திங்கள், செப்டம்பர் 05, 2005

சமன்படாத உலகம்

சென்றப் பதிவில் திரு.Thomas Friedmanஇன் சமன்படும் உலகம் பற்றிய எனது மேலோட்டப் பார்வையை வழங்கியிருந்தேன். இன்று, அவரது நூலைத் தொடர்ந்துப் படித்து முடித்ததன் விளைவாக, ஒரு கருத்தியலை முழுமையாகப் புரிந்து கொண்டதோடல்லாமல், அதற்கு என் மனதில் எழுந்த எதிர்வினைகளையும் தொகுத்து வழங்குகிறேன். உலகம் சமன்படுவதைப் போற்றிப் பாடிய பின், இச்சமன்படுதலில் பங்குபெற முடியாத அல்லது விரும்பாத மக்கள், மற்றும் அதன் பரவலுக்குப் பாதகமானச் சூழல்களைக் குறித்தும் நூலாசிரியர் விவரிக்கிறார். என்னால் ஏற்றுக்கொள்ள இயலாதப் பலக் கருத்துக்களின் தெளிப்பாக அமைந்தன இவ்விவரிப்புகள். ஆகவே இப்பதிவைக் கொஞ்சம் காட்டமாகவே எழுத வேண்டியுள்ளது.

முதலில் இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா போன்றப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள். Too sick என்று ஆசிரியரால் அழைக்கப் படும் இவர்களை, முன்னேற்றமும் சமன்படும் உலகமும் அண்டுவதில்லை. இவர்களின் பிரச்சினைகளாக நோய், பசி, தீண்டாமை, வாய்ப்பின்மை என்றெல்லாம் பட்டியலிட்டு விட்டு, இதற்குப் பரிகாரமாக Bill Gates Foundationஇன் நன்கொடை / மேம்பாட்டு முயற்சிகள், இதர NGOக்கள் கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் தருமப் பணிகள் போன்றவற்றை முன் வைக்கிறார். அதாவது, சமன்பட்ட உலகில் பெருவெற்றியடைந்தோர், பின்னர் மனமிறங்கி, பின்தங்கிய சமூகங்களுக்குப் போடும் பிச்சையால் உண்டாகும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, சமன்படாத உலகிலுள்ளோர் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு இவர்களும் சமன்பட்ட உலகில் பங்கு பெற்றுப் போட்டியிடக் முடியுமாம். இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் தீர்வுக்கு பதிலாக, எனக்குத் தோன்றும் நேரடியானத் தீர்வானது, மக்களால் ஆட்சியில் அமர்த்தப்படும் அரசுகள் பல்நாட்டு நிறுவனங்களுக்கும் முதலாளித்துவ முதலைகளுக்கும் அடிவருடிகளாகச் செயல்படாமல், பின்தங்கியவர்களின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டு அவர்களுக்குரிய நியாயமான (கல்வி, மருத்துவ வசதிகள், விளைநில விநியோகம், போன்ற) வாய்ப்புக்களைப் பெற்றுத் தருமானால், அதுவே பலரை வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வர வழி வகுக்கலாமல்லவா? இதற்குத் தேவையான accountability, transparency ஆகியவை அரசுகளிடம் உள்ளதா, இல்லையென்றால் அதனைச் சரிபடுத்துவது எப்படி, என்ற வகையிலல்லவா ஆராயவேண்டும்? மேலும் அரசுகள் தாமாகவே இத்திசையில் எடுத்து வைக்கும் ஒன்றிரண்டு சிறு அடிகளையும் welfare policy / dole out என்றெல்லாம் இழிவு படுத்துபவர்களும் இந்நூலாசிரியரைப் போன்றவர்கள்தானே? "The world would be entirely flat only if all these people are brought into it" என்ற முத்தை உதித்திருக்கும் ஆசிரியர், welfare stateஐ ஆதரிக்காததேன்? Bill Gatesஐயும், NGOக்களையும் விட welfare stateகளால் அதிகம் சாதிக்க முடியுமென்பதை அறியாதவரா அவர்? அல்லது welfare stateகளால் முதலாளித்துவத்திற்கு இடைஞ்சல்கள் அதிகம் என்பதனாலா? இதுவே முரண்பாடு #1.

அடுத்ததாக, சமன்படாத உலகில் வாழ்பவர்கள் என்று ஆசிரியரால் அடையாளங் காணப்படுபவர்கள் too disempowered என்று விவரிக்கப்படும் அதிகாரமற்ற வர்க்கத்தினர் - கிராமப்புறங்களில் விவசாயக் கூலி வேலை மற்றும் இதரக் கீழ்மட்ட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். வறுமைக் கோட்டிற்கு மேல், ஆனால் கணிமைக் கோட்டிற்குக் (digital divide) கீழ் என்றத் திரிசங்கு உலகில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். உலகின் மிகப் பெரிய மக்கட்தொகையைக் கொண்ட குழுவும் இதுதான். இவர்களிடம் சமன்பட்ட உலகில் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள், வசதிகள், ஆற்றல்கள் ஆகியன இல்லாததால் இவர்கள் மிக அதிக அளவில் பின்தங்கி விடும் சாத்தியமுள்ளது. இதற்கும் நம் ஆசிரியர் வழங்குவது NGO மருந்தே. நல்ல வேடிக்கை. மேற்கூறிய அதிகாரமற்ற வர்க்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் வெனிசுயேலா அரசாங்கம் போன்ற உதாரணங்கள் குறிப்பிடப்படாததும் ஏற்றுக்கொள்ள முடியாததே.

மூன்றாவது வகையினர் too frustrated எனப்படும் அல் கயீதா வகைத் தீவிரவாதிகள். அவர்களுக்கு மேற்கத்திய நாடுகள் என்றாலே Britney Spearsஇம், Jennifer Lopezஉம்தான் கண்ணில் படுகிறார்களாம். அவர்களின் பார்வையில் மேற்கத்தியர்கள் அளவற்ற சுதந்திரம் படைத்தப் பாழடைந்த சமூகமாக, சாத்தானின் வழித்தோன்றல்களாகத் தெரிகின்றனராம். நல்ல சப்பைக்கட்டு. இஸ்ரேல் என்ற ஒரு சக்தி குறித்தும் பாலஸ்தீனர்கள் என்ற சமூகத்தைக் குறித்தும் ஆசிரியர் வசதியாக மறந்து விடுகிறார். நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கத்திய சக்திகள் மத்தியக் கிழக்கில் மேற்கொண்டுள்ளத் தேவையில்லாத் தலையீட்டின் விளைவே அல் கயீதா என்று யாராவது அவரிடம் சென்று உரக்கக் கூறவேண்டும். ஈராக் போர் அமெரிக்காவால் நியாயமற்ற அநாகரீக முறையில் மேற்கொள்ளப் பட்டது என்ற உண்மை அவரால் குறிப்பிடப்படவுமில்லை. அதிகப்பிரசங்கித்தனமாக மற்றவர்களின் மனநிலை குறித்து ஆராய்ச்சிகள் வேறு. அவரது அமெரிக்க அயோக்கியத்தனம் வெட்டவெளிச்சமாகத் தென்படுவதென்னமோ உண்மை - மனநிலை பற்றிப் பேச்சு வந்ததால் கூறுகிறேன்.

நான்காவதாக அவர் குறிப்பிடுவது, too many Toyotasஆம். "எங்கள மாதிரியே நீங்களும் காரோட்ட ஆரம்பிச்சிட்டா எல்லாரும் பெட்ரோலுக்கு எங்க போறதாம்?" என்ற நியாயமானக் கேள்வியை முன்வைக்கிறார். ஆகவே, மூன்றாம் உலகப் பொதுமக்களே, உங்கள் காரோட்டல்களைக் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். அவரது உயர்ந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் குதர்க்கம் செய்யும் என்னைப் பார்த்து எனக்கே அவமானமாகவுள்ளது. அவர் சுற்றுப்புறச் சூழல் என்றக் கோணத்தில்தான் அவ்வாறு கூறுகிறார் என்பதைத் தெளிவுப் படுத்தி விடுகிறேன். இப்பொழுதும் உலகில் மிகுதியாக மாசடைந்த இருபது நகரங்களில் பதினைந்து சீனாவில்தான் உள்ளனவாம். இவ்வாறு அமெரிக்கர்களுக்கு இணையாக சீனர்களும் இன்னும் சில வருடங்களில் இந்தியர்களும் ருஷ்யர்களும் சேர்ந்து கொண்டு இவ்வுலகின் காற்று மண்டலத்தை மாசுப் படுத்தினால், நாம் நம் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் உலகம் விரும்பத்தக்க ஒன்றாக இருக்காது என்றுதான் நம் மதிப்பிற்குரிய அமெரிக்கரான திரு.Friedman கூறிகிறார். உதைக்கும் ஒரு சிறுத் தகவல் என்னவென்றால், திருவாளர்.ஜார்ஜ் புஷ் பதவியேற்றவுடன் முதலில் ஆற்றியத் திருக்காரியங்களில் ஒன்று, Kyoto protocolஇன் கீழ் அமெரிக்காவின் முந்தய அரசு அளித்த சுற்றுப்புற மாசுக் கட்டுப்பாடு குறித்த உத்தரவாதங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதே. இத்தகவல் பற்றிய ஒரு சிறுக் குறிப்பிடல் கூட இல்லாமல் இந்நூலில் இருட்டடிக்கப் பட்டதுதான் வருத்தமான செய்தி. எங்களுக்கு அறிவுரை கூற உங்களுக்கு 'ஹக்கு லேதண்டீ' என்பதுதான் இதற்கெல்லாம் சரியான எதிர்வினை.

இன்னொரு வேடிக்கையானக் கருத்தை இங்குக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆசிரியருக்குப் போரென்றால் பிடிக்காதாம் (எனக்கும்தான்). போர் நிகழ்வுகள் இவ்வுலகம் சமன்படுதலுக்குத் தடையாகவுள்ளதாம், ஒப்புக்கொள்கிறேன். இதற்குத் தீர்வென்னவென்றால் அமெரிக்க விரைவுணவு நிறுவனமான McDonald's எல்லா நாடுகளிலும் கடை திறக்க வேண்டுமாம். ஏனென்றால், McDonald's கடை திறந்த நாடுகள் ஒன்றோடொன்றுப் போரிட்டதாகச் சரித்திரமே இல்லையாம். இந்த புருடாவை எப்படி வகைப் படுத்துவது என்றுக் குழம்பிப் போயிருக்கிறேன். ஓரு வேளை தொடர்ந்து McDonald'sஇல் உண்டதால் திராணியற்றுப் போய்விடுவதால் மக்கள் போரிட முனைவதில்லையோ என்னவோ. வேடிக்கையான இக்கருத்தை கடுமையானத் தொனியில் இவ்வாறு மாற்றிக் கூறுகிறார்: எந்தவொரு நாடு உலக வர்த்தகச் சங்கிலியில் (global supply chain) பெருவாரியாகப் பங்கு பெறுகிறதோ, அது போரெடுப்புகளில் ஈடுபடுவதைவிட உற்பத்தியைப் பெருக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துமாம். ஏனென்றால், அரும்பாடுபட்டு உலக வர்த்தகத்தில் தற்போதைய நிலையை அடைந்த அந்த நாடு, அந்த முயற்சிகளனைத்தும் வீண்போகும் வகையில் ஒரு போரைத் தொடுத்து, அதன் விளைவாக வர்த்தகத்தில் பின்தங்கிவிடும் சூழ்நிலையை ஒருபோதும் விரும்பாதாம். If only things were this simple in reality. இக்கருத்தின் அடிப்படையில் சீனாவுக்கும் தைவானுக்கும் போர் மூளாது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். ஏனென்றால் அவையிரண்டும் உலக வர்த்தகத்தில் பெருமளவில் ஈடுபட்டுள்ளனவாம். இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் அதே வகையில் போர் மூளும் சாத்தியம் குறைவாம். பாக்கிஸ்தானுக்கு உலக அரங்கில் அதிக ஈடுபாடு இல்லையெனினும், சில வருடங்களுக்கு முன், போர் மூளும் ஆபத்து இருந்த போது, இந்தியாவின் Wipro, Infosys போன்ற நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்து வந்த அமெரிக்கப் பல்நாட்டு நிறுவனங்கள், போர் மூண்டால் வேறு இடம் பார்ப்பதாகப் பூச்சாண்டிக் காட்டினார்களாம். அதற்குப் பயந்து, Wipro, Infosys ஆகிய நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் இந்தியா, தன் போரெடுக்கும் முடிவைக் கைவிட்டதாம். (applause, applause) எல்லாம் சரிங்க, ஆனா நீங்க யுகோஸ்லாவியா மேலயும், ஆப்கானிஸ்தான் மேலயும், ஈராக் மேலயும் போர் தொடுக்கறீங்களே, உங்க நாட்டுல McDonald's கிடையாதுங்களா? இல்ல உலக வர்த்தகத்துல நீங்க ஈடுபடல்லியா? இல்ல இதெல்லாம் மத்த நாட்டுக்காரங்களுக்குத்தானா?

இத்தகைய குறைபாடுகளையும், பற்றாக்குறைகளையும் தாண்டி இப்புத்தகம் படிக்க வேண்டியவொன்று என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. (ஆனால் படிக்கும் போது உங்கள் பகுத்தறியும் ஆன்டென்னாக்களைத் தூக்கி விட்டுக் கொள்ளவும்) இன்றைய மற்றும் வருங்கால வாழ்வியல்களைக் குறித்துப் பலக் கேள்விகள், பல விடைகள், அவற்றில் சில ஏற்றுக் கொள்ள முடியாத வகை, சில கருத்து கூற முடியாத வகை, இன்னும் சில மறுக்க முடியாத வகை, என்று இந்த வாசிப்பனுபவம் பயனுள்ளதாகயிருந்தது. ஒரு inclusive வருங்காலத்தை உருவாக்குவதற்கு என்னென்ன சக்திகள், முயற்சிகள் வலுப்பெற வேண்டியுள்ளன, எந்தெந்த சக்திகள் வீழ்த்தப்பட வேண்டியுள்ளன என்பதில் தெளிவு கிடைத்தால், அந்த இலக்கை நோக்கி அர்த்தமுள்ள வகையில் பயணிக்க வாய்ப்புள்ளது.

2 கருத்துகள்:

Srikanth Meenakshi சொன்னது…

நல்ல மதிப்புரை. இவருக்கு இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னை பற்றி மிக நன்றாகவே தெரியும், இருப்பினும் இத்தகைய மேம்போக்கான சர்க்கரை பூசிய மொழியில்தான் அதைப் பற்றியும் எழுதுவார்.

Voice on Wings சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, ஸ்ரீகாந்த். ஒரு எழுத்தாளருடைய தேசப்பற்று போன்ற excess baggage எவ்வாறு ஒரு நடுநிலையானக் கருத்தியலை வெளியிடுவதற்குத் தடையாக அமைந்துள்ளது என்றே இதிலிருந்துத் தெரிய வருகிறது.