வியாழன், மார்ச் 31, 2005

பன்மைவாதம்

மலர்கள் பலவகை. மணங்களும் அப்படியே. ஆயிரமாயிரம் ரோஜாக்களை ஒன்றாகப் பார்ப்பதில் பெரிதாக என்ன சுவாரசியம் இருக்க முடியும்? ஒவ்வொரு நாளும் அதே தட்ப வெப்ப நிலையுடன் இருந்தால் சலிப்படைந்து விடமாட்டோம்? அல்லது வானொலியில் மறுபடி மறுபடி ஒரே பாடகரின் குரல் ஒலித்தால், எவ்வளவு நேரம்தான் அது நம் கவனத்தை ஈர்க்கும்? ஒரே வகையான இசைக் கருவிகளைக் கொண்டு கச்சேரி செய்ய முடியுமா இல்லை ஒரு பாலார் மட்டுமே உள்ள சமூகம்தான் தழைக்க இயலுமா? நாமனைவரும் நிறத்தால், இனத்தால், பாலினத்தால், மொழியால், சிந்தனையால், செயல்திறனால், பழக்க வழக்கங்களால், பண்பாட்டால், விருப்பு வெறுப்புகளால், உயரத்தால், தோற்றத்தால்............ என பல குணாதிசயங்களால் தனித்தன்மை பெற்றவர்கள். இத்தகைய நிலை விரும்பத் தக்கதே.

எனினும், பண்டைய காலத்திலிருந்து இவ்வேறுபாடுகளைக் களையும் முயற்சி நடைபெற்ற வண்ணம் உள்ளது. மதமாற்றங்கள், நவீனமயமாக்கல் என்ற பெயரில் மேற்கத்திய சிந்தனைகளின் திணிப்பு, உடை / தோற்றங்களிலும் சீர்மை என்று தனிமனிதத் தன்மையை தாக்கிய படியே உள்ளனர் சமூகங்களின் பாதுகாவலர்கள். "அக்கடான்னு" உடை போடுபவரைத் "துக்கடான்னு" எடை போடத் துடிப்பவர்கள், Valentine's Dayயைக் கொண்டாடக் கூடாதெனத் தடைவிதிக்கும் வானர சேவையினர், கடும் வெயிலிலும் பெண்ணென்பவள் கருமையான ஆடைகளால் தலையிலிருந்து கால் வரை மறைத்தபடியே இருத்தல் வேண்டுமென்று fatwaக்களிடும் மதவெறியர்கள், இரவு பதினோறு மணி ஆனால் வணிகங்கள் அனைத்திற்கும் மூடுவிழா காண விரும்பும் நலம் விரும்பிகள், மது விலக்கு, போதைப் பொருள் விலக்கு என ஒரு சமூகத்தின் அங்கத்தினர்களின் தனிமனித முடிவுகளை ஒட்டுமொத்தமாகத் தன் கைக்குள் போட்டுக் கொள்ள விழைவோர், ஓரின சேர்கையாளர்களை சமூக விரோதிகளாக பாவிப்பவர்கள், அந்தரங்க blogspotகளைத் தடை செய்யத் துடிப்போர் ;)....... என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் கடைசியாக சேர்ந்து கொண்டவர்கள்தாம் இந்த மொழிப் பாதுகாவலர்கள்.... ஆங்கிலம் கூடாது, ஆங்கிலப் பெயர் கூடாது, மம்மி / டாடி கூடாது என்று நாட்டு மக்களுக்கு மேன்மேலும் fatwaக்களை விதிப்பவர்கள். இவ்வகையான culture policeகளின் ஒட்டு மொத்தக் குறிக்கோள் தனிமனித உரிமை மறுப்பே அன்றி வேறெதுவுமில்லை. இவர்களின் உதவியின்றியே நாட்டு மக்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

இந்நிலையில் மேற்கூறிய பன்மைவாதம்(Pluralism) முக்கியத்துவம் பெறுகிறது. "உன் வழியில் எனக்கு உடன்பாடில்லை, எனினும் உன் தனிமனித உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன்" என்பதே பன்மைவாத்தின் அடிப்படைக் கொள்கை. இச்சிந்தனையே பலதரப் பட்ட மக்களும் ஒருவருக்கொருவர் இசைந்து வாழ வழிவகுக்கும். மாற்றுக் கருத்து / வாழ்வுமுறைகளுக்கு அணைபோடத் துடிப்பவர்களின் கை ஓங்குமானால், அது நமக்கேற்படும் பேரிழப்பே.

சீர்மைவாதத்தால், ஒருமித்த வாழ்வுமுறைகள் நிறுவப் பெற்றதால், மறைந்த, அடையாளமின்றி அழிந்த, நொறுங்கிய, நசுங்கிய, பண்டைகாலத்திய உப கலாச்சாரங்கள் எவ்வளவோ. உதாரணம், பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் மற்றும் மொழிகள், indigenous sciences around the world, மறைந்த பல கலைகள் / கண்டுபிடிப்புகள், ஆகியன. எல்லோரும் ஒரு போக்கிலேயே சிந்திக்க வேண்டும் என்றெண்ணும் பேர்வழிகளால் மனிதம் இன்னும் என்னென்ன இழப்புகளைச் சந்திக்க வேண்டி வருமோ.

திங்கள், மார்ச் 21, 2005

அரேபிய 'ராய்' இசை

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நம் நாட்டைப் பிடித்து உலுக்கிய 'Didi' எனும் பாடல் பலர் அறிந்ததே. டிவி இசைச் சானல்களில் மெல்ல ஒலிக்க ஆரம்பித்து, பிறகு நம் Bollywood அதைக் கெட்டியாக பற்றிக் கொண்டு, பல நகல்களைத் தயாரித்து, ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்து விட்டதென்றே கூற வேண்டும். இந்தப் பாடலைப் பாடியவர் கலீத் (Khaled) என்னும் அல்ஜீரிய நாட்டுக்காரர். அரேபிய மொழி மற்றும் இசை மரபுகளைச் சார்ந்திருந்தாலும், மேற்கத்திய இசையின் பாதிப்பை அந்தப் பாடலில் உணரலாம். இவ்வகையில் மேலும் பல பாடல்களும் பாடல்த் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன, இந்தக் கலீத்தின் படைப்பில். அல்ஜீரிய மற்றும் French வட்டாரங்களில் இப்பாடல்கள் மிகவும் பிரபலமானவை. கலீத் பாடிய 'Aicha' என்ற பாடலை ஆங்கிலத்தில் பாடி உலகப் புகழ் அடைந்தனர் Outlandish என்னும் இசைக் குழுவினர். அதனை இங்குள்ள பலர் கேட்டிருக்கக் கூடும். இசைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆங்கிலப் பாடகர் Sting பாடிய Desert Rose என்னும் பாடலை பலர் கேட்டிருக்கலாம். அந்தப் பாடலின் சிறப்பம்சமே அதன் நடுவில் வரும் அரபி வரிகள்தான். அந்த பொன்னான வரிகளுக்குக் குரல் கொடுத்தவர் ஷெப் மாமி (Cheb Mami) என்னும் மற்றொரு அல்ஜீரியர். ஜீவனுள்ள அவரது குரல் கொண்டு உலகின் பல முன்னணி இசைஞர்களோடு கூட்டு சேர்ந்து வெற்றிப் பாடல்கள் பலவற்றை அளித்தவர். இவரும் முன் கூறிய கலீதும் 'ராய்' (Räi) எனப்படும் இசைவகையின் முடிசூடா மன்னர்களாகப் போற்றப் படுகின்றனர்.

இந்த இசைவகைக்கு ஒரு அற்புதமான பின்னணி உண்டு. மாக்ரேப் (Maghreb) என அழைக்கப் படும் அல்ஜீரியா மற்றும் மொரொக்கோ நாடுகள் உள்ள பகுதிகளில் தோன்றியதே இந்த ராய் இசை. முதலில் பெண்களால் தோற்றுவிக்கப் பட்டு, நாளடைவில் ஆண்களும் பின்பற்றி தன்வசப்படுத்திக் கொண்டனர் என அறிகிறேன். கருத்து சுதந்திரம் மற்றும் எழுச்சி மிக்க பாடல்களாயிருந்தன எனக் கேள்வி. மதம் மற்றும் அரசுக்கு மாற்றுக் கருத்துகள் தெரிவிக்கும் வகையிலும் வரிகள் இருந்தனவாம். மத்திய கிழக்கு என்றாலேயே ஏதோ அடக்கி ஒடுக்கப் பட்ட கலாசாரம் என்ற stereotypeகளை உடைத்தெறிவதாக இருந்தது இச்செய்தி. காதல், அது தரும் ஏமாற்றங்கள், வேலையின்மை, வறுமை போன்ற வருத்தங்களைப் பாடல்களாக்கும் Blues போன்ற ஒரு இசை வகையே இந்த ராய். ஆரம்ப காலங்களில் ஷேக்கா ரிமிட்டி (Cheika Rmitti) எனும் பெண்மணியே ராயின் ராணியாகத் திகழ்ந்தவர். பெண்ணியக் கருத்துகளை முன் வைத்துப் பாடினார் எனத் தெரிகிறது. ஷேக்கா என்றால் மிகவும் மதிப்பிற்குரிய அறிஞர் என்பதன் பெண்பாலாகும். அத்தகைய அடைமொழியை இப்பெண் பாடகர் பெற்றாரென்பது அந்த சமூகத்தில் அவருக்கிருந்த செல்வாக்கையே குறிக்கிறது.

பிற்காலத்தில் அல்ஜீரியர்கள் பலர் வேலைவாய்ப்பு தேடி Franceக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அவர்கள் சந்தித்த இடர்பாடுகள், இனவெறிப் பாகுபாடு என்று ராய் பாடல்களின் மூலக் கருத்துகள் பெருகிக்கொண்டே வந்தன. இசையைப் பொருத்தவரையில், மேற்கத்தியப் பாதிப்புகள் இடம்பெறத் தொடங்கின. Oud எனும் தந்திக் கருவி, derbouka எனும் தாளக் கருவி மற்றும் வயலின், ஆர்மோனியம் போன்ற பாரம்பரியமான அரேபிய இசைக்கருவிகளுடன் நவீனக் கருவிகளான keyboard, guitar, bass, drums, special effects ஆகியனவும் சேர்ந்து கொண்டன. பிறகென்ன, காட்டில் இசை மழைதான். மொழியைப் பொருத்தவரையில் அரபி பிரதானமென்றாலும், பல முக்கியமான பாடல்கள் Frenchஇலும் உள்ளன.

மேற்கூறிய கலீத், ஷெப் மாமி இவர்களுடன் முன்னணியில் திகழும் மற்ற ராய் பாடகர்கள் ரஷித் தாகா(Rachid Taha), ஷெப் அஸ்னி(Cheb Hasni) மற்றும் ஃபாதல் (Faudel) போன்றோர். தாகா தோற்றத்திலும் இசையிலும் Bruce Springsteenஐ நினைவு படுத்துகிறார். பாரம்பரிய ராயுடன் Heavy rockகை கலந்தளிப்பது அவரது சிறப்பு. ஷெப் அஸ்னி அல்ஜீரியாவில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டாரெனத் தெரிகிறது. பிற்போக்குவாதம் தலைதுக்கினால் ஒரு கலாசாரத்துக்கு எவ்வளவு தீமைகளை விளைவிக்கக் கூடுமென்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

இன்னொறு கொசுறுச் செய்தி. நாம்மில் பலர் இந்த ராய் பாடல்களைப் பற்றித் தெரியாமலே அவற்றைக் கேட்டிருகிறார்கள். எப்படி என்கிறீர்களா? தமிழ்த் திரையுலகின் வாயிலாகத்தான். "ஏ ஷப்பா, ஏ ஷப்பா, நெனச்ச கனவு பலிக்காதா" என்ற திரைப் பாடலை கேட்டிருப்பீர். அது கலீத் பாடிய ஒரு பாடலின் நகலே. வேறு உதாரணங்கள் குறித்து தெரியவில்லை. நம் இசையமைப்பாளர்கள் ராய் பாடல்களிலிருந்தும் மேற்கத்திய பாடல்களிலிருந்தும் தாராளமாகவே சுட்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

சரி, கொஞ்சம் வம்பு தும்புகளிலிருந்து விடுபட்டு விஷயத்துக்கு வருவோம். எனக்கு மிகவும் பிடித்த ராய் பாடல்களை அவற்றின் Real audio ஒலியோடைகளுடன், இங்கு பட்டியலிடுகிறேன். க்ளிக்குங்கள், ஒலிக்கப்படும்! (கொஞ்சம் 'lo-fi'யாக இருக்கும், பொறுத்துக் கொள்ளுங்கள்.)
கேட்டீங்களா? :)

வெள்ளி, மார்ச் 18, 2005

தரம்

வாழ்வின் எந்தவொரு பொழுதிலும் நம் கவனத்தைப் ஈர்ப்பது இந்தத் தரம். சாப்பிடும் உணவு, படிக்கும் புத்தகம், கேட்கும் ஒலிகள், நுகரும் மணங்கள், வெப்பம் / ஈரப்பதம், உடல் நலம், மன சாந்தி, மின்சார வோல்டேஜ் நிலவரம் (அது பாதிக்கும் இந்த மின்விசிறியின் வேகம்)........ இப்படி எத்தனையோ வகையில் தரம் நம்மை ஆட்கொள்கிறது. கீழ்த்தரம், உயர்தரம் என பாகுபாடுகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன, நம் ஒவ்வொரு சிந்தனையிலும்.

தரமென்பது எவ்வாறு நிர்ணயிக்கப் படுகிறது? அதற்கு கொடுக்கும் விலையை வைத்தா? செலவழிக்கும் நேரத்தை வைத்தா? அது உண்டாக்கும் விளைவுகளை வைத்தா? அத்தகைய விளைவுகளை மறுபடி உண்டாக்க முடியுமா? உதாரணம், ஒருவருக்கு ஏற்பட்ட விளைவு இன்னொருவருக்கு ஏற்படுமா, அல்லது அவருக்கே மற்றொரு பொழுதில் ஏற்படுமா? இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், AC காரில் பயணம் முதன்முறையில் உயர்தரமே. இரண்டாம், மூன்றாம் முறைகள்?

நான் உடுத்தும் உடை என்னைப் பொருத்த வரையில் உயர்தரமே. மற்றவருக்கோ அதன் நிறம் மிட்டாய்ச் சிவப்பு அல்லது பளீர் மஞ்சள். நான் நிராகரித்த காபியின் கலவை இன்னொருவருக்கு பேஷ் பேஷ். தரம் என்பது அவரவர்களின் சொந்தக் கருத்தா? அல்லது பெரும்பாலோரின் கருத்துடன் ஒத்து போவதா? பெரும்பாலோருக்கு பிடித்தது எனக்கும் உடன்பாடே என்றால் அதுவே ஒரு மந்தை மனப்பான்மையை குறிக்கவில்லை? மேலும் பெரும்பாலோருக்குப் பிடித்ததென்றால் அது தரக்குறைவான ஒன்று, என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. இவ்வளவு கேள்விகளுக்குப் பிறகு எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ஒரு திருப்தி அல்லது மகிழ்ச்சியை அளிக்கும் எதுவும் உயர்தரமே. தரம் மனிதருக்கு மனிதர், பொழுதுக்கு பொழுது வேறுபடலாம். தரம் என்பது நிரந்தரமல்ல.

வாழ்க்கைத் தரம் உயர பணம் தேவை, கல்வி தேவை என பலவிதமான வாதங்கள். பொருளாதாரம், படிப்பறிவு, அத்தியாவசிய வசதிகள் என பல குறியீடுகளிலும் பின் தங்கியவை நம் கிராமங்கள். எனினும், எப்போதாவது கிராமப் புறம் சென்றால், டிராக்டர்களிலோ அல்லது மாட்டு வண்டிகளிலோ கூட்டங் கூட்டமாக மக்கள் பயணித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். எதாவது திருவிழா அல்லது திருமணம் என்று கிளம்பியிருப்பார்கள். பளிச் பளிச்சென்று மலிவு விலைப் புத்தாடைகளையும் நகைகளையும் அணிந்து கொண்டு எல்லையில்லா மகிழ்ச்சியுடன், ஒருவருக்கொருவர் தோழமையுணர்ச்சியுடன். நகர்ப் புறங்களில் அத்தகைய காட்சிகளை அதிகம் காண இயலாது. நகர்களில் இல்லாத வசதியா? இப்போது யாருடைய வாழ்க்கை கீழ்த்தரம், யாருடையது உயர்தரம்?

செவ்வாய், மார்ச் 15, 2005

சகாவிலிருந்து சகா வரை

சக பரிமாற்ற (peer to peer) இணையங்கள் குறித்து ஒரு கண்ணோட்டம்

சமீபத்திய சில வருடங்களாக மிகவும் பேசப் பட்டு வரும் இந்த சக பரிமாற்ற இணையங்களைப் பற்றிய ஆர்வம் பெருகியதால் ஏற்பட்டது இந்த பதிவு முயற்சி. முதலில் சில அறிமுகங்கள். பொதுவாக இணையங்களின் கட்டமைப்பில் வழங்கி (server) எனப்படும் கணினி ஒரு பிரதான அங்கமாகும். எல்லா வகையான இயல் - இசை - நாடகப் படைப்புக்களும் (அதாவது multimedia content) இந்த வழங்கியில் குடியிருக்கும். இந்த படைப்புக்களை நுகர விரும்புவோர் வாங்கி (client) எனப்படும் தத்தம் கணினிகளை பயன் படுத்தி, இணைய இணைப்புக்கள் வாயிலாக, தமக்கு வேண்டிய பலனை பெறுகின்றனர். இத்தகைய கட்டமைப்பு client - server architecture என ஆங்கிலத்தில் கூறப் படுகிறது.

சமுதாய நோக்கில் ஆராய்ந்தால், இங்கு ஒரு ஏற்ற தாழ்வு மிக்க சூழ்நிலை நிலவுவதை காணலாம். அதிவலிமை பெற்ற அங்கமான வழங்கியின் தயவில் மற்றெல்லா அங்கங்களும் இருப்பதைப் போன்றொரு எண்ணம் எழுவது இயற்கையே. இத்தகைய எண்ணத்தை வலியுறுத்தும் வகையிலேயே பல இணைய சேவக நிறுவனங்களும் நடந்து கொள்கின்றன. எத்தகைய படைப்புகள் தங்கள் வழங்கிகளில் படைக்கப் பெறலாம், எவைகளுக்குத் தடை, என்றெல்லாம் விதிமுறைகள் விதித்து, மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கின்றன. அவை அப்படி இல்லாவிடினும், சட்டம் மற்றும் பணம் படைத்த மற்றும் பதவியிலிருப்பவர்களுக்கு இசைந்து, நுகர்வோராகிய நம்மை கடினங்களுக்கு உள்ளாக்குகின்றன.

இவ்வாறு சமூக நோக்கில் பாராமல், தொழில்நுட்ப ரீதியில் நோக்கினாலும் பல சிக்கல்கள். எல்லா வாங்கிகளும் வழங்கியைச் சார்ந்து இருப்பதால், வழங்கி எந்நேரமும் செயல்படும் நிலை உறுதி செய்யப் படவேண்டும். இல்லாவிட்டால், பல நுகர்வோரின் வேலை தடைபடும். இன்னொன்று, வழங்கியின் இணைப்புப் பரப்பளவு (Bandwidth) மிகுதியாக இருத்தல் அவசியம். ஏனென்றால், ஒரே சமயத்தில் வழங்கியின் சேவையை கோருபவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் கூட இருக்கலாம். மற்றொன்று, பல கோடிக் கணக்கான தகவல் துகள்களை சேமித்து வைக்க வேண்டுமென்பதால் அவற்றின் தகடுகளின் கொள்ளலளவும் மிகுதியாக இருக்க வேண்டும். அல்லது, ஒரு வழங்கி ஆயிரக் கணக்கான தளங்களை சுமக்கும் பட்சத்தில், தளங்களின் கொள்ளலளவைச் சுருக்கி, ஒரு படைப்பாளியின் சிந்தனைகளைச் சிறை படுத்தும் நிர்பந்தமும் நிகழலாம்.

இந்நிலையில் உருவெடுத்ததே நான் முதலில் கூறிய சக பரிமாற்ற இணையங்கள். இவ்வகை இணையங்களில் நுகர்வோருடைய கணினியே சில நேரங்களில் வாங்கியாகவும் பிற நேரங்களில் வழங்கியாகவும் செயலாற்றும் திறனை பெறுகிறது. அதிவேக இணைப்பு இருந்தால் இரு செயல்களையும் கூட ஒரே நேரத்தில் செய்யத் தகுந்ததே. எந்த ஒரு கணினியும் எந்நேரம் வேண்டுமானாலும் ஒரு வழங்கியாகவும் பொறுப்பேற்க இயலும் என்பதால், ஒரு கோரப் பட்ட படைப்பை ஒரு நுகர்வர் பலமுனைகளிலிருந்து (அதிவேகமாக) பெறும் வாய்ப்பு உள்ளது. தளத்தின் படைப்பாளியோ, தனது படைப்புகளை தன் கணினியிலேயே மேடையேற்றி விடலாம், அளவுத் தடைகள் எதுவுமின்றி. அவை வழியில் பல கணினிகளில் ஏறி இறங்கி, துள்ளி குதித்து ஒரு தூரத்து நுகர்வனைச் சென்றடையலாம். பலரது இணைப்புகளும் பங்கு பெறுவதால், அதிவேக இணைப்பெதுவும் தேவையில்லை, ஒரு வழங்கு கணினிக்கு. 'ஊரே சேர்ந்து குளம் வெட்டுவது போல' என உவமானமாகக் கூறலாம் இச் சூழ்நிலையை.

இன்று சக பரிமாற்ற இணையங்களைக் கொண்டு தகவல் கோப்புக்கள், இசை மற்றும் திரைப் படக் கோப்புகள் என தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குழுமங்கள் பலப் பல. இவற்றில் சில செயல்கள் சட்ட விரோதமாக பாவிக்கப் பட்டாலும், இத் தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ள ஒரு கருவியாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. நூற்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படக் கோப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ, அல்லது அலுவல் சம்பந்தமான தகவல்களை பலரது கூட்டு முயற்சியால் திரட்டவோ, இப்படி சட்டத்துக்குட்பட்ட பல செயல்களை செய்யவும் மிக உதவியாயிருக்கும் இவ்விணையங்கள். உங்கள் இசை / திரைக் களஞ்சியங்களை நீங்களும் கேட்டுக் கொண்டே நண்பர்களுக்கும் ஒலி / ஒளி பரப்பலாம். வெகுதூரத்திலிருக்கும் சினேகிதியுடன் சேர்ந்து காதல் படம் பார்க்கலாமென அடுக்கிக் கொண்டே போகலாம்.

சோதித்துப் பார்த்திட சில செயலிகள் / சக பரிமாற்ற இணையங்கள்: Grouper, QNext, eMule, BitTorrent, Mercora ஆகியன. தொலைதூர நோக்கில் எனக்குப் படும் சில சாத்தியக்கூறுகள்: விடுமுறை பயணத்தின் போது mobile camera கருவி வாயிலாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் live அனுபவங்கள், ஒளியோடையாய் நண்பர்கள் / ஆர்வலர்களின் கணினித் திரையில் பாயும் சாத்தியம், வெகு தொலைவில் உள்ள சங்கீத வித்தகர்கள் இணையம் வாயிலாக ஒன்று சேர்ந்து நடத்தும் ஜுகல் பந்தி நிகழ்ச்சி, என்று கற்பனைச் சிறகுகளை வேகமாக அடித்துக் கொண்டே போகலாம். இக்கனவுகள் நனவாகுமானால் நன்றாகத்தானிருக்கும்.

பி. கு.: 'வழங்கி' / 'வாங்கி' என்ற கணினிச் சொற்கள் திரு.காசி அவர்களின் பதிவிலிருந்து கண்டறியப் பட்டவை. அவருக்கு எமது நன்றி :)

திங்கள், மார்ச் 07, 2005

ஆங்கில எண்ணங்களின் தமிழாக்கங்கள்

சில தினங்களாக பல தமிழ்ப் பதிவுகளை படித்து வருகிறேன். மிகுந்த மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருந்தது. ஒரே ஒரு குறை (குறை கூராமல் இருக்க முடியுமோ?) - பல பதிவுகளில் நான் கண்ட சொற்கள்.

Let's take the simplest of words. 'Comments' - பதிவு உலகத்தின் ஒரு இன்றியமயாத அம்சம் ;) இந்த எளிமையான சொல்லுக்கு நான் கண்ட தமிழ்ச்சொற்க்கள் - 'மறுமொழி', 'பின்னூட்டம்' (யப்பா!). என்னாங்க, சுலபமா 'கருத்து' இல்ல 'விமர்சனம்' அப்படின்னுட்டா நாங்களூம் கொஞ்சம் புரிஞ்சிப்போமில்ல? இருவத்தி அஞ்சு வருசமா தமிழ் நாட்டுல இருந்துருக்கேன், எனக்கே புரியலைங்க.
கொஞ்சம் பெரிய வார்த்தைகளைப் பார்ப்போம். 'அடிப்படைவாதம் / வாதி' - என்னாமோ சுகமா இல்லைங்க கேக்கறத்துக்கு. Fundamentalism என்ற ஆங்கில வார்த்தையின் part by part translationஏ ஆகும் இந்த 'அடிப்படைவாதம்'. என் குறை என்னவென்றால், இப்படி செய்வதன் மூலம், அந்த வார்த்தையின் அர்த்தத்தை கோட்டை விட்டு விடுகிறோமோ என்பதுதான். Fundamentalism என்பது தன் இன/மத/சாதிய வெறியைக் குறிக்கும் ஒரு சொல். "தும்பை விட்டு வாலைப் பிடி" என்பது போல, ஒரு சொல்லின் கருத்தை கைப்பற்றாமல், அதை துண்டங்களாக வெட்டி, ஒவ்வொரு துண்டுக்கும் ஒரு தமிழ் நிகர் கண்டுபிடித்து, அவைகளை மறுபடியும் ஒட்டு வேலை செய்து......... நல்ல தமிழாக்கம் தான் :)

Software - மென்பொருள். ஆகா! நான் மேற்க்கூறிய 'வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு' translation algorithmமின் மற்றொரு பிரபலமான உதாரணம். :) 'செயலி' - எவ்வளவு அழகாக உள்ளது, அர்த்தமுள்ளதாகவும் கூட? பல அரிய செயல்களை நொடியில் செய்யக் கூடியதென்ற உணர்வைத் தரவில்லை? It suggests a 'task machine'! Compare it with மென்பொருள். ஏதொ ஒரு 'சோப்பளாங்கி' என நினைக்கத் தோன்றுகிறது. முன்னேற்றத் துறைகளின் உட்கருத்துக்களை நாம் தமிழுக்கு கொண்டு செல்லத் தவறினால் அது பல தமிழர்க்ளின் இழப்பே.

ஆமா, அது என்னாங்க அது 'ஊடகம்'? சத்தியமா எனக்கு புரியலைங்க. ஒரு தென்காசியிலோ அல்லது துடியலூரிலோ உள்ள, இணையகத்துக்குச் சென்று மணிக்கு பத்து ருபாய் கொடுத்து இணயத்தில் உலவும், ஒரு சாதாரண மனிதன் புரிந்து கொள்ளாத ஒரு எழுத்து எவ்வகையில் தமிழ்ச் சேவையாகும் என ஒரு ஐயம் எழுகிறது. இது தமிழ்ச் சேவையெல்லாமில்லிங்க, சுய சேவைதான்ங்கரீங்களா? :)

சனி, மார்ச் 05, 2005

வித்தியாசமான வீட்டுச்சாப்பாடு

சரியான நேரத்தில் பசியெடுக்க ஆரம்பித்தது. சக பணியாளர் ஒருவரும் நானுமாக சேர்ந்து யோசித்தொம், மதிய உணவு குறித்து. ஒவ்வொறு நாளும் அலுவலகத்துக்கு வெளியே சென்று உண்போம், வெவ்வேறு உணவகங்களில். ஒரு நாள் தென்னிந்திய வகை, ஒரு நாள் வட இந்திய வகை, சில சமயம் மேற்க்கத்திய பண்டங்கள், அல்லது வெறும் சிற்றுண்டிகள் என விதவிதமான மாறுபாடுகளை செயல்படுத்திக்கொண்டே இருப்போம். அன்று ஒரு சீன உணவகம் செல்ல முடிவெடுத்தொம்.

எங்களூரில் பல பிரபல சீன உணவகங்கள் இருப்பினும் நாங்கள் தேர்ந்தெடுத்த உணவகம் சற்று low profile என்று சொல்லலாம். பிரதான சாலையில் இல்லாமல் சிறிது உட்பகுதியில் இருப்பது ஒரு காரணமாயிருக்கலாம். எவ்வாறாயினும், இந்த low-profile எங்களுக்கு பிடித்த ஒன்றே - குறைந்த ஜன நடமாட்டம், பணிவான, திருப்திகரமான சேவை.... என பல ஆதாயங்கள். குறை கூறாமல் பட்டியல் ஏட்டை புரட்டினோம்.

பலவகையான சீன உணவுகள். இவை மற்றுமல்லாமல், மலேய (Malay) மற்றும் தாய்(Thai) உணவுகளும் கூட. Noodles சாப்பிட மனமில்லாததால் அரிசி உணவே, என்று முடிவெடுத்தொம். சீன வகைகள் எல்லாமே சலிப்பூட்டியதால் மலேய பகுதியை கூர்ந்து பார்வையிட்டேன். சில மிகவும் தெரிந்த பெயர்கள் தென்பட்டன - nasi goreng (a kind of fried rice with vegetables), gado gado (a salad of vegetables with peanut sauce)............

பாசத்தோடு அந்த பெயர்களை மறுபடியும் படித்தேன். பின்பு நண்பரை நோக்கினேன். சிறிது குழப்ப நிலையில் இருந்தார், என்ன ஆணையிடுவதென்று. உணவுகளின் விலை, அளவு இரன்டும் அதிகம் என்பதால் பங்கிட்டுக்கொள்வது என ஏற்கனவே முடிவாகியிறுந்தது. மென்மையாக ஆரம்பித்தேன், எனது பரிந்துரையை. புதிதாக மலேய வகை ஒன்றை முயன்று பார்ப்போமே, என யோசனை கூறினேன். (உனக்கு புதுசு, எனக்கு பழசு...... என்று திரைப்பாடல்கள் நினைவுக்கு வந்த வண்ணம் இருந்தன) நல்லவேளையாக நண்பர் சம்மதித்தார். உற்சாகமடைந்து, இந்த nasi goreng வேண்டுமென்று ஆணை கொடுப்போமா என்றேன். குழப்பத்திலிருந்த நண்பர் அதற்கும் அமோதித்தார். உடன் உண்ண காய்கறி வகையை நண்பர் தேர்தெடுத்தார். பின் ஆவலுடன் காத்திருந்தோம், உணவின் வருகைக்கு.

உணவு பரிமாறப் பட்டது. ஒரு கவளம் எடுத்து மென்றேன். மனம் பல வருடங்கள் பின்னோக்கி விரைந்தது. அந்த காதல் நிறைந்த நாட்கள்.......... சுவைசுவையான, புதிதுபுதிதான உணவுவகைகள்...... அன்பு தோய்ந்த கைகளால் சமைக்கப்பெற்று......... சுடச்சுட......... வித்தியாசமான ஒரு இல்லற வாழ்வின் விளைவாக......... இன்று இந்த சீன உணவகத்தில், அதே சுவையை அனுபவித்தேன் - ஒரு வீட்டுச்சாப்பாட்டின் அருமையை அடைந்தேன், இந்த விதேச உணவகத்தில்.

நண்பரை நோக்கினேன். அவரும் சுவைத்து உண்டுகொண்டிருந்தார், என் நிலையை சிறிதும் அறியாதவராய். நல்லதாயிற்று என உணவை முடித்துக்கொண்டேன். காலச்சக்கரம் மறுபடியும் சுழலத்தொடங்கியது.

இரண்டாம் முயற்சி

This is too good, man!!! அதாவது, இவ்வளவு எளிதாக இருக்கும் என்று நினைக்கவேயில்லை. This is unadultered fun :)

கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கவலை, கொஞ்சம் மகிழ்வு..... போதும், வைரமுத்து கோபிக்கப்போகிறார் :) என்ன சொல்கிறேனென்றால், என் இத்தகைய உணர்வுகளுக்கு விளக்கமேயில்லை. இப்பொழுதய மூளையின் ரசாயன நிலமை காரணமாயிருக்கலாம், ஒருவேளை. மனம், குரல், எண்ணங்கள்... இவை அனைத்தும் இறக்கைகள் கொண்டு பறப்பது போல் ஒரு feeling. ('voice on wings', isn't off the mark, you see........) வெப்பம் தரும் வேதனைக்கு இடையில் ஒரு குற்றால அருவியில் குளியல் போல, ஒரு சுமைதாங்கி பெறும் சிறிது நேர இளைப்பாறல் போல, இன்று தமிழில் பதிவு செய்யும் வாய்ப்பும் ஒரு சுகமே :)

கொஞ்சம் எழுத்து நடை பயின்றபின் சிறிது ஆழமாக எழுத விரும்புகிறேன். இன்றைய பதிவு இத்துடன் முடிவு பெறுகிறது. மீண்டும் நாளை சந்திப்போம்...... (முடிந்தால் இன்றே எழுதுவேன்....... பார்க்கலாம்)

ஆராய்ச்சி நெ.1

செட்டப்ப மாத்தி, கெட்டப்ப மாத்தி, அப்பன் வெச்ச பேர மாத்தி......... என்று ஒவ்வொறு செயல்பாடாக மாற்றம் செய்து, எனது முதல் படைப்பாக இந்த வரிகளை வழங்குகிறேன். ஆங்கிலம் அளிக்கும் எளிமை இதில் இல்லாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்தால் தமிழும் எளியதாகிவிடும் என நம்புகிறேன்.

மேல இருக்கறது பெருசுங்களுக்கு! இப்பொ வயசு பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் ஏத்த மாதிரி கொஞ்சம் பேச்சு! ஏதொ ஒரு வருஷமா இங்கிலிஷ்ல எழுதிக்கிட்டிருந்தேன், அங்க இங்க. திடீர்னு, நம்ம மொழியிலயும் கொஞ்சம் எழுத ஆசை வந்துடுச்சு. அதான், இப்படி தூக்கம் கூட இல்லாம ராத்திரி பூரா உக்காந்து ஆராய்ச்சி செஞ்சிக்கிட்டு இருக்கேன், அதையும் இதையும் டவுன்லோட் பண்ணிக்கிட்டு.

எழுத இயலாதவன் என நினைத்தேன், பரவாயில்லை.... இரு பத்திகள் எழுதிவிட்டேன். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் கூற்றுப்படி (பாரதியை நினைவுகூர்ந்தாகி விட்டது) எழுத்திலும் சாதிகள் இல்லை என உறுதியாக நம்புகிறேன். பாடப்புத்தக தமிழிலும் எழுதுவேன், பாமர மொழியிலும் எழுதுவேன். தமிழாசிரியர்கள் மன்னிக்கவும், உங்கள் உதவி பள்ளிகளில் தேவைப்படலாம். இங்க நான் நெனச்சதுதான், நான் எழுதியதுதான்.

மென்மேலும் தமிழில் பதிப்பேன் என்ற எதிர்பார்புடன், மகிழ்வுடன், அன்புடன், கொஞ்சம் பேஜாருடன்.......... விடைபெறுகிறேன்.