ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

ஆபத்தான ஜெயா ஆதரவுப் போக்கு

ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிச்சி நிறைய பதிவுகள் வந்துக்கிட்டு இருக்கு. இரண்டு தினங்களுக்கு முன்புதான் அவரோட நேர்காணல் ஒன்றை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் (CNN-IBNன்னு நினைவு) பார்த்தேன். "இலங்கைத் தமிழர்கள் வேறு, புலிகள் வேறு", "பிரபாகரன் தீவிரவாதி கிடையாதுன்னு சொன்னதால கருணாநிதி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ஞ்சிருக்கணும் / ஆட்சி கலைக்கப் பட்டிருக்கணும்", "அதைக் கேட்டுக் கொண்டு சோனியா காந்தி ஏன் அமைதி காத்துக்கிட்டு இருக்காங்க? அவங்க காங்கிரஸ் தலைவி கிடையாதா? ராஜீவ் காந்தியின் விதவை கிடையாதா?"ன்னெல்லாம் பேசியது எல்லார் மனதிலும் பசுமையா இருந்திக்கிட்டு இருக்கும்போதே அடுத்த நாள் அந்தர் பல்டி அடித்து தமிழ் ஈழக் கோரிக்கையை வைக்கறாங்க. அவங்க இதுக்கு முன்னாடி பேசிய "ஈழத் தமிழர்கள்ன்னு யாரும் கிடையாது, இலங்கைத் தமிழர்கள்ன்னுதான் இருக்காங்கன்னு" கண்டுபிடித்துத் தெரிவித்த கருத்துகளெல்லாம் கூட யாரும் மறந்திருக்க முடியாது. இது போன்ற குறுகிய காலத்திற்குள் தெரிவித்த எதிர்மறையான கருத்துகளே நிறைய இருக்கும்போது, அவரது ஆட்சிக்காலத்தில் ஈழத்தவர்களுக்கு கிடைத்த அவமதிப்பு (காண்க இன்றைய கானா பிரபாவின் பதிவு) போன்ற நிகழ்வுகளை எல்லாம் நாம் மறந்தாலும் ஈழத் தமிழர்கள் மறக்கமாட்டாங்க.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ன்னு ஒருத்தர் இலங்கைக்குப் போய் விடியோ பிடிச்சிக்கிட்டு வந்தாராம். அதைப் பாத்து இவங்க மனம் மாறினாங்களாம். தமிழகத் தமிழர்கள் இந்தப் பூச்சுற்றலுக்கெல்லாம் காதைக் காட்டிக்கிட்டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. (அதுதான் நடந்துக்கிட்டும் இருக்கு). ஈழம்ங்கிற தனி நாடு கோரிக்கையை இவங்க ஆதரிக்கறாங்களா, அப்படீன்னா அந்த கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இவங்க ஆதரவு தெரிவிக்கறாங்களான்னு விவரமா தெரியல. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவங்க 'separate state' கோருவதா செய்தி வருது. அப்படீன்னா தமிழர்களுக்குன்னு ஒரு தனி மாநிலத்துக்குத்தான் இவங்க ஆதரவளிக்கறாங்களான்னு யோசிக்கத் தோணுது. (இவங்க வரும் நாட்களில் அப்படி ஒரு அந்தர் பல்டி அடிக்கவும் சாத்தியமிருக்கு) விடுதலைப் புலிகளை ஆதரிக்காம தனி ஈழத்துக்கு ஆதரவுங்கிற நிலைப்பாடு எடுக்கறவங்க எனக்கு ஆபத்தானவங்களாவே படறாங்க. மதில் மேல் பூனை போன்றவங்கதான் இவங்கல்லாம்.

தமிழக / புதுவைத் தொகுதிகள் நாற்பதும் இவங்க கையில் சிக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பிடிச்சிட்டு, பழையபடி (ஈழ விவகாரத்தைப் பொறுத்த வரை) முருங்க மரம் ஏறக்கூடியவங்களாதான் இவங்க எனக்கு தெரியறாங்க. தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் போலத் தெரியுது. அப்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைப் கைப்பற்றும் பட்சத்தில், அது பாஜகவின் இயல்பான கூட்டணிக் கட்சியா (கருத்தியல் / பாசிசம் போன்ற ஒற்றுமைகளின் அடிப்படையில்) அமைந்து விடும் வாய்ப்பிருக்கு. ஆக, அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் இந்துத்வாவுக்குக் கிடைக்கும் வெற்றியே. (மற்றும் ஈழப் போராட்டத்துக்குக் கிடைக்கும் தோல்வியே)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கும் அது சாதகமான நிலைமையாகவே இருக்கும்ன்னு எனக்குத் தோணுது.

வெள்ளி, பிப்ரவரி 06, 2009

கலைஞரைக் கும்முவது சரியா?

இந்தக் கேள்விதான் இப்போ பதிவுகளில் சூடாக விவாதிக்கப்பட்டு வருது. சரின்னு ஒரு அணியும், தவறுன்னு ஒரு அணியும், சரி - ஆனா அதைச் செய்வதற்கும் ஒரு தகுதி இருக்கணும்ன்னு (அதாவது, அவரது கடந்த கால எல்லா சாதக / பாதகச் செயல்களையும் விமர்சனமில்லாம ஆதரிச்சவங்களுக்குத்தான் இப்போ அவரைக் கும்மறதுக்கு தகுதியோ உரிமையோ இருக்குன்னு) மூன்றாவதா ஒரு அணியும் கருத்து தெரிவிச்சிக்கிட்டு இருக்காங்க.

என்னைப் பொறுத்தவரை, கலைஞரையோ, ஜெயலலிதாவையோ, மன்மோகனையோ, சோனியாவையோ கும்முவதில் ஒரு பயனும் இல்லை. அவர்களை என் உணர்வுகளை மதிப்பவர்களா, என் மக்களுக்காக எதுவும் செய்யக்கூடியவர்களா கருதுவதை நிறுத்தியே பல காலமாகி விட்டது. இப்போதைய உடனடி சிந்தனை பெருந்துயரத்தில் இருக்கும் நம் உறவுகளான ஈழத்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பதுதான். அதற்கு நம்மிடம் என்ன ஆயுதம் இருக்கு என்பதுதான் மற்ற எல்லா சிந்தனைகளையும் விட முன்னுரிமை பெறுவது. எந்தக் கட்சி சார்புகளும் இல்லாத ஒரு சாமானியனாக, என்னிடம் இருப்பது எனது வோட்டு என்ற ஒரே துருப்புச் சீட்டுதான். (முத்துக்குமாரைப் போல் உடல் என்ற துருப்புச் சீட்டையெல்லாம் வழங்கும் அளவுக்கு எனக்கு வீரம் கிடையாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்). பெரும்பாலனவர்களின் நிலையும் இதுதான்னு நம்பறேன்.

இந்த வோட்டு என்ற ஆயுதத்தை எப்படி மிகுந்த சக்தி வாய்ந்த விதத்தில் பயன்படுத்துவது? (How to use it in the most effective manner?) மற்ற சூழல்களில் சிறந்த ஆட்சியைத் தரக்கூடிய கட்சிக்கு வாக்களித்து அதைப் பயன்படுத்தலாம். ஆனால் இன்றைய சூழலிலோ அதைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் அதன் மிகுந்த வீரியமான பயன்பாடாக அமையும். தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள் - 'election ke din, aap vote nahi kare tho, aap so rahen hein'. (தேர்தல் தினத்தன்று நீங்கள் வோட்டளிக்கச் செல்லவில்லை என்றால் நீங்கள் தூங்கவதாகப் பொருள்) அந்தத் தூக்கம்தான் இப்போது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் செய்ய வேண்டியது. நம் துயரைக் கண்டும் காணாதது போல் இருக்கும் மத்திய அரசு, அதற்குத் துணை போகும் மாநிலக் கூட்டணிக் கட்சிகள்...... இவர்கள் அனைவரையும் எழுப்ப, நம் தூக்கத்தால்தான் முடியும்.

இந்த வோட்டு என்பது நம்மால் மிகக் குறைவாக மதிக்கப் படுகிறது என்று கருதுகிறேன். அண்மைய இடைத்தேர்தலில் ஒவ்வொரு வோட்டுக்கும் பல ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டதாக அறிகிறேன். அது போலவே, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற விலை மதிப்பு மிக்க பரிசுகளை வழங்கியே ஆட்சியைப் பிடித்திருக்கிறது தற்போதைய தமிழக அரசு. ஆகவே, ஒவ்வொரு வோட்டும் நிச்சயமாக பல ஆயிரம் ரூபாய்கள் (அல்லது அதை விட அதிக) மதிப்புடையது. இன்றைய சூழலிலோ அது நம் உயிருக்குச் சமானமானது; நம் இனத்தின் வருங்காலத்திற்குச் சமானமானது. அந்த வோட்டை ஒரு கட்சிக்கு ஆதரவாக வழங்குவதோ, தத்தமது கணவன் / மனைவியையே வேறொருவருக்கு விட்டுக் கொடுப்பதற்குச் சமானமானது. நிச்சயமாக அதைச் செய்ய நாம் விரும்ப மாட்டோம். இன உணர்வு என்றெல்லாம் கூறுவதை விட, சுயமரியாதை உள்ள எந்தத் தமிழனும், மனிதாபிமானம் உள்ள தமிழர் மற்றும் தமிழரல்லாத எந்தத் தமிழக / புதுவை வாக்காளரும், தமது வோட்டை தமது உயிருக்கும் மேலானதாகக் கருதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதை எந்தக் கட்சிக்கும் வழங்காதிருக்க வேண்டும்.

இதைப் பற்றி நான் எழுதிய முந்தைய பதிவு.

செவ்வாய், பிப்ரவரி 03, 2009

ஈழம்: இனி நாம் செய்யக் கூடியது

வருகிற நாட்கள் தமிழக மக்கள் இலங்கை நிலவரம் குறித்து தங்களது நிலைப்பாட்டை (அழுத்தமாக) வெளிப்படுத்தும் வகையில் அமையும்ன்னு நம்பறேன். நாளை ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறப் போகுது. அது மாபெரும் வெற்றியடையணும்ங்கறது என்னோட ஆழ்ந்த விருப்பம். கொஞ்சம் கூட வெட்கம், தன்மானம் போன்ற எதுவுமில்லாத திமுகவும் போர்நிறுத்தம் கோரி (யாரு கிட்ட?) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிப்ரவரி ஏழாம் தேதி ஒரு போராட்டத்தை அறிவிச்சிருக்கு. (தேசிய அளவில் கவனிப்பைப் பெறுவதற்காகவாவது திமுக போன்ற கட்சிகளின் பங்களிப்பு தேவைப்படுவது ஒரு வருத்தமான நிலை) மக்களாகிய நாம் உடனடியா செய்யக்கூடியது இது போன்ற போராட்டங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை வெற்றி பெறச் செய்வதுதான். அடுத்த கட்டமா என்ன செய்யலாம்ன்னு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை இங்க பதிவு செய்கிறேன்.

தற்போதைய தமிழக விரோத காங்கிரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருது. நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் வாக்கில் நடக்கலாம்னு தெரிய வருது. (இன்னும் மூன்று மாதங்கள்தான்). நம் ஆறு / ஏழு கோடி தமிழர்களின் தயவால் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இந்தத் தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பா.ஜ.க.வும் நம் முன் வந்து scavenging for votes நடவடிக்கையில் ஈடுபடப்போறாங்க. நாம் உறுதி செய்ய வேண்டியது, இவற்றில் மற்றும் இதிலிருந்து எந்தவொரு பிரதிநிதியும் இந்திய நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் படக்கூடாது. தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பாஜகவும் நம் தயவில்லாமலேயே மத்தியில் ஆட்சியை அமைத்துக் கொள்ளட்டும். நம்மை எவ்வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தாத இந்தக் கட்சிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டியதில்லை. இதன் நோக்கம் இந்தியா என்னும் அரசமைப்பால் நம் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுதான். இனிமேலும் இந்தியப் பாராளுமன்ற மக்களாட்சியில் நம்பிக்கை வைக்கத் தயாராயில்லை என்பதை அழுத்தமாகப் பதிவதுதான் இதனால் ஏற்படும் பலன்.

காஷ்மீர் தேர்தலில் 60% வாக்குப் பதிவு என்பதை வைத்து காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று நிறுவ முயலுகின்றன இந்திய ஊடகங்கள். அதே அடிப்படையில் இந்திய அரசுக்கு நம்மிடம் ஆதரவில்லை என்பதையும் நாம் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாமல் பதிவு செய்வோம். (இதன் விளைவாக என்னென்ன மாறுதல்கள் தமிழக வரலாற்றில் ஏற்படக்கூடும் என்பது எவரது கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது).

சற்றே ambitious ஆன மேற்கூறிய திட்டத்தைப் போலவே, மற்றொரு திட்டம். ஊடகப் புறக்கணிப்பு. நம்முடைய சந்தா / patronageஇன் அடிப்படையில் இயங்கிக் கொண்டு, ஆனால் நமக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளும் செய்தி / காட்சி ஊடகங்களைப் புறக்கணிப்பது. அமெரிக்கக் கறுப்பினப் போராட்டத்தில் Montgomery bus boycott என்ற நிகழ்வு குறிப்பிடத்தக்கது. அங்கு பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒதுக்குமுறைக்கு எதிராக அதன் பயணிகள் ஒட்டுமொத்தமாக பேருந்துகளைப் புறக்கணித்தனராம். அதன் விளைவாக அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, பிறகு அந்த ஒதுக்குமுறை சட்ட விரோதமானது என்று தீர்ப்பானது. Dangers of Tamil Chauvinism என்று பத்தி எழுதும் நாளிதழ்களை அவற்றின் சிங்கார சென்னைத் தலைமை அலுவலகத்திலேயே திவாலாகும் நிலையை நம்மால் ஏற்படுத்த முடியும். நம் பிரச்சனை குறித்து தேசியத் தொலைக்காட்சிகளை விடக் குறைவான coverage செய்யும் தமிழ் சீரியல் / மானாட்ட மயிலாட்டத் தொலைக்காட்சிகளை அனைவரும் புறக்கணித்தால், அவற்றின் TRP கணக்குகளெல்லாம் அடிவாங்கி அவற்றின் விளம்பர வருவாய்களை பாதிக்கும். அதன் பிறகாவது நம் பிரச்சனைகளை முன்நிறுத்துவார்கள் என்று தோன்றுகிறது. Let's vote with our (non) voting & (non) buying power.

தற்போது கொந்தளிப்பு நிலையிலிருக்கும் தமிழுணர்வாளர்கள், உயிர்த் தியாகம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடுத்து, தமது எதிர்ப்பை மேற்கூறிய உத்திகள் மற்றும் அதற்கான பரப்புரைகள், போன்றவற்றில் செலவிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

சனி, அக்டோபர் 25, 2008

Eelam for Indians, Indians for Eelam

ஈழப் பிரச்சனை குறித்து தமிழிலேயே பெரும்பாலும் விவாதிச்சிக்கிட்டு இருக்கோம். அதனால தமிழரல்லாதவங்களுக்கு இதப் பத்தி போதிய அளவு தெரியாம போகும் வாய்ப்பிருக்கு. அதிலும் நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சியே கவிழக் கூடிய ஒரு முடிவை எடுக்கப் போறாங்க. அதற்கான காரணங்கள், பின்புலம் என்பதையெல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல நமக்கு மவுண்ட் ரோட் மஹா விஷ்ணுங்கதான் இருக்காங்க. அவர்கள் வெளியிடப் போகும் நச்சுக் கருத்துகளுக்கு ஒரு மாற்றுப் பார்வையாகவாவது நம் கருத்துகளைப் பதிவது அவசியமாகிறது.

இத்தகைய நோக்கங்களோட ஒரு ஆங்கிலப் பதிவு எழுதியிருக்கேன். அதை இங்கே காணலாம். இந்தப் பிரச்சனை குறித்து தெளிவு பெற விரும்பும் தமிழரல்லாத நட்பு வட்டங்களுக்கு (நீங்கள் விரும்பினால்) இதை சுட்டலாம். உங்களோட மதிப்பிற்குரிய கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

திங்கள், அக்டோபர் 20, 2008

அழையா விருந்தினனாக......... ஈழம் குறித்த தொடர்பதிவுகளில்

தோழர் தூயாவின் தொடர் பதிவு அழைப்பு கவனத்தைக் கவர்ந்தது. நான் பெரும்பாலும் தொடர்பதிவுகளில் பங்கு பெறுவதில்லை. ஆனால் இதில் அழைக்காமலே பங்கு பெற வேண்டும் போலிருந்தது. ஆகவே, இதோ ஆஜராயிட்டேன் :) இனி, கேள்வி - பதில்கள்:

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

கொஞ்சம் அதிகமாவே தெரியும்ன்னு சொல்லலாம். '83 கலவரங்கள் நடந்த சமயத்தில் நான் சென்னையில் பள்ளி மாணவனா படிச்சிக்கிட்டு இருந்தேன். எங்கள் பள்ளியிலும் எனது வகுப்பிலும் சில இலங்கைத் தமிழர்கள் வந்து சேர்ந்தாங்க. அவர்களோடு சேர்ந்து விளையாடிய (ஊர் சுற்றிய :) ) அனுபவங்கள் உண்டு.

ஒரு முறை நண்பர்களா சேர்ந்து மகாபலிபுரம் வரை (சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. இருக்கும்), சைக்களிலேயே போனோம். எங்கள் கூட்டத்தில் ஒருவர் ஈழத்தவர். அவருக்கு வழி நெடுக (அவரது ஈழத்தமிழைக் கேட்டு) பொதுமக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. ஒரு இடத்தில் தண்ணீருக்காக நிறுத்தினோம். அப்போது பொது ஜனம் ஒருவர் கையில் கொய்யாப் பழம் வைத்திருந்தார் (தான் உண்பதற்காக). என்னோட ஈழ நண்பரைப் பார்த்ததும் கையிலிந்த பழத்தை அவருக்கு வழங்கினார். ஆனா நண்பர் தான் மட்டும் எப்படி சாப்பிடறதுன்னு அதை மறுத்து விட்டார். இவ்வாறாக, மக்களுக்கு இயற்கையாவே ஈழத்தவர்கள் மீது ஒரு பாசம் அந்த சமயத்தில் இருந்தது என்பதை நேரில் கண்டிருக்கிறேன்.

பிறகு, கல்லூரி படித்த போது, இந்திய 'அமைதி' படைக்கும் புலிகளுக்கும் போர் மூண்டு பிரச்சனை திசை திரும்பியது. அப்போது, திலீபன் என்ற ஈழத்து இளைஞர் (உண்மையிலேயே) சாகும் வரை உண்ணா விரதம் இருந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிச்சி சில மாணவர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகிச்சாங்க. அதே சமயத்தில் இந்திய ஆங்கில ஊடகங்களில் புலிகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களா (human shields) பயன்படுத்தறாங்க, அதனால நம் படையினருக்குப் பின்னடைவுன்னு பரவலா செய்தி வந்துக்கிட்டு இருந்தது. ஆனா அவைகளில் வராத பல செய்திகள் (இந்தியப் படையின் வல்வெட்டித்துறை அராஜகங்கள்) குறித்து கடந்த சில வருடங்களா இணையம் / வலைப்பதிவுகள் மூலமா தெரிஞ்சிக்கிட்டு இருக்கேன்.

எப்படியோ, ராஜீவ் கொலை, அதைத் தொடர்ந்த man-hunt (or is it witch-hunt?) வரலாறு காணாத வகையில் 29 பேருக்கு தூக்கு தண்டனை (அதைக் குறைத்து ஆயுள் தண்டனை ஆனதுன்னு நினைக்கறேன்), என்று தொடர் சம்பவங்கள் நடந்து, அதன் பிறகு ஈழம் குறித்து அவ்வளவா கவனம் செலுத்தவில்லை.

நார்வேயின் அமைதி முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டப்போ, எங்கயோ இருக்கும் Norwayயால் முடிந்தது அருகில் இருக்கும் நம்மால் முடியாமலிருக்குமான்னு தோணியது. 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஒரு விதத்தில் கவனத்தை மீண்டும் கொண்டு வந்ததுன்னு சொல்லலாம் (ஆனா, நிறைய பேர் இதை மறுப்பாங்கன்னு தெரியும்).

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

காஷ்மீர், திபெத், பாலஸ்தீனம், ஆகிய நாடுகளைப் போலவே தமிழ் ஈழமும் ஒரு சுதந்திர நாடாக மலரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதையே நானும் வரவேற்கிறேன்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

உண்மையைச் சொல்லணும்னா, ஆர்வத்தோடல்லாம் படிப்பது கிடையாது. ஈழத்தமிழை பேச்சாகவும், எழுத்து நடையிலும் படிக்கப் பிடிக்கும்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

மிகவும் தாமதமாக ஒலிக்கும் குரல்கள். விவேக்கின் வசனமான 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தது'ன்னு நம்புவோம். மத்திய அரசியலில் இதனால் ஒன்றும் சாதிக்க முடியாவிட்டாலும், மக்கள் மத்தியில் இவை மனமாற்றம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

உணர்வுரீதியா - நம்பிக்கையைத் தளர விடாதீங்கன்னு சொல்லலாம். கவனமா இருங்கன்னு சொல்லலாம். புலம்பெயர்ந்தவர்களுக்கு, தொடர்ந்து உங்கள் பரப்புரையைச் செய்யுங்கள்ன்னு சொல்லலாம். முடிந்தவரை அதை ஆங்கிலத்தில், பிற உலக மொழிகளில் செய்யுங்கன்னு சொல்லலாம். இதுக்கு மேல சொல்றதுக்கு எனக்கு வேற எதுவும் தோணவில்லை.

பி.கு. - தொடர் பதிவு என்பதால் இதை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.