வெள்ளி, மார்ச் 31, 2006

Pink Floyd கவிதை - என் பங்குக்கு

சதையில் ஊறியவை (In the flesh)
--------------------------------------------

ஓ, இசை நிகழ்ச்சிக்கு வந்து
ஆனந்திக்கலாமெனத் திட்டமிட்டாயோ?
இதன் குழப்பம் தரும் போதையை,
ஒளி வீச்சு தரும் மமதையை,
உணரத் துடிக்கின்றாயோ?
உனக்கொரு நற்செய்தி, என் தங்கமே!
உன் 'pink' இன்று வரவில்லை, மாறாக
நாங்களே இசைப்போம், உனை்னை மகிழ்விக்க.
அதற்குமுன், உன் தலை தப்புமா என்றொரு சோதனை.

அரங்கில் யாரேனும் ஓரினக் காதலரா?
எனில், இச்சுவற்றின் முன் நிறுத்துங்கள்
அங்கொருவனின் தோற்றமே சரியில்லை
அவனையும் சுவற்றின் முன் நிறுத்துங்கள்
அதோ, அவனென்ன யூதனா?
இதோ, இவன் உறுதியாகக் கறுப்பன்தான்்!
அங்கே அவன் புகைப்பதென்ன, கஞ்சாவா?
இங்கிவன் மீதென்ன, தழும்புகளா?
யார் வரவிட்டது இக்கழிசடைகளை?
நான் நினைப்பது மட்டும் நடக்குமானால்,
நீரனைவரும் இரையாவீர், துப்பாக்கிச் சூட்டினிலே.

இதன் மூலப்பாடலின் வரிகள் மற்றும் ஒலிக்கோப்பு (Real Audio)

திங்கள், மார்ச் 27, 2006

Being Cyrus: திரை விமர்சனம்

அவசியம் பார்க்க வேண்டிய படம் என்றெல்லாம் நாளிதழ்கள் இதைப் புகழ்ந்துத் தள்ளுவதாக அறிகிறேன். இணையத்திலும் பல சாதகமான விமர்சனங்களைப் பார்த்த பிறகே இதைப் பார்க்கச் சென்றேன். பார்த்த பிறகுதான் தெரிந்தது, இது நான் pseudo-art என்று கருதும் வகையைச் சேர்ந்த படம் என்று. இணையத்தின் அறிவுஜீவிகள் இதைச் சிலாகித்து எழுதுவதற்கு முன் இதைப் பதிய வேண்டுமென்றுதான் அவசர அவசரமாக இப்பதிவு. :)

நம் திரை விமர்சகர்களிடையே உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், லாப நோக்கோடு formula அம்சங்கள் என்று கருதக்கூடிய சண்டைக் காட்சிகள், கவர்ச்சி நடனங்கள், பாடல் காட்சிகள், நாயக வழிபாடுகள், ஆகிய எதுவும் இல்லாமல் ஒரு படம் வெளி வந்தால், அதை ஆகாய உயரத்திற்கு உயர்த்துவதே ஆகும். எனது அணுமுறை என்னவென்றால், இவையனைத்தையும் படத்தில் சேர்க்கவில்லை என்பதைக் கடந்து, அப்படத்தின் நிறை குறைகளை ஆராய வேண்டுமென்பதே. அண்மையில் 'தவமாய் தவமிருந்து', 'அன்பே சிவம்' போன்ற படங்களைப் புகழ்ந்து ஒரு meme அளவிற்கு பதிவுகள் வெளிவந்தது நினைவிருக்கலாம். Formula அம்சங்களைச் சேர்க்கவில்லை என்பது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான முடிவுதான். அதற்கு மேல், அப்படத்திற்கு சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு வலுவுள்ளதா என்பதையே ஆராய்ந்து விமர்சிக்க வேண்டும். ஒரு உவமையுடன் கூற வேண்டுமென்றால், ஒருவனுக்கு குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் வேறெந்தக் கெட்டப் பழக்கமுமில்லை என்பதற்காகவே அவன் ஒரு சிறந்த மணமகனுக்கான தகுதி படைத்தவன் என்ற முடிவிற்கு வர இயலாதல்லவா? இந்த நல்ல குணங்களுடன், அவன் அன்பு செலுத்தக்கூடியவனா, மரியாதை தெரிந்தவனா, நீதி / நேர்மை பாராட்டுபவனா, குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றும் திறமை படைத்தவனா, என்பதையெல்லாம் ஆராய்ந்த பிறகுதானே அவனது தகுதியை முடிவு செய்ய இயலும்?

இப்போது, Being Cyrus. விமர்சக தர்மத்தைக் கடைபிடித்து, கதையை வழங்கப்போவதில்லை. உங்கள் படம் பார்க்கும் திட்டத்தைக் கெடுக்கும் எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. படத்தைப் பார்த்த பின் எழுந்த தீவிரமாக கருத்துகளை மட்டுமே இங்கு வழங்குகிறேன். முதலில், formula அம்சங்கள் இல்லாத படம் என்பதைக் குறிப்பிட்டு விடுகிறேன். சைஃப் அலி கான், நஸ்ரருத்தீன் ஷா, போமன் இரானி, டிம்பிள் கபாடியா என்று நட்சத்திரப் பட்டாளத்திற்குக் குறைவில்லை. இவர்களைக் கடந்து இரண்டு மூன்று பிரதான பாத்திரங்கள் - முதியவரொருவர், போமனின் மனைவியாக வரும் சிமோன் சிங், மற்றும் ஒரு காவலதிகாரி வேடத்தில் மனோஜ் பாஹ்வா. அனைவரின்் நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தது, குறிப்பாக (வரிசைப்படி) டிம்பிள், போமன், நஸ்ரருத்தீன், மனோஜ், சிமோன்....... சைஃபுக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்கும் பாத்திரம்தான்.

இந்தியாவின் சிறுபான்மை மதமான பார்ஸி மதத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், அதன் அங்கத்தினர், அவர்களுக்குள்ளான பிரச்சனைகள், என்று பின்னப்பட்டிருக்கிறது கதை. பார்ஸி பின்னணியால் கதைக்கு எந்த சிறப்பும் கிடையாது. அச்சமூகத்தின் வாழ்வு முறைகள், வழக்கங்கள், அது சந்திக்கும் பிரச்சனைகள் என்பதைப் பற்றியல்ல கதை. வேறொரு மதத்தை சார்ந்த அல்லது மத சார்பற்றவொரு குடும்பமாகக் காட்டியிருந்தாலும் கதையில் எந்த மாற்றமுமிருந்திருக்காது. அதுவே எனது முதல் ஏமாற்றம். கதைக்குத் தேவையில்லாமல், அவர்களின் உடைகள், வீட்டின் அமைப்புகள், பழக்க வழக்கங்கள் என்று அநாவசியமான திசை திருப்பலாகவே அமைகிறது, கதையின் பார்ஸி பின்னணி. ஆனால் எனது முக்கியமான பிரச்சனை அதுவல்ல.

மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில், அவலமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து் கொண்டிருக்கும் சில ஜீவன்கள், அவர்களைச் சுரண்டி / ஏமாற்றிப் பிழைக்கும் வேறு சிலர், என்று தொடங்குகிறது படம். இவர்களது வாழ்க்கையில் ஒன்று சேரும் சில மூன்றாம் தரப்பினர், மற்றும் அவர்களது செயல்கள் அக்குடும்பத்தில் உண்டாக்கும் பாதிப்புகள்் என்பதுதான் கதை. வேறு மாதிரியாகக் கூற வேண்டுமென்றால், சாமர்த்தியமாகச் செயல்படும் சில சூழ்ச்சிக்காரர்களின் குற்றங்களால், சாமர்த்தியம் போதாத வேறு சில சூழ்ச்சிக்காரர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள், அல்லது கொலை செய்யப்படுகிறார்கள். இந்த ஆட்டத்தில் அப்பாவிகள் காவு கொடுக்கப்படுகிறார்கள். முன்பு கூறிய சாமர்த்தியசாலிகள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியதோடு, கோடிக்கணக்கான சொத்துக்களின் வாரிசுதாரர்களாகிறார்கள். ஆகவே, 'எத்தகைய குற்றத்தைச் செய்தாலும், சாமர்த்தியசாலியாக மட்டும் இருந்து விட்டால், சட்டத்தின் பிடியிலிருந்து எப்படியாவது தப்பித்து விடலாம்்' என்பதுதான் இப்படம் போதிக்கும் அறநெறி. இதற்கு, "கசப்பான உண்மை உள்ளபடி வழங்கப்பட்டிருக்கிறது" போன்ற சப்பைக்கட்டு வாதங்களைக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு எனது எதிர்வினை: யாருடைய பக்கம் நியாயப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இளம்பருவத்தில் சந்தித்த கொடுமைகளுக்கெல்லாம் தீர்வு, சாமர்த்தியமான முறையில் சூழ்ச்சிகள் செய்து (அதுவும், துளியும் சம்மந்தமில்லாதவொரு குடும்பத்தை அழிக்கும் வகையில்) கோடிகளுக்கு வாரிசாவதே, என்ற ஆலோசனை தெளிவாக வழங்கப்பட்டிருக்கிறது. (இறுதியில் "we have arrived", என்று தம் முதுகிலேயே தட்டிக்கொள்ளுதல் வேறு). இத்தகையவொரு நச்சுக் கருத்தைத் தாங்கி வரும் ஒரு படம், எந்த intellectual, arty பாசாங்குகளுடன் வந்தாலும், அதற்கு எனது கண்டனங்களே மிஞ்சும்்.

உண்மை / யதார்த்தம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது என்று புருடா விடுபவர்களுக்கு - கை ரேகைகளை வைத்து ஆள் மாறாட்டம் என்றொரு பூச்சுற்றல் செய்யப் பட்டிருக்கிறது. எனக்கு forensics பற்றி அதிகம் தெரியாது. இருந்தும், வேறொருவருடைய கை ரேகைகள் பதிந்த glovesஐ மாட்டிக் கொண்டு, தேர்ந்த புலனாய்வாளர்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதான காரியமா என்பது ஐயமாகத்தானுள்ளது. மேலும் கொலை விசாரணைகளில் motive நிச்சயமாக ஆராயப்படும் என்று நினைக்கிறேன். ஒரு வீட்டில் இரு கொலைகள் நடந்து, அதன் விளைவாக ஒருவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் கைவசம் வருகின்றன என்றால் அவர் மீதுதானே முதலில் சந்தேகம் வரும்? இப்படியாக, உண்மையும் தேவைக்கேற்றவாறு திரித்து வழங்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு உறுத்தும் தகவல் - பெண்ணின் சதை ஒரு சர்வ சாதாரணக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது, எந்தவொரு தேவையுமின்றி. டிம்பிள் கபாடியா ஒரு பாலுறவுக்கு ஏங்கும் நடு வயதுப் பெண்மணியாம். அவரைப் பற்றி நாயகனின் குரலில் இப்படியொரு விவரிப்பு - every one makes eye contacts, but she makes breast contacts with her every move. இதற்கு ஏற்ற காட்சியமைப்பு வேறு. மற்றும், மும்பை தெருவில் தூங்கும் ஒரு பிச்சைக்காரியின் ஆடை விலகல், அதனூடாகத் தெரியும் அவளது சதை. இன்னொரு காட்சியில், ஏறக்குறைய முழு நிர்வாணமாக ஒரு கனவுலக ஸ்த்ரீ. இதுவல்லவோ கலைநயம்? மேலும், எந்தவிதத் தயக்கமுமில்லாமல் வசைமாரிகள் வேறு...... bitch, bastard என்று, படம் முழுவதும். இவையெல்லாம் ஒரு படத்தில் இடம்பெறக்கூடாதென்பதல்ல எனது வாதம். "இது போன்ற காட்சிகள் கலாச்சாரச் சீரழிவுக்கே நம்மைக் கொண்டு செல்லும், ஆகவே இவற்றைத் தடை செய்ய வேண்டும்" என்று முழங்கும் தூய்மைவாதியல்ல நான். சமூகம் அல்லது வாழ்க்கையைப் பற்றிய விமர்சனத்தை வைக்கும் வகையில், இது போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி, ஒரு தாக்கதை ஏற்படுத்தும் genuine கலைப்படங்களை நானறிவேன். ஆனால் இது போன்றவற்றைப் பயன்படுத்தி, இதுவும் ஒரு கலைப்படமே என்று நிறுவ முயற்சிக்கும் wannabe படைப்புகள் எரிச்சலையே வரவழைக்கின்றன.

இறுதியாக, இதன் நிறைகுறைகளோடு இதைக் கண்டு களிக்கலாம். ஆனால் இதை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கும் அபத்தங்களெல்லாம் நடக்காது என்றே நம்புகிறேன், பார்க்கலாம்.

திங்கள், மார்ச் 20, 2006

வீட்டிற்குள் வேற்றுமை பாராட்டல்

வீட்டில் பல அரிய பாடங்கள் புகட்டப் படுகின்றன. சாதி வேற்றுமை பாராட்டுவது அவற்றில் முக்கியமானவொன்று.

உலகின் மற்ற இடங்களைப் போலல்லாது, இந்தியாவின் நகர்ப்புற வாழ்க்கை அளிக்கும் ஒரு வசதி, வீட்டு வேலைகளுக்கு பணியாள் அமர்த்தும் வசதியாகும். உயர் பதவியிலிருப்பவர்களின் குடும்பங்கள் இவ்வசதியைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. பொருளாதார அடிப்படையில் நோக்கினால், ஒருபுறம் இச்சேவையைக் கோருபவர்கள், மற்றும் மறுபுறம் இச்சேவையை வழங்கி, தங்கள் ஏழ்மையை ஓரளவுக்காவது சமாளிக்க எண்ணுபவர்கள், என்று இரு தரப்புத்் தேவைகளையும் நிறைவேற்றும் ஒரு ஏற்பாடாக இது அமைகிறது. ஆகவே, வலுவான பொருளாதார நியாயங்களை இதற்கு ஆதரவாக முன்வைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதில் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத ஒரு அம்சம் உண்டெனில், அது இவ்விரு தரப்பினர்களுக்குமிடையே உள்ள சாதி வேற்றுமையே ஆகும். விரிவாகக் கூற வேண்டுமென்றால், மேலே குறிப்பிட்ட உயர் நிலையிலிருக்கும் குடும்பங்கள், பெரும்பாலும் உயர் சாதிகளைச் சேர்ந்தவை. கால காலமாகக் கிடைத்து வந்த சாதகமான சமூகச் சூழலால், கல்வி மற்றும் பொருளாதார அடிப்படையில் வெகுவான முன்னேற்றங்களைக் கண்டு, தற்போதைய உயர் நிலையை எட்டியவை. இதற்கு நேர்மாறாக, அவர்களுக்குப் பணி செய்ய விழையும் கூட்டமோ, கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்த, குடிசைப் பகுதிகளில் குடியிருக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் கூட்டமாகும்.

ஆக, இங்கு நாம் காண்பது, இரு வேறு பின்புலங்களையும் சாதியமைப்புகளையும் சார்ந்த மக்கள், தத்தம் தேவைகளை முன்னிட்டு ஒன்று கூடும் ஒரு சூழலை, அதுவும் வீடு எனப்படும் பொதுப்பார்வைக்கப்பாற்பட்ட ஒரு தனியிடத்தில். விழிப்புணர்வு மிக்க இந்நாட்களில், பொதுவிலே எவரும்,் முற்போக்கு, தாராள குணம், சமத்துவம், மதசார்பின்மை, போன்ற நல்லெண்ணங்களைப் பறைசாற்றத் தவறுவதில்லை, மேலே குறிப்பிட்ட உயர் நிலையிலுள்ள குடும்பத்தினர்களையும் உள்ளிட்டு. ஆனால் வீட்டிற்குள்ளேயோ, அவர்களது இக்கொள்கைகளெல்லாம் ஆவியாய் மறைவதைத்தான் காண முடிகிறது.

காலகாலமாகப் பாதுகாத்து வந்த சாதீயச் சிந்தனைகள் இங்கு தலைவிரித்தாடுவதைக் காணலாம். தங்களது உயர் சாதிப் பின்புலத்தை நினைவுப் படுத்திக் கொண்டு், தங்கள் வீட்டிற்குப் பணி செய்ய வரும் பணியாளர்கள் மீது அவர்கள் விதிக்கும் கட்டுபாடுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒரு பணிப்பெண்ணிற்கு, கொல்லைக் கதவு வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைய அனுமதியுண்டு. இது சாத்தியப்படாத அடுக்கு மாடி வீடுகளில் மட்டுமே இந்நிபந்தனை சமரசம் செய்து கொள்ளப்படும். இதற்குக் காரணமென்ன என்று ஆராய்ந்தால், முன்கதவு, செல்வங்களைக் கொண்டு வரும் லட்சுமி தேவிக்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கிறதாம். அதன் வழியாக ஒரு தாழ்த்தப்பட்ட பணிப்பெண் வருகை தருவதை அனுமதிக்க முடியுமா? மேலும், ஒரு பணிப்பெண்ணுக்கு வீட்டின் பல பகுதிகளுக்கு அனுமதி மறுக்கபடலாம். உ-ம், பூஜையறை, மேசை / நாற்காலிகள், அதி நவீனக் கழிப்பறைகள், வரவேற்பறை......... இப்படி ஒவ்வொரு வீட்டைப் பொறுத்தும் இது மாறுபடும். ஆக, அவர் உட்கார வேண்டுமென்றால் தரையில்தான் உட்கார வேண்டும். மற்றும் பணியாளர்களுக்கென்று வேறு கழிப்பறைகளிருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம். அன்பின் அடையாளமாக, அவ்வப்போது அவருக்கு (கேள்விக்கிடமளிக்கும் தரத்தில்) காபி / தேநீர் / சிற்றுண்டிகள் வழங்கப்படலாம். அவை, அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக் / அலுமினிய கோப்பைகளிலும் தட்டுகளிலும்தான் வழங்கப்படும். இல்லாவிட்டால், அக்குடும்பத்தினர் நிராகரித்து விட்ட பழைய steel / ceramic வகையறாக்களிலும் அவை பரிமாறப்படலாம். குடும்பத்தினர் பயன்படுத்தும் எப்பொருளும் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட மாட்டாது என்பதே இங்கு வழிகாடும் கொள்கை. மீந்து போகும் உணவு வகைகள் மிக அன்புடன் வழங்கப்படும், இனி அதை குடும்பத்தினர் எவரும் சீந்த மாட்டார்கள் என்ற நிச்சயமேற்படும் நிலையில். தாகமெடுத்தால், குடிநீருக்கு பதிலாக குழாய் நீரையே பயன்படுத்திக் கொள்ளும் வசதியுமுண்டு, பணிப்பெண்ணுக்கு.

இதில் கவலை தரும் செய்தி என்னவென்றால், அப்பணிபெண் இத்தகைய வேற்றுமை பாராட்டல்களையெல்லாம் பொருட்படுத்தாமலேயே போக வாய்ப்பிருக்கிறது. இதாவது கிடைத்ததே என்ற நன்றியுணர்வும் அப்பெண்ணுக்கு வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவ்வீட்டில் வளரும் சின்னஞ்சிறுசுகள் இதையெல்லாம் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டு, சாதீயச் சிந்தனைகளில் தங்களது பாலபாடங்களைப் பெறுவதுதான் இதன் வருத்தமான பின்விளைவு. இப்படியாக, சாதிக்கொடுமை என்பது இந்நாட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது, ஒரு உன்னதமான கலை வடிவத்தைப் போலவே.

PS - English version of this post

சனி, மார்ச் 04, 2006

சென்னைச் சுற்றுலா

இந்த இரு சொற்களும் ஒன்றோடொன்று சம்மந்தமில்லாதவையா? ஒரு வெளியூர் பயணிக்கு ஆர்வமூட்டும் வகையில் சென்னை் வழங்குவதென்ன? எனக்குத் தெரிந்த வரை, சென்னை ஒரு வாடிக்கையான, மாறுதலில்லாத, குறிப்பிடும் வகையில் எந்தவொரு சுற்றுலா மையத்தையும் கொண்டிராத ஒரு routine நகரமென்றுதான் கூறவேண்டும். தில்லியென்று எடுத்துக்கொண்டால் ஏகப்பட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்கள், மற்றும் சில மணிநேரப் பயணத்தில் உலக அதிசயமான ஆக்ரா. மும்பையின் அருகாமையிலும்் எலிஃபென்டா குகைகள், மாதேரான், லோனாவ்லா, (அமீர் கான் / ரானி முகர்ஜி புகழ்) கண்டாலா, என்று எவ்வளவோ சுற்றுலா மையங்கள். ஹைதராபாதில் தடுக்கி விழுந்தால் வராலாற்றுச் சின்னங்களும் கட்டிடங்களும்தான். (சென்னையிலும் இதுபோன்ற பழைமை வாய்ந்த கட்டிடங்கள் ஆங்காங்கே உள்ளன, ஆனால் அவை அரசு மற்றும் இதர நிறுவனங்களின் அலுவலகங்களாக மாறி, அவற்றின் சிறப்பை இழந்து கொண்டிருக்கின்றன). பெங்களூருக்கு அருகாமையிலும்் சில சுற்றலாத் தலங்கள் (காடுகள், மலைகள், etc) உள்ளதாக அறிகிறேன். கொல்கத்தாவிலும் சாந்தி நிகேதன், பேலூர் மடம், விக்டோரியா நினைவகம் என்று அதன் பங்குக்கு சில இடங்கள், (மற்றும் அந்த ஊரே ஒரு மியூசியம் போலத்தான், டிராம் வண்டிகளென்ன, பாதாள இரயிலென்ன, என்று :) ). ஆக, சென்னைதான் இருக்கும் பெருநகரங்களிலேயே ஒரு monotonous exceptionஆ?

ஒரு சென்னைவாசிக்கு இருக்கும் தேர்வுகளைப் பார்ப்போம். சென்னையின் கடற்கரைகள் நிச்சயமாக அருமையானவை. மெரினாவை விட கொஞ்சம் கூட்டம் குறைவான Eliot's (பெசன்ட் நகர்), மற்றும் திருவான்மியூர் கடற்கரைகள் சற்று ஏற்புடையவை. இன்னும் தூரம் சென்றால் நீலாங்கரை, முட்டுக்காடு (இங்கு boating வசதி உள்ளதாமே?) என்றெல்லாம் பட்டியல் நீளும். ஆனால் அங்கெல்லாம் சென்றதில்லை. வி.ஜி.பி. தங்கக் கடற்கரைக்கு மட்டும் சென்றிருக்கிறேன். அது என்னை அவ்வளவாகக் கவரவில்லை. இவற்றை விட்டால் சென்னை நகர எல்லைக்குள் வேறெந்த optionஉம் கிடையாது. (abc கோயில், xyz ஆலயம், ஆகியவையெல்லாம் கணக்கில் வரமாட்டா) தில்லியிலிருந்து வந்த ஒரு அலுவலக விருந்தாளி, கிண்டி snake park என்று கேள்விப்பட்டு, ஏதோ Discovery Channel ரேஞ்சிற்கு கற்பனை செய்திருப்பார் போலிருக்கிறது. அங்கே போகவேண்டும் என்று அடம் பிடித்து, நானும் கூட சென்று........... பாவம், வெகுவாக ஏமாந்து போனார்.

சென்னைக்கு அருகாமையில் என்றுப் பார்த்தால், உடனே நினைவிற்கு வருவது நம் சரித்திரப் புகழ் வாய்ந்த 'மஹாப்ஸ்'தான் (அதாங்க, மஹாபலிபுரம்). சென்னையில் வளரும் குழந்தைகள் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள். ஒவ்வொரு வருடமும் அவர்களது பள்ளிகளில் excursion என்ற பெயரில், வள்ளுவர் கோட்டம், மியூசியம், வண்டலூர் உயிரியல் பூங்கா, காந்தி மண்டபம் ஆகிய இடங்களையெல்லாம் சுற்றிக் காண்பித்த பின்னர், அவர்களை கரிசனத்தோடு மஹாபலிபுரத்திற்கும் அழைத்துச் செல்வார்கள், அவர்களது பள்ளியாசிரியர்கள். அங்கு சில பாறைகளையும் அவற்றில் செதுக்கப்பட்ட சிற்பங்களையும் பார்த்துவிட்டு, கைகோர்த்துக் கொண்டு வீடு திரும்ப வேண்டியதுதான். இப்படிச் செய்தே அவ்விடத்தின் மீது ஒரு வெறுப்பை ஊட்டியிருக்கிறார்கள் நமது பள்ளிகளில். ஒரு மாறுதலுக்காக அங்கு சென்று, சில நாட்கள் தங்கி, கடலலைகளில் குளித்து (அது பாதுகாப்பானதா என்பதை யோசிக்க வேண்டும்), நேரத்தை வெட்டியாகக் கழித்து......... இப்படியெல்லாம் ஏன் யாரும் சிந்திப்பதில்லை? "காலைல போனமா, சாயந்திரம் வந்தமா" என்ற ரீதியில் இவ்விடங்களை அணுகுவதற்கு பதிலாக, அங்கு போகாமலே இருக்கலாம். அங்கே தங்கும் வசதிகளின் தரம் பற்றியும் தெரியவில்லை.

பள்ளி இறுதியாண்டில் சில நண்பர்களாகச் சேர்ந்து கொண்டு, மிதிவண்டிகளின் மீதே மஹாப்ஸ் வரை பயணம் செய்வோமென்று முடிவு செய்து கொண்டு, ஒரு பத்து பன்னிரண்டு பேர் அவ்வாறு சென்று வந்தோம். போவதற்கு அரை நாள், திரும்ப வருவதற்கு அரை நாள், இடையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பாறைகளின் மீது ஓய்வு, மிதித்த களைப்பு தீருவதற்காக. சென்னையிலிருந்து அதிகாலை புறப்பட்டுச் சென்றோம், மதியம் வாக்கில் சென்றடைந்தோம், பிறகு உடனே அங்கிருந்து கிளம்பி, இரவில் சென்னை வந்து சேர்ந்தோம். இந்தப் பயணத்தின் நோக்கமென்ன, அது நிறைவேறியதா என்பதெல்லாம் யாராலும் கேட்கப்படவுமில்லை, கேட்டிருந்தாலும் அதற்கு எவராலும் விடையளித்திருக்க முடியுமா என்பதும் ஐயமே. ஊர் திரும்பும் பயணத்தின் போது, சில மிதி வண்டிகள் பழுதடைந்து, அவற்றை பழுது பார்க்கும் பணி நெடுஞ்சாலையிலேயே மேற்கொள்ளப்பட்டு (சரியாக Silver Sands முன்னால் என்று ஞாபகம்), இதனால் வெகுவாகக் கால தாமதமாகி......... என்று, அது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். எப்படா வீடு வருமென்று அனைவரும் இருட்டில் மிதித்துக் கொண்டிருந்த போது, சென்னையின் எல்லை வருவதற்கு இன்னமும் இருபது - முப்பது கிலோமீட்டர் இருக்கையில், "Do you see the bright horizon? That's Madras" என்று ஊற்சாகமூட்டினார் ஒரு நண்பர். இன்னொரு நண்பர் ஒரு மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு, இன்னொரு பழுதடைந்த மிதிவண்டியை கூடவே இழுத்துக் கொண்டும் வந்தார். Heroes are all around you.

இவ்வாறு மஹாபலிபுரம் என்பது சென்னைவாசிகளின் ரத்தத்தில் ஊறிய ஒன்றாகி விட்ட நிலையில், இதை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இளைய சகோதரர் அப்போதுதான் பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். அவர்களது பள்ளியில் சுற்றுலா செல்லப்போவதாக வீட்டில் வந்து அறிவித்தார். மஹாபலிபுரம்தான் செல்கிறார்கள் என்றதும், அவர்கள் ஏன் மாறுதலாக ஏதாவது செய்யக்கூடாது என்று கேட்டேன். சென்னையைச் சுற்றியுள்ள மற்ற இடங்களையும் சென்று பார்க்க வேண்டுமல்லவா, எவ்வளவு முறைதான் ஒரே இடத்தைப் பார்ப்பது, என்று வினவினேன். சகோதரருக்கும் இது சரியென்று பட, "வேறெங்கே செல்வது?" என்று கேட்டார். "அருகே புலிக்காட் ஏரி இருக்கிறதாமே, அங்கெல்லாம் சென்று பார்த்துவிட்டு வரலாமல்லவா?" என்று பதிலுக்குக் கேட்டேன். அப்போது ஹிந்து நாளிதழில் ஏதாவது கட்டுரை வந்திருக்கலாம், புலிக்காட் ஏரியைப் பற்றி. ஹிந்துவில் இது போல் எழுதுவதற்கென்றே சில வேலையற்றவர்கள் இருப்பார்களென்று நினைக்கிறேன். சகோதரருக்கு இது வலுவான யோசனை என்று பட, மறுநாள் பள்ளிக்குச் சென்று, அனைவரையும் convince செய்திருக்கிறார். அவரது பேச்சை நம்பிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மற்றும் அவர்களது ஆசிரியர்கள், அனைவருமாக புலிக்காட் ஏரியை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள்.

அங்கு சென்று அவர்கள் கண்டு களித்தது: 1. உச்சி வெயில் 2. பொட்டல் வெளி 3. கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஏரி 4. ஒரே ஒரு (குச்சி ஐஸ் விற்கும்) ஐஸ் வண்டி். சகோதரருக்கு தர்ம அடி கிடைக்காத குறைதான். வந்தது வந்தோம் இதையாவது செய்து முடிப்போம் என்று அனைவரும் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு , ஊர் வந்து சேர்ந்தார்கள். "எங்கள இப்படி கவுக்கணும்னு எவ்வளவு நாளாடா திட்டம் போட்டே?" என்று சகோதரரை, அவர் செய்யாத ஒரு குற்றத்திற்கு விளக்கம் கேட்டார்கள் அவனது சக மாணவர்கள். சில ஆசிரியர்கள், கோபத்தின் உச்சியில், அவருடன் பேசுவதையும் தவிர்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்களாம்். எனக்கு நேரடி அனுபவம் கிடையாது, ஆனால், மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார் சகோதரர், என்பது மட்டும் புரிந்தது அவர் கூறியதிலிருந்து. (அண்மையில் புலிக்காட் ஏரி பற்றி கூகிள் செய்ததில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை இப்போதும்் மாறவில்லை என்று தெரிய வருகிறது. சுற்றுலாத் துறை என்று ஒன்று செயல்படுகிறதா, இல்லை சும்மா 'நாம் கே வாஸ்தே'தானா?)

அன்றிலிருந்து யாருக்கும் சுற்றுலா சம்மந்தமான ஆலோசனைகள் வழங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். இருந்தாலும், அந்த முட்டுக்காடு நன்றாக இருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள். முயன்று பார்த்துவிட்டுக் கூறுங்களேன்? ;)