ஞாயிறு, டிசம்பர் 07, 2008

"வசிக்க ஒரு வீடு, பிழைக்க ஒரு வேலை"

'இப்படிக்கு ரோஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சியை உள்ளடக்கிய சில பதிவுகளைக் காண நேரிட்டது. ஈழம் பற்றி சில நாட்களுக்கு முன் அதிக பரபரப்போட பேசப்பட்டது. ஈழத்தில் / இலங்கையில் அமைதி திரும்பி அனைவருக்கும் ஏற்புடைய சமரசம் / தீர்வு ஏற்பட வேண்டியது நிச்சயமாக நமது நெடுங்கால இலக்காக இருக்கிறது. ஆனா அதற்கு முன்பு போர்ச்சூழலால் அவதிப்படும் மக்களின் துயரைத் துடைப்பதுவும் ஒரு அவசரத் தேவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். தேசிய / சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் உணவு மூட்டைகளை வெற்றிகரமாக அனுப்பி விட்டோம். அவ்வளவு மெனக்கெடாமலேயே அதை விட அதிகமாக அம்மக்களுக்கு நம்மால் செய்ய முடியுமென்று தோன்றுகிறது.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மேற்கத்திய நாடுகளில் பரவலாக வாழ்ந்து வந்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் நமது நாட்டில்தான் அதிக அளவில் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கறேன் (இந்தத் தகவல் தவறாகவும் இருக்கலாம்). மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தெரிய வருவது என்னன்னா, கொட்டும் மழையில் செங்கல்பட்டு வரை மனிதச் சங்கிலியாக நிற்பதை விட நம்மால் மேலும் பயனுள்ள வகையில் உதவ முடியும் என்பதுதான்.

தமிழகம் - இந்தியாவின் முன்னோடியான மாநிலங்களில் ஒன்று. (எந்த அடிப்படையில் பார்த்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுகிறது). தொழில்மயமாக்கம் (#1), அந்நிய முதலீடு (#3), ஏற்றுமதி (#3), பொருளாதாரம் (#3 - state's GDP = US$70 billion), அதிகமான வீட்டு உரிமையாளர்கள் (#3), இத்யாதி, இத்யாதி........ இப்படி செல்வச் செழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தால் நிச்சயமாக தன்னை நம்பி வந்தோருக்கு இதை விட அதிகமாகச் செய்து தர இயலும். நாம் கோருவதெல்லாம் 'வசிக்க ஒரு வீடு'. நாட்டிலேயே மிக அதிகமான வீடுகளைக் கொண்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்திலிருக்கும் தமிழகத்திற்கு இது ஒரு பெரிய சவால் கிடையாது என்று நம்புகிறேன். அதே போல், 'பிழைக்க ஒரு வேலை'. நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்து போய்விடவில்லை என்றும் நம்புகிறேன்.

நிறுவன உரிமையாளர்கள், அதிகாரப் பொறுப்பிலிருப்பவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பார்வைக்கு இந்த சிந்தனைகளை முன்வைக்கிறேன். மேலும், ஈழத்தவர்களை வேலைக்கு அமர்த்துவதிலோ, அல்லது அவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதிலோ ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்குமானால், அவற்றை உடனே நீக்குவதற்கு நம் தமிழக அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஞாயிறு, நவம்பர் 30, 2008

பாகிஸ்தான் கொடி?

அண்மையில் நடந்து முடிஞ்ச மும்பை தாக்குதல்கள் தொடர்பா ஊடகங்களில் நடைபெற்று வரும் விவாதங்கள் குறித்து எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. இவ்வளவு நாளா சாமானியன் அடி வாங்கியது போய், இப்போ ஏழு நட்சத்திர பார்ட்டிங்களுக்கும் அதே கதிதான்னு வரும்போது, நம்ம ஊடகங்கள், படித்த மக்கள், பண முதலைகள், அரசியல்வாதிகள்ன்னு சமூகத்தின் அதிகாரம் படைத்த எல்லாரும் முன்பை விட ரொம்ப அதிகமாவே ஊளையிடற மாதிரி ஒரு உணர்வு. எப்படியோ, இதுனாலல்லாம் சாமானியனுக்கும் இறுதியில் நன்மை கிடைக்கும்ன்னா, இவற்றையும் வரவேற்கலாம்ங்கிற நிலையில்தான் இப்போ இருக்கேன்.

இத்தகைய கசப்புணர்வோடயே இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்துக்கிட்டு இருந்தேன்.
ஒரு பொதுமக்கள் பங்கெடுக்கும் விவாத நிகழ்ச்சியில் 'சிமி கரேவால்'ங்கிற முன்னாள் பாலிவுட் நடிகை, வாழைப்பழத்தில் நச்சு தோய்ந்த ஊசியை ஏத்தற மாதிரி ஒண்ணைச் சொன்னாங்க. என்னன்னா, மும்பையில் குறிப்பிட்ட இடங்களிலுள்ள அடுக்கு மாளிகைகளிலிருந்து பார்வையிட்டால் தென்படக் கூடிய குடிசைப் பகுதிகளில், பல கொடிகள் காணக் கிடைக்குமாம். அவை, இந்திய நாட்டுக் கொடிகளோ, அல்லது காங்கிரஸ் / பாஜக போன்ற கட்சிகளின் கொடிகளோ கிடையாதாம். பாகிஸ்தான் நாட்டுக் கொடிகளாம் அவை. இந்தத் தகவலைத் தெரிவித்து, அவர்களெல்லாம் பாகிஸ்தான் நாட்டு விசுவாசிகள்ன்னு தேசிய தொலைக்காட்சியில் நிறுவ முயன்று கொண்டிருந்தார் அந்த முன்னாள் நடிகை. இதைக் கேட்டு வெகுண்டெழுந்த ஒரு இளைஞர், 'இந்தியாவின் எதிரிகள் முஸ்லிம்களோ, பாகிஸ்தானோ அல்ல, நீங்கள்தான் இந்தியாவின் எதிரி' என்று கூச்சலிட்டார். கொஞ்சம் உணர்ச்சி அதிகமான வெளிப்பாடுதான். இருந்தாலும் அவரது கொந்தளிப்பு நியாயமாப் பட்டது. (இறுதியில் அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது கொசுறுச் செய்தி).

எனது சொந்த அனுபவத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளிலேயே நானும் வாழும்படி அமைந்துவிட்டது. இந்தக் கொடி விவகாரம் எனக்கும் பரிச்சயமானதுதான். (கொஞ்சம் வசதி குறைவான) சில இஸ்லாமியர்களின் வீட்டு உச்சியில் பச்சை வண்ண முக்கோண வடிவிலான கொடிகள் பறப்பதைக் கண்டிருக்கிறேன். (அதன் ஓரங்களில் ஒரு பளபளா ஜிகினா வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும் :) ). அத்தகைய கொடிகளை மசூதிகளிலும் கண்டிருக்கிறேன். கல்லறைகள் அதே போன்ற ஒரு பசுமையான துணியால் போர்த்தப் பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். இவையெல்லாம் என்னை உறுத்தியது கிடையாது. வேறு யாரையும் உறுத்தியது கிடையாது என்றே நம்புகிறேன். ஒரு மத அடையாளமாகவே என்னாலும் (சட்டம் ஒழுங்கை உறுதி செய்யும் காவல் துறையினர் உட்பட) பலராலும் இந்தக் கொடிகள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். வட இந்திய இந்துக் கோவில்களில் இதைப் போன்ற காவிக் கொடிகளை காணலாம். மத நம்பிக்கை அதிகமுள்ள இந்துக்களும் (குறிப்பாக, குடிசைப் பகுதிகளில்) இத்தகைய கொடிகளால் தங்கள் வீடுகளை அலங்கரிக்கக் கூடும் (உறுதியாகத் தெரியவில்லை).

இந்தப் பச்சை வண்ணக் கொடி பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஒத்திருப்பதில் வியப்பேதுமில்லை. பாகிஸ்தான் ஒரு வெளிப்படையான இஸ்லாமிய நாடு, ஆகவே ஒரு இஸ்லாமிய அடையாளத்தை தாங்கிய ஒரு கொடியைப் பின்பற்றுகிறது. அது போலவே நேபாளம் இது நாள் வரை ஒரு இந்து முடியாட்சி நாடாகத் திகழ்ந்து வந்த காரணத்தால், அதன் கொடிக்கும் இந்துக்களின் கொடிக்கும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இப்படியாக, காலங்காலமாக ஒரு மரபை பின்பற்றும் ஒரு பிரிவினருக்கும் அதே மரபைப் பின்பற்றும் வேற்று நாடுகளுக்கும் ஏற்பட்டு விடும் ஒரு சில ஒற்றுமைகளால், இவர்கள் அந்நாடுகளின் விசுவாசிகள் என்று தேசிய அளவில் செய்யப்படும் விஷமத்தனமான பரப்புரை என்னை கவலைக்குள்ளாக்குகிறது.

இத்தகைய misinformation / போலிப் பரப்புரைகளை எதிர்கொண்டு சம்மந்தப்பட்ட விவரமறிந்தவர்கள், இஸ்லாமிய தரப்பினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எல்லா இஸ்லாமியர்களும் பாகிஸ்தானிய விசுவாசிகள், அங்கிருந்து ஏற்றுமதியாகும் தீவிரவாதத்திற்கு மறைமுக / வெளிப்படை ஆதரவளிப்பவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது. (ஏற்கனவே இவ்வாறெல்லாம் கூறி ஒதுக்கப்பட்டு வருவது தெரிந்ததுதான். மேலும் பாதிப்பு ஏற்படாதிருக்க வேண்டும் என்பதே நான் கூற வருவது).

சனி, அக்டோபர் 25, 2008

Eelam for Indians, Indians for Eelam

ஈழப் பிரச்சனை குறித்து தமிழிலேயே பெரும்பாலும் விவாதிச்சிக்கிட்டு இருக்கோம். அதனால தமிழரல்லாதவங்களுக்கு இதப் பத்தி போதிய அளவு தெரியாம போகும் வாய்ப்பிருக்கு. அதிலும் நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சியே கவிழக் கூடிய ஒரு முடிவை எடுக்கப் போறாங்க. அதற்கான காரணங்கள், பின்புலம் என்பதையெல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல நமக்கு மவுண்ட் ரோட் மஹா விஷ்ணுங்கதான் இருக்காங்க. அவர்கள் வெளியிடப் போகும் நச்சுக் கருத்துகளுக்கு ஒரு மாற்றுப் பார்வையாகவாவது நம் கருத்துகளைப் பதிவது அவசியமாகிறது.

இத்தகைய நோக்கங்களோட ஒரு ஆங்கிலப் பதிவு எழுதியிருக்கேன். அதை இங்கே காணலாம். இந்தப் பிரச்சனை குறித்து தெளிவு பெற விரும்பும் தமிழரல்லாத நட்பு வட்டங்களுக்கு (நீங்கள் விரும்பினால்) இதை சுட்டலாம். உங்களோட மதிப்பிற்குரிய கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

திங்கள், அக்டோபர் 20, 2008

அழையா விருந்தினனாக......... ஈழம் குறித்த தொடர்பதிவுகளில்

தோழர் தூயாவின் தொடர் பதிவு அழைப்பு கவனத்தைக் கவர்ந்தது. நான் பெரும்பாலும் தொடர்பதிவுகளில் பங்கு பெறுவதில்லை. ஆனால் இதில் அழைக்காமலே பங்கு பெற வேண்டும் போலிருந்தது. ஆகவே, இதோ ஆஜராயிட்டேன் :) இனி, கேள்வி - பதில்கள்:

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

கொஞ்சம் அதிகமாவே தெரியும்ன்னு சொல்லலாம். '83 கலவரங்கள் நடந்த சமயத்தில் நான் சென்னையில் பள்ளி மாணவனா படிச்சிக்கிட்டு இருந்தேன். எங்கள் பள்ளியிலும் எனது வகுப்பிலும் சில இலங்கைத் தமிழர்கள் வந்து சேர்ந்தாங்க. அவர்களோடு சேர்ந்து விளையாடிய (ஊர் சுற்றிய :) ) அனுபவங்கள் உண்டு.

ஒரு முறை நண்பர்களா சேர்ந்து மகாபலிபுரம் வரை (சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. இருக்கும்), சைக்களிலேயே போனோம். எங்கள் கூட்டத்தில் ஒருவர் ஈழத்தவர். அவருக்கு வழி நெடுக (அவரது ஈழத்தமிழைக் கேட்டு) பொதுமக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. ஒரு இடத்தில் தண்ணீருக்காக நிறுத்தினோம். அப்போது பொது ஜனம் ஒருவர் கையில் கொய்யாப் பழம் வைத்திருந்தார் (தான் உண்பதற்காக). என்னோட ஈழ நண்பரைப் பார்த்ததும் கையிலிந்த பழத்தை அவருக்கு வழங்கினார். ஆனா நண்பர் தான் மட்டும் எப்படி சாப்பிடறதுன்னு அதை மறுத்து விட்டார். இவ்வாறாக, மக்களுக்கு இயற்கையாவே ஈழத்தவர்கள் மீது ஒரு பாசம் அந்த சமயத்தில் இருந்தது என்பதை நேரில் கண்டிருக்கிறேன்.

பிறகு, கல்லூரி படித்த போது, இந்திய 'அமைதி' படைக்கும் புலிகளுக்கும் போர் மூண்டு பிரச்சனை திசை திரும்பியது. அப்போது, திலீபன் என்ற ஈழத்து இளைஞர் (உண்மையிலேயே) சாகும் வரை உண்ணா விரதம் இருந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிச்சி சில மாணவர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகிச்சாங்க. அதே சமயத்தில் இந்திய ஆங்கில ஊடகங்களில் புலிகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களா (human shields) பயன்படுத்தறாங்க, அதனால நம் படையினருக்குப் பின்னடைவுன்னு பரவலா செய்தி வந்துக்கிட்டு இருந்தது. ஆனா அவைகளில் வராத பல செய்திகள் (இந்தியப் படையின் வல்வெட்டித்துறை அராஜகங்கள்) குறித்து கடந்த சில வருடங்களா இணையம் / வலைப்பதிவுகள் மூலமா தெரிஞ்சிக்கிட்டு இருக்கேன்.

எப்படியோ, ராஜீவ் கொலை, அதைத் தொடர்ந்த man-hunt (or is it witch-hunt?) வரலாறு காணாத வகையில் 29 பேருக்கு தூக்கு தண்டனை (அதைக் குறைத்து ஆயுள் தண்டனை ஆனதுன்னு நினைக்கறேன்), என்று தொடர் சம்பவங்கள் நடந்து, அதன் பிறகு ஈழம் குறித்து அவ்வளவா கவனம் செலுத்தவில்லை.

நார்வேயின் அமைதி முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டப்போ, எங்கயோ இருக்கும் Norwayயால் முடிந்தது அருகில் இருக்கும் நம்மால் முடியாமலிருக்குமான்னு தோணியது. 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஒரு விதத்தில் கவனத்தை மீண்டும் கொண்டு வந்ததுன்னு சொல்லலாம் (ஆனா, நிறைய பேர் இதை மறுப்பாங்கன்னு தெரியும்).

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

காஷ்மீர், திபெத், பாலஸ்தீனம், ஆகிய நாடுகளைப் போலவே தமிழ் ஈழமும் ஒரு சுதந்திர நாடாக மலரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதையே நானும் வரவேற்கிறேன்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

உண்மையைச் சொல்லணும்னா, ஆர்வத்தோடல்லாம் படிப்பது கிடையாது. ஈழத்தமிழை பேச்சாகவும், எழுத்து நடையிலும் படிக்கப் பிடிக்கும்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

மிகவும் தாமதமாக ஒலிக்கும் குரல்கள். விவேக்கின் வசனமான 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தது'ன்னு நம்புவோம். மத்திய அரசியலில் இதனால் ஒன்றும் சாதிக்க முடியாவிட்டாலும், மக்கள் மத்தியில் இவை மனமாற்றம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

உணர்வுரீதியா - நம்பிக்கையைத் தளர விடாதீங்கன்னு சொல்லலாம். கவனமா இருங்கன்னு சொல்லலாம். புலம்பெயர்ந்தவர்களுக்கு, தொடர்ந்து உங்கள் பரப்புரையைச் செய்யுங்கள்ன்னு சொல்லலாம். முடிந்தவரை அதை ஆங்கிலத்தில், பிற உலக மொழிகளில் செய்யுங்கன்னு சொல்லலாம். இதுக்கு மேல சொல்றதுக்கு எனக்கு வேற எதுவும் தோணவில்லை.

பி.கு. - தொடர் பதிவு என்பதால் இதை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.

புதன், அக்டோபர் 15, 2008

என்னக் கொடும, சரவணன்?

பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் (துணைக்கு மாண்டேக் சிங் ஆலுவாலியாவும்) ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் இந்தப் பொன்னாளில், பங்குச் சந்தை, பொருளாதாரம் எல்லாம் சரிஞ்சி போச்சு. அதுக்கு அவங்கதான் காரணம்ன்னு சொல்ல வரல்ல. (அவங்க என்ன செய்வாங்க பாவம்?) ஆனா, அத சரி செய்யறேன் பேர்வழின்னு மக்களோட வரிப்பணம் ரூ.80,000 கோடி (ரொம்ப சின்ன தொகையா படுதுல்ல?) திருப்பி விடப்பட்டிருக்கு (கேட்டா infusing funds into the systemமாம்). என்னவோ liquidity crisisன்னு பேசிக்கறாங்க. இந்த மாதிரி விவகாரங்களில் ஒரு சாமானியனை விட மோசம்தான் என்னோட அறிவு. Google (என்ன மாதிரி moronகளுக்குல்லாம் அது ஒண்ணதானே இருக்கு?) பண்ணி பாத்தா, வாங்கின (அல்லது முதலீடு செய்து தயாரித்துள்ள) பொருள விக்கமுடியாம போறதுதான் liquidity crisisன்னு தெரிய வருது. ரொம்ப நல்லதுங்க. இதுக்கு ரூ.80,000 கோடி இல்ல, அதுக்கும் மேலயே தாராளமா infuse பண்ணலாம்.

என்ன, கொஞ்சம் யோசிச்சி பாத்தா liquidity crisisல்லாம் நமக்குப் புதுசான்னு கேக்கத் தோணுது. கடனை வாங்கி விவசாயம் செய்யறான். பிறகு அறுவடைக்கு அப்பறம் விளைச்சலுக்கு விலையா, போட்ட பணம் கூட திரும்பக் கிடைக்க மாட்டேங்குது. அப்போ யாரும் liquidity crisis பத்தி பேசலையே? ரூ.80,000 கோடி எல்லாம் திருப்பி விடப்படல்லையே பாதிக்கப்பட்டவங்களுக்கு? இதுல தமாசு என்னன்னா பங்குச் சந்தை சரிவால mutual fundகளும் சரிஞ்சிருச்சாம். (என்ன ஆஸ்ச்சர்யம்?) அதை சரிகட்டறதுக்காக ரூ.20,000 கோடி infuse செய்யப்பட்டிருக்கு. Mutual fund என்பதே பங்குச் சந்தை செயல்பாட்டைப் பொருத்ததுதான். தொலைக்காட்சியில் mutual fund விளம்பரத்தைப் பார்த்தா, அதில் வேக வேகமா ஒரு disclaimerஐ படிப்பாங்க. அது என்னன்னா, "Mutual fund investments are subject to market risks. Investors are requested to read the offer documents carefully before investing" என்பதுதான். ஆக, சேவை வழங்குனர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒரு சாத்தியம், அவர்களும் அவர்களது முதலீட்டாளர்களுக்கு சரியாக எச்சரிக்கை செய்து தயார்படுத்திய ஒரு நிகழ்வு, உண்மையில் நிகழ்ந்துவிட்டது. இதுக்கு ஏன் அரசாங்கம் 20,000 கோடியை infuse செய்யணும்? அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை FDயில் போடாமல் risk எடுத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு அரசு ஏன் மக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும்?

இப்படி மக்கள் (அல்லது அவர்களில் ஒரு சிறு பகுதியின்) நலன் காக்கும் அரசின் நடவடிக்கையை வரவேற்காம நான் ஏன் கேள்வி கேக்கறேன்னு தோணலாம். நாடு முழுக்க விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதோ, இல்ல சுனாமி வந்தப்பவோ, இல்ல பீஹாரில் வெள்ளம் வந்து கோடிக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த போதோ, எவ்வளவு ஆயிரம் கோடி liquidity infuse பண்ணப்பட்டதுன்னு தெரியல. ஆனா இப்பொ, IT துறையை ஒத்த டாம்பீகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிதித் துறையின் நலன் காக்க, மாத சம்பளக் காரரகளிடமிருந்து திரட்டப்பட்ட வரிப்பணம் (தண்ணியாக) செலவாகிக் கொண்டிருக்கறது. அப்பொன்னா, மக்கள் நலன் என்பதெல்லாம் அதில் ஒரு சிறு பகுதியினருக்குதான் (நிதி, வர்த்தகத் துறையினர்களுக்குத்தான்) பொருந்துமா? என்னக் கொடும, சரவணன்?

ஞாயிறு, அக்டோபர் 12, 2008

Caravanserai

எண்பதுகளில் கல்லூரியில் படிச்சவங்க, அதுவும் மேற்கத்திய இசை பரிச்சயம் உள்ளவங்களுக்கு Carlos Santanaவை தெரியாம இருக்காது. அவரோட Black magic woman ரொம்ப பிரபலம். மற்ற பாடல்களும்தான். முஸ்தஃபா...... முஸ்தஃபா....... பாட்டு கேட்டிருப்பீங்க 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மானோட இசையில். அதோட மூலம் Santanaவின் Esperando என்ற பாடல்தான். அவரோட Oye como va, Open Invitation, Soul Sacrifice, Jingo போன்ற பாடல்களையும் நீங்க எங்கயாவது கேட்டிருக்கக் கூடும் (இசைப்புயல் / வெள்ளங்களின் திரைப்பாடல்களாவோ, அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களாவோ). Santanaவோட பெரும்பான்மையான பாடல்கள் இது போன்ற radio-friendly (அதாவது, 'வெகுசன ரசனைக்கேற்ற'ன்னு தமிழ்ல சொல்லலாம்) எனப்படும் வகையைச் சார்ந்தவை. அந்தக் காரணத்தினாலயே தீவிர இசை ரசிகர்கள் மத்தியில் இத்தகைய பாடல்கள் பெரு மதிப்பைப் பெறுவது கிடையாது. ஆனா இதுக்குல்லாம் விதிவிலக்கா ஒரு ஆல்பம் தந்திருக்காரு Santana. அவ்வளவா பிரபலமடையாத அந்த ஆல்பத்தின் பெயர்தான் Caravanserai. அதைப் பற்றிய அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.

ஒரு பாலைவனத்தில் caravan ஒன்றுடன் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த இசைத் தொகுப்பின் நோக்கம். எதுக்கு பாலைவனத்தில் பயணம் செய்யணும்ன்னெல்லாம் கேக்க மாட்டீங்கன்னு நம்பறேன் :) ஒரு தனியறையில் வேண்டிய 'வசதிகள்' செய்து கொண்டு இத்தகைய பயணங்களை மேற்கொள்வது எல்லா வகையிலும் பயன் தரக்கூடும் :) ஒரு பாடல் தொகுப்பு என்ற உணர்வே ஏற்படாமல், முதலிலிருந்து இறுதி வரை ஒரே பாடலைக் கேட்பது போன்ற ஒரு உணர்வை வலுவாக ஏற்படுத்துகிறது இந்த இசைத்தட்டு. இது போல் இருப்பதை concept album என்பார்கள். ஒரு பொது கருத்துடன் எல்லா பாடல்களும் பொருந்தி வருவது போல் இருக்கும்.

இசை என்பது கருவிகளில் / குரலில் காட்டும் மேதமை என்பதைக் கடந்து, ஒரு அனுபவம், ஒரு உணர்வு, ஒரு ஆழ்மனப் பரிமாற்றம் (subconscious communication) என்ற தளங்களிலிருந்து அணுகினால் இந்த இசைத் தொகுப்பு ஒரு இணையற்ற விருந்தாக அமையக்கூடும். ஒரு மாதிரிக்காக ' பேரண்டத்திலுள்ள எல்லா அன்பும்' (All the love of the Universe) என்ற தலைப்பு கொண்ட இந்தப் பாடலை இங்கே இணைத்திருக்கிறேன்.



(பாடலின் climax கட்டம் கொஞ்சம் விடுபட்டுவிட்டது :) ஒட்டகங்களின் நாலு கால் பாய்ச்சலை முழுமையாக அனுபவிக்க முடியாததற்கு வருந்துகிறேன்)

குறிப்பட்டுச் சொல்லணும்னா, guitar, bass மற்றும் drumsஇன் இடைவிடாத உரையாடல்கள், மற்றும் மொத்தத்தில் அதன் காலத்தை வென்ற தன்மை (timelessness), ஆகியன இந்தத் தொகுப்பை மற்ற இசைத்தட்டுகளிலிருந்து வேறுபடுத்தும். Radio-friendly பாடல்களே பெரும்பாலும் பரிச்சயமானவர்கள் இந்த இசைத் தொகுப்பை அணுகும்போது ஒரு முழு விருந்துக்கு தயாராகச் செல்லுங்கள். மனரீதியாக என்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்ல முடியாததால், இதைத் தனிமையில் கேட்பது சிறந்தது.

பி.கு. - இது போன்ற நல்ல இசை பற்றிய பகிர்வுகளை இந்தத் தளத்தில் சேகரித்து வருகிறேன். விரும்பினால் அங்கேயும் வருகை தாருங்கள்.

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2008

பின்னூட்டப் படுத்தல்

என்னோட சொந்தத் தளம் ஒன்றை பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாம அனானிகளும் பின்னூட்டமிடும் வகையில் விட்டு வச்சிருந்தேன். ஒன்றும் புரியாத கன்னா பின்னா மொழியில் (ஆங்கில எழுத்துக்கள்தான்) ஒரு பின்னூட்டம் ஒண்ணு வந்தது. எதாவது தீவிரவாத சங்கேத பாஷையோன்னு கொஞ்சம் அரண்டு போய் அதை அழிச்சிட்டேன். சில நாட்கள் கழித்து திரும்ப அதே பின்னூட்டம். அதையும் அழிச்சிட்டு, அதை அனுப்பிய IP எண்ணையும் தடை செஞ்சேன். அப்பறமா, "உன் தளம் பிரமாதம்" அப்படின்னு ஒரு பின்னூட்டம், கூடவே free ringtonesன்னு போஸ்டரோட. அதுவும் ஒரு முறைக்கு மேல வந்து, அதை அழிச்சி, IPஐ தடை செஞ்சி, எல்லாம் நடந்தது. மறு நாள் பாத்தா, அந்த இடுகைக்கு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள், வயக்ரா, நயக்ரான்னு. அவசர அவசரமா IPஐப் பார்த்து தடை செய்யலாம்ன்னு போனா, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு IP எண்ணிலிருந்து அனுப்பப்பட்டிருக்கு (Distributed DoS attack). சரின்னு எல்லாத்தையும் mass delete முறையில் அழிச்சிட்டு திரும்பினா, இன்னும் இன்னும் வந்துக்கிட்டே இருக்கு பின்னூட்டங்கள். மூன்று நிமிடங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில். பின்னூட்ட மட்டுறுத்தல் வச்சாலும் அவற்றையெல்லாம் எப்படியும் நான்தான் அழிக்கணும். மேலும் இது போன்ற இயந்திரமயமான வருகைகளால் தரவுத்தளத்தின் அளவும் கூடிகிட்டே இருக்கு. அவ்வப்போது தளமும் memory போதாமையால் ஸ்தம்பித்து விடுகிறதோன்னும் தெரியல. (குறிப்பா admin பக்கங்கள்).

இதுக்கு இணையத்தில் மேய்ந்து ஆராய்ச்சி பண்ணி, anti-spam, akismetன்னு என்னல்லாமோ முயற்சி செஞ்சி பார்த்தேன். இறுதியில் captchaதான் கைகொடுத்தது. இப்போ ஒரு மட்டுக்கு பின்னூட்டங்கள் விழுவதில்லை, ஆகவே எனக்கு அவற்றை அழிக்கும் வேலையும் கிடையாது. அனானி பின்னூட்டங்களும் எனது ஒப்புதல் தேவையில்லாமல் போட முடியுது (captcha என்ற ஒரு கூடுதல் கட்டாயம் மட்டும் இப்போ சேர்ந்து கொண்டுள்ளது). ஆனா, இந்த தொடரும் DoS வருகைகளால் தளத்தின் வேகம் கொஞ்சம் கொறஞ்ச மாதிரி இருக்கு. இதாவது பரவாயில்லை - சில தாக்குதல்கள் நொடிக்கு ஒரு பின்னூட்டம் போடும் வகையில் அமைக்கப் பட்டிருக்குமாம். அந்த மாதிரி ஆகியிருந்தா அதன் விளைவை நினைச்சிப் பாக்கவே முடியல. எனக்கு வந்திருக்கும் தாக்குதல் மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறைதான், ஆனா கடந்த மூன்று நாட்களா தொடர்ந்துக்கிட்டு இருக்கு. இதை நிறுத்த சொல்லி என்னோட hosting சேவைக்கு ஒரு மடல் எழுதினேன். அதை கீழே குடுத்துருக்கேன்:

Hi,

My Drupal-based site is experiencing a spambot attack. I have enabled the Akimset module of Drupal and have also (unwillingly) turned on comment moderation for anonymous comments, to minimize impact. Is it possible to prevent the bot from accessing my site altogether? It seem that it has been setup to submit a comment every 3 minutes or so, on the following page of my site: http://www.mello.in/node/74. It is also changing the host ip address each time, so I am not able to ban it based on IP.

Another question - is it possible to increase the PHP memory limit to 24M? I am getting blank screen on certain admin pages as described here:
http://drupal.org/node/158043. I tried it using .htaccess, and also using ini_set() function of php, but to no avail.

Pls do the needful.

Thanks & Rgds.

Ravi

அதுக்கு அவங்க கிட்ட இருந்து வந்த பதில்:

Dear Ravi

Thank you for contacting XXXXXXX. For the Drupal site you can just install a captcha option (anti-spam) for the attacks to be controlled, as for the memory limit it cannot be done, the limit is 16MB.

Best Regards

SUPPORT

(நான் பணம் செலுத்தி பெறும் ஒரு சேவை, என்னோட வேண்டுகோளுக்கு, எவ்வளவு நாசூக்கா முடியுமோ அவ்வளவு நாசூக்கா, ஒரு உதவியும் தர முடியாதுன்னு பதில் தர்றாங்க. இதுதான் உலகம். நிலைமை இப்படி இருக்க, முற்றிலும் இலவசமா கிடைக்கும் ஒரு சேவையை பெற்றுக் கொண்டு, அதன் நிர்வாகிகள் என்னத்துக்கோ நமக்குல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும்ன்னு எதிர்பார்க்கும் நம் அறிவு ஜீவிகளை இங்கே கொஞ்சம் நினைச்சி பார்த்துக்கறேன் :) )

ஆக, நான் ஏற்கனவே செஞ்சிருக்கும் தீர்வுகளைப் பரிந்துரைத்தது போக, hosting வழங்குனர்கள் வேற ஒண்ணும் செய்யமாட்டாங்க. திருடனா பாத்து திருந்தினாதான் உண்டுங்கிற மாதிரி, இந்த இயந்திரர் (bot?) தானாகவே நின்னாதான் உண்டு. அதுவரை, "நன்றி மீண்டும் வருக"ன்னு (எப்படியும் மூன்று நிமிடங்கள் கழித்து வரத்தானே போகிறார்) அவரை வாழ்த்துவதைத் தவிர வேற ஒண்ணும் செய்யற நிலையில் நான் இல்லை.

வெள்ளி, ஜூலை 18, 2008

'))'))')) said...

நிறைய Blogger பதிவுகளில் பின்னூட்டப் பகுதியைப் பார்த்தா தலைப்பில் காட்டப்பட்ட மாதிரிதான் பின்னூட்டாளரின் பெயர் தெரியுது. இது ஏன் இப்படின்னு கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன். Firebug நீட்சியைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்த போது பின்னூட்டியவருக்கான code கீழ்க்கண்டவாறு இருந்தது:

<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>

ஒரே நிரல் எப்படி பல முறைகள் recurse ஆகியிருக்கு பார்த்தீங்களா? அதற்கு பதிலா, இப்படி இருந்திருந்தா இந்தப் பிரச்சினை இருந்திருக்காது:

<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>
[குறிப்பு: இது தவறாகும். கீழே 'பிற்சேர்க்கை' என்ற குறிப்பைக் காண்க]

அல்லது, இப்படி இருந்திருந்தாலும்:

யாத்திரீகன்

to_unicode() என்ற நிரல் எதற்காக புகுத்தப்பட்டிருக்குன்னு தெரியல. இடைப்பட்ட காலத்தில் (பிளாக்கர் பீட்டா காலத்தில்) தமிழ் எழுத்துகள் தெரியாம accented ஐரோப்பிய எழுத்துகளா தெரிஞ்சதை சரிபண்ண யாராவது (ஜெகத் / கோபி?) உருவாக்கியிருக்காங்களோ என்னவோ.

சரி, இந்தப் பிரச்சனை உங்க பதிவில் இருந்தா அதை எப்படி சரி பண்றதுன்னு ஒரு கேள்வி இருக்கலாம். அதற்கான (குத்துமதிப்பான) விடை:
1. பிளாக்கர் dashboard சென்று 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க.

2. அங்க Download Full Template அப்படீன்னு ஒரு சுட்டி இருக்கும். சொடுக்குங்க.

3. தரவிறங்கிய templateஐ இரு பிரதிகள் எடுத்து வச்சிக்கோங்க. ஒன்றுக்கு original.xml என்றும் மற்றொன்றுக்கு modified.xml அப்படீன்னும் பெயர் குடுங்க.

4. இப்போ, modified.xmlஐ Notepadஇல் திறந்து, கீழ்க்கண்ட string இருக்கும் வரியைத் தேடிக் கண்டுபிடிங்க:
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'>

5. அந்த மொத்த வரியையும் (அதாவது <a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'> என்பதில் தொடங்கி </a> என்பது வரை இருக்கும் நிரல் பகுதியை) கீழ குடுத்துருக்கிற மாதிரி மாற்றி அமையுங்க (i.e. replace the entire line as given below):
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>

இதைச் செய்த பிறகு, பலமுறை recurse ஆகும் <script>document.write(to_unicode.........</script> என்ற நிரல் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும் . அதுதான், நமது குறிக்கோள்.

6. இந்த திருத்ததை சேமித்துக் கொண்டு, மீண்டும் 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க. அங்க Upload a template from a file on your hard drive வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் மாற்றிய modified.xml கோப்பை வலையேற்றுங்க. இதைச் செய்யும்போது சில சமயம் "We're sorry, but we were unable to complete your request." என்பது போன்ற பிழைச் செய்திகள் வரலாம். அப்படீன்னா சரியான ராகு காலத்தில் இதைச் செய்யத் தொடங்கினீங்கன்னு அர்த்தம். ஒரு 1 - 2 மணி நேரம் கழித்து முயற்சி செய்து பாருங்க. வேலை செய்யலாம். (i.e. there's a problem at Blogger end, which might become ok after sometime).

7. திருத்திய templateஐ வலையேற்றிய பிறகு, பெரும்பாலும் இந்தப் பிரச்சனை சரியாகி இருக்கும். "உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா"ங்கிற மாதிரி புதுப் பிரச்சனைகள் எதாவது வந்ததுன்னா, எந்த மாற்றமும் செய்யாத original.xml கோப்பை வலையேற்றுங்க. பழைய பிரச்சனைகளோட இயங்கும் தளம் மீண்டும் கிடைக்கும்.

பிற்ச்சேர்க்கை:

நண்பர் சின்னப்பையனின் பதிவில் ' said...' என்றுதான் பின்னூட்டாளர்களின் பெயர் தோன்றுகிறது (அதாவது அவர்களின் பெயர் தோன்றுவதே இல்லை). பரிசோதனையில் தெரிய வந்தது, code கீழ்க்கண்டவாறு இருக்கிறது:
<script>
document.write(to_unicode('ச்சின்னப் பையன்'))
</script>

அதாவது no recursions. அப்படியும் கூட, to_unicode நிரல் இருப்பதாலேயே பின்னூட்டாளர்களின் பெயர் மறைந்து விடுகிறது. ஆகவே, அதை முற்றிலுமாக நீக்குவதுதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.

திங்கள், ஜூலை 14, 2008

16 வயதினிலே

மதன், ரதி. பருவத்தை எட்டிப்பார்க்கும் வயசு இருவருக்கும். தாய் தேவியின் பாதுகாப்பில் மதன். ரதியோ தந்தை சிவாவின் பொறுப்பில்.

சமூகம் உயர் கணினிகளின் உதவி கொண்டு இளவட்டங்களைக் கட்டிப்போட்டு வெகு காலங்களாகி விட்டது. அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் பெற்றொர்களுக்கு முப்பரிமாண ஒளிபரப்பு சென்று கொண்டே இருந்தது, அவர்களது கைக்கணினிகள், உடற்கணினிகள், இப்படி எதில் வேண்டுமானாலும். அதன் மூலமாகவே தங்கள் மக்களை இடைவிடாது கண்டித்துக் கொண்டிருந்தார்கள் அவ்வப்போது, "அங்கே அவனோடு என்ன பேச்சு?", "என்ன அவளைப் பாத்து ரொம்பத்தான் இளிக்கிற? பல்லெல்லாம் கழண்டு விழுந்துடப் போவுது!" என்ற ரீதிகளில். பெற்றோர் தம் குழந்தைகள் எதிர் பாலாரிடம் நட்பாயிருப்பதை விட ஒரே பாலாரிடம் நட்பு பாராட்டுவதை இன்னமும் தீவிரமாக எதிர்த்தார்கள்.

இந்நிலையில் ரதியும் மதனும் தங்கள் விதியை நொந்து கொண்டு, தத்தமது அறைகளிலிருந்து மின் நட்புத் தளங்களை வலம் வந்து கொண்டிருந்தார்கள் (அதுவும் பெற்றோர்களின் மேற்பார்வையைத் தப்பவில்லை). இந்த மின் நட்புத் தளங்களில் இள வயதினர் வேறொரு மொழியை உருவாக்கி அதிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள், வெளி உலகைச் சேர்ந்தவர்களுக்கு அது அவ்வளவாக விளங்கவில்லை. இம்மொழிக்கு விளக்கவுரைகளும் வந்து கொண்டுதானிருந்தன. ஆனால் இளைஞர்களோ அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே விளக்கவுரைகளும் பயன்றறுப் போய், பெற்றோர்களுக்கு தங்கள் மக்களின் மொழி புரியாமலேயே இருந்து வந்தது.

ரதியும், மதனும் கிடைத்த இந்த இடைவெளியில் காதல் பரிமாறிக் கொண்டார்கள். அதற்கு முன் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டார்கள். ரதி தனக்கு யூனிக்ஸ் (UNIX) பிடிக்குமென்றாள். மதன் வாயைப் பிளந்தான். தனது கணினியிலுள்ள விண்டோஸை கடந்து அவன் வேறெதையும் அறிந்ததில்லை. தனக்கு கவிதை நன்றாக வருமென்றும், குறிப்பாக பெண்ணை வர்ணித்து கவிதை எழுதுவது தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்றும் கூறினான். தன்னை வர்ணித்து ஒரு கவிதை கூறும்படி கேட்டாள். அதற்கு அவளுக்குக் கிடைத்த பதில், அதுவரை அவள் அறிந்திருந்த shell scripts அனைத்தையும் விஞ்சியது. காதல் வயப்பட்டார்கள்.

விரல் நுனிக்காதல் விரைவில் சலித்தது. கவிதைப் பரிமாற்றங்கள் விரகத்தை அதிகரிக்கவே செய்தன. அவசர நிலை விரைவில் எட்டப்பட்டது. இனியும் தாமதிக்காமல் செயலில் இறங்க வேண்டுமென்பதை இருவருமே உணர்ந்தார்கள். மின் நட்பு தளத்தின் 'சிறப்புச் சேவையை' நாடுவதென முடிவு செய்தார்கள். தங்கள் சேமிப்பைச் செலவிட்டு, அதற்குப் பதிவும் செய்து கொண்டார்கள். விரைவிலேயே இருவருக்கும் வந்து சேர்ந்தன, அதற்குத் தேவையான உபகரணங்கள், பாடப் புத்தகங்களோ என்று எண்ண வைக்கும் வெளித் தோற்றத்தோடு. கண்காணிப்புகளிலிருந்துத் தப்ப வேண்டுமல்லவா?

இனி தங்கள் நோக்கத்துக்கு இடையூறாக இருக்கப் போவது சிவாவும் தேவியும்தான் என்பதை உணர்ந்தார்கள். ரதிக்கு சிவாவைப் பற்றி அதிகம் கவலையில்லை. அவனது கணினியை ஏற்கனவே ஊடுருவி, அறிய வேண்டிய தகவல்களை அறிந்து கொண்டுவிட்டாள். ஆகவே, அவனது கண்காணிப்பான்களை ஏமாற்றுவது கடினமல்ல. ஏற்கனவே செய்து வருவதுதான். பிரச்சனை தேவியிடமிருந்துதான். ரதியைப் போலவே (அல்லது அவளை விடப் பன்மடங்கு) கணினியில் மேதமை படைத்தவள் தேவி. அவர்களது வீட்டையே ஒரு உயர்கணினியின் பாதுகாப்பில் வைத்திருந்தாள். வெறுத்துப் போய் அரற்றினான் மதன், 'ரதி, என்னை தேவியின் பிடியிலிருந்து காப்பாற்று' என்று. அவளுக்கே அதன் சாத்தியம் குறித்து சற்று சந்தேகம் இருந்த போதும், "கவலைப்படாதே, உன்னை எல்லா கட்டுக்காவலிலிருந்தும் மீட்கிறேன்" என்று ஆறுதல் கூறினாள்.

ரதியின் அறிவுறுத்தலின் பேரில் தனது கணினியில் அவள் அனுப்பிய நிரல்களை நிறுவினான். அது வடிவமைத்தபடி, தேவியின் கணினியிலும் சென்று நிறுவிக் கொண்டது. தனது மகனின் கணினி அறிவு பற்றி தெரிந்திருந்ததாலும், அவனது கணினியிலிருந்து ஊடுருவல் ஏற்படும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்காததாலும் இத்தகைய தாக்குதலிலிருந்து தேவி தன் கணினியைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு ஊடுருவப்பட்ட இரு பெற்றோர்களின் கண்காணிப்பான்களுக்கும் போலியான ஒளிபரப்புகள் அனுப்பும் ஏற்பாடுகள் செய்யபட்டன. ஒரு பதினைந்து நிமிட நேரம் நீடிக்கும் வகையில் இந்த போலி ஒளிபரப்பு அமைக்கப்பட்டது. அதற்கு மேல் என்றால் ஊடுருவிய நிரலியின் அளவு அதிகமாகி, வேண்டாத சந்தேகங்களைக் கிளப்பி விடும் என்று அஞ்சினாள் ரதி. இந்த போலி ஒளிபரப்புகள், தங்கள் மக்கள் படித்துக் கொண்டோ அல்லது வேறு வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டோ இருப்பது போன்ற தோற்றத்தை அந்த இரு பெற்றோர்களுக்கும் அளிக்கக் கூடியதாய் இருந்தன.

ஒரு பதினைந்து நிமிட ஏமாற்று நாடகத்தை ஏற்பாடு செய்த நிறைவில் மற்றும் மகிழ்ச்சியில், மதனும் ரதியும் அந்த 'சிறப்புச் சேவையை' பெறுவதற்கு ஆயத்தமானார்கள். விரைவஞ்சலில் (பாடப்புத்தக உறையில்) வந்த உணர்விகளையும் (sensors) உணர்விப்பிகளையும் ( ;) ) அணிந்து கொண்டு, மெய் நிகர் (virtual reality) அறைக்குள் இருவரும் பிரவேசம் செய்தார்கள், கலவியில் (அல்லது அதைப் போன்ற ஒரு அனுபவத்தில்) ஈடுபடுவதற்கு.

பிகு:

1. இது போட்டிக்குன்னு சொன்னா பொதுமாத்துதான் விழும். அதனால, இது சும்மா ஜாலிக்குதான்.
2.இதைப் படிச்சிட்டு "Keanu Reeves" நடிச்ச படம் எதாவது ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. ஏன்னா அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை, அல்லது பாதி தூக்கத்தில் பார்த்தேன், இப்படி எதாவது ஒண்ணை வச்சிக்கோங்க.
3. நூட்ப ரீதியா நோண்டாதீங்க. படிச்சா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.
4. நுண்ணரசியல் பார்ட்டிங்களுக்கு - மேலே (#3) சொன்னதுதான் உங்களுக்கும்.

சனி, ஜூலை 12, 2008

அண்மைய கொந்தளிப்புகள்

தங்களை 'அறிவுப் பூசாரிகள்' என்று அறிவித்துக் கொண்ட சிலர் அண்மைய சில தினங்களாக ரொம்பவே கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். அவர்களின் தரப்பிலும் ஓரளவுக்கு நியாயமில்லாமலில்லை. ஒரு வசதியை வெகு நாட்களாக அனுபவித்துவிட்டு அது இல்லாமல் போகும் தருணத்தில் ஏமாற்றம் ஏற்படுவது இயற்கையே. 'காமம்' உள்ளிட்ட பல பிரச்சனைக்குரிய சொற்கள் கொண்ட தலைப்புகளுக்கும், முதல் சில வரிகளுக்கும் 'தடா' விதித்துள்ளது தமிழ்மணம். இந்தச் சொற்களால் நிச்சயமாக எந்தப் பிரச்சனையும் கிடையாதுதான். இவற்றைக் காண நேர்வதால் கன்னியாகுமரியும் காஷ்மீரும் இடம் மாறி விடப்போவதில்லைதான். ஆனால், வணிகக் கட்டாயங்கள் உள்ள எந்தவொரு அமைப்பும் வெகுசனப் பார்வைக்கு ஒத்திசைந்தே தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ("ஒரு பேச்சிலராக உங்கள் படுக்கையறையில் நீங்கள் ஒட்டக்கூடிய கவர்ச்சி போஸ்டர்களை உங்கள் அலுவலக வரவேற்பறையில் ஒட்ட உங்கள் நிறுவனம் அனுமதிக்குமா?" என்பது போன்ற உவமைக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளவும்).

இந்த episodeஇன் உச்சப்பட்ச காமெடி என்று நான் நினைப்பது, இந்த அறிவுப் பூசாரிகளின் சந்நதத்தைத்தான். செத்துப்போன மார்க்கீ த சாதே / நீட்ஷேயின் ஆவி உடலுக்குள் புகுந்து கொண்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் "moronகளே, கேளுங்கள்!" என்று Zarathushtraவைப் போல் அருள்வாக்கு கூறினார் ஒருவர். புரட்டிப் போடும் எழுத்துக்குச் சொந்தக்காரரோ மண்டியிட்டு தோழமையுடனும் (கோழைமையுடனும்) தமிழ்மணத்திற்கு மன்னிப்பு வாக்குமூலம் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவரோ, "அவங்க மட்டும் படுக்கையறையில பின்னியெடுக்கறாங்களே?" என்று தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். இன்னொருவர் "கலாச்சாரக் காவலுக்கு எதிராக கணினி ரவுடி ஆவேன்" என்று சூளுரைக்கிறார். இந்த சூளுரையின் விளைவாக நமக்கெல்லாம் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என்பது குறித்து எந்தத் தகவலுமில்லை. அதை நினைத்து இன்னமும் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்........ இல்லை.

இப்படி தணிக்கைகள் நிறைந்த சூழலில் கலக எழுத்துக்கு இடமே கிடையாதா? என்றால் இருக்கிறது. எந்த ஒரு நிறுவன அமைப்பையும் சாராது ஒரு எதிர் அமைப்பை உருவாக்குவதுதான் இதற்கான தீர்வு. நான் முன்பே இது குறித்து எழுதியிருக்கிறேன். தேடல் என்ற இணையத்தின் மிக அடிப்படையான நுட்பத்தைப் பயன்படுத்தி, எந்தவொரு திரட்டியையும் சாராமல் பதிவர்களால் இயங்க முடியும். முன்பு எல்லாப் பதிவர்களுக்கும் பொதுவான தமிழ்ப்பதிவுகள் என்ற குறிச்சொல்லைப் பரிந்துரைத்தேன். இப்போது குறிப்பிட்ட வகையான எழுத்துகளுக்கு அதற்கேற்ற பெயரை யாரேனும் தேர்வு செய்து கொள்ளலாம். (உ-ம். 'காமம்', அல்லது 'கலகம்', இத்யாதி) அப்படித் தேர்வு செய்து கொண்டு, இத்தகைய தணிக்கைக்கப்பாற்பட்ட எழுத்துகளை அந்த பொதுவான குறிச்சொல்லைக் கொண்டு குறித்து, அதை வாசகர்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தினால், நாங்கள் திரட்டிகளில் படிக்க முடியாத அவ்வெழுத்துகளை தேடுபொறிகளின் வாயிலாகப் படித்துக் கொள்வோம். கலக எழுத்து என்றில்லை - சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவர் சமையல் குறிப்புகளுக்கென்று ஒரு திரட்டியை உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தார். அவ்வளவு மெனக்கெடத் தேவையே இல்லை. எல்லா சமையல் பதிவர்களையும் 'சமையல் குறிப்பு' என்று குறிச்சொல் இடுமாறு கேட்டுக் கொண்டால், அதற்கான தேடல் பக்கம், செய்தியோடை, என்று எல்லாமே தயாராக உள்ளது.

தேடுபொறிகள் என்றால் technorati இருக்கிறது. அதைத் தவிர Icerocket, Google Blog search, reddit, delicious போன்ற சேவைகளும் இருக்கின்றன. நமது நண்பர் மாஹிர் உருவாக்கிய தமிழூற்றும் இருக்கிறது. பெரும்பாலும் இந்தத் தேடுபொறிகள் தாமாகவே crawl செய்து உங்கள் இடுகைகளை தங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றன. அல்லது இவை எல்லாமே ping வசதியளிக்கின்றன. அவற்றைக் கொண்டு இத்தளங்களில் ping செய்து, உடனடியாக உங்கள் பதிவு தேடல்களில் கிடைக்குமாறும் செய்யலாம்.

நம் அறிவு ஜீவிகளுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த புரட்சிகளைப் பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்துள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதோடு, இன்றைய நிகழ்காலத்தில் நடக்கும் புரட்சிகளைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வார்களானால் நன்றாக இருக்கும். மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி ஏந்தும் எல்லா அறிவு ஜீவிகளும் தங்கள் பதிவுகளில் தவறாது பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தி இருக்கும் முரண்பாட்டைக் குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன்.

கண்டிப்பாக கலகம் செய்யுங்கள், ஆனால் அதை ஒப்பாரி வைக்காமல் செய்யுங்கள். அல்லது ஒப்பாரியும் ஒரு கலக வடிவமா?

ஞாயிறு, ஜூன் 29, 2008

இந்தோ - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து

முதலில் சில பின்னணி விவரங்கள்:
  1. உலகெங்கிலும் மின்சக்தி / எரிபொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே போகுது. இந்தியாவும் இதுக்கு விதிவிலக்கு கிடையாது. ஒரு பில்லியனுக்கு அதிகமான ஜனத்தொகை, அதுவும் பெருகிக்கிட்டே போகும் நிலையில் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுப்பது சுலபமானது கிடையாது.
  2. எண்ணை / நிலக்கரி வளங்கள் குறைஞ்சிக்கிட்டு வருது, ஒரு நாள் இவை மொத்தமா தீர்ந்து போய்விடக்கூடிய நிலையும் ஏற்படலாம். அவற்றின் விலையேற்றம், மற்றும் இந்த எரிபொருட்களால் உலகளாவிய சூடேற்றம் / வானிலை மாற்றங்கள் போன்ற பின்விளைவுகளும் ஏற்படுது. அவற்றுக்கு மாற்று எரிபொருட்கள்ன்னா சூரிய ஒளி, காற்று, அலைகள் போன்ற புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இருக்கு. ஆனாலும் அவையால் எண்ணை / நிலக்கரி போன்ற பரவலை அடைய முடியாது. ஆங்காங்கே முடிந்த அளவு தேவைகளை நிறைவேற்றலாம். முற்றும் முழுவதுமா அவற்றை நம்பி இருக்க முடியாது. ஆக, இந்த எண்ணை / நிலக்கரிக்கு ஒரு நம்பகமான மாற்றுன்னா அது அணுசக்தியாதான் இருக்க முடியும்.
  3. அணுசக்திங்கும் போது, அது அணு ஆயுதத் தயாரிப்புக்கும் திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது. இதைக் காரணமா வச்சிக்கிட்டு ஏராளமான அரசியல் முன்னெடுப்புகள் நடந்துக்கிட்டு இருக்கு, போர்கள் உட்பட.
  4. அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது முற்றிலும் பாதுகாப்பானதான்னு கேட்டா "நிச்சயமா" அப்படீன்னு அடிச்சு சொல்றதுக்கு தயாரா இருக்காங்க அணுசக்தித் துறையைச் சார்ந்தவங்க. அவங்க சொல்வதன்படி, அணுமின் நிலையங்களிலிருந்து உருவாகும் கதிரியக்கக் கழிவுகளை அதல பாதாளத்தில் ஆயிரங்காலத்துக்கு புதைத்து வைக்கணும், எந்தக் குறுக்கீடும் இல்லாம. அப்படி பாதுகாத்தா அவை கதிரியக்கத்தன்மையை முற்றிலும் இழந்துவிடும், அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களும் அகன்று விடும். கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. இன்னும் பத்து வருஷத்துக்குள்ள என்னல்லாம் நடக்கும்ன்னே சொல்ல முடிய மாட்டேங்குது. ஆயிரமாண்டுகளுக்கு நாம புதைத்து வைக்கிற கழிவுகள் ஒரு பாதிப்புமில்லாம அப்படியே பத்திரமா இருக்கும்ன்னு எந்த அடிப்படையில் உறுதி செய்து கொள்வது?
  5. அணு ஆயுதங்கள் தேவையா? தேவையில்லைன்னுதான் தோணுது, பின்ன ஏன் இந்த நிலைமை? இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேக்ககூடாதுங்கறீங்களா? அப்போ இதுக்கு விடைதான் என்ன? இதுவா? அப்படின்னா நம்மால் உடன்படக்கூடிய தீர்வுதானா இது?
  6. அணுசக்தி நமக்கு நிச்சயம் தேவை என்பதில் உறுதியா இருக்கோமா, அதோட அணு ஆயுதம் நமக்குத் தேவையில்லை என்பதிலும் உறுதியா இருக்கோமா? அப்படீன்னா இந்தோ - அமெரிக்க அணு ஒப்பந்தம் ஒரு சரியான முடிவுதான். இருந்தாலும், இந்த ஒப்பந்தம் இல்லாமலேயே நம்மால் அணுசக்தித் தன்னிறைவை அடைந்திருக்க முடியுமா என்ற கேள்வியும் வருது. அது முடியுமானால் நமக்கு ஒவ்வாத இந்த 123 ஒப்பந்தத்தையே கையெழுத்திட்டிருக்க வேண்டாமே?
  7. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களா மேற்கூறிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்காம இருந்திருக்கோம், அது ஒருதலைபட்சமா இருக்கு என்ற அடிப்படையில். இப்போ திடீர்ன்னு ஏன் நம் கொள்கையில் மாற்றம்? இந்த மாற்றத்துக்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது? சரி இந்தக் கொள்கை மாற்றம் தேவையானதுன்னு வச்சிக்கிட்டாலும், அதை வெளிப்படையா அறிவிக்கலாமே? அறிவித்து, நேரடியாக இந்த NPT தடை ஒப்பந்தத்திலேயே கையெழுத்திடலாமே? ஏன் 123 என்ற மறைமுகமான பின் வாசல் அணுகுமுறை? முட்டாள்களை அடிமுட்டாள்கள் ஆக்கும் முயற்சியா இது?
பின்வரும் பகுதியில், மேலே கேட்டிருக்கிற கேள்விகளை விரிவா விவாதிக்கலாம்.

நம்மோட மின்சக்தி உற்பத்தித் திறனை மிக அதிக அளவுக்கு அதிகரிக்கணும்ங்கிறதுல எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. நம்மோட கிராமங்களுக்கெல்லாம் தடையற்ற மின்சக்தி கிடைக்கணும், அவையும் உலகப் பொருளாதாரச் சந்தையில் போட்டி போடும் அளவுக்கு அவற்றை முன்னேற்றணும். அதுக்கு அத்தியாவசியமானது போதிய அளவு கிடைக்கக்கூடிய மின்சாரம் என்பதில் சந்தேகமே கிடையாது. மேலும், எண்ணை நிலக்கரி வளம் குறைஞ்சிக்கிட்டும் அவற்றோட விலை உயர்ந்துக்கிட்டும் இருக்கும் நிலையில், மற்ற புதுப்பிக்கக்கூடிய வளங்களைய்ல்லாம் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும்ன்னு உறுதியா தெரியல. ஆகவே, அவற்றுக்கு சரியான மாற்றாக அணுசக்தி ஒன்றுதான் இருக்க முடியுமென்பதிலும் சந்தேகமில்லை. ஏறகனவே உலகின் மொத்த மின்சார உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு அணுசக்தியிலிருந்துதான் வருது. இந்தியாவில் இந்த விழுக்காடு 3%தான். இதை 2050ஆம் ஆண்டுக்குள்ள 25%ஆ அதிகரிக்கணும்ங்கிற இலக்கு பற்றி பேசப்படுது. அதுக்குத் தடையா இருக்கக்கூடிய ஒரே காரணம், நம்மிடம் போதிய அளவுக்கு யுரேனியம் என்ற தாதுப் பொருள் இல்லாததுதான்.

அணுமின் உற்பத்தியில் ஒரு விரும்பத்தகாத அம்சமும் இருக்கு. அதுதான் கதிரியக்கக் கழிவுகள். அவற்றை அதல பாதாளத்தில் தனிமைப்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் பாதுகாப்பா விட்டு வைத்தால்தான் அவை கதிரியக்கத்தன்மையை இழக்கும். இந்தக் கழிவுகள் எரிபொருட்களின் மிச்சம் மீதி மட்டுமில்லாம, அத்தகைய பொருட்களோட தொடர்பு ஏற்பட்ட சாதாரண மற்ற பொருள்களும் ஆகும். அதாவது ஒரு கையுறை அல்லது ஒரு வேற உபகரணங்கள் கொண்டு கதிரியக்கப் பொருட்களைக் கையாளும் பட்சத்தில் அந்த உபகரணங்களும் கதிரியக்கத்தன்மை அடையுது. ஆகவே, அவற்றையும் சேர்த்து ஆயிரங்காலத்துக்கு பாதுகாக்க வேண்டியதுதான். இல்லைன்னா அவற்றால் உலகத்து உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அமெரிக்க நெவாடா மாநிலத்தில் ஏற்படுத்தப்படவுள்ள இத்தகைய நிலவறை மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் பற்றி இந்தப் பக்கத்தில் காணலாம். Seismic activity எனப்படும் நிலநடுக்கங்கள் எங்கெங்கே ஏற்படும், அதிலிருந்து முற்றிலும் பாதுகாப்பா இந்தப் பொருட்களை வைத்துக் கொள்ள முடியுமா என்பது போன்ற சந்தேகங்களெல்லாம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதோட, செர்னோபில் போன்ற ஆபத்துகளையும் மறக்க முடியுமா?

இப்போது, அணு ஆயுதங்கள் பற்றிய சர்ச்சை குறித்து: அணு ஆயுதங்கள் தயரிக்கப்பட்டது வருத்தமானதே. ஒரு முறை பயன்படுத்தப்பட்டதுவும் அதை விட வருத்தமானதே. அவை இன்றைக்கும் கணிசமான அளவில் கிடங்குகளில் காத்திருப்பது மிக மிக வருத்தமானதே. அப்படியானால் நாற்பது வருடங்களாக செயல்பட்டு வந்த அணுஆயுதத் தடை ஒப்பந்தங்கள் (NPT, CTBT போன்றவை) சாதித்ததுதான் என்ன? இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் வசம் 15000 அணு ஆயுதங்கள் உள்ளனவாம். (இந்தியா உட்பட) கையெழுத்திடாத நாடுகள் வசம் சில நூறு அணு ஆயுதங்கள் உள்ளனவாம். இதில் யாரால் அதிக ஆபத்து? இப்போ இந்த NPT ஒப்பந்தத்தைப் பற்றி: உலக நாடுகளை அணுஆயுதத் திறன் கொண்ட நாடுகள் அப்படீன்னும் அணு ஆயுதமற்ற நாடுகள் அப்படீன்னும் பிரிக்குது இந்த ஒப்பந்தம். ஆணு ஆயுதமுள்ள நாடுகள்ன்னு அமெரிக்கா, ருஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கு. மற்ற எல்லா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதமற்ற நாடுகள்தான். இதில் ஆயுதமுள்ள நாடுகள் என்ன ஒப்புதல்களை அளிச்சிருக்குன்னா, தங்களுடைய அணு ஆயுதங்களையும் தொழில்நுட்ப ரகசியங்களையும் பிற நாடுகளுக்கு வழங்க மாட்டோம்ன்னுதான். தங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்ங்கிற உத்தரவாதத்தை இந்த நாடுகள் வழங்கவில்லை என்பதை கவனிக்கணும். இந்த நாடுகள் மற்ற நாடுகளின் மீது போடும் நிபந்தனையென்னன்னு பாத்தா, "இப்போது இருக்கும் அணு ஆயுதமற்ற நிலையிலயே அப்படியே தொடர்வோம்" என்ற வாக்குறுதியைத்தான் இந்த நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து எதிர்பார்கின்றன. ஆதாவது, "அணு ஆயுத சோதனைகள், இன்ன பிற முயற்சிகளைச் செய்ய மாட்டோம்" அப்படீன்னு உத்தரவாதம் குடுக்கணுமாம் நாமல்லாம். ஆனா இந்த நாடுகளோ, ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும் "எங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது"ன்னு அறிக்கை விடறாங்க. அதாவது, தடை அவங்களுக்கு கிடையாது, நமக்குத்தான்.

இந்த ஒருதலைபட்சமான தடை ஒப்பந்தத்தை சரியான காரணத்திற்காகவே நாம நாற்பது வருடங்களா எதிர்த்து வந்திருக்கோம். அதனால் நமக்கு ஏற்பட்ட தீண்டத் தகாத நிலையையும் பொறுத்துக்கிட்டே, அதில் உறுதியா இருந்தோம். எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதும் அந்த நிலைப்பாட்டில் நாம மாறவில்லை. இப்போது திடீர் மாற்றத்துக்கான காரணமென்ன? இந்த 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அணு ஆயுத சோதனைத் தடையை ஏற்றுக் கொண்டது போலத்தான். அதாவது, கிட்டதட்ட NPTயில் கையெழுத்திட்டது போலத்தான். அதை இன்று செய்ய வேண்டிய நிர்பந்தம் என்னன்னுதான் புரியவில்லை. அப்படியொரு நிர்பந்தம் இருந்தது உண்மைன்னா அதை மக்களிடம் சரியாக் கொண்டு போயிருக்கலாமே? வெளிப்படையாவே இன்னின்ன காரணங்களால் நமது அணு ஆயுதக் கொள்கையில் மாற்றமேற்பட்டிருக்குன்னு அறிவிச்சிருக்கலாமே? அப்படியில்லாம, கொள்கையில் எந்த மாற்றமுமில்லைன்னு பொய் சொல்லிகிட்டு திரியறது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான்.

இந்த இறக்குமதி யுரேனியம் இல்லாத நிலையில், நம்மிடம் அபரிமிதமாக உள்ள தோரியம் என்ற மற்றொரு அணுசக்தி எரிபொருள் குறித்தும் சோதனைகள் நடந்துக்கிட்டு இருந்தது, இன்னமும் நடந்துக்கிட்டு இருக்கு. (உலகின் 25% தோரியம் வளம் நம்மிடம்தான் உள்ளது) இது மட்டும் வெற்றியடைஞ்சதுன்னா நம்முடைய எரிபொருள் கொண்டே தேவைப்படும் அணுமின்சாரத்தை தயரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனா, இந்த 123 ஒப்பந்தத்தினால் யுரேனியம் எளிதில் கிடைக்கக்கூடிய நிலையில், இத்தகைய சோதனை முயற்சிகள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயமுள்ளது. நமது வெளியுறவுக் கொள்கையை சமரசம் செய்யாமலேயே, அணு மின்சாரத் தன்னிறைவு அடைவதற்கான ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளதுன்னுதான் சொல்ல முடியும். ஆட்சி கவிழ்ந்த பிறகாவது இது பற்றியெல்லாம் யோசிப்பாங்களான்னு பாக்கணும்.

(This post in English can be found here)

வியாழன், ஜூன் 19, 2008

வயதில் பெரியோர்களின் கவனத்திற்கு

உங்களுக்கே உங்களுக்காக ஒரு இணையத்தளம் உருவாக்கியிருக்கேன். ஆர்குட், facebook, myspace போன்ற சமூக உறவாடல் தளங்கள் (social networking sites) பற்றி கேள்விபட்டிருப்பீங்க. அவற்றில் பெரும்பாலும் இளைஞர்கள் / பால்ய வயதினரோட ஆதிக்கமே அதிகமா இருப்பதையும் உணர்ந்திருப்பீங்க. அவங்களோட கும்மி, கூத்து, வெட்டிப்பேச்சு, (சில) புரோஃபைல்களிலுள்ள அரை நிர்வாணப் புகைப்படங்கள், இப்படி பல காரணங்களால அந்தத் தளங்கள் உங்களோட ரசனைக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்றவாறு இல்லாம போயிருக்கலாம். அல்லது அத்தகைய தளங்களில் உறுப்பினராவதால் ஏற்படக்கூடிய பயன்கள் ( :) ) பற்றியும் உங்களுக்குத் தெளிவில்லாம இருந்திருக்கலாம்.

மேலும் இந்த web 2.0, சமூக ஊடகம் போன்ற வளர்ச்சிகளில் நம்ம பெரியவர்கள் எந்தளவுக்கு கலந்துக்கறாங்கன்னும் தெரியல. எனக்குத் தெரிஞ்சி பல பெரியவர்கள் வலைப்பதியறாங்க. ஆனா, அதையும் விட எவ்வளவு பேர் (உ-ம். இங்க தீவிரமா வலைப்பதியும் பல இளவட்டங்களின் பெற்றோர்கள் மற்றும் வயதான குடும்பத்தினர்) இந்த வலைச்சூழலை விட்டு ஒதுங்கியே இருக்காங்கன்னும் யோசிக்கணும். ஒரு வேளை இணையம் என்பதே, இளைஞர்கள் மட்டுமே புழங்கக்கூடிய, மற்றவர்களுக்குக் கலாச்சார அதிர்ச்சிகளை வழங்கும் ஒரு இடமா ஆயிட்டதான்னு யோசிக்கத் தோணுது. சரி, பில்டப்பை நிறுத்திட்டு விஷயத்துக்கு வர்றேன்.

வயதில் பெரியோர்களை முதன்மைப்படுத்தியும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் அவர்களுக்குரிய இடமளித்தும் இயங்கும் வகையில் ஒரு சமூக உறவாடல் தளத்தை உருவாக்கியிருக்கேன். அதை www.mello.in என்ற முகவரியில் காணலாம். (பெயர்க்காரணம் - 'mellow' என்ற, 'முதிர்ச்சி', 'மென்மை' போன்ற குணங்களைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லின் திரிபு). இத்தகைய தளங்களின் பொதுவான அம்சங்களான புரோஃபைல் ஏற்படுத்திக் கொள்ளும் வசதி, மற்ற பயனர்களுடன் நட்புறவுகள் (relationships) ஏற்படுத்தும் வசதி, வலைப்பதிவு வசதி, குழுக்கள்(groups) ஏற்படுத்தும் வசதி, குழுக்களுக்குள் உரையாடும் வசதி (discussion forums), மின்னஞ்சல் முகவரி இல்லாமலேயே தனிச்செய்திகள் (private messages) பரிமாறிக்கொள்ளும் வசதி, போன்றவை இதிலும் இருக்கு. ஆனா அவை மட்டுமில்லாம சில சிறப்பு அம்சங்களையும் புகுத்தியிருக்கேன். அந்த சிறப்பு அம்சங்களாவன:
  • உறவுகளில் மூன்று வகையான தேர்வுகள் - நண்பர் (Friend), நெருங்கிய நண்பர் (Buddy), மற்றும் நலம் விரும்பி (Well-wisher) ஆகியவை
  • மேற்கண்ட உறவு முறை அடிப்படையில் தான் வெளியிடும் ஒரு படைப்பு / தகவலுக்கு பார்வையாளர்களைத் தேர்வு செய்யும் வசதி. அதாவது, எல்லா தகவல் / ஆக்கங்களையும் பொதுப்பார்வைக்கு வைக்கும் நிர்பந்தம் இல்லாமல், சில தகவல்கள் மற்றும் ஆக்கங்களை 'நண்பர்களுக்கு மட்டும்' அல்லது 'நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்' அப்படீன்னு வரையறுக்கும் வசதி.
  • வேலை வாய்ப்புகள் பகுதி - ஓய்வு பெற்ற / பெறப்போகும் நிலையில் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்புச் செய்திகள், மற்றும் அத்தகைய விளம்பரங்களுக்கு (CV கோப்புகள் இத்யாதிகளோடு) விண்ணப்பிக்கும் வசதி
  • உடல்நலம் சார்ந்த பகுதி - உடல்நலப் பதிவுகள் (Wellness updates - குடும்பத்தினர் / நெடுநாளைய நண்பர்களின் - அதாவது மேற்கூறிய 'நலன் விரும்பி' அப்படீன்னு குறிக்கப்பட்டவர்களின் பார்வைக்கு மட்டும் கிடைக்கக்கூடியவை), மருத்துவ / உடல்நலன் சார்ந்த துறையினருக்கு சிறப்புப் பயனர் கணக்குகள் (இந்த சிறப்புக் கணக்கை வேண்டும் மருத்துவத் துறையினர் மற்றும் இதர உடல்நலன் சார்ந்த நிபுணர்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். தயவு செய்து வழக்கமான கணக்கை ஏற்படுத்திக் கொண்டு, என்னைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கணக்கை மேம்படுத்தித் தருகிறேன்)
  • வோட்டுரிமை / பயனர் மதிப்பெண்கள் - நல்ல இடுகைகள், பின்னூட்டங்கள், மற்றும் பயனர்களை அடையாளம் காட்டி முதன்மைப்படுத்தும் வசதி
இப்படி சில தனித்துவங்கள் இருக்குன்னு சொல்லலாம். இவற்றை நான் சொல்றதை விட நீங்களே அனுபவித்து உணர்வது மேலும் சிறப்பா இருக்கும். இப்போதைக்கு நானும் என்னோட தசாவதாரங்களும்தான் அங்க உறவாடிக்கிட்டு இருக்கோம். உங்க நண்பர்கள் குழாமோட, குடும்பத்திலுள்ள பெரியவர்களோட வந்து இந்தத் தளத்தைச் சிறப்பிக்குமாறு எல்லா பதிவுலக நண்பர்களையும் கேட்டுக்கறேன். எம்மொழியும் சம்மதம் என்பதால் நீங்க எந்த மொழியில் வேண்டுமானாலும் உறவாடலாம், மற்றும் வேற்று மொழியினர் / வேற்று நாட்டவர்கள் உங்கள் நண்பர்களா இருந்தா, அவர்களையும் அன்போட அழைக்கலாம். இந்தப் பதிவை விட விரிவான அறிமுகம்(ஆங்கிலத்தில்) இங்க இருக்கு. அதற்கு மேலயும் சந்தேகங்களிருந்தா தயங்காமல் கேளுங்க.

தொழில்நுட்பக் குறிப்புகள் - இதை Drupal CMS கொண்டு உருவாக்கினேன். PHP, MySQL, Javascript, Jquery ஆகிய தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவைதான் இந்தத் தளம்.

வெள்ளி, ஜூன் 13, 2008

ஒரு phishing எச்சரிக்கை

இன்னைக்கி எனக்கு ஒரு மின்மடல் வந்தது (அனுப்புனர் முகவரியில் செந்தில்ங்கிற பேர் இருந்தது). எதோ தளத்திலிருந்து எந்த கைப்பேசிக்கும் sms அனுப்பலாம்ன்னு. போய் பாத்தா Google தளம் மாதிரியே வடிவமைக்கப்பட்டிருக்கு. அப்பறம் உங்க google கணக்கையும் கடவுச்சொல்லையும் கேட்குது :) 'w3schools.in'ங்கிற domain name, whois பண்ணியதில் யாரோ சிவக்குமார்ன்னு ஒரு புண்ணியவான் பேர்ல register ஆகியிருக்கு. அவருக்கு இதுல சம்மந்தம் இருக்கான்னு தெரியல.

இதுதான் தள முகவரி. தப்பித் தவறி கூட உங்க கடவுச்சொல்லையெல்லாம் இந்த மாதிரி தளங்களில் குடுத்துடாதீங்க.

தமிழனை தமிழனே ஏமாற்றும் அவலம் என்னைக்குத்தான் நிக்குமோ?

திங்கள், ஜூன் 09, 2008

பணி அடிமைகள்

தொலைக்காட்சியில ஒரு விவாத நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருந்தது. Workoholic எனப்படும் 'வேலையே கதி'ன்னு இருப்பவர்கள் தங்களை நியாயப்படுத்திக்கிட்டும், எதிர் தரப்பினர் (பெரும்பாலும் முதல் தரப்பினரின் குடும்பத்தினர்) இவங்கள குறை சொல்லிக்கிட்டும், விவாதம் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒரு கணவன் - மனைவி தம்பதி. கணவன் 'வேலையே கதி' என்று இருப்பவர்கள் தரப்பிலும், அவரது மனைவி எதிர் தரப்பிலும் கலந்துக்கிட்டாங்க. மனைவி கணவனைப் பற்றி முறையீடு செஞ்சிக்கிட்டு இருந்தாங்க, அவங்களுக்கு மணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகியிருக்குன்னும், கணவர் வேலையிலிருந்து திரும்பறதுக்கு தினமும் இரவு இரண்டு மணி ஆயிடுதுன்னும் சொன்னாங்க மனைவி. கணவர் தன் பங்குக்கு தன்னுடைய தியாகங்கள் பற்றி பட்டியலிட்டுக்கிட்டு இருந்தார் - மணமாவதுக்கு முன்னாடி வார இறுதிகளில் கூட அலுவலகத்துக்கு வேலை செய்யப் போயிக்கிட்டு இருந்ததாவும், கல்யாணத்துக்குப் பிறகு மனைவிக்காக அதைத் தியாகம் செஞ்சிட்டு வீட்டிலேயே இருக்கிறதாவும் :) தன்னுடையது எப்போதும் சிந்திச்சிக்கிட்டே இருக்க வேண்டிய வேலைன்னும், அதனால வேலைக்கு கால நேரமெல்லாம் பாக்க முடியாதுன்னும் சொன்னார். அதிலிருந்து அவர் மென்பொருள் துறையினரா இருக்கணும்ன்னு ஊகிச்சேன் (அந்த விவரம் சொல்லப்பட்ட போது நான் சரியாக கவனிக்கல்ல, தவறா இருந்தா தெரிவியுங்க). நானும் அந்தத் துறையைச் சேர்ந்தவன்ங்கிற முறையில் அவரோட தகவல்களை ஒத்துக்கறேன். சில சமயம் சிக்கல்கள் விடுபடுவதற்கு நினைத்ததை விட அதிக நேரமாகி விடலாம். அந்த சமயங்களில் கொஞ்சம் கூடுதல் நேரம் செலவழிச்சி அவற்றின் தீர்வுகளை அடைய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம். ஆகவே, அவர் சொன்னதில் பெரிய பிரச்சனையில்லை, மனைவிக்காக சனிக்கிழமைகளைத் 'தியாகம்' செய்கிறேன்னு கூறியதை தவிர்த்து.

ஆனா அதுக்கப்பறம் நடுவர் அவரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் - நீங்க எதுக்கு முன்னுரிமை குடுப்பீங்க மனைவிக்கா, வேலைக்கான்னு. நண்பர் ஒரு அரை நிமிடம்தான் யோசித்தார் (அல்லது அவ்வளவு நேரம் கூட எடுத்துக் கொள்ளவில்லை). வேலைக்குத்தான் முன்னுரிமைன்னு பதில் சொன்னார். ஒரு பெரிய பாறாங்கல் எதாவது இருந்தா அதை அந்தாள் தலையில் தூக்கிப் போடணும் போல இருந்தது, தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக்கிட்டு இருந்த எனக்கே. நேரில் கேட்டுக்கிட்டிருந்த அவரோட மனைவிக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு விவரிக்கத் தேவையில்லை. அதெப்பபடி இப்படி ஒரு பதிலை முகத்தில் அறைஞ்ச மாதிரி சொல்ல முடியுது? கூடவே இருக்கப்போற மனைவியின் உணர்வுகளைப் பற்றிக்கூட சிந்திக்கத் தெரியாத / விரும்பாத ஒருத்தன், வேற சிந்தனைகள் செஞ்சி வேலை செய்யறதுனால யாருக்கு என்ன லாபம்? இதே மனநிலையைத்தானே தன்னுடைய சகப் பணியாளர்கள், தன் கீழ் பணி செய்பவர்கள் ஆகியோரிடமும் வெளிப்படுத்துவான்? (விட்டால் மேலதிகாரி / வாடிக்கையாளர்களிடமும்). என்னதான் கம்பியூட்டரோட சிந்திச்சி கொலாவினாலும், இறுதியில் உங்கள் வெளியீடுகளெல்லாம் உணர்வுகளைக் கொண்ட மனிதர்களின் பயன்பாட்டுக்காகத்தானே? உணர்வுகளைப் பற்றிய புரிதல் / மரியாதை இல்லாம தன்னை workoholicன்னு சொல்லிக்கறவங்க, தங்கள் பதவிக்கே தகுதியற்றவங்கன்னு சொல்லத் தோணுது.

மேலும் பல அம்சங்களை கவனிச்சேன். இந்த workoholics என்பவர்களுக்கு தங்களைப் பற்றிய அதீத மதிப்பீடுகள் இருப்பதையும் கவனிக்க முடிந்தது. இந்த நாடே தங்களால்தான் முன்னேறுதுன்னு கூசாம சில பேர் சொன்னாங்க :) தங்களைப் போலில்லாதவங்கல்லாம் சோம்பேறிகள் என்ற எண்ணமும் அவர்களிடமிருப்பதைக் காண முடிந்தது. எதிர் தரப்பில் பேசிய ஒரு தொழிலதிபர் ஒரு அருமையான கருத்தை சொன்னார். வருங்காலம் என்பது கணிக்க முடியாத ஒன்று (future is a mystery), எனவே வருங்காலத்தில் கிடைக்கப்போகிற பலன்களுக்காக இன்றைய வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்வது மூடத்தனம்ன்னு. உடனே அதற்கு எதிர்வினையாக ஒரே கொந்தளிப்பு, 'வேலைப் பிரியர்கள்' என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து. நாங்கல்லாம் ரொம்ப productive, நாங்க இப்படி இருக்கிறதுனாலதான் நீங்கல்லாம் வாழ்க்கையை நல்லா அனுபவிக்க முடியுதுன்னு. எனக்கு ஒரு சந்தேகம் - productiveஆ இருக்கிறவங்களுக்கு ஏன் தங்கள் வேலையைச் செய்ய அதிக நேரம் தேவைப்படுது? எனக்குத் தெரிந்த வரை, குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்து முடிப்பதுதான் productivity. அதிக நேரத்தில் அதே வேலையையோ, அதற்கும் குறைவாகவோ செய்து முடிப்பதை inefficiency / செயல்திறன் குறைவுன்னுதான் சொல்ல முடியும்.

வேலைப்பரியராக ஒருவர் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்ன்னு யோசிக்கணும். ஒரு மோசமான வேலைச் சூழலிலிருந்து ஒரு சுமாரான அல்லது நல்ல வேலைச் சூழலுக்கு மாறும்போது ஆகான்னு விசுவாசம் பொத்துக்கிட்டு வரும் :) அந்த விசுவாசத்தில் அதிக உழைப்பை வழங்குவோமா, மேலதிகாரியை குஷிப்படுத்துவோமான்னு கிடந்து அலைபாயும் மனசு. இது ஒரு காரணமா இருக்கலாம். மேலும் இதையே சாதகமாப் பயன்படுத்தி, தட்டிக் குடுத்து வேலை (தன்னோட வேலையையும் சேர்த்து) வாங்கற மேலதிகாரிகளும் காரணமா இருக்கலாம். Dangling carrots / ஆசைக் காட்டி மோசம் செய்யறதுன்னுல்லாம் இதுக்குப் பேர் உண்டு. அல்லது வேலைச் சூழலே ஒருவருக்கு வீட்டுச் சூழலை விட இதமானதாக இருக்கலாம். நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா அது என்னாச்சு, இது என்னாச்சுன்னு கேள்விகள் வரும். குழந்தைகள், வீட்டு வேலைகள்ன்னு பொறுப்புகள் அதிகமாகும். அலுவலகத்திலேயே இருந்துட்டா இதையெல்லாம் தட்டிக் கழிச்சிடலாம் :)

இது போன்ற போக்கை நிறுவனங்களும் ஆத,ரிப்பதால், ஒரு போட்டி மிகுந்த சூழல் ஏற்படுது, எல்லாரும் அதிக நேரம் வேலை செய்யறாங்க, அதனால நானும் அதிக நேரம் வேலை செஞ்சாகணும்ன்னு. நாளடைவில் பணியாளர்கள் மீதான நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாயிடுது, குடுக்கற ஊதியத்தில் அதிக அதிகரிப்பு இல்லாமலேயே. இப்படி தன்னைச் சுரண்டும் திட்டத்திற்கு தானே துணை போவதில்தான் போய் முடியுது. அது அவங்களை மட்டும் பாதிச்சுதுன்னா கூட வருத்தப்பட்டுட்டு அடுத்ததப் பாக்கப் போயிடலாம். ஆனா அவங்களை மட்டுமில்லாம அவங்க குடும்பங்களையும் பாதிக்கும்போதுதான் இது பற்றி தீவிரமா சிந்திக்கத் தோணுது, இதுக்கு என்ன தீர்வுன்னு. அரசின் தலையீடு பல விஷயங்களில் தேவைப் படுவதைத்தான் இந்த உதாரணங்களெல்லாம் நமக்கு உணர்த்துது.

புதன், மே 14, 2008

உலகமயமாக்கம்

சனி, பிப்ரவரி 23, 2008

எரிதப் பிரச்சனைக்குத் தீர்வு

ஒரு ஆயிரம் சொச்சம் பேர் இந்த மின்னஞ்சல் பட்டியல்ல மாட்டிக்கிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கோம் :) போன பதிவுல இந்தப் பிரச்சனைக்கு ஒரு தற்காலிகத் தீர்வு சொல்லியிருந்தேன். இப்போ இதுக்கு நிரந்தரமா ஒரு தீர்வு இருக்கும் போலயிருக்கு. நீங்க gmailஐப் பயன்படுத்துபவரா இருந்தா, நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவுதான்:
  • அந்தப் பட்டியல்ல இருந்து randomஆ ஒரு மின்னஞ்சலை தேர்ந்தெடுங்க. உங்களுக்கு முன்ன பின்ன தெரியாதவங்களா இருந்தா இன்னமும் நல்லது. (அந்தப் பட்டியல்ல இருக்கிற பெரும்பாலோர் அப்படிப்பட்டவங்கதான்)
  • இப்பொ Create a filter படிவத்தை திறங்க. அதில் "To" என்றிருக்கும் பெட்டியில் நீங்க தேர்தெடுத்த மின்னஞ்சலை ஒட்டுங்க. அதுக்கப்பறம் "Test search"ஐ அழுத்தினீங்கன்னா, இதுவரைக்கும் வந்த வேண்டாத மெயில் எல்லாம் அந்தத் தேடலில் கிடைக்கும். ஆக, வடிகட்டி வேல செய்யுதுன்னு அர்த்தம்.
  • இப்பொ next step பொத்தானை அழுத்துங்க. அதில் வரும் தேர்வுப் பட்டியலில், skip the inbox, delete it ஆகிய ரெண்டையும் தேர்வு செஞ்சி, create the filter பொத்தானை அழுத்துங்க. அவ்வளவுதான்.
இதுக்குப் பிறகு, true known, untrue unknown இப்படி யாரு அந்தப் பட்டியலைப் பயன்படுத்தி எரிதம் அனுப்பினாலும், மற்றும் அதுக்கு யாரு reply to all அனுப்பினாலும், அதெல்லாம் போயி சேருமிடம் குப்பைப் பெட்டிதான்.

புதன், பிப்ரவரி 20, 2008

எரிதத் தடை

சமீப காலமா பதிவுலகில் பல வகையான எரிதங்கள் சுத்திக்கிட்டிருக்கு. அதை எப்படி எதிர்கொள்றதுன்னு சில உதவிக் குறிப்புகள்:

இந்த மடல்களை Report spam செய்யறதுனால எந்த பிரயோசனமும் இருக்காது. எவ்வளவு முகவரிகளைத்தான் தடை செஞ்சிக்கிட்டே இருக்க முடியும்? (அந்தப் பட்டியல்ல ஆயிரக்கணக்கான முகவரிகள் இருக்கும் போலயிருக்கு). மேலும், தானாகவே அஞ்சல் செய்து கொள்ளும் virus mail போன்றவற்றை report செய்தால், நண்பர்களின் முகவரிகள் (அவர்கள் எந்தத் தவறும் செய்யாத போது) தடை செய்யப்படும் ஆபத்தும் இருக்கு.

அதை விடப் பிரயோசனம் இல்லாத வேலை, 'reply to all' போட்டு தன்னை மட்டும் பட்டியல்ல இருந்து நீக்கி விடும்படி வேண்டுகோள் வைக்கறதுதான். அதைப் பின்பற்றி ஒரு பத்து பேர் அதே வேண்டுகோளை வைப்பாங்க (தன் பங்குக்கு யாரோட முகவரியையும் நீக்காம. அவங்களாலையே செயல்படுத்த முடியாத ஒண்ணை எப்படி மத்தவங்க கிட்ட இருந்து எதிர்பாக்க முடியுதோ தெரியல).

எனக்குத் தெரிஞ்சி இதை வெற்றிகரமா வீழ்த்தக்கூடிய ஒரு உத்தி - mail filters. சில விதிகளைக் குறிப்பிட்டு, இத்தகைய மடல்கள் உங்க அஞ்சல் பெட்டிக்கே வராம அழிக்கப்பட்டு விடும்படி உங்கள் மின்னஞ்சல் கணக்கை setup செய்யலாம். உ-ம், subject lineஐ குறிப்பிட்டு, இந்த subjectடோட வர்ற எல்லா மடல்களையும் அழிக்க சொல்லலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் கிட்டயிருந்து வர்ற மடல்களை தடுக்கலாம். அல்லது, மடலில் குறிப்பிட்ட சொற்கள் இடம்பெற்றிருந்தா அவற்றை filter செய்ய சொல்லலாம் (e.g. 'pls remove me', 'வாழ்த்துக்கள்', etc).

வருத்தமான விஷயம் என்னன்னா, இந்த மாதிரி filter செய்யறதுக்கான options ரொம்ப குறைச்சலா இருக்கு. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான பெறுனர்களுக்கு அனுப்பப்படும் மடல்கள் (i.e. recipient-count > n) எல்லாத்தையும் தடுக்கும்படி ஒரு filtering option இருந்தா இது எல்லாத்தையும் ஒழிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம். கூகிள், யாஹூ நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த வேண்டுகோளை உங்க பெரிய தலைங்க கிட்ட போட்டு வையுங்க மாஹா ஜனங்களே!

செவ்வாய், ஜனவரி 29, 2008

அட்சய பாத்திரம் ஏற்படுத்திய எண்ணங்கள்

'அட்சய பாத்ரா' என்ற தொண்டு நிறுவனத்தை அறிமுகம் செய்து இம்சை என்ற பதிவர் ஒரு இடுகையை வெளியிட்டிருக்கிறார், கண்டிப்பாகப் படியுங்கள். அவர்களின் தளத்தைப் பார்வையிட்டுக் கொண்டே வந்ததில் எனது பிரமிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களது சேவையால் பள்ளிகளில் drop-out rate எனப்படும் 'மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்று விடும் விகிதம்' குறைந்துள்ளது என்று கணக்கெடுத்து வெளியிட்டுள்ளார்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், எந்தவொரு சிறிய நல்லிணக்க முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே. அதனால் எவ்வளவு சிறியவொரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தாலும் அதுவும் பலரது வாழ்வில் ஒளியேற்றக்கூடிய சாத்தியமுள்ளது என்ற வகையில் இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவு.

ஆனாலும், ஒரு சில உறுத்தல்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. முதலில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய்ந்தேன். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தினர் என்ற தகவல் கிடைத்தது. பாராட்டப்பட வேண்டியதுதான். என்றாலும் நிறுவனங்கள் social responsibility என்ற பெயரில் செய்யும் கேலிக்கூத்துகளை சற்று எச்சரிக்கை உணர்வுடனேயே அணுகி வந்திருக்கிறேன். நர்மதைத் திட்ட எதிர்ப்புக் குழு, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் போராடும் குழுக்கள், போன்ற மக்கள் இயக்கங்கள் அளிக்கும் நம்பகத்தன்மையை இந்த நிறுவன ஆதரவு தொண்டுக் குழுக்கள் ஏனோ அளிப்பதில்லை. (ஏன் என்பது பிறகு)

தளத்தின் மற்ற பக்கங்களையும் புரட்டிக் கொண்டு வந்த போது ஒரு செய்தி அடிக்கடி repeat ஆவது போல் இருந்தது. அதாவது, அவர்கள் குழந்தைகளுக்காகத் தயாரிக்கும் உணவு யாருடைய கையும் படாமல் சுத்தமாகத் தயாரிக்கப்படுகிறது என்ற செய்தி. சத்துணவுக் கூடங்களில் பல்லி விழுந்த உணவெல்லாம் பரிமாறப்படலாம் என்ற நிலையோடு ஒப்பிடுகையில் இது ஆறுதலான ஒரு நிலைதான். ஆனாலும் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் 'யார் கையும் படாமல் தயாரிக்கப் பட்டது' என்ற செய்தி அவர்களது மனநிலையை வெளிப்படுத்துகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. யாருடைய வீட்டிலும் யாரும் கையுரைகளை அணிந்து கொண்டு உணவு தயாரிப்பதில்லை. கைப்பட தயாரித்த உணவைத்தான் நாம் அனைவரும் விரும்பி உண்டு கொண்டிருக்கிறோம்.அவர்களது சமையலறைகளில் பாதுகாப்பு கருதி எடுக்கும் கையுரை அணிதல் போன்ற நடவடிக்கைகளைக் குறை கூறவில்லை. ஆனால் அதை அடிக்கொரு முறை கூறிக்கொள்ளும் நோக்கம் என்ன என்பதுதான் யோசிக்க வைக்கிறது. "எங்கள் ஊழியர்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்கள் கை பட்டு அசுத்தமாகாத உணவுதான் எங்களால் விநியோகிக்கப் படுகிறது" என்ற மேட்டுக்குடிச் சிந்தனைதான் இப்படி பக்கத்திற்குப் பக்கம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதோ என்றொரு ஐயம். வலைத்தளத்தைப் படித்து ஆதரவளிக்க முன்வரக்கூடிய இதர மேட்டுக்குடியினருக்கும் இது தேவையான செய்தியாக இருக்கக் கூடும் என்பதே இங்கிருக்கும் அவல நிலை.

அதே போல் repeat ஆகும் இன்னொரு செய்தி - இத்திட்டத்தால் பலனடைந்த குழந்தைகளின் குடும்பச் சூழல் பற்றிய தகவல்களில் "தந்தை குடிகாரன்" என்ற செய்தி (விமர்சனத் தொனியில்). "குழந்தைக்கு உணவளிக்க வக்கில்லாமல் தண்ணியடிக்கும் தந்தை" என்ற மேட்டுக்குடிப் பார்வைதான் இது. எனது வீட்டுக்கெதிரே ஒரு வீட்டை உடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டின் கூறைப்பகுதிதான் (concrete roof) வலிமையானது என்பது தெரிந்திருக்கலாம். அதை ஒரு ஐந்து பேர் ஒரு பெரிய சுத்தியல் போன்ற கருவியைக் கொண்டு தகர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வேலையைச் செய்யகூடிய மக்களை எந்த வேலையும் செய்ய வைக்கலாம் என்பதே எனக்கு ஏற்பட்ட உணர்வு (ஆங்கிலத்தில் தெளிவாகக் கூறுகிறேன் - if somebody could be motivated to do this work, they can be motivated to do anything else) . முகமது யூனுஸ் போன்றவர்களோடு நான் வேறுபடுவது இங்குதான். தன்னை முன்னேற்றிக் கொள்ளும் உத்வேகமில்லாதவர்கள் என்று ஆண்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டவர்கள் அவர்களே. Sorry for digressing - நான் கூற வருவது, வாழ்க்கை கடினமானது. அந்த சுத்தியல் கூலியாட்கள் இரவு தூங்குவதற்காக செய்ய வேண்டியதைச் செய்தால்தான் அவர்களால் தூங்க முடியும் என்பது நம்மைப் போன்ற மேட்டுக்குடிகளுக்குப் புரியவே புரியாது.

இப்போது million dollar macro-economic கேள்வி. இலவச மதிய உணவுதான் தீர்வா என்ற கேள்வி. தமிழகத்தில் புரட்சித் தலைவர் கொண்டு வந்த திட்டம். அரசின் குற்ற உணர்வால் உந்தப்பட்டு எடுத்த முடிவு. மனிதர்களின் வாழ்வு முறைகளை, வாழ்வாதாரங்களை திரும்பிப் பெற முடியாத வண்ணம் (irreversible) மாற்றியமைத்து அவர்களை வீடின்றி, நிலமின்றி, அகதிகளாக அலைய விட்ட அரசு, அவர்களது ஏழ்மைக்குக் காரணமான அரசு, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களுக்கு சோத்துப் பிச்சை போட்டது. தொடர்ந்து வந்த தனியார்மயமாக்கம், மேலும் லட்சக்கணக்கானோரை நிலமற்றவர்களாக்கி, அவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளியது. அந்த தனியார்கள் இப்போது social responsibility என்று பகல் வேஷம் போட்டுக் கொண்டு, குற்ற உணர்வால் உந்தப்பட்டு சோத்துப் பிச்சை போடுகிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது.

காலை மிதித்து சாரி சொல்லாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட காலை மிதித்து சாரி சொல்பவர்கள் உயர்ந்தவர்களே. இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவர்கள், யார் காலையும் மிதிக்காமல் கவனமாக செல்பவர்கள்ன்னு சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கறேன்.

புதன், ஜனவரி 23, 2008

எப்படி வேண்ணா இருக்கலாம்

அண்மையில் சில பதிவுலக மூத்தவர்கள் வெளியிட்டிருக்கிற சில கருத்துகளால் வாயடைச்சி போயிருக்கேன். அந்த வியப்பை பதிவு செஞ்சிடலாமுன்னு.........

ஓஷோவையும் பெரியாரையும் ஒப்பிட்டு சுகுணா திவாகர் ஒரு இடுகை வெளியிட்டிருக்காரு. அதுல மு.சுந்தரமூர்த்தி பின்வரும் கருத்து தெரிவிச்சிருக்காரு:

//இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர்.//

It should be quite opposit. Sexual pleasure is an incentive to engage in reproductive activity. All animals, except humans, engage in sexual activities for reproductive purpose and do not care for sexual pleasure at other times. Only humans turned this natural activity upside down--do it for pleasure even when not needed much like other human habits such eating more than we need to. And calls like this to have sex but shun the responsibility of bearing children sounds revolutionary but it is irrational. It tries to take women's liberation too far.
கொஞ்சம் சிரமம் பாக்காம அவரது கருத்தை மொழி பெயர்த்தோம்ன்னா:
உண்மையில் அதற்கு நேர்மாறாக இருக்க வேண்டும். இனவிருத்தியை ஊக்குவிப்பதற்கே உடலுறவு இன்பமயமானதாக உள்ளது. மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் உடலுறவை இனவிருத்திக்காகவே மேற்கொள்கின்றன. அதிலுள்ள இன்பத்தை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. ஆனால் மனிதர்கள் மட்டும், (இனவிருத்தி என்கிற) தேவை இல்லாத போதும் இன்பத்திற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள், அவர்களது (தேவைக்கதிகமாக உண்பது போன்ற) மற்ற தேவையற்ற பழக்கங்களைப் போலவே. உடலுறவை ஆதரிக்கும் ஆனால் மகப்பேற்றை எதிர்க்கும் இத்தகைய அறைகூவல்கள் புரட்சிகரமானவையாகத் தோன்றலாம், ஆனால் அவை பகுத்தறிவு அடிப்படையில் எழுபவை அல்ல. இவை பெண் விடுதலையை வரம்புக்கு மீறி எடுத்துச் செல்பவை.
இந்தக் கருத்திலுள்ள அனுமானங்கள், போதிக்கப்படும் நெறிகள், ஒரு தனிநபர் முடிவுக்குள் மூக்கை நுழைக்கும் அத்துமீறல்............... இப்படி எதில் ஆரம்பிச்சி சொல்றது? உடலுறவு இன்பமா இருக்கு, சாப்பாடு இன்பமா இருக்கு, இசை இன்பமா இருக்கு, ஒரு மலரின் மணம் இன்பமா இருக்கு......... இவை அனைத்துக்கும் எதாவது காரண காரியம் இருந்துதான் இப்படி இன்பமா இருக்கா? அந்த காரணத்துக்கு கர்த்தா யாரு? 'இயற்கை அன்னை'ன்னு எதாவது கற்பிதமா? இன விருத்தி ஏற்படாம உடலுறவு கொண்டா யாருடைய உணர்வுகள் / நம்பிக்கைகள் புண்படுத்தப்படுது? நான் கூடலைக் கொண்டாடுவதால் உங்கள் தட்டிலிருக்கும் உணவு பறிக்கப்படுதா? மேலே கூறியிருக்கிற (போதும் நிறுத்திக்கோன்னு சொல்ற) கருத்துக்கும் மத அடிப்படைவாதத்திற்கும் என்ன வேறுபாடு? பெண் விடுதலைக்குன்னு எதாவது வரம்பு இருக்கா? யாருடைய விடுதலைக்கும் எதுவும் வரம்பு இருக்கா? அந்த வரம்பை விதிக்கும் யோக்கியவான் யாரு? அவருக்கு என்ன தகுதி?

இதைப்போலவே, நான் வாயடைச்சி போன இன்னொரு கருத்து, காசி 'ப்ளாக் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி' என்ற இடுகையில் பின்னூட்டத்தில் தெரிவிச்ச பின்வரும் கருத்து:
ஆங்கில வலைப்பதிவுகளில் புனைவுகள் எழுதுபவர் பத்தில் ஒன்றுகூட இல்லை, ஆனால் தமிழனை கற்பனையிலேயே மூழ்கடிக்க போட்டிபோட்டுக்கொண்டு பத்திரிகைகளோடு இப்போது வலைப்பதிவுகளும் வரிந்துகட்டுகின்றன. இது சரியான அறிகுறியல்ல (இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை). காத்திரமான வாழ்வியல் சிந்தனைகள், அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்கள் அதிகம் எழுதப்படாததும், எழுதப்படுபவை கவனம் பெறாததும் இதனாலேயே. என்று எழுத்தாளனாகும் ஆசையை விட்டொழிக்கிறாரோ அன்றே ஒரு வலைப்பதிவர் தன் முழு வீச்சையும் வெளிப்படுத்த முடியும். மாறாக பத்தியாளனாக (columnist) ஆசை வையுங்கள் என வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
போதனைகள்........ போதனைகள்................. :) ஆங்கில வலைப்பதிவுகள் ஏதோ உயர்வான இடத்திலிருப்பவை என்பது போன்ற அனுமானங்கள். எது நல்ல 'அறிகுறி', எது அல்ல என்று அறிந்து தெளிந்த தொனி. என்ன மாதிரியான வெளியீடுகள் வெளி வரலாம்கிறத தீர்மானிக்கும் அதிகாரம் அதைப் படைப்பவரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. கோலம், சமையல் குறிப்பிலிருந்து, கடித் துணுக்குகள் வரை எதை வேண்டுமானாலும் ஒருவர் தனது பதிவில் வெளியிடலாம். போணியாகும் சரக்கு எதுவானாலும் அதைக் கடைப்பரப்பலாம். கதை கவிதைகளுக்கு ஒரு பெரிய வாசகர் வட்டம் இருக்கு நான் பார்த்த வரை. (நானும் அந்த வட்டத்துக்குள்ள இருக்கேன்.) அது நல்ல அறிகுறியா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாம அத்தகைய வெளியீடுகள் மேலும் மேலும் தொடரணும்.

இறுதியா சொல்லிக்க விரும்பறது............ எப்படி வேணா இருங்க.

ஞாயிறு, ஜனவரி 20, 2008

ஜல்லி கட்டு கதை

(குறிப்பு - தலைப்பில் வல்லெழுத்து மிகுதல் வேண்டுமென்றே தவற விடப்பட்டுள்ளது. காணாமல் போன 'க்' கை வேண்டிய இடத்தில் நிரப்பிக் கொள்ளவும்)

ஜல்லிக்கட்டுங்கற 'வீர' விளையாட்டு சங்க காலங்களிலிருந்தே நடைபெற்று வருதுன்னு ஒரு குமிழை ஊதி ஊதி பெருசாக்கிக்கிட்டே போகிற இன்றைய நிலையில், அந்தக் குமிழை ஒரு சின்னக் குத்தூசி கொண்டு லேசா குத்தியிருக்காங்க இந்தப் பக்கத்தில்.

ஒரு மிரண்டு ஒடும் வாயில்லா ஜீவனை கூட்டத்தோடு கூட்டமா விரட்டிப் பிடித்துத்தான் நம்ம தொன்மையான தமிழ் மரபைக் கட்டிக்காக்கணும்ங்கிற பரிதாபமான நிலையில் நம்ம தமிழ் மரபும் இல்லைன்னுதான் நினைக்கறேன். புலிகளைக் கொல்வது வீரமா ஒரு காலத்தில் பார்க்கப்பட்டு வந்தது. இப்பொ project tigerன்னு வந்து அவை அரசாலும் சட்டத்தாலும் பாதுக்காக்கப்படற நிலை இன்னைக்கி நிலவுது. அது மட்டுமில்லாம, SPCA, Blue Cross அப்படீன்னெல்லாம் நாகரீகத்தின் அறிகுறிகள் நம்ம இருண்ட பிரதேசங்களிலயும் தலைதூக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாம எப்படி நடத்தப் படணும்ன்னு எதிர்பார்க்கிறோமோ அதே மாதிரி நம்மைச் சார்ந்து வாழும் ஜீவன்களையும் நடத்துவோம். (மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். - லூக்கா 6:31)

அடுத்த வருசமாவது இந்த கோரப் பழக்கம் தடை செய்யப்படும்கிற நம்பிக்கையில்........

சனி, ஜனவரி 19, 2008

முற்போக்கு வாங்கல்லையோ, முற்போக்கு

திருமணத்திற்குத் தாலியோ, சேர்ந்து வாழ்வதற்குத் திருமணமோ தேவையில்லைன்னுதான் நினைக்கறேன். திருமணம் என்பதே பொருளாதாரம் சம்மந்தப்பட்டதுதான். இருவருக்குமே பொருளாதாரக் கட்டாயங்கள் இல்லாத போது (அப்படி அமைவது பலருக்கு சாத்தியமாகாமல் போகலாம்), திருமணம் என்ற ஏற்பாடும் தேவையற்றதுதான்.

புகுந்த வீடு பொறந்த வீடு வகையறாக்களைப் பற்றி கருத்து கூற விரும்பல்ல. (ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வீட்டில் மற்றவர்களுக்கு வேலையில்லை என்பது எனது கருத்து)

தாலி கட்டுதல் பெண்ணடிமைத்தனம்தான். வேறு மதங்களில் இருவருக்கும் மோதிரம் அணிவிக்கும் பழக்கமுள்ளது. அது ஒரு சமத்துவ நிலையாகப் படுகிறது. இங்கு மனைவிக்கு மட்டும் தாலி என்னும் போது, அது ஒரு பக்க சாய்வு நிலையாகத் தெரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு வேற்று மனிதர்களுடன் காதல் கொள்ளலாமான்னா, அது கூடாதுன்னுதான் தோணுது. Free love பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சியம் கிடையாது. 'இருவருக்கும் சம்மதமென்றால் இருவரும் வேற்று மனிதர்களைக் காதலிக்கலாம்' அப்படின்னுல்லாம் சொல்ற அளவுக்கு எனக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படல்ல.

fantasyகளை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துவதா வேண்டாமா என்று பொதுப்படையாக கூற முடியாது. வாழ்க்கைத் துணையின் மனநிலையைப் பொறுத்து அதை அவரவர்கள் முடிவு செய்வது நல்லது.

*********

இவையெல்லாம் திருமணத்திற்கு தாலி தேவையா? அப்படீன்னு ஒருத்தர் வெளியிட்டிருக்கிற இடுகைக்கு நான் அளித்த பின்னூட்டம். பொது நலன் கருதி அதை இங்க மீள் பதிவு செஞ்சிருக்கேன் :)

வெள்ளி, ஜனவரி 11, 2008

ஒரு லட்ச ரூபாய் கார்க் கனவுகள்

வியாழன், ஜனவரி 03, 2008

போதும் புது வருடம்

ஒரு சக வலைப்பதிவர் ஒருத்தங்க தப்பித் தவறி தன்னோட புது வருட வாழ்த்துச் செய்தியை ஒரு நீளமான மின்னஞ்சல் பட்டியலுக்கு அனுப்பிட்டாங்க. அதுக்குப்புறம் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக்கிட்டாங்க. அதோட "reply to all' பண்ண வேண்டாம்ன்னு வேண்டுகோள் வேற வச்சிட்டாங்க. ஆனா, வேண்டுகோளுக்கெல்லாம் செவி சாய்க்கிற ரகமா நாம? அடுத்த புத்தாண்டு வரைக்கும் இந்த வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருக்கும் போல இருக்கு.

அந்தப் பட்டியல்ல தமிழ் தெரியாதவங்க பலரோட மின்னஞ்சல் இருக்கு. அதோட, பலரின் அலுவலக மின்னஞ்சல்கள் வேற அதில இடம் பெற்றிருக்கு. முக்கியமான அலுவலக மடல்களை எதிர்பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம பதிவுலகத்தோட விளையாட்டுத்தனமான வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருந்துதுன்னா (அதுவும் புரியாத மொழியில), அது ஏற்படுத்தக் கூடிய எரிச்சலை என்னால உணர முடியுது. மேலும் மேலும் நம்ம பதிவுலக நட்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தறோம்ன்னாவது நாம உணரணும்.

புது வருடம் போதும். அடுத்த வேலையை கவனிப்போம். அதெல்லாம் முடியாது, நான் வாழ்த்தித்தான் ஆவேங்கறீங்களா? அப்பொன்னா ஆளை வுடுங்க, நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல.