சனி, ஜனவரி 21, 2006

கோடுகள்

ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இரு நகரங்கள், ஐம்பது வருட இடைவெளிக்குப் பிறகு, இப்போதுதான் போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளனவாம். இரண்டும் பஞ்சாபைச் சேர்ந்தவை, ஆனால் இருப்பதோ் இருவேறு நாடுகளில். வினோதமான இந்நிலை, இந்நகரங்களுக்கு மட்டுமே ஏற்பட்ட ஒன்றல்ல. மனிதன் வரைந்த கோடுகளால் இவ்வாறு வெகு அருகாமையில் வாழந்து கொண்டிருக்கும்் மக்கள், ஒருவருக்கொருவர்் தொடர்பேயில்லாமல் நிரந்தரமாகப் பிரிந்திருக்கும் நிலைக்கு ஏராளமான உதாரணங்களைக் கொடுக்கலாம். வரலாற்றின் பிரித்தாளும் சூழ்ச்சிகளால் இன்று இரண்டுபட்டிருக்கும் பஞ்சாப்், காஷ்மீர், வங்காளம், கொரியா, ஜெர்மனி (15 ஆண்டுகளுக்கு முன்பு வரை), அரபுப் பிரதேசங்களான பாலஸ்தீனம் - எகிப்து, என்று சோகமான உதாரணங்கள் பல நம் நினைவுக்கு வரலாம். இத்தகைய சூழ்ச்சிகளின் கசப்பான நினைவுச் சின்னங்களாக இக்கோடுகள் இன்றும் நீடித்துக் கொண்டிருப்பதுதான் நாம் வெட்கப்பட வேண்டிய நிஜமாகும்.

அமிர்தசரஸ் - லாஹோர் என்ற இரு பஞ்சாபிய நகரங்கள், ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருப்பவை, ஆனால் ஒன்று இந்தியாவிலும் இன்னொன்று பாகிஸ்தானிலும். எதிர்பார்த்ததைப் போல், இவையிரண்டிற்கும் இடையே கடந்த ஐம்பது வருடங்களாக எவ்வகையான போக்குவரத்தும் இருந்ததில்லையாம். அண்மையில் தொடங்கப்பட்ட பேருந்து வசதியால் இவ்விரு நகரங்களும் மறுபடி இணைக்கப்படுகின்றனவாம். வெகு அருகிலிருக்கும் ஒரு இடத்திற்குப் பயணப்படுவதற்கான சுதந்திரம் கூட இவ்வளவு நாட்களாக அம்மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்கிற உண்மை, இன்று பேருந்து வசதி அறிமுகப் படுத்தியதைத் தொடர்ந்து நடக்கும் கொண்டாட்டங்களால் மறக்கப்படக்கூடும். இன்றைய, இருபத்தியோராம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில், மனித உரிமை என்பது எந்த அளவிலிருக்கிறது என்று நினைக்கையில் விரக்தியே மிஞ்சுகிறது. இவ்வளவு நாட்களாக அம்மக்கள் நடத்தியிருக்கக் கூடிய வணிக மற்றும் இதரப் பரிமாற்றங்கள், அதனால் கிடைத்திருக்கக் கூடிய ஆதாயங்கள், என்று தொலைந்து போன வாய்ப்புகளை நினைத்துப் பார்த்தால், ஒட்டுமொத்த இழப்புகளைக் கணக்கிட முடியாமலும் போகலாம்.

வங்காள தேசத்திலிருந்து வேலை வாய்ப்புக்காக இந்தியப் பகுதிக்குள் குடிபெயரும் மக்களைப் பற்றி அண்மையில் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்களால் நமக்குப் பிரச்சனையே, அவர்களது தேவைகளை கவனிக்க வேண்டும், அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். அவர்களுக்கு யாரும் உணவைக் கொண்டு போய் ஊட்டியெல்லாம் விடுவதில்லை, அவர்களது கடும் உழைப்பால் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களை கவனித்துக் கொள்கிறார்கள், என்று பதிலளித்தேன். இப்படி அவர்கள் சட்ட விரோதமாக நாட்டுக்குள் உட்புகுவதால், அவர்களோடு தீவிரவாதிகளுக்கும் உள்ளே நுழையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்ற வாதத்தை வைத்தார். செப்டம்பர் 11 சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருமே சட்டப்படி உட்புகுந்தவர்கள்தான், அதனால் அச்சம்பவத்தைத் தடுக்கவா முடிந்தது என்று பதிலுக்கு வினவினேன். அதெப்படி வேற்று நாட்டவர்கள் நம் நாட்டிற்குள் வரலாம், நாடு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமல்லவா என்றார். இப்படிக் கூறுவதற்கு நமக்கென்ன அருகதையுள்ளது, திரைகடல் ஓடியும் திரவியம் தேடுபவர்களல்லவா நாம், நமக்கொரு நியதி மற்றவர்களுக்கொரு நியதியா, என்று கேட்டேன். நண்பர் கோபமடைந்து இதற்கு மேல் தன்னால் வாதிட முடியாதென்றார். ஒருவர் தனது திறமைக்கு எங்கு மதிப்பும் வாய்ப்பும் அதிகம் என்று நினைக்கிறாரோ அங்கு குடிபுகுவதற்கு அவருக்கு உரிமை இருக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. இன்றைய நிலையில், மனிதன் வரைந்த கோடுகள் முற்றிலும் அழியும் வரையில், இது ஒரு கனவாக மட்டுமே இருக்க முடியும்.

பி.கு: நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் Hotel Rwanda என்றத் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அது தொண்ணூறுகளில் நடந்த ஒரு இனக்கலவரத்தைப் பற்றிய படமாகும். அதைப் பார்த்த அனுபவமும் இப்பதிவில் வெளியிட்ட எனது எண்ணங்களை வலுப்பெறச் செய்தது. நிலக்கோடுகள் மட்டுமல்லாமல் மனக்கோடுகளும் முற்றிலும் தகர்க்கப்பட வேண்டும்.

4 கருத்துகள்:

ஜென்ராம் சொன்னது…

உங்கள் சென்னை வருகையை கடுமையாகக் கண்டிக்கிறேன் (எனக்கு ஒரு தகவல் தராமல் இருந்ததற்காக). இதே தவறை மீண்டும் ஒரு முறை செய்யாமல் இருப்பீர்களாக!

பத்மா அர்விந்த் சொன்னது…

மனக்கோடுகள் நீங்கிவிட்டால், நிலக்கோடுகள் பயனற்று போய்விடும்.

Voice on Wings சொன்னது…

ராம்கி, இனிமேல் அத்தகைய தவறு நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன் :)

தேன்துளி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜென்ராம் சொன்னது…

vow,
நன்றி..