திங்கள், நவம்பர் 21, 2005

செய்வன திருந்தச் செய்

பண்பாட்டுப் புண்ணாக்குகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, உடனடியாக இந்தச் செய்தி நம் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைய வேண்டிய அவசர நிலையில் இன்று நாம் இருக்கிறோம். செய்தி இதுதான் - "பாதுகாப்பாகவே உடலுறவு கொள்ளுங்கள்; சுத்தமான (போதை மருந்து) ஊசிகளையே பயன்படுத்துங்கள்".

இது, எல்லா 'முரசு'களிலும், 'தந்தி'களிலும், Todayகளிலும், Timesகளிலும், 'மலர்'களிலும் (last but not the least, வலைப்பதிவுகளிலும்) தண்டோரா போட்டு அறிவிக்கப்பட வேண்டிய செய்தி. நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், விளையாட்டு வீரர்கள், ஆளும் கட்சித் தலைவர்கள், எதிர் கட்சித் தலைவர்கள், சாதிக் கட்சித் தலைவர்கள், மதக் கட்சித் தலைவர்கள், கோவில் குருமார்கள், பாதிரியார்கள், மௌல்விகள், பிக்குகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவர் சங்கத் தலைவர்கள், வானொலி / தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள், வர்த்தக முதலாளிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் என்று தம்மால் பல்லாயிரக் கணக்கான மக்களை வழிநடத்தக்கூடிய நிலையிலிருப்பவர்கள் அனைவரும் இச்செய்தியை விரைவாக அவர்களது audienceசுக்கு எடுத்துச் செல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள். இச்செய்தி உடனடியாக கல்லூரிகள் / பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள், உழைப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், ரசிகர்கள், வாசகர்கள், தொண்டர்கள், வழிபாட்டாளர்கள், காவல்ப்படையினர், ராணுவத்தினர், வாடிக்கையாளர்கள், சேவகர்கள், பாலியல் தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள் என்ற அனைத்துப் பிரிவினருக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று. செம்மொழி, செம்மையல்லாத மொழி, சைகை என்று அனைத்து வகையான தொடர்பாடல் முறைகளாலும் சாதனங்களாலும் இச்செய்தி அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் வலியுறுத்தப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், முதியோர்களையும் குழந்தைகளையும் தவிர்த்து மற்ற நடுவயதினர் அனைவரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் இறந்து கொண்டோ இறந்து விட்டோ இருக்கும் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் நிலைமைக்கு நாமும் நாளடைவில் தள்ளப்படுவோம், என்பதுதான் இன்றைய அச்சுறுத்தும் யதார்த்தம்.

ஒருபுறம் பாதுகாப்பற்ற உடலுறவையே கடைபிடிக்கும் லாரி ஓட்டுனர்களாலும் பாலியல் தொழிலாளர்களாலும் எய்ட்ஸ் வெகு வேகமாகப் பரவுவது ஒரு கவலை கொள்ள வைக்கும் செய்தி என்றால், மறுபுறம் போதைப் பழக்கமுடையவர்கள், தங்கள் விலையுயர்ந்தப் பழக்கத்திற்குத் தீனி போடுவதற்காக உடலை விற்று, இந்த இரு செயல்களிலும் எச்சரிக்கையைக் கடைபிடிக்காமல் இரு வகைகளிலும் நோயைப் பரப்புவது அதைவிடத் துயரமான செய்தி. இப்படிப் பல்வேறான காரணங்களால், அதிர்ச்சியளிக்கும் வேகத்தில் இன்று பலரும் எய்ட்ஸ¤க்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் ("அப்ப நீங்க?" என்ற கேட்கக் கூடாத கேள்வியை விட்டு விடுவோம்)

விரக்தியடையச் செய்யும் இச்செய்தியை உள்வாங்கியதன் அறிகுறியாக........ குறைந்தது......... பண்பாட்டுச் சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு முகத்தில் அறையும் உண்மைகளை ஏற்க மறுக்கும் நாடகத்தனத்தையாவது தவிர்ப்போம்.

சனி, நவம்பர் 19, 2005

கிராமிய மணம்

தற்போது வெளிவரும் திரையிசைப் பாடல்கள் பெரும்பாலும் மேற்கத்திய அல்லது நகர்ப்புறத்துப் பாணியைச் சார்ந்தவைகளாக இருக்கின்றன. இவ்வகைப் பாடல்கள் கவனத்தைக் கவர்ந்தாலும் நிலைத்து நிற்பதில்லை. பாடலில் ஒரு கிராமிய மணம் வீசினால்தான், அது மேலும் சிறப்படைந்து அமரத்துவம் பெறுகிறது. இசையமைப்பாளருக்கும் அவரது திறமையின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் ஒரு மேடையாகத் திகழ்கிறது கிராமிய இசை.

நான் மிகவும் விரும்பும், ரஹ்மானின் இசையில் வெளிவந்த சில கிராமியப் பாடல்களின் ஒலிப் பட்டியலைத்(playlist) தொகுத்துள்ளேன். அதே போல் இளையாராஜாவுக்கும் முயன்றிருக்கிறேன். அவர் தனது நீண்ட அனுபவத்தில் அளித்த நூற்றுக்கணக்கான படங்களிலிருந்து முடிந்த வரை நல்ல கிராமிய வாசம் கொண்ட பாடல்களைத் தொகுப்பதென்பது தீவிரமானதொரு முயற்சியாகத்தான் இருந்தது. இது பல இளம் பருவத்து நினைவுகளைக் கிளறி விட்ட ஒரு அனுபவமாகவும் இருந்தது என்பது சொல்லத் தேவையில்லாத ஒரு கொசுறுச் செய்தி.

மேற்கூறிய ஒலிப்பட்டியல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். (யாம் பெற்ற இன்பம்......... etc etc) இதனைப் பெற, கீழ்க்கண்ட செய்முறையைப் பின்பற்றுங்கள்:
  1. முதலில் இந்தக் கோப்பை உங்கள் கணினியில் இறக்கிக் கொண்டு unzip செய்து கொள்ளுங்கள். arr_folk.mia, il_folk.mia என்று இரு கோப்புகள் கிடைக்கும்.
  2. பிறகு, http://www.musicindiaonline.com தளத்திற்குச் சென்று உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு ஏற்படுத்திக் கொண்டு, login செய்யுங்கள்.
  3. அங்கு User Panel பெட்டியில் View Albums என்ற சுட்டியைச் சொடுக்குங்கள். அதைத் தொடர்ந்து வரும் Your Albums என்ற திரையிலுள்ள Import என்ற பொத்தானை அழுத்துங்கள். ஒரு உரையாடல் பெட்டி திறந்து இறக்குமதி செய்ய வேண்டிய கோப்பின் விவரத்தைக் கேட்கும். Browse பொத்தானை அழுத்தி, நீங்கள் முதலில் இறக்கிக் கொண்ட .mia கோப்புகளைக் குறிப்பிட்டு, ஒலிப்பட்டியல்களை இறக்குமதி செய்யுங்கள்.
  4. இறக்குமதிக்குப் பிறகு, Your Albums திரையில், ஒலிப்பட்டியல்களின் பெயருடன் சுட்டிகள் தென்படும். அவற்றில் உங்களுக்கு வேண்டியதைச் சொடுக்கினால், ஒரு ஒலிப்பான் (media player) திரை தோன்றி, பட்டியலிலுள்ள பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் கணினியில் இசைக்கப்படும். இதில் shuffleஐத் தேர்ந்தெடுத்தால், பாடல்களின் வரிசை (sequence) கலைந்து random முறையில் பாடல்கள் இசைக்கப்படும்.
ஒரு சில மணி நேர இன்பத்திற்கு நான் உத்தரவாதமளிக்கிறேன். பல அருமையான பாடல்கள் இத்தளத்தில் இல்லாத காரணத்தால் இப்பட்டியல்களிலிருந்து விட்டுப் போயின. (உ-ம், திருடா திருடா, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே, மகுடி, முள்ளும் மலரும், தனிக்காட்டு ராஜா, ஆகிய படங்களில் இடம் பெற்ற சில கிராமியப் பாடல்கள்)

இறக்குமதி செய்து கொண்ட ஒலிப்பட்டியல்களை விரும்பும்போதெல்லாம் கேட்கலாம். மேற்கூறிய செய்முறை பிடிபட்டவுடன் நீங்களும் உங்கள் விருப்பப் பாடல்களைத் தொகுத்து, இதைப்போலவே அனைவருக்கும் வழங்கலாம். இதை ஒரு மீம் போலவும்்லவும் செய்யலாம், பலருக்கும் ஆர்வமிருந்தால். (ஒரே லாம்....லாம்.......லாம்தான் :) ) ரசனையை பற்றிய சுய தம்பட்டம், குறிப்பிட்ட இசையமைப்பாளர் / பாடகர் / இசைவகை / காலகட்டம் ஆகியவற்றின் மேன்மையைப் பறைசாற்றுதல், அலுவலக நேரத்தை உருப்படியாக செலவழித்தல்......... என்று இதனால் பல பயன்கள் உள்ளன ;)

திங்கள், நவம்பர் 14, 2005

Valentin

அன்பு / காதல் அகியவற்றைக் கொண்டாடும் காதலர் தினத்தை இவ்வுலகுக்குத் தந்த ·பாதர் வேலன்டைனின் பெயரைக் கொண்ட ஒரு சிறுவனின் கதையிது. ஆனால் அவனது பெயருக்குப் பொருத்தமில்லாத வகையில், அவனுக்கு அன்பு மறுக்கப் படுகிறது, அதுவும் அவனது பெற்றோர்களிடமிருந்து. வெறுப்பைக் கக்கும் தந்தை, அதற்கு பயந்து அவர்களை விட்டு ஓடிய தாய், நிராதரவாக்கப்பட்ட சிறுவன், அவனுக்கு அன்பு செலுத்த ஒரு வயதானப் பாட்டி மட்டும்.......... என்று ஒரு துயரமான சூழ்நிலையை நம் முன் வைக்கிறது இப்படம் - Valentin (2002). அர்ஜென்டினா நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்பானாஷ் மொழிப் படம்.

துயரமே கொடுமையான ஒன்று. அதிலும் ஒரு எட்டு வயதுச் சிறுவனுக்கு ஏற்படும் துயரம் நம்மை நெகிழ வைப்பது நிச்சயம். பெற்றோர்கள் பிரிந்த நிலையில், தான் தொலைத்தத் தாயன்பை தனது தந்தையின் காதலியிடம் எதிர்பார்க்கிறான் சிறுவன். அதுவும் தற்காலிகமாகி விடுகிறது, அவளும் அவன் தந்தையைப் பிரிவதால். தந்தையிடம் கிடைக்காத நட்பை அவர்களது அடுத்த வீட்டில் வசிக்கும் Rufo என்ற இளைஞனிடம் தேடுகிறான். பியானோ வாசிக்கத் தெரிந்த அவனிடம் தனக்கும் அதனைக் கற்றுத் தருமாறு வேண்டுகிறான். Rufo சிறுவனது விரல்களின் எண்ணிக்கையைச் சரிபார்க்கிறான். :) பிறகு சிறுவனது பற்களையும் சோதித்துப் பார்த்துவிட்டு (அவற்றுக்கும் பியானோ வாசிப்பிற்கும் அதிகத் தொடர்பிருப்பதாகக் கூறி), அவ்வேண்டுகோளுக்குச் சம்மதிக்கிறான்.

Rufoவுக்கு அவனது காதலி அவனை விட்டு ஓடிய பிரச்சினை. ("என்னை விட்டு வேறு ஒருவனுடன் ஓடியிருந்தாலும் சமாதானமாகியிருப்பேன். ஆனால் அவளோ, என்னிடமிருந்து விலக வேண்டுமென்பதற்காகவே என்னை விட்டு ஓடினாள்.") Valentinனுக்கோ அவனது தாய் அவனை விட்டு அகன்ற பிரச்சினை. இருவரும் whisky அருந்திவிட்டு "ஆண்கள் அளவுக்குப் பெண்கள் romantic கிடையாது" (100% உண்மை) என்று பேசிக்கொண்டு, தங்கள் நட்பை உறுதி செய்து கொள்கின்றனர். இவ்வாறாக, பாட்டியின் மரணம், தந்தையிடமிருந்து பிரிவு போன்ற சூழ்நிலைகளையெல்லாம் கடந்து படம் இனிதே முடிவடைகிறது.

அறுபதுகளைச் சார்ந்த கதை. சிறுவனுக்கு ஒரு விண்வெளி வீரனாக வேண்டுமென்பது இலட்சியம். நிலவில் கால் பதிக்க வேண்டுமென்பதும்தான். அமெரிக்க Neil Armstrong முந்திக் கொள்கிறார். "பரவாயில்லை, நான் ஒரு எழுத்தாளனாகிவிட்டேன். அதுவும் இந்த ஒரு சிறிய கதையைத்தான் எழுதியிருக்கிறேன்" என்றக் குறிப்புடன் படம் முடிகிறது. Hallmark channelஇல்தான் பார்த்தேன், ஆங்கில மொழிபெயர்ப்புடன். தவற விட்டவர்களுக்கு - இம்மாதத்தில் மறுபடியும் நான்கைந்து முறைகள் இப்படம் காட்டப்படவிருக்கிறது, 19th (12.30 & 23.05 IST), 22nd (18.30 & 00.00 IST) & 23rd (07.00 IST) ஆகிய தினங்களில்் (இது இந்தியாவில். மற்ற நாடுகளைப் பற்றித் தெரியவில்லை. ஆசிய நாடுகளுக்கெல்லாம் பொது ஒளிபரப்பேயென்று நினைக்கிறேன்).

ஞாயிறு, நவம்பர் 06, 2005

கண்ணில் படாத எண்ணைப் பீப்பாய்கள்

"என் வாழ்நாளிலேயே நான் இதுவரை ஒரு எண்ணைப் பீப்பாயைக் கூட கண்ணாலும் பார்த்ததில்லை. அதை விட முக்கியமான வேலைகள் எனக்கு இருந்திருக்கின்றன. அதுசரி, நீ பார்த்திருக்கிறாயா எண்ணைப் பீப்பாய்களை?"

"நானும் பார்த்ததில்லைதான், ஆனால் என் பேரில்தான் ஊழல்க் குற்றச்சாட்டுகள் எதுவும் வரவில்லையே?"

மேற்கண்ட நகைச்சுவையான உரையாடல் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கிற்கும் NDTV நிருபர் பர்க்கா தத்திற்கும் இடையே நடந்தது, அண்மையில் ஒளிபரப்பானப் பேட்டியில். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அபாண்டமான குற்றச்சாட்டால் கொதிப்படைந்து போயிருப்பதாக இப்பேட்டியில் நட்வர் சிங் கூறினார். அவரும், அவரது கட்சியான காங்கிரஸ¤ம், ஈராக்கிலிருந்து தலா நான்கு மில்லியன் எண்ணைப் பீப்பாய்களை சதாம் ஹ¤சேன் அரசுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கியதாக ஐ.நா. சபையின் விசாரணை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அதற்கான எதிர்வினைதான் மேலேயுள்ளது.

இந்த அறிக்கையைப் பற்றி தேடிய வரையில் கிடைத்த விவரங்கள்:
  • இந்த விசாரணை ஐ.நா.சபையால் நியமிக்கப்பட்ட ஒரு சுய அதிகாரக் குழுவால் நடத்தப்பட்டது. இதன் தலைவர் திரு.பால் வோல்கர் ஆவார். <In bold letters>இவர் அமெரிக்க Federal Reserveவின் முன்னாள் தலைவராவார்.</In bold letters> :)
  • ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பெரும்பாலான அமைப்புகள் அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பை எதிர்த்த சக்திகள் / நாடுகளைச் சார்ந்தவை. ஈராக் போருக்கும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கும் வலுவானதொரு எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்த புள்ளிகள், நாடுகள் ஆகியன, அதிகமான அளவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இதை வைத்து, போரெதிர்ப்பு இயக்கமே சத்தாம் ஹ¤சேனின் பொருளுதவியால், ஆதரவால்தான் தோன்றியது மற்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்பது போன்ற கருத்துருவாக்கங்கள் இணையத்தில் அவசர கதியில் நடைபெறுகின்றன.
  • இந்த அறிக்கையில் என் கவனத்தைக் கவர்ந்த வரிகள்: 'The committee emphasizes that the identification of a particular company's contract as having been the subject of an illicit payment does not mean that such company - as opposed to an agent or secondary purchaser with an interest in the transaction - made, authorized or knew about an illicit payment.' அதாவது, இந்தப் பட்டியலில் ஒரு நிறுவனத்தின் பெயர் உள்ளது என்பதாலேயே அது ஊழல் செய்தது என்றோ, ஊழலை அங்கீகரித்தது என்றோ, ஊழலைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தது என்றோ பொருள் கொள்ள முடியாது. இது போன்ற ஒரு disclaimerஐ நான் பார்த்ததில்லை. இவர்களெல்லாம் குற்றம் புரிந்தவர்கள் என்று பட்டியலிட்டு விட்டு, ஆனால் உறுதியாகக் கூறுவதற்கில்லை என்பது போலத்தான் இருக்கிறது.
  • இந்த அறிக்கை முன்வைக்கும் பிரதானக் கருத்து இவ்வரிகளில்: "......Iraq preferred to sell its oil to companies and individuals percieved as 'friendly' to Iraq, and in particular, if they were permanent members of the Security Council in a position to potentially ease the restrictions of sanctions." அதாவது, ஈராக் தனக்கு வேண்டப்பட்டவர்களாகக் கருதியவர்களுக்கே தனது எண்ணையை விற்க முன்வந்தது. இதன்படி, ருஷ்யாவும், ·பிரான்ஸ¤ம் இதில் பெரும் பங்கைப் பெற்றனர் என்கிறது அறிக்கை. இங்கு எனக்கு லாஜிக் புரியவில்லை. இந்த நாடுகளும் இதர நிறுவனங்களும் லஞ்சம் கொடுத்து அதிக விலையில் எண்ணையை வாங்கியிருக்கின்றனர், சலுகை விலையில் அல்ல. அப்படியிருக்க, இந்த எண்ணைப் பரிமாற்றத்திற்கு நன்றிக் கடனாகத்தான் இந்நாடுகள் ஈராக்கிற்கு உலக அரங்கில் ஆதரவு தெரிவித்தன என்று எவ்வாறு முடிவு கட்ட முடியும்? திரையரங்கில் blackஇல் டிக்கட் விற்பவனிடம் நமக்கு என்ன நன்றியுணர்வு இருக்க முடியும்? ஒருவேளை, ஈராக்கில் லஞ்சம் கொடுத்து வாங்கிய எண்ணையை வேறெங்காவது கொள்ளை லாபத்திற்கு விற்க முடிந்திருந்தால், இக்குற்றச்சாட்டில் உண்மையிருக்கக்கூடும். ஆனால், அவ்வாறிருந்ததா என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. உலகச் சந்தையில் எண்ணையின் விலையை வைத்துத்தான் ஈராக்கின் எண்ணையின் விற்பனை விலையை நிர்ணயித்தது ஐ.நா. சபை.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், இது ஏதோ அமெரிக்காவுக்குச் சாதகமான, அரசியல் உள்நோக்கங்களோடு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகவே தென்படுகிறது. அமெரிக்காவின் ஈராக் மீதானப் படையெடுப்பை நியாயப்படுத்தும் சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதும் ஒரு குறிக்கோளாக இருக்கலாம்.

இதில் நமது நட்டுவனார் சிங் மாட்டிக் கொண்டிருப்பதுதான் முரண்பாடுகளின் முத்தாய்ப்பு. பதவியில் இல்லாதக் காலத்தில் இவரும் இவரது காங்கிரஸ¤ம் எதற்காக எட்டு மில்லியன் எண்ணைப் பீப்பாய்களை பினாமி பேரில் வாங்கினார்கள், அதுவும் 1 மில்லியன் டாலர்கள் வரை லஞ்சம் கொடுத்து, என்றக் கேள்விக்கான விடை நமக்குத் தெரியாமலே போய்விடக்கூடும். பதவியில் இல்லாத நட்வர் சிங், ஆட்சிப் பொறுப்பில் இல்லாதக் காங்கிரஸ், இவர்களால் சத்தாமிற்கு என்ன ஆதாயம் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஒன்றை இங்குக் கூற வேண்டும். இந்த அறிக்கை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைப் பட்டியலிடுகிறது. ஆனால் இந்த அறிக்கையைப் பற்றி கூகிளில் தேடினால் நம் நட்டுவனார் சிங்கின் பெயர்தான் அதிகமாகத் தென்படுகிறது (இந்திய செய்தித் தளங்கள், வலைப்பதிவுகள், ஆகியவற்றிலிருந்து). "கிடைச்சாண்டா ஒருத்தன், போடுவோம்டா தர்ம அடி" என்ற நமக்கே உரித்தான மனப்பான்மைக்கு ஈடு இணையே கிடையாதென்றுதான் தோன்றுகிறது. பாவம், எட்டு மில்லியன் பீப்பாய்களில் ஒன்றையாவது அவர் கண்ணில் காட்டியிருக்கலாம்.