புதன், டிசம்பர் 16, 2009

ஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்

காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நிலோஃபர், அஸியா என்ற இரு பெண்களின் மர்மமான மரணம் குறித்து பெரிய சர்ச்சை நிகழ்ந்து வந்தது. அது குறித்த விரிவான தகவல்கள் இங்கே. அந்த இரு பெண்களும் இந்திய ராணுவப் படையினரால் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அம்மக்களிடையே வலுவான சந்தேகமும் அதை உறுதிப்படுத்தும் வகையிலான சாட்சியங்களும் கிடைத்திருக்கும் நிலையில், இந்த விசாரணை CBIயிடம் ஒப்படைக்கப்பட்டு அண்மையில் அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது.

சடலங்களின் மீது காணப்பட்ட கழுத்தை நெரித்துக் கொன்றதற்கான தடையங்கள், வன்புணரப்பட்டதற்கான அறிகுறிகள் (semen traces ஆகியன) ஆகிய அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, அந்த இரு பெண்களும் மரணமடைந்தது வெள்ள நீரில் மூழ்கியதினால்தான் என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் வகையிலான ஒரு அறிக்கையை CBI வெளியிட்டுள்ளது. அந்தப் பெண்களின் சடலங்கள் ஒரு ஒடையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது ஒரு வசதியான காரணமாக அமைந்து விட்டது, இத்தகைய கண்துடைப்பு அறிக்கையை வெளியிடுவதற்கு. எதிர்பார்த்த வண்ணமே, இத்தகைய கண்துடைப்பு முயற்சி / உண்மைக் குற்றவாளிகளை மூடி மறைக்கும் மோசடியை எதிர்த்து கலவரம் வெடித்துள்ளது காஷ்மீர் பள்ளத்தாக்கில். அதற்கு இந்திய ஊடகங்களின் எதிர்வினையும் எதிர்பார்த்த விதமாகவே அமைந்தது.

இந்த காட்சியைப் பாருங்கள். Denial or Mistrust? என்று பெரிதாக தலைப்பிட்டுக் கொண்டு, காஷ்மீர் மக்களின் இந்தக் கொந்தளிப்புக்கான காரணமே தங்களுக்கு விளங்கவில்லையே என்று பாசாங்கு செய்து கொண்டு, கூசாமல் புளுகிக் கொண்டிருக்கின்றனர். எட்டு மாதக் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பது போல் இருக்கிறதாம் CBIயின் அறிக்கை. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் பிரிவினைவாதிகள் என்று வெட்கமில்லாமல் CBIயின் கேடு கெட்ட செயலுக்கு சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கின்றன நமது ஊடகங்கள். இன்னொரு தொலைக்காட்சியான Times Now சானலோ, இன்று தீவிரவாதிகள் படுகொலை செய்த ஒரு பெண்ணைப் பற்றி ஒளிபரப்பி, "இதையும் கண்டிப்பார்களா பிரிவினைவாதிகள்? அவர்களின் நேர்மை இதோ சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது" என்று சிறுபிள்ளைத்தனமான கூச்சலில் ஈடுபட்டுள்ளது. கயர்லாஞ்சி அட்டூழியத்திற்கும், 26/11 பயங்கரத்திற்கும் ஒரே அளவுகோல் கொண்டுதான் உங்கள் சானலில் எதிர்ப்பு தெரிவித்தீர்களா? என்று கேட்க வேண்டும் போலிருந்தது.

மேலே உள்ள NDTV நிகழ்ச்சியில் உண்மை பேசிய ஒரே ஒருவர், ஒரு பெண்ணுரிமை அமைப்பைச் சார்ந்த ஒரு பெண்தான். இறந்து போன இரு பெண்களையும் வெள்ளம் வந்து அடித்துக் கொண்டு போனதாகச் சொல்லப்படும் அந்த ஓடையில் எப்போதும் கணுக்காலளவுக்குதான் தண்ணீர் ஓடுமாம். அத்தகைய ஓடையில் மூழ்கிச் சாவது எவ்வாறு என்ற நியாயமான கேள்வியை எழுப்பினார் அந்தப் பெண். அதை உர்றென்று கேட்டுக் கொண்டிருந்த பிரேம் ஷங்கர் ஜா என்ற நாட்டுப்பற்றுச் செய்தியாளர் (Outlookஐச் சேர்ந்தவர்?), "ஆமாம், ஆனால் திடுதிப்பென்று வெள்ளம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பனிமலைகள் உருகுவதால் அவ்வாறு ஏற்படக்கூடும்" என்று காதில் பூச்சுற்றும் வேலையில் இறங்கினார்.

ஜனநாயகத்தின் தூண்கள் என்று விவரிக்கப்படும் ஊடங்களின் உண்மை முகம், இந்தியாவைப் பொறுத்த வரை, இதுதான். அநீதிக்குத் துணைபோவது, உண்மைகளை மூடி மறைப்பது, நியாயமாக எழும் சந்தேகங்களை / எதிர்ப்புகளை சிறுமைப்படுத்துவது...... தூ! என்று காறி உமிழ வேண்டும் போலுள்ளது.