருக்காது என்றுதான் நம் மதிப்பிற்குரிய அமெரிக்கரான திரு.Friedman கூறிகிறார். உதைக்கும் ஒரு சிறுத் தகவல் என்னவென்றால், திருவாளர்.ஜார்ஜ் புஷ் பதவியேற்றவுடன் முதலில் ஆற்றியத் திருக்காரியங்களில் ஒன்று, Kyoto protocolஇன் கீழ் அமெரிக்காவின் முந்தய அரசு அளித்த சுற்றுப்புற மாசுக் கட்டுப்பாடு குறித்த உத்தரவாதங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதே. இத்தகவல் பற்றிய ஒரு சிறுக் குறிப்பிடல் கூட இல்லாமல் இந்நூலில் இருட்டடிக்கப் பட்டதுதான் வருத்தமான செய்தி. எங்களுக்கு அறிவுரை கூற உங்களுக்கு 'ஹக்கு லேதண்டீ' என்பதுதான் இதற்கெல்லாம் சரியான எதிர்வினை.

இன்னொரு வேடிக்கையானக் கருத்தை இங்குக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆசிரியருக்குப் போரென்றால் பிடிக்காதாம் (எனக்கும்தான்). போர் நிகழ்வுகள் இவ்வுலகம் சமன்படுதலுக்குத் தடையாகவுள்ளதாம், ஒப்புக்கொள்கிறேன். இதற்குத் தீர்வென்னவென்றால் அமெரிக்க விரைவுணவு நிறுவனமான McDonald's எல்லா நாடுகளிலும் கடை திறக்க வேண்டுமாம். ஏனென்றால், McDonald's கடை திறந்த நாடுகள் ஒன்றோடொன்றுப் போரிட்டதாகச் சரித்திரமே இல்லையாம். இந்த புருடாவை எப்படி வகைப் படுத்துவது என்றுக் குழம்பிப் போயிருக்கிறேன். ஓரு வேளை தொடர்ந்து McDonald'sஇல் உண்டதால் திராணியற்றுப் போய்விடுவதால் மக்கள் போரிட முனைவதில்லையோ என்னவோ. வேடிக்கையான இக்கருத்தை கடுமையானத் தொனியில் இவ்வாறு மாற்றிக் கூறுகிறார்: எந்தவொரு நாடு உலக வர்த்தகச் சங்கிலியில் (global supply chain) பெருவாரியாகப் பங்கு பெறுகிறதோ, அது போரெடுப்புகளில் ஈடுபடுவதைவிட உற்பத்தியைப் பெருக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துமாம். ஏனென்றால், அரும்பாடுபட்டு உலக வர்த்தகத்தில் தற்போதைய நிலையை அடைந்த அந்த நாடு, அந்த முயற்சிகளனைத்தும் வீண்போகும் வகையில் ஒரு போரைத் தொடுத்து, அதன் விளைவாக வர்த்தகத்தில் பின்தங்கிவிடும் சூழ்நிலையை ஒருபோதும் விரும்பாதாம். If only things were this simple in reality. இக்கருத்தின் அடிப்படையில் சீனாவுக்கும் தைவானுக்கும் போர் மூளாது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். ஏனென்றால் அவையிரண்டும் உலக வர்த்தகத்தில் பெருமளவில் ஈடுபட்டுள்ளனவாம். இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் அதே வகையில் போர் மூளும் சாத்தியம் குறைவாம். பாக்கிஸ்தானுக்கு உலக அரங்கில் அதிக ஈடுபாடு இல்லையெனினும், சில வருடங்களுக்கு முன், போர் மூளும் ஆபத்து இருந்த போது, இந்தியாவின் Wipro, Infosys போன்ற நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்து வந்த அமெரிக்கப் பல்நாட்டு நிறுவனங்கள், போர் மூண்டால் வேறு இடம் பார்ப்பதாகப் பூச்சாண்டிக் காட்டினார்களாம். அதற்குப் பயந்து, Wipro, Infosys ஆகிய நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் இந்தியா, தன் போரெடுக்கும் முடிவைக் கைவிட்டதாம். (applause, applause) எல்லாம் சரிங்க, ஆனா நீங்க யுகோஸ்லாவியா மேலயும், ஆப்கானிஸ்தான் மேலயும், ஈராக் மேலயும் போர் தொடுக்கறீங்களே, உங்க நாட்டுல McDonald's கிடையாதுங்களா? இல்ல உலக வர்த்தகத்துல நீங்க ஈடுபடல்லியா? இல்ல இதெல்லாம் மத்த நாட்டுக்காரங்களுக்குத்தானா?

இத்தகைய குறைபாடுகளையும், பற்றாக்குறைகளையும் தாண்டி இப்புத்தகம் படிக்க வேண்டியவொன்று என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. (ஆனால் படிக்கும் போது உங்கள் பகுத்தறியும் ஆன்டென்னாக்களைத் தூக்கி விட்டுக் கொள்ளவும்) இன்றைய மற்றும் வருங்கால வாழ்வியல்களைக் குறித்துப் பலக் கேள்விகள், பல விடைகள், அவற்றில் சில ஏற்றுக் கொள்ள முடியாத வகை, சில கருத்து கூற முடியாத வகை, இன்னும் சில மறுக்க முடியாத வகை, என்று இந்த வாசிப்பனுபவம் பயனுள்ளதாகயிருந்தது. ஒரு inclusive வருங்காலத்தை உருவாக்குவதற்கு என்னென்ன சக்திகள், முயற்சிகள் வலுப்பெற வேண்டியுள்ளன, எந்தெந்த சக்திகள் வீழ்த்தப்பட வேண்டியுள்ளன என்பதில் தெளிவு கிடைத்தால், அந்த இலக்கை நோக்கி அர்த்தமுள்ள வகையில் பயணிக்க வாய்ப்புள்ளது.

வெள்ளி, செப்டம்பர் 02, 2005

சமன்படும் உலகம்

அறிந்தப் பலத் தகவல்களை அண்மையில் ஒரு புத்தக வடிவில் விலாவாரியாகப் படிக்க நேரிட்டது. தெரிந்த விஷயங்களேயென்றாலும், ஆர்வக் கோளாறால் உற்சாகத்தோடு படித்த கையோடு, அதனைப் பற்றிய விமர்சனத்தையும் இங்கு வைக்கிறேன். Thomas Friedman என்னும் அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதிய The World is Flat என்றப் புத்தகமே அது. அதன் வாயிலாக ஆசிரியர் இவ்வுலக மக்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புவது - உலகம் சமன்பட்டுக் கொண்டிருக்கிறது - என்ற மாபெரும் உண்மையையே. புத்தகத்தின் தலைப்பு (மற்றும் அட்டைப்படம்) 'உலகம் உருண்டையானது' என்ற அறிவியல் உண்மைக்கு மாற்றுக் கருத்துத் தெரிவிப்பதைப் போலத் தோன்றினாலும், அவரது நோக்கம் அதுவல்ல. உலகில் ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமன்பாடு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்னும் கருத்தையே இத்தலைப்பு குறிக்கிறது. இந்த முடிவுக்கு ஆசிரியர் எவ்வாறு வந்தார் என்பதை இப்புத்தகம் முழுவதிலும் விளக்குகிறார்.
முதலில் பல உதாரணங்களை முன்வைக்கிறார். உலகப் பொருளாதாரத்தில் நம் தகவல் நுட்ப நிபுணர்களின் பங்களிப்பு, அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கும் ஏனைய வளரும் நாடுகளுக்கும் இடம்மாறியத் தொழிற்சாலைகள், உற்பத்தியும் சேவைகளும் பல மடங்கு அதிகரிக்கப்படுவதனால் ஏற்படும் சிக்கனம் (economy of scale), என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போய், கடைசியில் அவர் கூறுவது, மிகக் குறைந்த விலையில் எங்கு / எவ்வாறு உற்பத்தி அல்லது சேவை வழங்குதல் சாத்தியமாகுமோ, அங்கே / அவ்வாறே அது மேற்கொள்ளப்படும் என்பதே. ஆதலால் உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்வம் பரவ வாய்ப்பிருக்கிறது, அவை சில கட்டாயங்களை / தேவைகளை நிறைவேற்றினால், என்பதே அவரது கண்டுபிடிப்பு அல்லது நம்பிக்கை என்றுக் கூறலாம்.

இது காலகாலமாக உலக வர்த்தக நிறுவனம் (WTO) மற்றும் உலக வங்கியைச் சார்ந்த நிபுணர்களால் உலகமயமாக்கத்திற்கு ஆதரவாகக் கூறப்பட்டு வரும் வாதமேயென்றாலும், இந்த நூலாசிரியரின் கூற்றில் ஒரு அடிப்படை வேறுபாடுள்ளது. அவரது கூற்றுப்படி, இத்தகைய சமன்படுத்தல் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்ச்சிகளின் விளைவே. அவர் பட்டியலிடும் பல காரணிகள் தகவல் நுட்ப வளர்ச்சிக்குத் தொடர்புடையவை. உ-ம், இணையத்தின் வளர்ச்சி, வேறுபட்ட தகவலமைப்புகளின் கூட்டுறவு, தானியங்கும் வர்த்தகச் செயல்முறைகள் (workflow automation), தொடர்பாடல் நுட்பத்தில் வளர்ச்சி, கணிமை மலிவடைந்ததால் பரவலாக்கப்பட்ட அதன் பயன்பாடு, ஆகியன. இவற்றுடன் அவர் சேர்த்துக் கொள்ளும் இதர உலக நிகழ்வுகள், இடதுசாரி அரசுகளின் வீழ்ச்சி, சீனா WTOவில் இணைந்தது மற்றும் தனி மனிதனின் எழுச்சி (உரிமைகள், ஆற்றல்கள், வாய்ப்புகள், கருவிகள்) ஆகியவை. இவையனைத்தும் சேர்ந்து, இவ்வுலகம் வெகு வேகமாகச் சமன்படுவதற்குக் காரணமாயின என்பதே ஆசிரியரின் வாதம். இக்காரணங்களால், உலகச் சமூகங்கள் தடைகளின்றி, மற்ற சமூகங்களோடு வர்த்தகத்தில் போட்டியிடும் மற்றும் கூட்டுறவாடும் சக்தியைப் பெற்றன, அல்லது பெறக்கூடும் என்று இந்நூலாசிரியர் கருதுகிறார். அதி நுணுக்கமான, சிறப்பாற்றல்கள் தேவைப்படும் செயல்களைத் தவிர, மற்ற எல்லா வேலைகளும் செயல்பாடுகளும், மிகக் குறைந்த ஊதியங்கள் நடைமுறையிலுள்ள நாடுகள் / சமூகங்களை நோக்கியே நகரும் என்றக் கசப்பான உண்மையை அமெரிக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் இனிப்புத் தடவி வழங்குகிறார். அவர் சந்தித்துப் பேசிய Sony Corp.இன் தலைவர் Nobuyuki Ideiஇன் கூற்றுப்படி, தற்போது வர்த்தக - நுட்பவுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றமானது, முன்பொரு காலத்தில் ஒரு விண்கல் அதிவேகத்துடன் இவ்வுலகின் மீது விழுந்து எல்லா dinosaurகளையும் முற்றிலும் அழித்த நிகழ்வுக்கொப்பானதாகும். முன்னெச்சரிக்கையோடு செயல்படாத நபர்கள் / சமூகங்களுக்கு, முன்பு dinosaurகளுக்கேற்பட்ட நிலைதான் காத்திருக்கிறது என்ற எச்சரிக்கை சொல்லாமல் சொல்லப்படுவதை கவனிக்க.

இத்தகைய வேலையிழப்புகளையும் தாண்டி, எவ்வாறு இச்சமன்படுதல் எல்லா சமூகங்களுக்கும் பயனளிப்பதாக இருக்குமென்று விளக்கு விளக்கென்று விளக்குகிறார். இத்தகைய விளக்கங்களில் எனக்கு ஏற்புடையதாகப்பட்டது, வேலையிழப்புகள் நேரும் அதே நேரத்தில் புதிய (முன்பு நடைமுறையில் இருந்திராத) வேலைகளும் துறைகளும் உருவாகலாம், இவை மனிதத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாதவைகளாகவும் உருவெடுக்கலாம், என்பதே. உ-ம், சில வருடங்களுக்கு முன்பு எவரும் அறிந்திராத, இணையத்தைச் சார்ந்த எவ்வளவு வேலைவாய்ப்புகள் அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளன?

இச்சமன்படும் உலகை எதிர்நோக்கும் கட்டாயத்திலுள்ள அமெரிக்காவின் கல்வியமைப்பு எந்தளவுக்குத் தயார் நிலையிலில்லை என்பதையும் விரிவாக எடுத்துக் கூறுகிறார். இதனை உடனடியாகத் திருத்தவில்லையெனில் இன்னும் 10 - 15 ஆண்டுகளில் அமெரிக்கா நுட்ப வளர்ச்சியில் பின்தங்கி விடுமென்று எச்சரிக்கை விடுக்கிறார். இதனைப் படிக்கும்போது நாமும் ஏறத்தாழ அதே நிலையில் இருப்பதை உணரலாம். ஆக, இது அமெரிக்காவுக்கு மட்டும் விடப்பட்ட எச்சரிக்கையன்று. நம்மைப் போன்ற அசட்டையாக இருப்பவர்களுக்கும் சேர்த்தே விடுக்கப்பட்ட எச்சரிக்கையே. நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையான விஞ்ஞான மற்றும் கணிதத் துறைகளில் மேதமை, ஆய்வுத் திறன் மற்றும் வசதிகள், ஆய்வறிக்கை வெளியீடுகள், அறிவுடைமை (intellectual property) வளர்ப்பு ஆகியவற்றில் நாம் இன்னும் காத துரம் பயணிக்க வேண்டியுள்ளது. இப்புத்தகத்திலுள்ள, சீனாவின் கல்வித்துறையின் சாதனைகளைப் பற்றிய விவரிப்பு, நம் கல்வியாளர்களுக்கும் திட்டங்கள் தீட்டுபவர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைப்பது நிச்சயம்.

மேலும் சில அத்தியாயங்களைப் படிக்க வேண்டியுள்ளது. புதியக் கருத்துக்கள் ஏதேனும் தென்பட்டால் இன்னொருப் பதிவாக இடுகிறேன். எளிய, படிக்கத் தூண்டும் நடை. அத்தியாவசியமானத் தகவல்கள். மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், இது வர்த்தக மற்றும் நுட்பத் துறையிலுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூலாகும் என்றுக் கருதுகிறேன். வருங்காலச் சந்ததியினரின் வாழ்வுமுறையை வடிவமைக்கும் பெற்றோர்களுக்கும், இந்நூல் சில உண்மைகளை உணர்த்தக் கூடும்.