திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 13, 2007

தமிழ்த்திரையில் பெண்கள் பற்றிய விவாதம்

அண்மையில சில சுவாரசியமான விவாதங்களைப் பார்க்க முடிஞ்சுது - குறிப்பா லட்சுமி மற்றும் மோகன்தாசுக்கு இடையில் நடைபெற்று வரும் / வந்த 'சிவாஜி' குறித்த விவாதங்கள். அந்தப் படத்த நான் இன்னும் பாக்கல்ல - பாக்கறதா உத்தேசமும் கிடையாது. லட்சுமியோட வாதம் முதலில் கவனத்தை கவர்ந்தது. அவர் கூறும் கருத்து - பெண்களை (அல்லது ஒரு குறிப்பிட்ட பெண்ணை) 'கொஞ்சமே கொஞ்சம்' புத்திசாலித்தனத்துடனாவது இப்படத்தில் சித்தரித்திருக்க வேண்டும் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். அதுக்கு மோகன்தாஸ் எதிர்வினையாற்றி மொத்த ஆண்குலத்தின் சார்பா சில கருத்துகளைத் தெரிவிச்சதில் எனக்கு அவ்வளவா உடன்பாடு கிடையாது. ஒரு ஆண் என்ற முறையில், திறமையுள்ள பெண்களையே விரும்பியிருக்கிறேன், தொடர்ந்து விரும்பவும் செய்வேன் என்ற உறுதிமொழி அளித்துவிட்டு (அப்படியே மோகன்தாசின் கூற்றில் உண்மையில்லை என்பதையும் நிரூபித்துக் கொண்டு) எனது வாதத்தைத் தொடர்கிறேன்.

இங்க நான் உதாரணமா குறிப்பிட விரும்பும் ஒரு படம் Kill Bill. படம் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டது. அவளது எதிரிகளும் பெண்களே. படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் வரும், நன்றாகப் படமாக்கப்பட்டிக்கும். கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சீங்கன்னா, அவள் ஆண்களை வெகு சுலபமா வீழ்த்தி விடுவாள். அவர்கள் நூற்றுக்கணக்கா வந்தாலும் அவர்களையெல்லாம் ஒரு சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவாள். ஆனா எதிரில் சண்டையிடுவது பெண் என்னும்போது மட்டும் வெகு நேரப் போராட்டத்துக்குப் பிறகே அவளால வெற்றியடைய முடியும். இது ஏன் அப்படின்னா, அதைப் படைத்தவரின் மனநிலையை ஒத்தே அவர் வெளியிடும் படைப்பும் அமையும்ன்னு அதை அப்படியே ஏத்துக்க வேண்டியதுதான். பெண்களை சண்டைக்கலையில் திறமை மிக்கவர்களாகக் காட்ட வேண்டும் என்ற படைப்பாளியின் முடிவை நாம கேள்வி கேட்க முடியாது, அப்படி கேள்வியில்லாமல் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம் (படத்தை வெற்றியாக்கியதன் மூலமாக). Crouching tiger........, Charlie's Angels, போன்ற படங்களிலும் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அவையும் வெற்றியடைந்தனன்னு நினைக்கறேன்.

இது என்ன அநியாயம்? ஆண்களை விட அவ வலு மிக்கவளாகவே இருக்கட்டும்....... ஆனாலும், அவளை சில நிமிடங்களாவது தாக்குப் பிடிக்கக் கூடியவர்களா ஆண்களை சித்தரிச்சிருக்க'லாம்', 'லாம்'ன்னு பல லாம்களை அடுக்குவது எவ்வளவு அபத்தமானதா இருக்கு? இன்னைக்கு பெண்களை 33% ஆவது புத்திசாலிகளா காட்டணும்ன்னு கேப்போம். அப்பறம், சிறுபான்மையினரை குற்றவாளிகளாவோ, தீய பழக்கம் உடையவர்களாவோ காட்டக்கூடாதுன்னுவோம். அதுக்கு அப்பறம் எரிபொருள் சேமிக்கிறதுக்காக இனிமே ஹீரோக்கள் பஸ்லயோ, டிரெயின்லயோ பயணம் செய்யற மாதிரிதான் காட்சி அமைக்கணும், கார்ல போற மாதிரி காட்டினா நல்ல 'முன்மாதிரி'யா இருக்காதுன்னுவோம். ஏற்கனவே, சினிமால புகை பிடிக்கக்கூடாது, தண்ணியடிக்கக்கூடாது, முத்தம் குடுத்துக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டு தடை செஞ்சாச்சு. தமிழ்ல பேர் வைக்க'லாமே'ன்னு (வன்மையாவே) அறிவுறுத்தியாச்சு. இவ்வளவு விதிகள் / வழிகாட்டுதல்களையும் கடந்து ஒரு படைப்பாளிக்கு புனைய எதாவது கதை மிஞ்சுமான்னு பாக்கணும்.

Stereotypeகள் தொடரணும்ன்னு சொல்லல்ல. பெண்கள் சில குறிப்பிட்ட நடிகர்களின் படங்களில் சற்று சாமர்த்தியம் குறைந்தவர்களாகக் காட்டப்படுகிறார்கள்ன்னா அதை ஒத்துக்கறேன். ஆனா, ஒட்டு மொத்த தமிழ் சினிமால வர்ற பெண் பாத்திரங்கள் எல்லாமே அவ்வாறுதான் சித்தரிக்கப்படுகிறார்கள்ன்னா அதை என்னால நிச்சயமா மறுக்க முடியும். (நடிகை) லட்சுமி, சுஜாதா, ஸ்ரீதேவி, சரிதா, சுகாசினி, ரேவதி, ராதிகா போன்ற நடிகைகள் பல படங்களில் சுயசிந்தனையாளர்களா காட்டப்பட்டிருக்காங்க. அவங்கல்லாம் பாலசந்தர் பட நாயகிகள் எனப்படும் 'தாழ்த்தப்பட்ட' கேட்டகிரில வர்றாங்களான்னு தெரியல. ஒரு சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்த '16 வயதினிலே', அதே இயக்குனரின் 'சிகப்பு ரோஜாக்கள்'ன்னு நிறைய top-of-the-mind உதாரணங்களைத் தர முடியும். 'மிஸ்டர் சுகாசினியின் பெண்கள்' அப்படீன்னு மதுரா ஒரு தனிப்பதிவே போடுமளவுக்கு உதாரணங்கள் உண்டு.

பழைய எம்ஜியார் படம் ஒண்ணு டிவில போய்க்கிட்டு இருந்தது. பேர் தெரியல. ஆனா கதை என்னன்னா, ஒரு துஷ்டப் பெண்ணரசி, பகடை விளையாட்டுல தந்திரம் செஞ்சி வேற்று நாட்டு அரசர்களை எல்லாம் தனக்கு அடிமைகளாக்கி, அவர்களது நாடுகளையும் தன்வசப்படுத்துகிறாள் என்பதுதான். இன்னொரு உதாரணம் - "வாராய் நீ வாராய்............. போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய்........" என்ற பாட்டின் காட்சியமைப்பு ஞாபகமிருக்கும்ன்னு நினைக்கிறேன். தன்னை மலையிலிருந்து தள்ளிவிடப்போகும் கணவனை தந்திரத்தால் வென்று உயிர் தப்பும் பெண்ணை பற்றிய காட்சி அதுன்னு நினைக்கிறேன். ஆக, பெண்களை அறிவுக் கூர்மை மிக்கவர்களாக (பெண்ணியமெல்லாம் பேசப்படாத) அந்தக்காலத்திலிருந்தே காட்டி வந்திருக்கிறார்கள் என்பதுதான் இதிலிருந்து நான் நிறுவ முயலுவது.

ஒரு பாத்திரப் படைப்பு என்பது முற்றும் முழுவதுமாக ஒரு படைப்பாளியின் உரிமை. சரஸ்வதி நிர்வாணமாக இருக்கிறாளா என்பது அவளைப் படைப்பவன் கையிலேயே உள்ளது. அவ்வாறு இருந்திருக்கக் கூடாது என்பதெல்லாம் கலை வன்முறையே. அதே போலத்தான் ஒரு படைப்பாளியின் பாத்திரப் படைப்பை கேள்விக்குள்ளாக்குவதுவும்.

திங்கள், மார்ச் 05, 2007

(பி/இ)றந்த நாள் விழா

கனவுலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சில நபர்களால் நனவுலகைத் தாக்குப் பிடிக்க முடியாமல் போய் விடுவது ஒரு பரிதாபமான உண்மை. அதை அழகாகச் சித்தரித்துக் காட்டிய ஒரு திரைப்படத்தைப் பற்றிய எனது தொடர் விவரிப்பின் மூன்றாம் பாகம் இவ்விடுகை. (முந்தைய இடுகைகள்: முதல் பாகம், இரண்டாம் பாகம்)

திரைப்படத்தின் உச்சக் காட்சியாக இந்தப் பிறந்த நாள் விழா அமைகிறது. ஒரு மூத்த வயது, அழகான, கவர்ச்சிகரமான பெண்ணின் பிறந்த நாள் விழா நள்ளிரவில் தொடங்குகிறது. அவரது இளம் வயதுக் காதலன், அவரது வளர்ப்பு மகள், மற்றும் காதலனின் (நடிப்பில் ஆர்வமுள்ள) நண்பன் என்று அடக்கவொடுக்கமான பங்கேற்புதான் அவ்விழாவில். நகர்ப்புறத்துச் சலசலப்பெல்லாம் இல்லாத ஒரு நாட்டுப்புறப் பண்ணை வீட்டில் வெறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆனால் கொண்டாட்டத்துக்கென்னவோ குறையில்லாது ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அப்பகுதி வட்டார வழக்கப்படி ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, எல்லாருடைய கண்களும் கறுப்புத் துணியால் கட்டி விடப்படுகின்றன. அவ்வாறு கட்டிய நிலையிலேயே, வீட்டின் வெளியே ஒரு மரத்தில் தொங்க விடப்பட்ட ஒரு பொம்மை உருவத்தைத் தேடிக்கண்டு பிடித்து, கையில் வைத்திருக்கும் ஒரு குச்சியால் அந்த பொம்மையை அடித்து நொறுக்க வேண்டும். வெற்றிகரமாக யாரால் அவ்வாறு கண்டுபிடிக்க முடிகிறதோ அவரே வெற்றி பெற்றவர். இருண்ட நிலையில் அனைவரும் தடுமாறுகையில் முதிய பெண் வெற்றிகரமாக அதனைச் செய்து முடிக்கிறார். அவரது இள வயதுக் காதலனும், அவரது வளர்ப்பு மகளும் கண்கள் கட்டி விட்ட நிலையிலும் தடுமாறிச் சென்று ஓரிடத்தில் இணைகிறார்கள். அதை, அவர்களிடையே உள்ள இயற்கையான ஈர்ப்பைக் குறிப்பதாகக் கருத வாய்ப்பிருக்கிறது. (இளைஞருக்கு முதிய பெண்ணுடனான காதல் ஆட்டங்கண்டு கொண்டிருப்பதையும், அவர் இளம் பெண்ணின்பால் ஈர்க்கப் பட்டுக் கொண்டிருப்பதையும் முன்பு விவரித்திருந்தேன்).

ஆட்டம் முடிந்ததும் வீட்டின் உள்ளே சென்று கேக் வெட்டும் படலம் நடத்தப்படுகிறது. ஏற்பாடு செய்யப்பட்ட ஹிஸ்பானிய இசைக் கலைஞர்கள், தங்கள் கித்தார்களைக் கொண்டு இசை விருந்து படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுடன் சேர்ந்து பாடுகிறார்கள் விழாக் கொண்டாடுபவர்கள். சிறிது நேரம் இந்தக் கச்சேரி தொடர்கிறது. பிறகு வளர்ப்பு மகள் எழுந்து கொள்கிறார், தூங்கச் செல்வதாக. அவரை தடுத்துப் பார்க்கிறார்கள் அனைவரும். அவர் வேலையிருப்பதால் செல்வதாக உறுதியாகக் கூறிவிட்டு, தன் அறைக்குச் செல்கிறார். பிறகு முதிய பெண்ணும் அவரது காதலனும், தாங்களும் செல்வதாக அறிவிக்கிறார்கள். எஞ்சியிருப்பது இளைஞனின் நண்பர் மட்டுமே. குதூகலங்களில் கலந்து கொள்ளாது அனைவரும் விடைப் பெற்றுச் சென்றதால் அவருக்குப் பெருத்த ஏமாற்றமேற்படுகிறது. இசைக் கலைஞர்களிடம் இசையை நிறுத்துமாறு கூறிவிட்டு, தனது அறைக்கு வந்து தொலைக்காட்சியை இயக்குகிறார்.

தொலைக்காட்சியில் Godfather படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகா, என்று பார்க்கத் துவங்குகிறார். கிட்டத்தட்ட அதில் வரும் மொத்த வசனமும் அவருக்கு மனப்பாடமாகியிருப்பதால், படத்தின் கூடவே தானும் வசனம் பேசுகிறார், ஏதோ தானே படத்தில் நடிப்பதாக நினைத்துக் கொண்டு. வெளியே இடியுடன் கூடிய மழை பெய்கிறது. முதிய பெண்ணுக்கு அவரது காதலனிடமிருந்து ஒரு பிறந்த நாள் பரிசு கிடைக்கிறது - காதல் முறிவு என்னும் பரிசு. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பது நமக்கு சன்னல் கண்ணாடி வழியாகக் காட்டப்படுகிறது (வாக்குவாதப் பேச்சு ஒலிகளின்றி). மற்றொரு சன்னல் வழியாக இளம் பெண் கறுப்பு உடையிலிருந்து வெண்மை உடைக்கு மாறி, வெளியே கிளம்பும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது காட்டப்படுகிறது. மெதுவாக அவர் இறங்கி வருகிறார். பின்னணியில் Godfather வசனங்கள், உரத்த குரலில். வீட்டை விட்டு வெளியேறி மழையில் நடக்கிறார். ஒரு பேரிடி இடிக்க, அவர் கொண்டு போன குடையோ வேறொரு பொருளோ, ஒரு இடிதாங்கியைப் போல் செயல்பட்டு, அவரை எரித்துச் சாம்பலாக்குகிறது. தன் முடிவை விரும்பித் தேடிக் கொண்டு, தனது கனவு வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார் இளம் பெண்.

அவரது தற்கொலைக்கான காரணம் புரியாது போகலாம். இளைஞருக்குத் தன்மீது வந்த புதிய காதல் பற்றி சந்தேகமிருந்திருக்கலாம். மரம் விட்டு மரம் தாவும் குரங்கைப் போன்ற தன்மையுடைய இளைஞரின் காதலை ஏற்பதை விட சாவதே மேல் என்று நினைத்திருக்கலாம். அல்லது தனது வளர்ப்புத் தாயின் இழப்பின் மீது தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் விருப்பமில்லாதிருக்கலாம். பல்வேறு காரணங்களால் இளைஞரை உண்மையாகக் காதலித்த இளம் பெண் குரூரமான ஒரு முடிவைத் தேரந்தெடுத்து, தன் கனவுலக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். இளைஞரோ, தனது மாஜி காதலியின் பிறந்த நாளன்று, தனது உண்மைக் காதலியை இழக்கிறார்.

அடுத்த காட்சி - இளைஞர் தனது மாமனின் தூசி படிந்த கார் காட்சியறைக்குத் திரும்புகிறார். முதலில் கண்ட மீன், மீண்டும் காற்றில் நீந்துகிறது.

அதற்கடுத்த காட்சி - முதல் காட்சியில் வந்த எஸ்கிமோக்கள் மீண்டும் உரையாடுகிறார்கள். உரையாடலில் மீன் பிடிப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். கனவுகள், சாதனைகள், வாழ்க்கையின் குறிக்கோள்களைப் பற்றியெல்லாம் பேச்சுக்களில்லை. (Arizona Dream - 1993).

ஞாயிறு, மார்ச் 04, 2007

எனது சிறந்தத் திரைப்படம் (தொடர்ச்சி)

கனவுகளே மனிதரைச் செலுத்தும் உந்து சக்திகளாகத் திகழ்கின்றன. கனவுகளைச் சுமந்து திரியும் எல்லாரும் தம் இலக்கை அடைந்து விடுவதில்லை. கனவுகளோடு, அதைச் செயல்படுத்தும் நரித்தனமான சந்தர்ப்பவாதமும் இருந்தாலொழிய, கனவுகள் கனவுகளாகவே நின்று விடுகின்றன. பெரும்பாலான கனவுகள் நிறைவேறுவதில்லை. இறுதியில் ஒரு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது பலருக்கும். ஆனால், கனவு காண்பது அவசியமாக்கப்படுகிறது. "Dream on, dream on till your dreams come true" என்று கூரை மீது நின்று கொண்டு கூவுகின்றனர் சிந்தனைச் சிற்பிகள். அவர்களால் பரப்பப்படும் வெற்றிக்கதைகளே எங்கும் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில், தோல்விக்கதைகளும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவையே பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இனி, சென்ற இடுகையின் தொடர்ச்சி..........

இளம் பெண்ணுடன் ஏற்பட்ட நெருக்கமான நிகழ்வினால் குழம்பிப் போயிருக்கிறார் இளைஞர். அந்த நேரம் பார்த்து ஒரு துக்கச் செய்தி. தன் கனவுகளில் பின்னடைவு ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் இளைஞரின் மாமன் (கார் விற்பனையாளர்). அவரது மரணப் படுக்கையில் அவரிடம் வாக்கு கொடுக்கிறார் இளைஞர், அவரது வணிகத்தையும், விதவையையும் நன்கு கவனித்துக் கொள்வதாக. அவரது இறுதிச் சடங்குகள் முடிந்து பல நாட்களாக நகரத்திலேயே இருந்து விடுகிறார் இளைஞர். ஆனாலும், விட்டுச் சென்ற காதலுறவு அவரை மறுபடியும் நாட்டுப்புறப் பண்ணை வீட்டிற்கே துரத்துகிறது. அங்கு அவருக்காக வெகு நாட்களாகக் காத்திருந்து ஏமாற்றமடைந்த காதலியின் கடுமையான கோபத்தை எதிர்கொள்கிறார். கோபம் கைகலப்பாக மாறி, பிறகு புணர்ச்சியில் முடிவடைந்து, சமாதானம் திரும்புகிறது. மீண்டும் பறக்கும் திட்டம் தொடரப்படுகிறது. இம்முறை வெற்றிகரமாக இயந்திரம் செயல்பாட்டு நிலையை அடைகிறது. வளர்ப்பு மகள் சாந்தமடைந்து, எந்த நாச வேலையிலும் இறங்காதது ஒரு காரணமாக இருக்கக் கூடும். முதிய பெண் கனவு நனவான மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். அந்த வெற்றிக்குக் காரணமான இளைஞருக்கோ குழப்பங்களே மிஞ்சுகின்றன. தனது காதல் முடிவை மீள் பரிசீலனைக்குட்படுத்தும் மனநிலையிலிருகிறார் அவர்.

கனவுகளின் பாரத்தைத் தயக்கமின்றிச் சுமந்து திரியும் மற்றொருவர், அந்த இளைஞரின் நண்பர். அவரது கனவு - ஒரு நடிகனாக வேண்டுமென்பது. இளைஞரின் முறை தவறிய காதலை அங்கீகரிக்காவிட்டாலும், அவருக்கு உறுதுணையாகத் திகழ்கிறார். ஒரு கலை நிகழ்ச்சியில், ஒரு விமானத்தால் துரத்தப் படுவது போல் (பல முறை தரையில் விழுந்து எழுந்து) நடித்துக்காட்ட, அது பார்வையாளர்களிடமிருந்து போதிய வரவேற்பைப் பெறாது போக, அவர்களின் ரசனையைக் குறை கூறுகிறார். பிறகு, முதிய பெண் வெற்றிகரமாக பறக்கும்போது, அந்தக் காட்சி உண்மையில் நடந்தேறுகிறது - அதாவது, அப்பெண்ணின் பறக்கும் இயந்திரத்தால் துரத்தப்பட, நம் நடிகர் அதிலிருந்து தப்புவதற்காகப் பலமுறை தரையில் விழுந்து எழுவது, ஒரு புன்னகையை வரவழைக்கும் காட்சி. இவரது பாத்திரம் கதைக்கு அதிக வலு சேர்க்காவிட்டாலும், 'வெற்றுக் கனவுகள்' என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு அவரது கதை உதவுகிறது.

இளைஞருக்கும் இளம் பெண்ணுக்குமுள்ள இடைவெளி மேலும் குறைகிறது. முதிய பெண்ணுடனான காதல் கொஞ்சங் கொஞ்சமாகக் கசந்து விட, இளம் பெண்ணின் பால் ஈர்க்கப்படுகிறார் இளைஞர். தனது காதல் தேர்வில் தவறிழைத்து விட்டதாக அவரிடம் ஒப்புக் கொள்கிறார். முதிய பெண்ணால் தான் பயன்படுத்தப்பட்டதாகவே உணர்வதாகக் கூறுகிறார். அவரது மேம்போக்கான குணத்தை இப்போதே உணர முடிந்ததாகத் தெரிவிக்கிறார். இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு எங்காவது ஓடிவிடத் தயாராக இருப்பதாகவும் தன்னுடன் வரும்படியும் இளம்பெண்ணை அழைக்கிறார். அவரோ, சில business விவகாரங்களை கவனிக்க வேண்டியிருப்பதால், தன்னால் அந்த அழைப்பை ஏற்று வர இயலாது என்று விடையளிக்கிறார்.

இந்நேரத்தில் முதிய பெண்ணின் பிறந்த நாள் வருகிறது. படத்தின் நீஈஈஈஈண்ட காட்சியும் உச்சக்கட்டமும் அதுதானென்பதால், அதற்கென ஒரு தனியிடுகை........ அடுத்த முறை மூட் வரும்போது :)

எனது சிறந்தத் திரைப்படம்

கனவுகள் - வித விதமானவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை. ஒரு படத்தின் கதாநாயகன், கதாநாயகி, வில்லன், வில்லி, குணச்சித்திர நடிகர் / நடிகை ஆகிய எல்லாமே இக்கனவுகள்தான். கனவுகளுக்கிடையே நடக்கும் போராட்டங்கள், முரண்பாடுகள், ஒத்திசைவுகள்........... என்று படத்தின் எல்லா நிகழ்வுகளையும் நிர்ணயிப்பது இக்கனவுகள்தான். ஆரம்பமும் ஒரு கனவுக் காட்சியே.

இரு எஸ்கிமோ இனத்தைச் சார்ந்த நபர்கள் பனி படர்ந்த ஒரு குளத்தில் தூண்டிலிட்டு மீன் பிடித்துக் கொண்டிருகிறார்கள். ஒருவர் முதியவர். மற்றொருவர் இளைஞர். இளைஞருக்குப் பல சந்தேகங்கள். அவற்றை அவர் எஸ்கிமோ மொழியில் பெரியவரிடம் கேட்க, தனது எல்லாம் தெரிந்தத் தொனியில் அக்கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருக்கிறார் முதியவர். மீன் பிடித்தலில் ஆரம்பித்து, உரையாடல் வாழ்வியல் தத்துவங்களையெல்லாம் தொட்டுவிட்டுத் திரும்புகிறது (என்று subtitles தயவில் தெரிய வருகிறது). அதற்குள் தூண்டில் வலுவாக இழுபட, இருவரும் சேர்ந்து இழுக்கிறார்கள். இதுவரை கண்டிராத அளவுக்குப் பெரிய மீன் ஒன்று தூண்டிலில் சிக்கி, தண்ணீரிலிருந்து போராடிக் கொண்டே வெளிவருகிறது. தம்மிடமுள்ள சுத்தியலால் அதனை ஒரு போடு போடுகிறார்கள் - போராட்டம் நின்று மீன் தரையில் கிடத்தப் படுகிறது. அதை எப்படி கூறு போடலாம் என இருவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், மீன் உயிர்த்தெழுந்து காற்றில் நீந்தத் தொடங்குகிறது. நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இருவரையும் கடந்து ஒயிலாக ஒரு சுற்று சுற்றி, தூசான் (Tucson) நகருக்குப் பயணிக்கிறது, மீனும் கதையும்.

முன்பு கண்ட இரு நபர்களும் மறுபடியும் தோன்றுகிறார்கள், ஆனால் நவீன நகரத்து ஆட்களாக. முதியவர் கார் விற்பனையாளர். அவரோடு உள்ள இளைஞர் அவரது மருமகன். தொழில் கற்றுக் கொள்வதற்காக மாமனிடம் தஞ்சம் புகுந்தவர், பெற்றோர்களை விட்டு வெளியேறிய பின். மாமனின் கனவு, கார்களாக விற்றுத் தீர்த்து விடவேண்டுமென்பதே. அப்படி விற்ற கார்களை வரிசையாக நிறுத்தினால் அவை பூமியிலிருந்து சந்திர மண்டலம் வரை உள்ள தூரத்தை நிரப்ப வேண்டும். அவ்வாறாக கார்களை விற்று, பெரும் பணக்காரராக மாறி, சமூகத்தில் மதிப்பு மிக்க நிலையை அடைந்து விட வேண்டுமென்பதே அவரது குறிக்கோள். தனது கனவுலக வாழ்வின் நீட்சியாக, தனக்கு வயதில் மிகவும் குறைந்த ஒரு மாடல் பெண்ணையும் மணந்து கொள்கிறார். இந்தச் சூழலில் இளைஞர் தனது வாழ்க்கைப் பாடங்களை பெறுகிறார். அவர்களது கார் காட்சியறைக்கு வருகை தரும் இரு மேட்டுக்குடிப் பெண்களிடம் அவருக்குப் பரிச்சயமேற்படுகிறது.

அவ்விரு பெண்களில் ஒருவர் சற்று வயதானவர், ஆனால் கவர்ச்சியான தோற்றமுடையவர். அவர் ஒரு விதவை, மற்றும் அவருடன் வரும் இள வயதுப் பெண்ணின் வளர்ப்புத் தாய். இருவரும் தங்கள் நாட்டுப்புற பண்ணை வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஏதோ காரணத்தால் இளைஞருக்கு இப்பெண்களுடன் சென்று அந்தப் பண்ணை வீட்டில் வசிக்கும் வாய்ப்பேற்படுகிறது. அந்த மூத்தப் பெண்ணுடன் ஏற்படும் காதலும் ஒரு காரணமே. தலைமறைவாகும் மருமகனைத் தேடி வருகிறார் அவரது மாமன், கூடவே இளைஞனின் நண்பனும். முதிய பெண்ணிடம் பேசிப் பார்க்கிறார் தனது மருமகனை விடுவிக்கும் படி. பழைய காருக்கருகே ஒரு புதிய காரை நிறுத்தினால் எப்படியிருக்கும் என்றெல்லாம் உவமையளித்துப் பார்க்கிறார். (தனது சொந்தக் கதையை சௌகரியமாக மறந்துவிட்டு). "உனது மகனாக இருப்பதற்கேற்ற வயதுடையவன் அவன்" என்று சொல்லிப் பார்க்கிறார். "ஆனால் அவன் எனது மகன் கிடையாது, திருவாளரே, அவன் எனது காதலன்" என்று விடை கிடைக்கிறது. சலிப்படைந்து போய் வலுக்கட்டாயமாக மருமகனை இழுத்துக் கொண்டு போகப் பார்க்கிறார் மாமன், இளைஞனது நண்பனின் உதவியுடன். அப்போது அப்பெண்ணின் துப்பாக்கி பேசுகிறது. நீளமான வேட்டைத் துப்பாக்கியால் ஓட ஓட விரட்டப் படுகிறார் மாமன். இளைஞரின் நாட்டுப்புற வாசம் தொடர்கிறது.

தன் காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதாக இளைஞர் வசனம் பேச, அவர் முன் தனது கனவை விரிக்கிறார் அப்பெண்மணி. அவரது கனவு - ஆகாயத்தில் பறப்பது, ஒரு சுதந்திரப் பறவையைப் போல். விமானத்தில் அல்ல, தன் பட்டறையிலேயே உருவாக்கப்பட்ட ஒரு பறக்கும் இயந்திரத்தில். அவரது கனவை நனவாக்கும் வேலையில் இளைஞர் ஈடுபடுகிறார். ஆதிகாலத்தில் விமானத்தைக் கண்டுபிடிக்க என்னென்ன செய்தார்களோ, அனைத்தையும் தனது காதலிக்காக மீள் கண்டுபிடிப்பு செய்யும் பணியில் நாட்களைக் கடத்துகிறார். பல்வேறு காரணங்களால் இக்கண்டுபிடிப்பு தாமதப் படுகிறது. காதலியின் வளர்ப்பு மகளுக்கு இந்த விளையாட்டுகள் பிடிக்காததால், அவ்வப்போது இரவு நேரமாகப் பார்த்து, இயந்திரத்தை உடைத்து போடுகிறார் அப்பெண். அல்லது புயல் மழையால் அந்த இயந்திரத்தின் சிறகுகள் தாமாகவே பிய்த்துக் கொண்டு விடுகின்றன. அல்லது, சோதனையின் போது இயந்திரம் சிறிது தூரம் எழும்பி, மீண்டும் தரையிறங்கி விடுகிறது. ஒரு முறை, இயந்திரத்தை மூத்த பெண் செலுத்திக் கொண்டு செல்கையில், அட்டகாசமாக மேலெழும்பி, நன்றாகப் பறந்து விட்டு, கொஞ்சம் பலமாகக் காற்றடித்ததால் கட்டுப்பாடிழந்து வானுயரத்திலிருந்து தரையிலிருக்கும் ஒரு மரத்தின் கிளைகளின் மீது வந்து விழுகிறது (பெண்ணுடன் சேர்ந்து). உடல் முழுக்க கட்டுகள் போடப்பட்டு கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்படுகிறார் அப்பெண்.

வளர்ப்பு மகள் - தனது வளர்ப்புத் தாயின் போக்குகளுடன் கொஞ்சமும் உடன்பாடில்லாதவர். எப்பொழுதும் ஒரு அக்கார்டியன் இசைக்கருவியை வைத்துக் கொண்டு அதே ராகத்தைத் திரும்பத் திரும்ப இசைத்து, எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். இளைஞருக்கு அவர் மீது இயற்கையாகவே ஒரு வெறுப்பு மேலிடுகிறது. ஒரு இரவு நேரத்தில் எங்கோ கிடைத்த ஒரு கைத்துப்பாக்கியுடன் இந்த வளர்ப்பு மகளின் அறைக்குள் நுழைந்து விடுகிறார். தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து, முதுகைக் காட்டிப் படுத்திருக்கும் அப்பெண்ணைச் சுடுவதற்குக் குறி பார்க்கிறார். பிறகு கொஞ்சம் தயங்குகிறார். "ஏன் தயங்குகிறாய்? சுட்டு விடு!" என்று கட்டளையிடுகிறார் பெண் (அவருக்கென்ன முதுகிலும் கண்கள் உள்ளனவா என்று ஆச்சரியப் படவைக்கும் விதத்தில்.) இளைஞர் மறுத்து விட, "சரி அப்படியானால் வா, ஒரு மரண விளையாட்டு விளையாடலாம்" என்று இளைஞரை மேசைக்கு அழைக்கிறார். கைத்துப்பாக்கியிலுள்ள தோட்டாக்களில் ஒன்றை மட்டும் விட்டு வைத்து, மற்றவைகளை நீக்கி, இளைஞரை Russian roulette ஆட அழைக்கிறார். இளைஞர் மறுபடியும் தயங்க, "சரி, முதலில் எனது முறை" என்று தன் தலையைக் குறிவைத்து சுட்டுக் கொள்கிறார். துப்பாக்கி வெடிக்காது, உயிர் பிழைக்கிறார் இளம் பெண். அடுத்து உன் முறை என்று துப்பாக்கியை இளைஞரிடம் நீட்ட, இளைஞர் "எனக்கு இறந்து போக விருப்பமில்லை" என்கிறார். அது விளையாட்டு விதியை மீறுவதாகும் என்று கூற, இளைஞர் முதலில் தயங்கி, பின் ஒரு முறை சுட்டுக் கொள்கிறார். வெடிக்காததால் சலிப்பேற்பட்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை சுட்டுக் கொள்ள (அவையும் வெடிக்காமல் போக), பெண் அவரை நோக்கிப் பாய்ந்து அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைக் காப்பாற்றி, அவர் விளையாட்டு விதியை மீறியதாகக் கடிந்து கொள்கிறார். இச்சம்பவம் இருவருக்குமுள்ள உறவை மாற்றி ஒரு நட்புணர்வை ஏற்படுத்துகிறது. அந்த இளம் பெண்ணுக்கு, இளைஞரின் மீதுள்ளக் காதலும் வெளிப்படுகிறது.

(மூட் வரும்போது தொடரப்படும்)