ஞாயிறு, பிப்ரவரி 26, 2006

தமிழ் ஒருங்குறி - நியூ

இப்போது பழைய ஒருங்குறி, புதிய ஒருங்குறி என்று ஆங்காங்கே சலசலப்புகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பதிவு தற்போது புழக்கத்திலுள்ள ஒருங்குறி பற்றியும், அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் TUNE பற்றியுமான விமர்சனங்களை வைப்பதற்கே. இவ்விஷயத்தைப் பற்றிய சரியான புரிதலைப் பெற இக்கட்டுரை உதவக்கூடும் (நன்றி: டைனோ). மேலும் இராம.கி.யும்(சுட்டி #1, சுட்டி #2) செல்வராஜும் இதனைப் பற்றி சிறப்பாக விளக்கியுள்ளார்கள் (அவசியம் படிக்க வேண்டிய இடுகைகள்). இவையனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட நிலையில், ஒரு சாமானியனாக என் நிலைப்பாட்டை இங்கு வழங்குகிறேன். (இது பற்றிய எனது முந்தைய பதிவு - பின்னூட்டங்களில் உள்ள தகவல்களுக்காக)

தற்போதைய ஒருங்குறியிலுள்ள முக்கியமான பிழை அதில் உயிர்மெய்யெழுத்துக்கள் உருவாக்கப்படும் விதம்தான். ஒரு பள்ளி மாணவனுக்கும் தெரியும், க = க் + அ, கா = க் + ஆ,........... போன்றப் புணர்ச்சி விதிகளை. ஆனால், ஒருங்குறியை உருவாக்கிய சான்றோர்களோ, இந்த அடிப்படையை கூட மதிக்காமல், க் = க + ஃ, கா = க + ஆ,........... என்ற புது வழியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். இதனால், எளிதில் கிடைத்திருக்கக் கூடிய ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.

எனக்குத் தெரிந்த வரையில், Tamil is a highly structured language. அதன் உறுதியான வடிவமைப்பினால், அதன் இலக்கண விதிகளைக் கொண்டே அதைக் கணிமைப்படுத்துவது எளிது. மொழியின் அடிப்படைகளைக் கடாசி விட்டு, க + ஆ, க + இ என்றெல்லாம் எழுத்துக்களை உருவாக்கியதால், இன்று நமக்கு எளிதில் கிடைத்திருக்கக் கூடிய ஒரு வசதி - கணிமையாற்றலால் சொற்களைத் தேடிப் பெறும் வசதி, ஒரு கைக்கெட்டாத கனியாகி விட்டது. ஒற்றில் முடியும் பெயர்ச் சொற்கள் - கோயமுத்தூர், சங்கர், ஜெயமோகன்....... போன்றவைகளை ஒரு ஆவணத்திலிருந்து தேடியெடுக்கும் வசதி இதனால் தாரை வார்க்கப் பட்டுவிட்டது. ஏனென்றால், அவை 'கோயமுத்தூரில்' (கோயமுத்தூர + இல்), 'சங்கரின்' (சங்கர + இன்), 'ஜெயமோகனை' (ஜெயமோகன + ஐ), என்றெல்லாம்தான் பெரும்பாலும் அந்த ஆவணத்தில் இடம் பெற்றிருக்கும். அவற்றை தேடிப் பெறுவதற்கு, "ஜெய ஜய சங்கர" என்று் முழங்க வேண்டியதுதான்.

இன்னும் சில சிக்கல்களைப் பற்றிக்் கூறுகிறேன், கேட்டுக்கொள்ளுங்கள். 'திருக்குறள்' அல்லது 'கம்பன்' என்ற சொல்லை எங்கிருந்தாவது select & copy செய்கிறீர்கள். அதைக் கொண்டு போய் paste செய்தால் வருவதென்ன? 'திருக்குறள' அல்லது 'கம்பன'. இன்னொரு சிக்கல், ஒரு சொல்லுக்குப் பிறகு full-stopஓ, commaவோ வைக்க மறந்து விட்டதால், cursorஐ அங்கு நகர்த்திச் சென்று, வேண்டிய நிறுத்தக் குறியீட்டைப் புகுத்துகிறீர்கள். உ-ம், 'நன்றி' என்பதற்குப் பிறகு full-stop வைக்கிறீர்கள். ஆனால், full-stop விழுவதோ, இவ்வாறு ----> 'ற.ி' மற்றொன்று - நேற்று ஒரு நண்பருடன் அரட்டையில், "கிருஷ்ணா கஃபேயில் என்ன சாப்பிட்டே?" என்று கேட்க முயன்ற போது, அது 'கஃபே'யை 'க்பே' என்று மாற்றி டென்ஷனாக்கியது. இது போல் பல சிக்கல்கள் இருக்கின்றன, இப்போதுள்ள ஒருங்குறியில்.

இப்போது TUNE எனப்படும் பயங்கரத்தைப் பற்றிப் பார்ப்போம். 'வெச்சா குடுமி, சிரைச்சா மொட்டை' என்பது போல், தற்போதைய ஒருங்குறியின் உயிர்மெய் புணர்ச்சி விதியில் தவறிருக்கிறது என்பதற்காக, புணர்ச்சி என்பதே இல்லாமல் ஒழித்துக் கட்டி விட்டு், ஒவ்வொரு உயிர்மெய்யெழுத்துக்கும் ஒரு தனி குறியீடு வைக்கப்பட்டிருக்கிறதாம். இவ்வாறு, மொத்தமாக முன்னூத்தி சொச்சம் குறியீடுகள். மொழியின் அடிப்படை என்ன? உயிர்மெய் என்பது ஒரு மெய்யெழுத்தும் ஒரு உயிரெழுத்தும் புணருவதால் ஏற்படும் கூட்டெழுத்து என்பதே. ஆகவே, அதை அப்படியே விட்டு வைப்பதுதான் மொழிக்கு நாம் செலுத்தும்் மரியாதை. உயிர்மெய் என்பது இரு குறியீடுகளைக் கொண்டே குறிக்கப்பட வேண்டும். அதை ஒரு குறியீடாகச் சுருக்குவதால் என்ன பயன்? இந்த ஏற்பாட்டில், 'இவன்' என்ற சொல் 'இவனால்' (இவனா + ல்), 'இவனை' (இவனை), 'இவனோடு' (இவனோ + டு), 'இவனிடம்' (இவனி +டம்) ஆகியவற்றில் இடம்பெறவில்லை என்பது, அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்ட அவற்றின் TUNE representationஐப் பார்த்தாலே் புரியும். முன்னூற்றுக்கும் மேற்பட்ட எண்களுடைய code set மட்டும் நமக்குக் கிடைத்துவிட்டால், நமது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற தவறான எண்ணமும் ஆபத்தானது. 50 சொச்சம் குறியீடுகள் இருந்த இடத்தில் 300 சொச்சம் குறியீடுகளை வைத்துக் கணிமை செய்ய வேண்டுமென்றால், அதற்கு செயலியாற்றல் (CPU power), நினைவகத் தேவைகள் ஆகியன பல மடங்கு பெருகும் (இல்லாவிட்டால் கணிமைச் செயல்பாட்டின் வேகம் குறையலாம்). P4 / P5களுக்கு வேண்டுமானால் இது ஒரு பொருட்டாக இல்லாதிருக்கலாம். ஆனால் நாம் கிராமங்களுக்கெல்லாம்் கணினிகளைக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், lowest common denominatorஐத்தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். (சிம்ப்யூட்டர், கைக்கணினி, செல்பேசி, இதர embedded கணினிகளுக்கான இடைமுகங்கள் etc etc). We need a computing platform that's lean & mean.

எனது பரிந்துரைகள்:
  1. கீழ்க்கண்ட குறியீடுகளே இடம்பெற்றிருக்க வேண்டும்
    • உயிரெழுத்துக்கள் 'அ' விலிருந்து 'ஔ' வரை (and not 'ஃ' to 'ஔ')
    • ஆய்த எழுத்து
    • மெய்யெழுத்துக்கள் 'க்'இலிருந்து 'ன்' வரை (இலக்கண வரிசைப்படி)
    • கிரந்த எழுத்துக்கள் 'ஸ்'இலிருந்து 'க்ஷ்' வரை, மற்றும் 'ஸ்ரீ'
    • உயிர்மெய்க் கீற்றுக்கள் (கால், கொக்கி, கொம்பு etc etc)
    • தமிழ் எண்கள் மற்றும் சிறப்புச் சின்னங்கள்
  2. உயிர்மெய்யெழுத்து = மெய்யெழுத்து + கீற்றெழுத்து என்ற அடிப்படையில் புணர்ச்சிகள் ஏற்பட வேண்டும் (க = க் + அ, கா = க் + ஆ, இத்யாதி, இத்யாதி)
  3. grapheme boundary vs. word boundary வேறுபாட்டை நிரலிகள் அறிந்திருக்க வேண்டும் (if they claim Unicode compliance).
  4. 'Select', 'Insert', 'sort', 'letter-spacing' ஆகிய செயல்களைச் செய்யும்போது, நிரலிகள் முழு எழுத்துக் கொத்துக்களையும் (character clusters) எடுத்துக் கொண்டு, அவற்றின் மீதே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்ட 1 & 2 ஆகியவற்றை, தமிழ் ஒருங்குறியைச் சீர்திருத்துவதால் அடையலாம். 3 & 4 ஆகியன, மென்பொருள் நிறுவனங்கள் கவனிக்க வேண்டியவை. குறைந்தப்பட்சம், உலாவிகள், மின்மடல் எழுதிகள், word processors, வலை / அச்சுப் பக்கங்களை வடிவமைக்க உதவும் PageMaker / Acrobat / DreamWeaver / Flash போன்ற மென்பொருட்கள், ஆகியவையாவது 3 & 4ஐக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும். Unicode compliant என்ற முத்திரையைப் வழங்குவதற்கான விதிகளைக் கடுமையாக்குவதன் மூலம், ஒருங்குறிக் கூட்டமைப்பே இதனை ஓரளவுக்கு உறுதி செய்யலாமென்பது எனது தாழ்மையான கருத்து. இவ்வமைப்பிலுள்ள தமிழ் அங்கத்தினர்கள் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால், இத்திசையை நோக்கிய நகர்வுகள் நிகழலாம்.(இதைப் படிக்க நேரும் அத்தகைய அங்கத்தினர்களின் கனிவான கவனத்திற்கு)

இப்பரிந்துரைகளைச் செயல்படுத்துவதன்் மூலமாக, தமிழ்க் கணிமையில் தேடல், வரிசைப்படுத்துதல், பக்க வடிவமைப்புகள், text-to-speech, ஆகிய செயல்பாடுகளில் கணிசமான முன்னேற்றமிருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. முக்கியமாக, ஒற்றில் முடியும் பெயர்ச் சொற்களை ஆவணங்களிலிருந்து தேடியெடுக்க முடியும், அதாவது ஜெயமோகன் என்று தேடும்போது, 'ஜெயமோகனின்' (ஜெயமோகன் + இன்) என்ற அதற்குத் தொடர்புடைய instanceஉம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், உகர / 'ம்' விகுதிச் சொற்களைத்் தேடிப்் பெறுவதில் இன்னமும் பிரச்சனை இருக்கும் (உ-ம், 'நாகப்பட்டினத்தில்', 'தமிழ் நாட்டை' ஆகியவை 'நாகப்பட்டினம்', 'தமிழ் நாடு' என்று கொடுத்துத் தேடினால் கிடைக்காது). அவற்றையும்் பெற வேண்டுமானால், மென்பொருள்களை கொஞ்சம் tinker செய்ய வேண்டியதுதான்.

வியாழன், பிப்ரவரி 16, 2006

இடுகைகளை எளிதில் tag செய்ய...........

கடந்த சில வாரங்களை, எனக்குத் தோன்றிய ஒரு யோசனையைச் செயல்படுத்துவதில் செலவழித்தேன். அதன் விளைவாக ஒரு Firefox நீட்சியை (அதாங்க, extension) உருவாக்கியிருக்கிறேன். அதை நிறுவிக்கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

உங்கள் இடுகைகளைத் தமிழ்மணத்தில் வகைப்படுத்துவது போலவே, tags எனப்படும் சொற்களாலும் வகைப்படுத்தலாம். ("இத இன்னும் எவ்ளோ வாட்டிப்பா சொல்லுவே", என்று சலித்துக் கொள்ளாதீர்கள் :) ) 15 -16 பொதுவான வகைகளுக்குள் ஒன்றாக உங்கள் இடுகைகளை வகைப்படுத்திய பின், அதை இன்னும் specificஆக வகைப்படுத்தினால் வருங்காலத் தேடல்களுக்கு வசதியாகயிருக்கும். உ-ம், 'ரஜினிகாந்த்' என்றோ, 'சுஜாதா' என்றோ, 'பெரியார்' என்றோ, 'கர்நாடக இசை' என்றோ, 'பின்நவீனத்துவம்' என்றோ, உங்கள் இடுகையை வகைப்படுத்தினால், உங்கள் பதிவு எதனைப் பற்றி, என்ற pointed information கிடைப்பதோடு மட்டுமல்லாமல், இச்சொற்களைக் கொடுத்துத் தேடுபவர்களுக்கு, ஒரு நபர் / நிகழ்வு / துறையைப் பற்றி வலையுலகில் என்னவெல்லாம் பேசப் பட்டதோ / படுகிறதோ அவையனைத்தும் தொகுக்கப்பட்டு, ஓரிடத்தில் வழங்கப்படும் சாத்தியமேற்படுகிறது. பதிவர்களாகிய உங்களுக்கு, இதனால் உங்கள் பதிவு பிற்காலத்திலும் படிக்கப்படலாமென்ற பலன் கிட்டுகிறது, அதுவும் ஒத்த மனதுடைய வாசகர்களால். வலைவாயில்களில் ஒரு சில மணி நேரங்களோ அல்லது ஒரு சில நிமிடங்களோ (இப்பொழுதெல்லாம் வைரஸ் தொல்லை அதிகரித்து விட்டதாமே? :) ) கிடைக்கும் கவனத்தை விட, ஒரு வாசகர் தேடிக் கண்டுபிடித்து உங்கள் பதிவுக்கு வரும் நிலையில், உங்கள் எழுத்து அதிகமாகப் பாராட்டப்படக் கூடிய வாய்ப்பிருக்கிறது. ஓன்றுக்கு மேற்பட்ட tagsஐக் கொண்டு உங்கள் இடுகையை வகைப்படுத்துவதும்் சாத்தியமே. சரி, இதற்கு மேல் taggingஐ மார்க்கெட்டிங் செய்யப்போவதில்லை. எனது நீட்சியின் செயல்பாடுகளைப் பார்ப்போம்.

இடுகைகளை tagging செய்ய நீளமான html நிரல்களை எழுத வேண்டியிருக்கிறது. "அதெல்லாம் கணினி அறிவு படைத்தவர்களுக்கே, நமக்கும் அதற்கும் சம்மந்தமில்லை" என்று நீங்கள் ஒதுங்கியிருக்கலாம். இந்த html சிக்கல்களெல்லாம் இல்லாமலேயே இடுகைகளை tag செய்ய முடிவது எனது நீட்சியின் ஒரு செயல்பாடு. மற்றொன்று, இந்த tagகளை உள்ளீடு செய்யாமல், முன்தொகுக்கப்பட்ட பட்டியல்களிலிருந்து (i.e. precompiled lists) தேர்வு செய்ய முடிவது. கீழே கொடுக்கப்பட்ட நீட்சியின் இடைமுகத்தைப் (interface) பார்த்தால் இது நன்கு புரிபடும் (அசல் அளவில் காண, படத்தைச் சொடுக்குங்கள்):


இப்பட்டியல்களை உருவாக்கி, மற்ற பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியுமுண்டு. ஏற்கனவே ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்குமான பட்டியல்களை உருவாக்கி, நீட்சியுடன் இணைத்து வழங்கியிருக்கிறேன். அதில் திருப்தியடையாதவர்கள், அவர்களே புதுப் பட்டியல்களைத் தயாரித்து வழங்கலாம். சீன மொழியிலும் பட்டியல்களை உருவாக்கலாம் (என்று நினைக்கிறேன், முயன்று பார்க்கவில்லை. Frenchஇல் கொஞ்சம் முயன்று பார்த்தேன் ;) ) இது போல் பட்டியல்களிலிருந்து தேர்வு செய்யும் முறையினால், அனைவரும் பொதுவான tagsஐப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கிறது. (உ-ம், இன்று 'தமிழ்ப்பதிவுகள்' என்று பலரும் பயன்படுத்துவது போல். அவ்வாறில்லாமல், 'சினிமா', 'திரைப்படம்', 'திரை விமர்சனம்', 'திரைப்பார்வை', 'கீத்துக்கொட்டாய்' என்று அதே விஷயத்தை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக tag செய்தால், இப்பதிவுகள் ஓரிடத்தில் தொகுக்கப் படாமல் வெவ்வேறு tagsஇன் கீழ் சிதறி விடுகின்றன.)

இன்னொரு பயன்பாடு - ஒரு tagஐ நீங்கள் பயன்படுத்தினால், அதே tagஉடன் வெளியான மற்ற பதிவுகளையும் படிக்க விரும்புவீர்கள் என்ற அனுமானத்தில், அந்த tagஇற்கான RSS தொகுப்பை நிகழ் புத்தகக்குறியாக (Live Bookmark) சேர்த்துக் கொள்ளும் வசதி. இத்துடன், பதிவை வெளியிட்ட பிறகு, தானே technoratiஐ ping செய்வதற்கும் வசதியுண்டு. நீங்கள் பலவாளுமை கொண்ட, பல பதிவுகளைப் படைப்பவராக இருந்தால், அவற்றின்் url பட்டியலையும் நீட்சியிடம் கொடுத்து, அதிலிருந்து எந்தப் பதிவை பற்றி ping செய்ய வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இவையெல்லாம் எனது விளக்கங்களால் புரியாவிட்டாலும், நீட்சியைப் பரிசோதித்தால் புரியுமென்று நம்புகிறேன்.

உங்கள் எல்லா தேர்வுகளையும் செய்த பின், 'Generate code' என்ற விசையை அழுத்தினால், தேவைப்படும் html நிரல் உருவாக்கப் பட்டுவிடும். அதன் பிறகு, உங்கள் பதிவின் editorஇல் வேண்டிய இடத்திற்கு cursorஐ நகர்த்திக் கொண்டு போய், 'paste' (Ctrl-V) கட்டளையை இட்டால்், tagsஸுக்கான நிரல் இடுகையில் புகுத்தப் பட்டு விடும். அதன் பிறகு, பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் publish செய்து விட வேண்டியதுதான். குறிப்பிட்ட புத்தகக் குறிகளும் உருவாக்கப் பட்டிருப்பதைக் காணலாம். மேலும்், ping அறிவிப்பும்் குறிப்பிட்ட நேர இடைவெளிக்குப் பிறகு தானாகவே வெளியிடப்படும்.

இது பதிவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமானால்் மகிழ்ச்சியடைவேன். இதைப் பற்றிய விரிவான தகவல்களை ஆங்கிலத்தில் இங்கு வழங்கியிருக்கிறேன். Mozillaவுக்கும் இதை சமர்ப்பித்திருக்கிறேன். இப்பதிவும் இந்த நீட்சியைக் கொண்டே tag செய்யப்பட்டுள்ளது :)

திங்கள், பிப்ரவரி 06, 2006

கீதா கயீதா ஆன கதை

சென்னை, வருடம் 2050: எங்கும் எதிலும் கணிமை. ஒரே இயந்திர மயம்தான். மேலும், பலரது முயற்சியால், தமிழ் எல்லா நிறுவனங்களிலும் அலுவல் மொழியாக உயர்வு பெறுகிறது. டை கட்டிப் பொய் பேசும் கார்பரேட் ஆசாமிகளெல்லாம் 'முனுசாமி' விட்டுக் கொண்டிருக்கிறார்கள். (இது 'பீட்டர்' விடுவதற்குத் தமிழ் நிகர்).

காலை அலுவலகம் செல்கிறான் ரவி. வாயிலில் இருந்த ஒரு இயந்திரம், அவன் முன்பு துறுத்திக் கொண்டு, அவனது கண்ணின் மணிகளைச் சோதித்து விட்டு, அவன் யாரென்று அடையாளம் கண்டு கொள்கிறது. பிறகு இயந்திரக் குரலில் அது கூறுகிறது: "வணக்கம் ரவயி, நல்வரவவு". "இப்படி சொல்றத்துக்கு பதிலா, சொல்லாமலேயே இருந்திருக்கலாம்" என்று எரிச்சலுடன் அதற்கு பதிலளித்து விட்டு, தனது இருக்கையை நோக்கிச் செல்கிறான் ரவி.

அவனுக்குப் பின் வந்த கீதாவிடம், "வணக்கம் கயீதயா" என்கிறது. அதைக் கேட்டுக் கொலை வெறியுடன் உள்ளே செல்கிறாள் கீதா. ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் இவ்வாறு தனது மனநிலை கெடுவதை நினைத்து அவளது ரத்த அழுத்தம் ஏறிக் கொண்டே போய், தற்போது அபாய நிலையை எட்டியிருந்தது. இது போல் பாதிக்கப்பட்ட அனைவரும் நிர்வாகத்திடம் முறையிடுகிறார்கள், காலையில் முதல் வேலையாக தாங்கள் அவமானப் படுத்தப்படுவது பற்றி, அதுவும் ஒரு இயந்திரத்தினால்.

நிர்வாகி கையை விரித்துவிட்டுக் கூறுகிறார், "நான் என்ன செய்யட்டும்? உங்கள் பெயர் தமிழ் ஒருங்குறியில் எவ்வாறு எழுதப் பட்டிருக்கிறதோ, அதன்படி இயந்திரம் உங்கள் பெயரை உச்சரிக்கிறது. -ம், கீதா - + + + , இவற்றைச் சேர்த்து உச்சரித்தால் அது 'கயீதயா' ஆகி விடுகிறது. இதை, இரண்டாயிரத்தி ஆறாம் ஆண்டிலேயே சரி செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போதிருந்தத் தமிழ்க் கணிமை வல்லுனர்களெல்லாம், 'வலைப்பதிவுகளில் போலிப் பின்னூட்டங்கள்' போன்ற முக்கியமான பிரச்சனைகளில் மும்முரமாக இருந்தார்கள். இதை கவனித்து சரி செய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்காமல் போய்விட்டது. தவற்றை உணர்ந்து கண் முழிப்பதற்குள் பிழையான ஒருங்குறி அனைத்திடங்களிலும் ஊடுருவி விட்டது, முன்பு Y2K பூச்சி அனைத்திடங்களிலும் விரவியிருந்ததைப் போல். இதை மாற்ற வேண்டுமென்றால், நமக்கு அமெரிக்காவைப் போல் பண வசதியிருந்தாலே அது சாத்தியமாகும். அவ்வாறில்லாத நிலையில், இந்தப் பிழையான குறியேற்றத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது. தயவு செய்து உங்கள் பெயர் சிதைத்து உச்சரிக்கப் படுவதை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்கு நஷ்ட ஈடாக, சம்பளத்தில் ஏதாவது கூட்டிக் கொடுக்க முடியுமென்றால், அதைப் பரிசீலிக்கிறோம்" என்று தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.

பணியாளர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றார்கள்.

பி.கு:

1. இது பற்றிய மேலதிகத் தகவல்களை இங்கு காணலாம்.

2. 'புனைவு' என்று tag செய்து ஒரு பதிவை இடுவேனென்று கனவிலும் நினைக்கவில்லை :)


| | | |