ஞாயிறு, ஏப்ரல் 23, 2006

தமிழ்ப்பதிவுகளில் ஆங்கிலம் ஏன்?

(எச்சரிக்கை: மார்க்கெட்டிங் பதிவு)

மேலே 'மார்க்கெட்டிங்' என்று ஆங்கிலத்தில் எழுதியதைச் சுட்டிக் காட்டத் துடிதுடிக்கும் உங்கள் கரங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஆங்கிலத்தை எதிர்த்து எழுதப்பட்டதல்ல. நானும் அவ்வப்போது ஆங்கிலச் சொற்களை இடையிடையே புகுத்தி எழுதுபவன்தான், மற்றும் அவ்வாறு எழுதுவது அவரவரின் சொந்தத் தேர்வு என்பது என் கருத்து. அதில் விமர்சனம் செய்வதற்கு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இந்தப் பதிவு எழுதக் காரணம், பின்னூட்டங்களில் பெருகி விட்ட ஆங்கிலப் பயன்பாடு. வழக்கமாக தமிழில் எழுதும் பழக்கமுடையவர்களும் அவ்வப்போது, "மன்னிச்சிக்கோங்க, கலப்பைய வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன். இப்போதைக்கு ஆங்கிலத்துல உழுதுக்கறேன்" என்று உழுதுவிட்டுப் போய்விடுகிறார்கள். இதில் பல, தங்கிளிஷில் வேறு. kodumaidaa, saami. இன்னொன்று, அண்மையில் கலந்து கொண்ட சில விவாதங்களில் என்னை நோக்கி ஆங்கிலத்தில் கேள்விக் கணைகள் தொடுக்கப் பட்டதால் அவற்றிற்கு நானும் ஆங்கிலத்திலேயே விடையளிக்க வேண்டி வந்தது. அதற்கான எதிர்வினைகள் மறுபடியும் ஆங்கிலத்தில். இப்படியாக, தமிழில் எழுதப்பட்ட ஒரு பதிவை பற்றி ஆங்கிலத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. நானும் அதற்கு உடந்தை :) ஒருவேளை நான் மொழி மாறாமல்் தமிழிலேயே தொடர்ந்திருக்க வேண்டுமோ என்னவோ. பொதுவாக, கேள்வி எந்த மொழியில் கேட்கப்படுகிறதோ அதே மொழியில் விடை தருவது நாகரீகமான செயல் எனபதானால்தான் நான் ஆங்கிலத்திற்கு மாறினேன். அப்படிப் பார்த்தால், ஒரு தமிழ்ப்பதிவுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் விடுவதும் அநாகரீகமானதுதானே? இந்த மாதிரியான semantic பிரச்சனைகள் பற்றி ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

கலப்பையை வீட்டில் வைத்து விட்டேன் என்று ஆங்கிலத்திலோ தங்கிளிஷிலோ எழுதுபவர்கள், மற்றும் தமிழில் உள்ளிட வேண்டுமென்றால் அ, ஆ, இ, ஈ என்று label செய்யப்பட்ட keyboard வைத்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுக்காகவே இப்பதிவு. முதல் வகையைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களுக்குமுள்ள வேறுபாடு, ஐ.ஐ.டி மாணவர்களுக்கும் சி.ஐ.டி மாணவர்களுக்குமுள்ள வேறுபாட்டைப் போன்றது என்பதால் இருவருக்கும் வெவ்வேறு ஆலோசனைகள் வழங்குகிறேன். (சி.ஐ.டி. ரொம்பல்லாம் மோசம் கிடையாதுங்க, நானும் அதன் வெளியீடுதான் :) )

முதலில், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி. A, B, C, D என்று label செய்திருக்கும் ஆங்கில keyboardகளைக் கொண்டே தமிழில் தட்டச்சு செய்யலாம். இப்பக்கத்திலுள்ள சுரதாவின் புதுவை தமிழ் எழுதியைக் கொண்டு நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, உங்களுக்கு வேண்டிய தமிழ் வாக்கியங்களைப் பெறலாம். அவற்றை வெட்டி, வேண்டிய பின்னூட்டப் பெட்டியில் ஒட்டி, சமர்ப்பித்தால், உங்கள் பின்னூட்டங்களும் தமிழிலேயே இடப்படும். தொடக்கத்தில் தட்டச்சுவது கடினமாக இருக்கும், நாளடைவில் பழகி விடும். அதற்குப் பிறகு நீங்களும் கலப்பையைத் தூக்க ஆரம்பித்து விடலாம்.

இப்போது முதல் வகை. எனக்கு நிஜமாகவே புரியாத புதிர் - நீங்களும் மேலே குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றி தமிழிலேயே பின்னூட்டமிடலாமே, ஏன் செய்வதில்லை? கலப்பைக்கு பழகிப்போனதால் வேறு நிரலிக்கு மாறிக் கொள்ள இயலவில்லையா? ் அப்படியென்றால், மற்றும் நீங்கள் பயன்படுத்தும் கணினியில் Firefox உலாவி நிறுவப்பட்டிருக்கிறதென்றால், என்னால் கலப்பையில்லாமலேயே தமிழில் உழுவதற்கு ஒரு உத்தியைப் பரிந்துரைக்க முடியும். அதுவே, தமிழாவின் TamilKey Firefox Extension. 10KBக்கும் குறைவாகவே இருப்பதால், இதை ஒரு நொடியில் தரவிறக்கி நிறுவ முடியும். நிறுவிய பின், கலப்பையைப் போன்றே, இதைக் கொண்டும் உலாவியில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம். அஞ்சல் (romanized) மற்றும் தமிழ்நெட் 99 ஆகிய இரு வடிவமைப்புகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. Ctrl+F12 அழுத்தினால், உங்கள் உள்ளீடுகள் அஞ்சல் முறையில் தமிழில் பதியும். F12 அழுத்தினால் தமிழ்நெட்99 முறையில் தமிழில் பதியும். F9 விசையை வைத்து ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ளலாம். விண்டோஸ் இயங்கு தளத்தில் மட்டுமல்லாது லினக்ஸ் போன்ற பிற இயங்கு தளங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். Chatzilla அரட்டை நீட்சியில், இதைக் கொண்டு தமிழில் chatting செய்யலாம். உங்கள் Gmail கணக்கிலிருந்து தமிழிலேயே மின்மடல்கள் எழுதி அனுப்பலாம். இது போன்ற வசதிகளால், ் பயணத்தின் போதும் பொது இணைய மையங்களிலிருந்து உங்களால் தமிழ்க்கணிமையைத் தொடர வாய்ப்பிருக்கிறது (Firefox உலாவி மட்டும் இருந்துவிட்டால்).

சனி, ஏப்ரல் 22, 2006

ஒரு வழக்கமான பதிவு

காடு மலைகள்
காணாமல் போயின
நதியும் குளமாகி
மறைந்தே போனது
முல்லையும் மருதமும்
பாலையாய் ஆனது
குறிஞ்சியோ விரைவாக
சமவெளியாய் மாறுது

விலங்குகள் வேட்டையால்,
மெதுவாய் அழிந்தன
எஞ்சியவை மரித்தன
உணவு நீரின்றி
.
கடலின் நிறமும்
கருமையாகிப் போனதால்
மீன்களும் சுறாக்களும்
மிதந்தன நீரின் மேல்

தீப்பெட்டிக் கட்டடங்கள்
எங்கும் முளைத்தன
புகையின் மூட்டமும்
நாசியைத் துளைத்தது
இரவு பகலானது
இரைச்சல் மயமானது
மனிதரின் சாதனை
இவ்வுலகின் வேதனை
.

http://www.earthday.net/


ஞாயிறு, ஏப்ரல் 16, 2006

சுயநலவாதம்

சமீபத்திய இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு எழுந்த எதிர்வினைகள் பற்றி ஆங்கிலத்தில் எனது விமர்சனம் - Selfishism. சற்றே நீண்டுவிட்டதால், தமிழாக்குவதற்கு அயர்ச்சியாக உள்ளது. ஆங்கிலத்திலேயே படித்து விடுங்களேன், தயவு செய்து? :)

வெள்ளி, ஏப்ரல் 14, 2006

காத்திருந்து..... காத்திருந்து.......

வேளை கெட்ட வேளையில்
உனை miss பண்ணும் இதயத்தை
சாந்தப் படுத்திடவே

குறுஞ்செய்தியும் அனுப்பி
அழைப்பும் விடுத்தேன்,
கிடைத்ததா, கண்மணியே?

காத்திருக்கேன்் இங்கு
தூதுவனை நோக்கியே,
வருவாய் நீயென்றே.

டிவியும் சலித்ததின்று,
இன்னிசையும் இறைச்சலாய்
தோன்றுதே, என்ன செய்வேன்?

சீக்கிரம் வந்துன்னைச்
சீண்டுமின்பம் தா,
தாமதிக்காதே, அன்பே.

அதுவரை வரிகளை
ஒடித்துக் கவிதை போல்
வடித்து வலையேற்றுவேனே.


வெள்ளி, ஏப்ரல் 07, 2006

வர்ணாஸ்ரமமக் கொள்கை

நேற்றே பாஸ்டன் பாலாவின் இடுகையில் இது குறித்து பின்னூட்டமிட்டேன்். அவ்வளவாக கவனம் பெறாததால்், இந்தத் தனிப்பதிவு.

இந்தியாவிலேயே பகுத்தறிவின் பாசறையாக விளங்கும் தமிழ்நாட்டில், ஒரு முன்னணி நாளிதழ் அதன் வாசகர்களுக்கு, இத்தேர்தலில் போட்டியிடும் சில பெண் வேட்பாளர்களைப் பற்றிய சில முக்கியத் தகவல்களை, 'நச்சென்று' வழங்கியுள்ளது. அத்தகவல்களைக் காண, கீழேயுள்ள படத்தைச் சொடுக்குக. (அது வழங்கியுள்ள அதிமுக்கியத் தகவல்களை சிவப்புக் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.)

வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு!

வியாழன், ஏப்ரல் 06, 2006

விரதம்

விஞ்ஞான வளர்ச்சிகளால் சாத்தியமடைந்த இன்றைய நகர்ப்புற, நவீன வாழ்க்கை முறைகள் இன்று அனைவராலும் ஆவலுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மனித இனத்தின் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளாக முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய வசதியான வாழ்வு முறைகளால், வாழ்க்கை முன்பை விட சுலபமடைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு தெளிவான விடைகள் கிடைப்பது அரிதே.

உடலுழைப்பு குறைந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இத்தகைய மாற்றத்தால் மக்களுக்கு உடற்பயிற்சி குறைந்து போய், அது் பல மருத்துவச் சிக்கல்களை உண்டாக்குவதையும் காண முடிகிறது. 1000+ cc எஞ்சின் (உந்துபொறி என்று தமிழில் அழைக்கலாம்) கொண்ட சொந்த வாகனங்கள், உலகின் மூலை முடுக்குகளையெல்லாம் இணைக்கும் 6/8 வழிப்பாதைகள் கொண்ட நெடுஞ்சாலைகள், தும்மி முடிப்பதற்குள் கொண்டு சேர்ப்பிக்கும் ஆகாய விமானங்கள், என்று உலகில் பயணம் செய்வது மிக எளிதான ஒரு செயலாகி விட்டது. அதற்கு நாம் கொடுக்கும் விலை global warming எனப்படும் உலகளாவிய சூடேற்றமாகும். இதனால் உலகின் பனிப்பாறைகள் உருகி, கடல்களின் உயரம் பெருகி, ஒரு நூறாண்டுகளுக்குள்ளாகவே பல தீவுகள், மாகாணங்கள் ஆகியன கடலால் விழுங்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் மறையப்போகும் அபாயம் நம்மை அச்சுறுத்துகிறது. குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்பதனப்பெட்டிகள் ஆகியவை உண்மையிலேயே வரப்பிரசாதம்தான், அதுவும் வெப்பநிலை அதிகமுள்ள நம்மைப்போன்ற நாட்டினருக்கு. ஆனால், ஆவை வெளியிடும் வாயுக்களால், நம் உலகின் ஓசோன் காற்று மண்டலம் ஒரு சைக்கிள் டியூப் பஞ்சர் ஆவது போல் பஞ்சர் ஆகிக் கொண்டிருக்கிறது. இதனால் சூரியக் ஒளியிலுள்ள சில அபாயகரமான கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கும் அபாயமேற்பட்டிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முகத்தில் களிம்புகள் பூசிக் கொண்டு களத்திற்கு வருவது இத்தகைய அபாயத்திலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளுவதற்கே.

இவ்வாறாக, எது முன்னேற்றம், எங்கே முன்னேற்றம் என்ற கேள்விக்கு விடை மழுங்கலாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. இதனால் மட்டுமே, முன்னேற்றம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் எந்தவொரு மகா / மெகா திட்டத்தையும் ஒரு சந்தேகத்துடனே பார்க்க வேண்டியது அவசியமாகிறது. மனித இனத்தின் / உலகின் வருங்காலத்திற்கு பாதிப்பு என்ற கவலையாவது தொலைநோக்குப் பார்வை என்ற வகையில் வரலாம். அது அனைவருக்கும் எப்போதும் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஆனால், நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் மகா திட்டங்களால் பலருக்கு உடனடி பாதிப்பு என்பது தெள்ளத் தெளிவான ஒரு உண்மை. இருந்தும் வருடா வருடம் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கோடிகள் விரயமாகின்றன. தங்க நாற்கரங்கள் அமைக்கப்படுகின்றன. சேது சமுத்திரக் கால்வாய்கள் அகழப் படுகின்றன. அடுக்கு மாடிக் கட்டடங்கள் எழுப்பப் படுகின்றன. பாலங்கள் கட்டப்படுகின்றன. அணைகள் உயர்த்தப்படுகின்றன. அணு உலைகள் முடுக்கி விடப்படுகின்றன. சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன.

இவை மேற்கொள்ளப்பட்டு, திட்டம் தொடங்கும் நாள் வரை அது பற்றிய ஒரு முன்னறிவிப்பு கூட அளிக்கப்படாமல், அப்பகுதிகளில் காலகாலமாய் வாழ்ந்து வந்த விவசாயிகள், பழங்குடி இனத்தவர், குடிசை வாழ் மக்கள், மீனவர்கள், சிறுவணிகர்கள் என்று நம் நாட்டில் taken for granted ஆசாமிகள் ஏராளம். தம் அன்றாடப் பிரச்சனைகளே தம்மை மூழ்க்கடிக்கும் நிலையில், இவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் சக்தியை முற்றிலும் இழந்து நிற்கிறார்கள். கல்லாமை, வெளியுலகத் தொடர்பின்மை போன்ற போதாமைகளாலும் இவர்களால் தங்கள் உரிமைகளை முழுமையாக நிலைநாட்ட முடியாமல் போய்விடுகிறது. இத்தகைய இயலாமைகளால் அவதிப்படும் இப்பெரும் மக்கள் கூட்டத்தை, அரசும், வர்த்தகமும் எளிதில் கிள்ளுக்கீரைகளாகக் கிள்ளி எறிந்து விட முடிகிறது. தூசித் தட்டுவதைப் போல் தன் ஒட்டடைக் குச்சிகளான காவல் துறை, மற்றும் நீதித்துறை ஆகியவை கொண்டு இவர்களை விரைவில் அப்புறப்படுத்த முடிகிறது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு, படித்த மக்கள் கூட்டமான நம்மைப் போன்றோரும் உடைந்தையே. ஐந்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுப் போனால், நமக்கு வாழ்க்கையே ஸ்தம்பித்து விடுகிறது. அமெரிக்காக் காரனிடமிருந்து அணுசக்திக்கான எரிபொருள் கிடைக்குமா என்று யோசிக்கிறது புத்தி. ஒன்றிரண்டு அடிகள் அகலமுள்ள வாகனங்களுக்கு பதிலாக ஐந்தாறு அடிகள் அகலமுள்ள வாகனங்களில் அனைவரும் செல்வதால் ஏற்படும் நெரிசலால் பயண நேரம் மும்மடங்காகப் பெருகியதால், சாலைகளை அகலப்படுத்தக் கோரி Letters to the Editor எழுதத் தூண்டுகிறது நம் பொறுமையின்மை. நம் 24 மணி நேர தண்ணீர் தேவைகள் பூர்த்தியடைய, கங்கையையும் காவிரியையும் இணைக்குமாறு அனைத்து ஊடகங்களிலும் அழுத்தங்கள் வேறு. விமான நிலையங்கள் பேருந்து நிலையங்கள் போலாகி விட்டனவே / விடுமே என்றெல்லாம் ஆழ்ந்த கவலைகள் நமக்கு. அவற்றை விரிவாக்கக் கோரி தலையங்கங்கள், தொலைக்காட்சி நிலையத்திற்கு குறுஞ்செய்திகள், மற்றும் இத்தகைய அரசு திட்டங்களுக்கு கைத்தட்டி ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகள்...... பெங்களூருக்கு ஏழு மணி நேரம் எடுத்துக் கொண்ட சாலைவழிப் பயணத்தை மூன்று மணி நேரத்திலேயே முடிக்க ஆசை, ஆகவே நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு நிபந்தனைகளற்ற ஆதரவு....... இப்படி நம் நிலைப்பாட்டில் சுயநலம் ஒன்றையே காணமுடிகிறது. இத்திட்டங்களால் தூசி தட்டப்படுவதைப் போல் அப்புறப்படுத்தப் படும் மக்களைப் பற்றிய கவலையோ, அக்கறையோ சிறிதளவுமில்லை நமக்கு.

நல்லவேளையாக நம்மைப் போலல்லாமல், சில படித்த அறிவுஜீவிகள், அப்பாவி மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். சுந்தர்லால் பகுகுணா, பாபா ஆம்தே, அன்னா ஹசாரே போன்ற நல்லுள்ளம் படைத்தவர்கள் வரிசையில் கடந்த இருபது ஆண்டுகளாக மேதா பட்கர் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று் திரட்டி, நர்மதா அணைத் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார். இவரது போரட்டத்திற்கு அருந்ததி ராய் போன்ற பிரபலங்களின் ஆதரவும் உண்டு. போராட்டத்தின் உச்சக் கட்டமாக, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு, அரசை அதன் திட்டத்தை மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் மேதா. அவரது இப்போராட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதோடு, இத்தகைய அணைத்திட்டங்களை அவசியமாக்கும் நம் நுகர்வுப் பழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். நம் தேவைகளை சற்று குறைத்துக் கொண்டிருந்தால்், இன்று மேதாவின் உண்ணாவிரதத்திற்குத் தேவையிருந்திருக்காதோ என்னவோ.