வெள்ளி, ஜனவரி 06, 2006

குரோ அப், டியூடெட்

வேறு வேலைகளில் மும்முரமாக இருப்பதால், சில நாட்களுக்குப் பதிவுகள் போட வேண்டாமென்று இருந்தேன். ஆனால், எனது முடிவை மாற்ற வேண்டிய நிலைமை வந்து விட்டது, புத்தாண்டுத் தீர்மானங்கள் சிலருக்கு ஒரு வாரத்திலேயே உடைவதைப்போல் :)

நான் அண்மையில் தேசிபண்டிட் தளத்தில் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. தலாஸ்ஸா மிக்ரா என்ற பெண் வலைப்பதிவர் எழுதிய ஒரு பதிவை, முன்னுரையுடன் வழங்குகிறது இப்பக்கம். "ஆண்களைக் காமப் பொருட்களாகப் பார்ப்பதிலுள்ள இன்பங்களை, மிகுந்த உற்சாகத்துடன் விவரிக்கிறார் தலாஸ்ஸா" என்பதே பதிவிற்கான அறிமுக வாக்கியம். பதிவும் நம் எதிர்பார்ப்புகளுக்குச் சற்றும் குறை வைக்காமல், சுவாரசியமாகச் செல்கிறது. "சபாஷ்", "பலே", ", நானும் அப்படித்தான்" என்று ஒரு இருபத்தி ஐந்து பின்னூட்டங்களையும் குவித்திருக்கிறது பதிவு. படித்து, சிரித்து விட்டு நகர்ந்தேன்.

ஓரிரு நாட்களுக்கு முன், நம் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு ஆண் பதிவர் அவரது பதிவில், ஒரு மழையில் நனைந்த மங்கையின் அழகை விவரிக்கப் போக, அதற்கு உடல்நல, மனநல ஆலோசனைகள், பெண்ணியப் பரோட்டாக்களெல்லாம் தட்டில் வந்து விழுகின்றன. அவரது பதிவும் தேசிபண்டிட்டில், ஆனால் கடுமையான விமர்சனங்களுடன், குறிப்பிடப்படுகிறது. ஒட்டு மொத்தத் தமிழ் டியூட்களையும் நோக்கி அறிவுரைகள் பறக்கின்றன, ஆபாசத்தையும் அயோக்கியத்தனத்தையும் கைவிடும்படி.

இத்தகைய முரண்பாடுகளால் ஒன்றுமறியாதத் தமிழ் டியூட்கள் குழம்பப் போவது நிச்சயம். தலாஸ்ஸாவின் பதிவைப் படித்ததால் வந்த நம்பிக்கை, அதற்குப்பின் வந்த குற்றச்சாட்டுகளால் தகர்ந்து போனதொன்றே மிச்சம். உடலழகு ஆபாசமா? அதை இரசிப்பது ஆபாசமா? 'மழையில் நனைந்ததால் ஒரு பெண் மேலும் அழகாகக் காட்சியளித்தாள்' என்றக் கருத்தை வெளியிட்டது தவறு என்று கூறப்படுகிறது. இதில் தவறு எங்கென்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. நம் சூழலில், நம்மால் உடுத்தபடும் தொளதொள ஆடைகளால், உடலழகு என்பது மணமாகும் வரை கற்பனையில் மட்டுமே உணரக்கூடிய ஒரு அம்சமாக இருக்கிறது. அதைப்பற்றிப் பேசுவதும், நினைப்பதும் குற்ற உணர்வை அளிக்கக்கூடிய செயல்களாகி விட்டன. இந்நிலையில், ஒரு மழையால் வெளிப்பட்ட ஒரு அழகுணர்வை நினைவு கூர்ந்ததாகக் குறிப்பிட்ட அப்பதிவில், உண்மையாகவே எனக்கு மனநலக் குறைவாக எதுவுமே தோன்றவில்லை.

நாம் ஏன் உடலை ஒரு அவமானச் சின்னமாகக் கருத வேண்டும்? நம் அறிவு, ஆற்றல், சாதனைகள் என்பவற்றைப் போல் நம் உடலழகும் ஒரு போற்றுதலுக்குரிய அம்சம்தானே? ஒருவரிடமுள்ள மற்ற சிறப்புகளைப் போல், அவருடைய உடலழகையும் கருதலாமல்லவா? இதில் ஆபாசமும் குற்றவுணர்வும் ஏன்?

ஒட்டுமொத்தத் தமிழ் டியூடெட்களையும் நோக்கியெல்லாம் நான் அறிக்கைகள் விடப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட டியூடெட்டுக்கு இந்தப் பதிவு கண்ணில் படுமானால் மகிழ்ச்சியே :)

| | | |

கருத்துகள் இல்லை: