மதிய உணவுத் திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதிய உணவுத் திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 29, 2008

அட்சய பாத்திரம் ஏற்படுத்திய எண்ணங்கள்

'அட்சய பாத்ரா' என்ற தொண்டு நிறுவனத்தை அறிமுகம் செய்து இம்சை என்ற பதிவர் ஒரு இடுகையை வெளியிட்டிருக்கிறார், கண்டிப்பாகப் படியுங்கள். அவர்களின் தளத்தைப் பார்வையிட்டுக் கொண்டே வந்ததில் எனது பிரமிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களது சேவையால் பள்ளிகளில் drop-out rate எனப்படும் 'மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்று விடும் விகிதம்' குறைந்துள்ளது என்று கணக்கெடுத்து வெளியிட்டுள்ளார்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், எந்தவொரு சிறிய நல்லிணக்க முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே. அதனால் எவ்வளவு சிறியவொரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தாலும் அதுவும் பலரது வாழ்வில் ஒளியேற்றக்கூடிய சாத்தியமுள்ளது என்ற வகையில் இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவு.

ஆனாலும், ஒரு சில உறுத்தல்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. முதலில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய்ந்தேன். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தினர் என்ற தகவல் கிடைத்தது. பாராட்டப்பட வேண்டியதுதான். என்றாலும் நிறுவனங்கள் social responsibility என்ற பெயரில் செய்யும் கேலிக்கூத்துகளை சற்று எச்சரிக்கை உணர்வுடனேயே அணுகி வந்திருக்கிறேன். நர்மதைத் திட்ட எதிர்ப்புக் குழு, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் போராடும் குழுக்கள், போன்ற மக்கள் இயக்கங்கள் அளிக்கும் நம்பகத்தன்மையை இந்த நிறுவன ஆதரவு தொண்டுக் குழுக்கள் ஏனோ அளிப்பதில்லை. (ஏன் என்பது பிறகு)

தளத்தின் மற்ற பக்கங்களையும் புரட்டிக் கொண்டு வந்த போது ஒரு செய்தி அடிக்கடி repeat ஆவது போல் இருந்தது. அதாவது, அவர்கள் குழந்தைகளுக்காகத் தயாரிக்கும் உணவு யாருடைய கையும் படாமல் சுத்தமாகத் தயாரிக்கப்படுகிறது என்ற செய்தி. சத்துணவுக் கூடங்களில் பல்லி விழுந்த உணவெல்லாம் பரிமாறப்படலாம் என்ற நிலையோடு ஒப்பிடுகையில் இது ஆறுதலான ஒரு நிலைதான். ஆனாலும் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் 'யார் கையும் படாமல் தயாரிக்கப் பட்டது' என்ற செய்தி அவர்களது மனநிலையை வெளிப்படுத்துகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. யாருடைய வீட்டிலும் யாரும் கையுரைகளை அணிந்து கொண்டு உணவு தயாரிப்பதில்லை. கைப்பட தயாரித்த உணவைத்தான் நாம் அனைவரும் விரும்பி உண்டு கொண்டிருக்கிறோம்.அவர்களது சமையலறைகளில் பாதுகாப்பு கருதி எடுக்கும் கையுரை அணிதல் போன்ற நடவடிக்கைகளைக் குறை கூறவில்லை. ஆனால் அதை அடிக்கொரு முறை கூறிக்கொள்ளும் நோக்கம் என்ன என்பதுதான் யோசிக்க வைக்கிறது. "எங்கள் ஊழியர்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்கள் கை பட்டு அசுத்தமாகாத உணவுதான் எங்களால் விநியோகிக்கப் படுகிறது" என்ற மேட்டுக்குடிச் சிந்தனைதான் இப்படி பக்கத்திற்குப் பக்கம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதோ என்றொரு ஐயம். வலைத்தளத்தைப் படித்து ஆதரவளிக்க முன்வரக்கூடிய இதர மேட்டுக்குடியினருக்கும் இது தேவையான செய்தியாக இருக்கக் கூடும் என்பதே இங்கிருக்கும் அவல நிலை.

அதே போல் repeat ஆகும் இன்னொரு செய்தி - இத்திட்டத்தால் பலனடைந்த குழந்தைகளின் குடும்பச் சூழல் பற்றிய தகவல்களில் "தந்தை குடிகாரன்" என்ற செய்தி (விமர்சனத் தொனியில்). "குழந்தைக்கு உணவளிக்க வக்கில்லாமல் தண்ணியடிக்கும் தந்தை" என்ற மேட்டுக்குடிப் பார்வைதான் இது. எனது வீட்டுக்கெதிரே ஒரு வீட்டை உடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டின் கூறைப்பகுதிதான் (concrete roof) வலிமையானது என்பது தெரிந்திருக்கலாம். அதை ஒரு ஐந்து பேர் ஒரு பெரிய சுத்தியல் போன்ற கருவியைக் கொண்டு தகர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வேலையைச் செய்யகூடிய மக்களை எந்த வேலையும் செய்ய வைக்கலாம் என்பதே எனக்கு ஏற்பட்ட உணர்வு (ஆங்கிலத்தில் தெளிவாகக் கூறுகிறேன் - if somebody could be motivated to do this work, they can be motivated to do anything else) . முகமது யூனுஸ் போன்றவர்களோடு நான் வேறுபடுவது இங்குதான். தன்னை முன்னேற்றிக் கொள்ளும் உத்வேகமில்லாதவர்கள் என்று ஆண்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டவர்கள் அவர்களே. Sorry for digressing - நான் கூற வருவது, வாழ்க்கை கடினமானது. அந்த சுத்தியல் கூலியாட்கள் இரவு தூங்குவதற்காக செய்ய வேண்டியதைச் செய்தால்தான் அவர்களால் தூங்க முடியும் என்பது நம்மைப் போன்ற மேட்டுக்குடிகளுக்குப் புரியவே புரியாது.

இப்போது million dollar macro-economic கேள்வி. இலவச மதிய உணவுதான் தீர்வா என்ற கேள்வி. தமிழகத்தில் புரட்சித் தலைவர் கொண்டு வந்த திட்டம். அரசின் குற்ற உணர்வால் உந்தப்பட்டு எடுத்த முடிவு. மனிதர்களின் வாழ்வு முறைகளை, வாழ்வாதாரங்களை திரும்பிப் பெற முடியாத வண்ணம் (irreversible) மாற்றியமைத்து அவர்களை வீடின்றி, நிலமின்றி, அகதிகளாக அலைய விட்ட அரசு, அவர்களது ஏழ்மைக்குக் காரணமான அரசு, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களுக்கு சோத்துப் பிச்சை போட்டது. தொடர்ந்து வந்த தனியார்மயமாக்கம், மேலும் லட்சக்கணக்கானோரை நிலமற்றவர்களாக்கி, அவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளியது. அந்த தனியார்கள் இப்போது social responsibility என்று பகல் வேஷம் போட்டுக் கொண்டு, குற்ற உணர்வால் உந்தப்பட்டு சோத்துப் பிச்சை போடுகிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது.

காலை மிதித்து சாரி சொல்லாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட காலை மிதித்து சாரி சொல்பவர்கள் உயர்ந்தவர்களே. இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவர்கள், யார் காலையும் மிதிக்காமல் கவனமாக செல்பவர்கள்ன்னு சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கறேன்.