செவ்வாய், ஜனவரி 31, 2006

உனக்குத் தடா!

சுரேஷ் கண்ணன் அவரது பதிவில் சில கருத்துகளைக் கூறியுள்ளார். உணர்ச்சிவசப்படாமல், அசட்டுத்தனமாக எதிர்க்காமல், யதார்த்தமாக சிந்தித்ததில் அவருக்குத் தோன்றியவொரு எண்ணம் - கல்விக்கூடங்களில் உடைக் கட்டுப்பாடுகள் தேவையே. அதற்கான காரணங்கள் - அவர் காண நேரிட்ட சில பெண்கள் உடுத்தியிருந்த உடைகள், அவர்களது அங்க அளவுகளைச் சந்தேகமின்றி வெளிப்படுத்தினவாம் (கண்களால் அளப்பது என்பது இதுதானோ?). இதனால் அவர் அச்சப்படும் பின்விளைவு - இத்தகைய காட்சிகளைக் காண நேரிடும் ஆண்களுக்கு ரத்தக் கொதிப்பு அதிகரித்து, அதன் விளைவாக அவர்கள் அப்பெண்களை மனதால் (மற்றும், வாய்ப்பு கிடைத்தால் செயலிலும்கூட) துகிலுரியக் கூடுமாம். இத்தகைய துகிலுரிதலுக்கு அவர் வழங்கும் ஆண் தரப்பு நியாயம் - இங்கு நிலவும் பாலியல் வறட்சி. ஆகவே, இவ்வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களைத் தவறான பாதையில் கொண்டு செல்லாமலிருக்க, பெண்களே, தயவு செய்து உங்கள் உடலைப் போர்த்திக் கொள்ளுங்கள், தலையிலிருந்து கால் வரை.

எனக்குத் தோன்றும் ஒரு fashion idea - தலையிலிருந்து கால் வரை ஒரு cylindrical வடிவத்தில் (துணியாலான ஒரு கூண்டு போலிருக்கக் கூடிய) ஒரு உடை, with constant radius from head to toe. இது பொது இடங்களில் ஆண்கள் தம்மை கண்களால் அளப்பது, மனதால் துகிலுரிவது, போன்றவற்றைச் செய்வதிலிருந்து தடுக்க உதவும். உள்ளே இருப்பது ஒரு மனித உயிரா (அல்லது, I, Robot மாதிரியானதொரு இயந்திரமா) என்று கூட அறிந்து கொள்ள வாய்ப்பிருக்காது. இந்த உடையிலிருக்கும்போது உட்கார்ந்தால் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. (அதாவது, அங்க அளவுகள் வெளிப்பட்டு விடக்கூடும்). ஆகவே, இதற்கு ஒரு பொறியியலாளர்தான் ஏற்ற உடையை வடிவமைக்க வேண்டும். உட்காரும்போது சுற்றளவு அதிகமாகவும், உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும், but still retaining the cylindrical shape. அல்லது ஒரு tent போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம், அதைத் தாங்கிப் பிடிக்கும் கம்பிகள் சகிதத்துடன் (அந்தக்கால ஐரோப்பிய மங்கைகள் உடுத்தியதைப்போல்). என்ன, நெரிசலான இடங்களில் கொஞ்சம் பிரச்சனையாகி விடக்கூடும். இது போன்ற உத்திகளைக் கொண்டுதான், நம் நாட்டில் (அல்லது சென்னையில்) நிலவும் வறட்சி நிலையை எதிர்கொள்ள முடியுமென்று தோன்றுகிறது. (எனது யதார்த்தமான, உணர்ச்சிவசப்படாத, அசட்டுத்தனமாக எதிர்க்காத, சிந்தனைகளின் விளைவாக).

அவரது பதிவில் கூறப்படாத விஷயம் - ஆண்களும் இதுபோல் கண்களால் துகிலுரியப்படுகிறார்களா என்பதே (கிடையாது என்று நாமாக அனுமானம் செய்துகொள்ளக்கூடாதல்லவா?). ஆண்களின் உடைகளான ஜீன்ஸ், ஷார்ட்ஸ், நெஞ்சை அணைக்கும் பனியன்ஸ் போன்றவைகளால், அவர்களது அளவுகளையும் கணித்துவிட வாய்ப்பிருக்கிறதே? மேலும் வறட்சி என்பது இருபாலாருக்கும் பொதுவிலுள்ளதுதானே? அவர்களுக்கும் இருக்கிறது தீர்வு - எல்லா ஆண்களும் சாமியார்கள் அணியும் காவி அங்கியைப்போல் ஒரு ஆடையை அணியும்படி சட்டம் பிறப்பிக்கலாம். Hairstyle / மொட்டைத் தலைகளைக்் கண்டு சிலருக்கு ரத்தக் கொதிப்புகள் அதிகமாகி விடும் அபாயத்தைப் போக்க, அனைவரையும் ஒரு முண்டாசு அணிய வைக்கலாம். எல்லோரும் விவேகானந்தரைப்போல் வளைய வரலாம்.

இதுபோல், பல புரட்சிகள் செய்து, இவ்வறட்சியைப் போக்குவோம்!!

சனி, ஜனவரி 28, 2006

தணிக்கை செய்ய மனமின்றி......

புதிய விதிகளைப் பின்பற்றி, எனது கருத்துப் பெட்டியில் தணிக்கை செய்யும் வசதியைச் செயல்படுத்தியிருந்தேன். ஆனால், மனம் ஒப்பாமல் அதை மீண்டும் செயலிழக்கச் செய்திருக்கிறேன். அதற்கு மாறாக, தமிழ்மணத்தின் அருமையான கருவிப்பட்டை வசதியை அகற்றி விட்டு, என் பதிவின் பின்னூட்டங்கள் முகப்புப் பக்கத்தில் திரட்டப் படாதவாறு மாற்றியமைக்கிறேன். இது தமிழ்மண நிபந்தனைகளுக்குட்பட்ட ஒரு செயலாக இருக்குமென்று நம்புகிறேன்.

இம்மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளாவன:

1. உங்கள் பின்னூட்டங்கள் முன்பிருந்ததைப் போலவே, உடனடியாக பொதுப்பார்வைக்கு வந்துவிடும். இதனால், என் பதிவின் மீதான உங்கள் உண்மையான கருத்துக்களை உடனுக்குடன் பொதுவில் வெளிப்படுத்த வசதியாக இருக்கும் (எனது ஈடுபாடு இல்லாமலேயே).

2. நட்சத்திரங்களைச் சொடுக்கி, உங்கள் ஆதரவையோ, எதிர்ப்பையோ தெரிவிக்கும் வசதி இனி இல்லாமல் போகிறது. ஒரு உற்சாக டானிக்காக இருந்து வந்த இந்த '+' குத்துக்களை நான் miss பண்ணப்போவது நிச்சயம். '-'களாக வந்து விழுந்தபோதும், என் கருத்து எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அறிந்துகொள்ள முடிந்தது.

3. சுதந்திரத்திற்கான விலை - இனி வரும் பின்னூட்டங்கள் தமிழ்மண முகப்பில் திரட்டப்பட மாட்டா. இதனால் இப்பதிவிற்கு 2nd round, 3rd round views கிடைக்காமல் போகின்றன. ஆகவே, 1st roundஇலேயே எனது பதிவைப் படித்து விடுங்கள் :)

4. முன்பைப் போலவே, நீங்கள் பின்னூட்டமிடுவதற்கு பிளாக்கர் கணக்கை வைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் கிடையாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தாலும், என் வலைப்பதிவில் அதை வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் கிடையாது. நீங்கள் தாராளமாக ஒரு anonymousஆக உங்கள் பின்னூட்டத்தை இட்டுச் செல்லலாம். நீங்கள் யாரென்பது எனக்கு முக்கியமல்ல, உங்கள் கருத்துதான் எனக்கு முக்கியம்.

5. முன்பைப் போலவே, கோணல்மாணலாகக் கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்துக்களைச் சரியாக அடையாளம் கண்டு அவற்றை உள்ளிடக் கோரும் word verification போன்ற கட்டாயங்களை என் பதிவில் வைக்கவில்லை. ஆகவே, நீங்கள் பின்னூட்டமிடுவதற்கு, ஏழு மலைகள் எட்டு கடல்களையெல்லாம் தாண்டத் தேவையில்லை.

6. With freedom comes responsibility – என் பதிவில் எச்சப் பின்னூட்டங்களைக் காண நேரிட்டால், தயவு தாட்சண்யமின்றி அவை நீக்கப்படும். இது குறித்த தகவல்களை, பதிவின் கீழே, பின்னூட்டப் பகுதியின் இறுதியில் காணலாம்.

7. இதோடு, எனது பதிவில் எந்தவொரு வருகையாளர் விவரமும் திரட்டப்பட்டதில்லை, இனியும் அதற்கான உத்தேசமில்லை என்ற உத்தரவாததையும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன். ஆகவே, உங்கள் privacyக்கு என்னால் எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை.

இதுவரை என் பதிவுகளுக்குப் பச்சை விளக்கைக் காட்டி வந்த தமிழ்மணத்திற்கு நன்றி. மேற்கூறிய மாறுதல்களுக்குப் பிறகும் அது தொடரும் என்று நம்புகிறேன். இல்லையென்றாலும் நலமே. ஒரு வாசகர் என் பதிவைப் பற்றிய விமர்சனத்தை வெளியிடுவதற்கு என் ஒப்புதல் தேவை என்ற நிலையைத் தவிர்ப்பதே என் குறிக்கோள். இது தமிழ்மணத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமென்றால், மற்ற பதிவர்களும் இம்மாறுதல்களைச் செய்து வாசகரின் சுதந்திரத்தைக் காக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். நான் ஒரு பதிவன் மட்டுமல்ல ஒரு வாசகனும் கூட, என்பதால் இவ்வேண்டுகோள்.


வியாழன், ஜனவரி 26, 2006

விடாது தணிக்கை

எவ்வகையான கருத்துக்களைப் பதியலாம் என்று வரையறுக்கும் விதிகளை இப்போதுதான் உள்வாங்கியிருக்கும் நிலையில், இப்போது எவ்வகையான எதிர்வினைகளைப் பெறலாம் என்று நிர்ணயிக்கும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றனவாம்.

வாழ்க, கருத்துச் சுதந்திரம்!







சனி, ஜனவரி 21, 2006

கோடுகள்

ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இரு நகரங்கள், ஐம்பது வருட இடைவெளிக்குப் பிறகு, இப்போதுதான் போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளனவாம். இரண்டும் பஞ்சாபைச் சேர்ந்தவை, ஆனால் இருப்பதோ் இருவேறு நாடுகளில். வினோதமான இந்நிலை, இந்நகரங்களுக்கு மட்டுமே ஏற்பட்ட ஒன்றல்ல. மனிதன் வரைந்த கோடுகளால் இவ்வாறு வெகு அருகாமையில் வாழந்து கொண்டிருக்கும்் மக்கள், ஒருவருக்கொருவர்் தொடர்பேயில்லாமல் நிரந்தரமாகப் பிரிந்திருக்கும் நிலைக்கு ஏராளமான உதாரணங்களைக் கொடுக்கலாம். வரலாற்றின் பிரித்தாளும் சூழ்ச்சிகளால் இன்று இரண்டுபட்டிருக்கும் பஞ்சாப்், காஷ்மீர், வங்காளம், கொரியா, ஜெர்மனி (15 ஆண்டுகளுக்கு முன்பு வரை), அரபுப் பிரதேசங்களான பாலஸ்தீனம் - எகிப்து, என்று சோகமான உதாரணங்கள் பல நம் நினைவுக்கு வரலாம். இத்தகைய சூழ்ச்சிகளின் கசப்பான நினைவுச் சின்னங்களாக இக்கோடுகள் இன்றும் நீடித்துக் கொண்டிருப்பதுதான் நாம் வெட்கப்பட வேண்டிய நிஜமாகும்.

அமிர்தசரஸ் - லாஹோர் என்ற இரு பஞ்சாபிய நகரங்கள், ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருப்பவை, ஆனால் ஒன்று இந்தியாவிலும் இன்னொன்று பாகிஸ்தானிலும். எதிர்பார்த்ததைப் போல், இவையிரண்டிற்கும் இடையே கடந்த ஐம்பது வருடங்களாக எவ்வகையான போக்குவரத்தும் இருந்ததில்லையாம். அண்மையில் தொடங்கப்பட்ட பேருந்து வசதியால் இவ்விரு நகரங்களும் மறுபடி இணைக்கப்படுகின்றனவாம். வெகு அருகிலிருக்கும் ஒரு இடத்திற்குப் பயணப்படுவதற்கான சுதந்திரம் கூட இவ்வளவு நாட்களாக அம்மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்கிற உண்மை, இன்று பேருந்து வசதி அறிமுகப் படுத்தியதைத் தொடர்ந்து நடக்கும் கொண்டாட்டங்களால் மறக்கப்படக்கூடும். இன்றைய, இருபத்தியோராம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில், மனித உரிமை என்பது எந்த அளவிலிருக்கிறது என்று நினைக்கையில் விரக்தியே மிஞ்சுகிறது. இவ்வளவு நாட்களாக அம்மக்கள் நடத்தியிருக்கக் கூடிய வணிக மற்றும் இதரப் பரிமாற்றங்கள், அதனால் கிடைத்திருக்கக் கூடிய ஆதாயங்கள், என்று தொலைந்து போன வாய்ப்புகளை நினைத்துப் பார்த்தால், ஒட்டுமொத்த இழப்புகளைக் கணக்கிட முடியாமலும் போகலாம்.

வங்காள தேசத்திலிருந்து வேலை வாய்ப்புக்காக இந்தியப் பகுதிக்குள் குடிபெயரும் மக்களைப் பற்றி அண்மையில் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்களால் நமக்குப் பிரச்சனையே, அவர்களது தேவைகளை கவனிக்க வேண்டும், அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். அவர்களுக்கு யாரும் உணவைக் கொண்டு போய் ஊட்டியெல்லாம் விடுவதில்லை, அவர்களது கடும் உழைப்பால் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களை கவனித்துக் கொள்கிறார்கள், என்று பதிலளித்தேன். இப்படி அவர்கள் சட்ட விரோதமாக நாட்டுக்குள் உட்புகுவதால், அவர்களோடு தீவிரவாதிகளுக்கும் உள்ளே நுழையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்ற வாதத்தை வைத்தார். செப்டம்பர் 11 சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருமே சட்டப்படி உட்புகுந்தவர்கள்தான், அதனால் அச்சம்பவத்தைத் தடுக்கவா முடிந்தது என்று பதிலுக்கு வினவினேன். அதெப்படி வேற்று நாட்டவர்கள் நம் நாட்டிற்குள் வரலாம், நாடு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமல்லவா என்றார். இப்படிக் கூறுவதற்கு நமக்கென்ன அருகதையுள்ளது, திரைகடல் ஓடியும் திரவியம் தேடுபவர்களல்லவா நாம், நமக்கொரு நியதி மற்றவர்களுக்கொரு நியதியா, என்று கேட்டேன். நண்பர் கோபமடைந்து இதற்கு மேல் தன்னால் வாதிட முடியாதென்றார். ஒருவர் தனது திறமைக்கு எங்கு மதிப்பும் வாய்ப்பும் அதிகம் என்று நினைக்கிறாரோ அங்கு குடிபுகுவதற்கு அவருக்கு உரிமை இருக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. இன்றைய நிலையில், மனிதன் வரைந்த கோடுகள் முற்றிலும் அழியும் வரையில், இது ஒரு கனவாக மட்டுமே இருக்க முடியும்.

பி.கு: நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் Hotel Rwanda என்றத் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அது தொண்ணூறுகளில் நடந்த ஒரு இனக்கலவரத்தைப் பற்றிய படமாகும். அதைப் பார்த்த அனுபவமும் இப்பதிவில் வெளியிட்ட எனது எண்ணங்களை வலுப்பெறச் செய்தது. நிலக்கோடுகள் மட்டுமல்லாமல் மனக்கோடுகளும் முற்றிலும் தகர்க்கப்பட வேண்டும்.

வெள்ளி, ஜனவரி 06, 2006

குரோ அப், டியூடெட்

வேறு வேலைகளில் மும்முரமாக இருப்பதால், சில நாட்களுக்குப் பதிவுகள் போட வேண்டாமென்று இருந்தேன். ஆனால், எனது முடிவை மாற்ற வேண்டிய நிலைமை வந்து விட்டது, புத்தாண்டுத் தீர்மானங்கள் சிலருக்கு ஒரு வாரத்திலேயே உடைவதைப்போல் :)

நான் அண்மையில் தேசிபண்டிட் தளத்தில் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. தலாஸ்ஸா மிக்ரா என்ற பெண் வலைப்பதிவர் எழுதிய ஒரு பதிவை, முன்னுரையுடன் வழங்குகிறது இப்பக்கம். "ஆண்களைக் காமப் பொருட்களாகப் பார்ப்பதிலுள்ள இன்பங்களை, மிகுந்த உற்சாகத்துடன் விவரிக்கிறார் தலாஸ்ஸா" என்பதே பதிவிற்கான அறிமுக வாக்கியம். பதிவும் நம் எதிர்பார்ப்புகளுக்குச் சற்றும் குறை வைக்காமல், சுவாரசியமாகச் செல்கிறது. "சபாஷ்", "பலே", ", நானும் அப்படித்தான்" என்று ஒரு இருபத்தி ஐந்து பின்னூட்டங்களையும் குவித்திருக்கிறது பதிவு. படித்து, சிரித்து விட்டு நகர்ந்தேன்.

ஓரிரு நாட்களுக்கு முன், நம் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு ஆண் பதிவர் அவரது பதிவில், ஒரு மழையில் நனைந்த மங்கையின் அழகை விவரிக்கப் போக, அதற்கு உடல்நல, மனநல ஆலோசனைகள், பெண்ணியப் பரோட்டாக்களெல்லாம் தட்டில் வந்து விழுகின்றன. அவரது பதிவும் தேசிபண்டிட்டில், ஆனால் கடுமையான விமர்சனங்களுடன், குறிப்பிடப்படுகிறது. ஒட்டு மொத்தத் தமிழ் டியூட்களையும் நோக்கி அறிவுரைகள் பறக்கின்றன, ஆபாசத்தையும் அயோக்கியத்தனத்தையும் கைவிடும்படி.

இத்தகைய முரண்பாடுகளால் ஒன்றுமறியாதத் தமிழ் டியூட்கள் குழம்பப் போவது நிச்சயம். தலாஸ்ஸாவின் பதிவைப் படித்ததால் வந்த நம்பிக்கை, அதற்குப்பின் வந்த குற்றச்சாட்டுகளால் தகர்ந்து போனதொன்றே மிச்சம். உடலழகு ஆபாசமா? அதை இரசிப்பது ஆபாசமா? 'மழையில் நனைந்ததால் ஒரு பெண் மேலும் அழகாகக் காட்சியளித்தாள்' என்றக் கருத்தை வெளியிட்டது தவறு என்று கூறப்படுகிறது. இதில் தவறு எங்கென்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. நம் சூழலில், நம்மால் உடுத்தபடும் தொளதொள ஆடைகளால், உடலழகு என்பது மணமாகும் வரை கற்பனையில் மட்டுமே உணரக்கூடிய ஒரு அம்சமாக இருக்கிறது. அதைப்பற்றிப் பேசுவதும், நினைப்பதும் குற்ற உணர்வை அளிக்கக்கூடிய செயல்களாகி விட்டன. இந்நிலையில், ஒரு மழையால் வெளிப்பட்ட ஒரு அழகுணர்வை நினைவு கூர்ந்ததாகக் குறிப்பிட்ட அப்பதிவில், உண்மையாகவே எனக்கு மனநலக் குறைவாக எதுவுமே தோன்றவில்லை.

நாம் ஏன் உடலை ஒரு அவமானச் சின்னமாகக் கருத வேண்டும்? நம் அறிவு, ஆற்றல், சாதனைகள் என்பவற்றைப் போல் நம் உடலழகும் ஒரு போற்றுதலுக்குரிய அம்சம்தானே? ஒருவரிடமுள்ள மற்ற சிறப்புகளைப் போல், அவருடைய உடலழகையும் கருதலாமல்லவா? இதில் ஆபாசமும் குற்றவுணர்வும் ஏன்?

ஒட்டுமொத்தத் தமிழ் டியூடெட்களையும் நோக்கியெல்லாம் நான் அறிக்கைகள் விடப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட டியூடெட்டுக்கு இந்தப் பதிவு கண்ணில் படுமானால் மகிழ்ச்சியே :)

| | | |