ஞாயிறு, அக்டோபர் 16, 2005

சுக்குமி ளகுதி இப்பிலி

உலக வர்த்தக சபையின் நிர்பந்தப்படி நம் அரசு TRIPS என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைப் பலர் அறிந்திருக்கலாம். இதன்படி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கானக் காப்புரிமை முன்பை விட இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்டு, அதனை அத்துமீறும் நபர்கள் / நிறுவனங்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இதனால், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் மேலை / பன்னாட்டு / பெரிய நிறுவனங்கள், அவற்றால் தனித்துவம் பெற்று, அவற்றின் ஏகபோக விற்பனை உரிமையையும் அடைந்து விடுகின்றன. இத்தகுதியை அடைந்த பின், அவற்றின் பொருட்களை அதிக விலை கொடுத்தும் வாங்க வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் பொதுமக்கள். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தும் ஏகபோக உரிமையை, அதை நிகழ்த்தியவர்களுக்கே அளிப்பதால், அவற்றைச் சாதிப்பதற்குத் தேவையான ஆய்வு முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இருந்தும், அத்தியாவசிய / உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப்பிலும் இத்தகைய கொள்கைகள் பின்பற்றப்படும் பொழுது, அதனைக் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களிலிருந்து காப்பாற்றும் மருந்துகளைச் சட்டப்படி தருவிக்க வேண்டுமென்றால் Pfizer, Merck போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது. எய்ட்ஸ் அபாயம் பரவியிருக்கும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலோருக்கு அவற்றை வாங்கிக் கட்டுப்படியாகாது. நல்ல வேளையாக இந்தியாவின் Cipla போன்ற நிறுவனங்கள் இம்மருந்துகளை நகல் செய்து, generics என்ற வகையில் குறைந்த விலையில் தயாரித்து வருகின்றன. நாம் TRIPSஆல் தடுக்கி விழுவதற்கு முன் இது சாத்தியமாயிற்று. இத்தகைய நகல் மருந்துகளால் உலகின் வறுமை மிக்க நாடுகள் அடைந்து வரும் நன்மை பலருக்கும் தெரிந்ததே. Jeffrey Sachs என்னும் புகழ் பெற்றப் பொருளாதார வல்லுனர் மற்றும் ஐ.நா. சபை ஆலோசகர், அவரது The End of Poverty என்னும் நூலில், ஆப்பிரிக்க நாடுகளின் எயட்ஸுக்கு எதிரானப் போராட்டத்தில் Ciplaவின் மருந்துகள் ஆற்றும் பங்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, ஆப்பிரிக்காவின் லட்சக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளில், சில ஆயிரம் பேர்களே Ciplaவின் குறைந்த விலை மருந்துகளையும் வாங்கும் வசதி படைத்தவர்களாம். நாளொன்றுக்கு ஒரு டாலர் செலவாகும் நகல் மருந்துகளுக்கு பதிலாக, அவர்கள் சட்டப்படி அசல் மருந்துகள் வாங்க வேண்டுமென்றால், குறைந்தது இருபது டாலர்களாவது செலவளிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டாயமாக்கப்பட்டால், இப்போது தேறும் சில ஆயிரம் நோயாளிகளுக்கும் மருத்துவம் எனபது எட்டாக் கனியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதனைக் கருத்தில் கொண்டே, உலகச் சுகாதாரச் சபையும் இத்தகைய நகல் மருந்துகளின் பயன்பாட்டை அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில்தான் நம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இவ்வருடம் மார்ச் மாதத்தில், (பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போய்) அதன் TRIPS வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இதன்படி, 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் காப்புரிமை, நம் சட்டத்தால் கராராகப் பாதுகாக்கப்படுமாம். இப்போது வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் bird flu (பறவைக் காய்ச்சல்?) நோயைக் குணப்படுத்த சுவிஸ் நிறுவனமான Roche தயாரிக்கும் Tamiflu என்ற மருந்தின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. 1995ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதன் காப்புரிமை இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாம், ஆகவே காப்புரிமை மீறல்களுக்கு எதிராக வழக்கு தொடரலாமென்ற நம்பிக்கையிலிருக்கிறதாம் அந்நிறுவனம். அண்மையில் Cipla இம்மருந்தையும் நகலெடுத்திருகிறது, காப்புரிமை இல்லாத நாடுகளில் அதனை விற்கத் தயார் என்றும் அறிவித்துள்ளது. ஆனால், bird flu இந்தியாவையும் தாக்கும் பட்சத்தில், இம்மருந்தை இங்கு விற்க அனுமதியிருக்குமா என்பதுதான் கேள்விக்குறியாகியுள்ளது. Rocheயின் மருந்தின் விலை ஒரு dosageஇற்கு அறுபது டாலர்களாம் (சுமார் ரூ.3000). நிச்சயமாக Ciplaவின் நகலின் விலை அதில் ஒரு சிறியப் பாகமாகத்தான் இருக்கும். நம் ஏழை மக்களின் வசதிக்கேற்ற மனிதாபிமான விலையைத்தான் நிர்ணயிப்போம் என்று அதன் தலைவர் யூசுஃப் ஹமீத் அறிவித்துள்ளார். ஆனால், இந்நகல்களின் விற்பனையில் TRIPSஐக் காரணங்காட்டி நம் சட்டம் குறுக்கிடுமானால், அதைப் போன்ற வெட்கக்கேடு வேறில்லை. அவ்வாறானால், நம்மைப் போன்ற எளியக் குடிமக்கள், மருத்துவம் போன்ற ஆடம்பரங்களை ஓரங்கட்டிவிட்டு, நமக்குத் தெரிந்த 'சுக்குமி ளகுதி இப்பிலி' வகையறாக்களைக் கையாள வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை: