புதன், செப்டம்பர் 14, 2005

ஹமாஸ¤க்கு நன்றி!

தொலைக்காட்சியில் சானல் மேய்ந்து கொண்டிருக்கும் போது மாட்டியது இச்செய்தி. கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் - பாலஸ்தீனச் சூழ்நிலையை கவனித்து வருபவர்களுக்கு இஸ்ரேலின் அண்மைய காஸா வெளியேற்றம் பற்றித் தெரிந்திருக்கலாம். அரசியல் உள்நோக்கங்கள் எல்லாவற்றையும் கடந்து, இது பாராட்டப்பட வேண்டிய செயல். கடந்த 38 வருடங்களாகத் தனது ஆக்கிரமிப்பில் இருந்த காஸா பகுதியை ஒரு வழியாகக் காலி செய்து, பாலஸ்தீனர்களிடமே ஒப்படைத்தது இஸ்ரேல். இதற்கு யூத மதவெறியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டு காஸாவுக்குள் அநியாயமாகக் குடிபுகுந்தவர்களும் இவர்களே. இவர்களைக் கட்டாயப்படுத்தி, காலி செய்ய வைத்தது இஸ்ரேலிய அரசு.

ஆனால் வெளியேற்றத்திற்கு முன்நிபந்தனையாக, இஸ்ரேல் காஸாவின் எகிப்துடனான எல்லையைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றுக் கூறப்பட்டு வந்தது. இஸ்ரேல் அதனைக் கைவிட்டிருக்கும் போலத் தெரிகிறது. எல்லைப் பாதுகாப்பு பாலஸ்தீன அரசிடமே விடப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினர் எல்லைச் சுவரை குண்டுகள் கொண்டு தகர்த்திருக்கின்றனர். இவ்வாறு திறந்து விடப்பட்ட எல்லையைக் கடந்து, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களும் எகிப்தியர்களும், 38 வருடங்களுக்குப் பிறகு ஓருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றனராம். மலிவு விலையில் ஆடுகள் வாங்க என்றொரு கூட்டம், மறந்து போன உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள என்றொருக் கூட்டம், சும்மா வேடிக்கை பார்க்க என்று மற்றொருக் கூட்டம், இப்படி கிளம்பிய மக்கள் அலையை அடக்குவதற்கு அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர் எகிப்திய மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள்.

நாளடைவில் நிலைமை 'கட்டுக்குள்' வரலாம். எல்லைச் சுவர் மீண்டும் ('அந்த' ஒப்பந்தம், 'இந்த' ஒப்பந்தம் என்று காரணங்காட்டி) புதுப்பிக்கப்படலாம், படாமலும் போகலாம் (பெர்லின் சுவரின் வீழ்ச்சியை நினைவில் கொள்க). ஆனால் இன்று அம்மக்களுக்கு சுவாசிக்கக் கிடைத்தது, முப்பத்தியெட்டு வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த ஓர் சுதந்திரக் காற்று. தடுப்புச்சுவர் இல்லாமல், தடையேதுமில்லாமல், மறுபக்கம் சென்று வர ஓர் அரிய வாய்ப்பு. இது பற்றிய செய்தித்துண்டுதான் நான் சானல் மேய்ந்த போது காணக்கிடைத்தது. இதோ செய்திக் குறிப்பு மற்றும் காட்சி. இக்காட்சியில், எல்லையைக் கடந்து வந்த இளைஞர் ஒருவரை அழைத்து கருத்து கேட்கிறார் நிருபர். அவரைக் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு, பிறகு மண்டியிட்டு தரையை முத்தமிடுகிறார் இளைஞர். விடாது பின்பற்றும் நிருபருக்கு பதிலளிக்க முயன்று ஆனால் முடியாமல், பொங்கி வரும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்று அதிலும் தோற்றுப்போய், தன்னால் பேச முடியவில்லை என்று நிருபரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார் அந்த இளைஞர்.

அதிகாரம் படைத்த மூடர்களால் இவ்வுலகம் எவ்வளவு சிக்கல் மிகுந்ததாக ஆகி விட்டது!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Athikaaram pidttha moodarkalaal ulaga amaithikku keduthaan.....