தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

ஆபத்தான ஜெயா ஆதரவுப் போக்கு

ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிச்சி நிறைய பதிவுகள் வந்துக்கிட்டு இருக்கு. இரண்டு தினங்களுக்கு முன்புதான் அவரோட நேர்காணல் ஒன்றை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் (CNN-IBNன்னு நினைவு) பார்த்தேன். "இலங்கைத் தமிழர்கள் வேறு, புலிகள் வேறு", "பிரபாகரன் தீவிரவாதி கிடையாதுன்னு சொன்னதால கருணாநிதி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ஞ்சிருக்கணும் / ஆட்சி கலைக்கப் பட்டிருக்கணும்", "அதைக் கேட்டுக் கொண்டு சோனியா காந்தி ஏன் அமைதி காத்துக்கிட்டு இருக்காங்க? அவங்க காங்கிரஸ் தலைவி கிடையாதா? ராஜீவ் காந்தியின் விதவை கிடையாதா?"ன்னெல்லாம் பேசியது எல்லார் மனதிலும் பசுமையா இருந்திக்கிட்டு இருக்கும்போதே அடுத்த நாள் அந்தர் பல்டி அடித்து தமிழ் ஈழக் கோரிக்கையை வைக்கறாங்க. அவங்க இதுக்கு முன்னாடி பேசிய "ஈழத் தமிழர்கள்ன்னு யாரும் கிடையாது, இலங்கைத் தமிழர்கள்ன்னுதான் இருக்காங்கன்னு" கண்டுபிடித்துத் தெரிவித்த கருத்துகளெல்லாம் கூட யாரும் மறந்திருக்க முடியாது. இது போன்ற குறுகிய காலத்திற்குள் தெரிவித்த எதிர்மறையான கருத்துகளே நிறைய இருக்கும்போது, அவரது ஆட்சிக்காலத்தில் ஈழத்தவர்களுக்கு கிடைத்த அவமதிப்பு (காண்க இன்றைய கானா பிரபாவின் பதிவு) போன்ற நிகழ்வுகளை எல்லாம் நாம் மறந்தாலும் ஈழத் தமிழர்கள் மறக்கமாட்டாங்க.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ன்னு ஒருத்தர் இலங்கைக்குப் போய் விடியோ பிடிச்சிக்கிட்டு வந்தாராம். அதைப் பாத்து இவங்க மனம் மாறினாங்களாம். தமிழகத் தமிழர்கள் இந்தப் பூச்சுற்றலுக்கெல்லாம் காதைக் காட்டிக்கிட்டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. (அதுதான் நடந்துக்கிட்டும் இருக்கு). ஈழம்ங்கிற தனி நாடு கோரிக்கையை இவங்க ஆதரிக்கறாங்களா, அப்படீன்னா அந்த கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இவங்க ஆதரவு தெரிவிக்கறாங்களான்னு விவரமா தெரியல. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவங்க 'separate state' கோருவதா செய்தி வருது. அப்படீன்னா தமிழர்களுக்குன்னு ஒரு தனி மாநிலத்துக்குத்தான் இவங்க ஆதரவளிக்கறாங்களான்னு யோசிக்கத் தோணுது. (இவங்க வரும் நாட்களில் அப்படி ஒரு அந்தர் பல்டி அடிக்கவும் சாத்தியமிருக்கு) விடுதலைப் புலிகளை ஆதரிக்காம தனி ஈழத்துக்கு ஆதரவுங்கிற நிலைப்பாடு எடுக்கறவங்க எனக்கு ஆபத்தானவங்களாவே படறாங்க. மதில் மேல் பூனை போன்றவங்கதான் இவங்கல்லாம்.

தமிழக / புதுவைத் தொகுதிகள் நாற்பதும் இவங்க கையில் சிக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பிடிச்சிட்டு, பழையபடி (ஈழ விவகாரத்தைப் பொறுத்த வரை) முருங்க மரம் ஏறக்கூடியவங்களாதான் இவங்க எனக்கு தெரியறாங்க. தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் போலத் தெரியுது. அப்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைப் கைப்பற்றும் பட்சத்தில், அது பாஜகவின் இயல்பான கூட்டணிக் கட்சியா (கருத்தியல் / பாசிசம் போன்ற ஒற்றுமைகளின் அடிப்படையில்) அமைந்து விடும் வாய்ப்பிருக்கு. ஆக, அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் இந்துத்வாவுக்குக் கிடைக்கும் வெற்றியே. (மற்றும் ஈழப் போராட்டத்துக்குக் கிடைக்கும் தோல்வியே)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கும் அது சாதகமான நிலைமையாகவே இருக்கும்ன்னு எனக்குத் தோணுது.

செவ்வாய், பிப்ரவரி 03, 2009

ஈழம்: இனி நாம் செய்யக் கூடியது

வருகிற நாட்கள் தமிழக மக்கள் இலங்கை நிலவரம் குறித்து தங்களது நிலைப்பாட்டை (அழுத்தமாக) வெளிப்படுத்தும் வகையில் அமையும்ன்னு நம்பறேன். நாளை ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறப் போகுது. அது மாபெரும் வெற்றியடையணும்ங்கறது என்னோட ஆழ்ந்த விருப்பம். கொஞ்சம் கூட வெட்கம், தன்மானம் போன்ற எதுவுமில்லாத திமுகவும் போர்நிறுத்தம் கோரி (யாரு கிட்ட?) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிப்ரவரி ஏழாம் தேதி ஒரு போராட்டத்தை அறிவிச்சிருக்கு. (தேசிய அளவில் கவனிப்பைப் பெறுவதற்காகவாவது திமுக போன்ற கட்சிகளின் பங்களிப்பு தேவைப்படுவது ஒரு வருத்தமான நிலை) மக்களாகிய நாம் உடனடியா செய்யக்கூடியது இது போன்ற போராட்டங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை வெற்றி பெறச் செய்வதுதான். அடுத்த கட்டமா என்ன செய்யலாம்ன்னு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை இங்க பதிவு செய்கிறேன்.

தற்போதைய தமிழக விரோத காங்கிரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருது. நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் வாக்கில் நடக்கலாம்னு தெரிய வருது. (இன்னும் மூன்று மாதங்கள்தான்). நம் ஆறு / ஏழு கோடி தமிழர்களின் தயவால் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இந்தத் தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பா.ஜ.க.வும் நம் முன் வந்து scavenging for votes நடவடிக்கையில் ஈடுபடப்போறாங்க. நாம் உறுதி செய்ய வேண்டியது, இவற்றில் மற்றும் இதிலிருந்து எந்தவொரு பிரதிநிதியும் இந்திய நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் படக்கூடாது. தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பாஜகவும் நம் தயவில்லாமலேயே மத்தியில் ஆட்சியை அமைத்துக் கொள்ளட்டும். நம்மை எவ்வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தாத இந்தக் கட்சிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டியதில்லை. இதன் நோக்கம் இந்தியா என்னும் அரசமைப்பால் நம் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுதான். இனிமேலும் இந்தியப் பாராளுமன்ற மக்களாட்சியில் நம்பிக்கை வைக்கத் தயாராயில்லை என்பதை அழுத்தமாகப் பதிவதுதான் இதனால் ஏற்படும் பலன்.

காஷ்மீர் தேர்தலில் 60% வாக்குப் பதிவு என்பதை வைத்து காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று நிறுவ முயலுகின்றன இந்திய ஊடகங்கள். அதே அடிப்படையில் இந்திய அரசுக்கு நம்மிடம் ஆதரவில்லை என்பதையும் நாம் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாமல் பதிவு செய்வோம். (இதன் விளைவாக என்னென்ன மாறுதல்கள் தமிழக வரலாற்றில் ஏற்படக்கூடும் என்பது எவரது கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது).

சற்றே ambitious ஆன மேற்கூறிய திட்டத்தைப் போலவே, மற்றொரு திட்டம். ஊடகப் புறக்கணிப்பு. நம்முடைய சந்தா / patronageஇன் அடிப்படையில் இயங்கிக் கொண்டு, ஆனால் நமக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளும் செய்தி / காட்சி ஊடகங்களைப் புறக்கணிப்பது. அமெரிக்கக் கறுப்பினப் போராட்டத்தில் Montgomery bus boycott என்ற நிகழ்வு குறிப்பிடத்தக்கது. அங்கு பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒதுக்குமுறைக்கு எதிராக அதன் பயணிகள் ஒட்டுமொத்தமாக பேருந்துகளைப் புறக்கணித்தனராம். அதன் விளைவாக அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, பிறகு அந்த ஒதுக்குமுறை சட்ட விரோதமானது என்று தீர்ப்பானது. Dangers of Tamil Chauvinism என்று பத்தி எழுதும் நாளிதழ்களை அவற்றின் சிங்கார சென்னைத் தலைமை அலுவலகத்திலேயே திவாலாகும் நிலையை நம்மால் ஏற்படுத்த முடியும். நம் பிரச்சனை குறித்து தேசியத் தொலைக்காட்சிகளை விடக் குறைவான coverage செய்யும் தமிழ் சீரியல் / மானாட்ட மயிலாட்டத் தொலைக்காட்சிகளை அனைவரும் புறக்கணித்தால், அவற்றின் TRP கணக்குகளெல்லாம் அடிவாங்கி அவற்றின் விளம்பர வருவாய்களை பாதிக்கும். அதன் பிறகாவது நம் பிரச்சனைகளை முன்நிறுத்துவார்கள் என்று தோன்றுகிறது. Let's vote with our (non) voting & (non) buying power.

தற்போது கொந்தளிப்பு நிலையிலிருக்கும் தமிழுணர்வாளர்கள், உயிர்த் தியாகம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடுத்து, தமது எதிர்ப்பை மேற்கூறிய உத்திகள் மற்றும் அதற்கான பரப்புரைகள், போன்றவற்றில் செலவிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஞாயிறு, ஜூன் 03, 2007

தலைக்கவசம்

சில வருடங்களுக்கு முன் ஹைதராபாத் நகரிலிருந்த போது கட்டாய helmet சட்டம் அங்கு அமலுக்கு வந்தது. Helmet அணிந்து முன் பின் பழக்கமில்லாததால் ஒரே வெறுப்பாக இருந்தது. helmet அணிய விருப்பமில்லாமல் சில மாதங்கள் எனது இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தாமலேயே வைத்திருந்தேன். பிறகு கட்டாயத்தின் பேரில் helmetஐ வாங்கி பயன்படுத்தவும் ஆரம்பித்தேன். அவ்வளவு சுகமாக இருக்கவில்லை. இருந்தாலும், வாகன வசதி வேண்டி அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தச் சட்டத்தின் காரணகர்த்தாவாகக் கருதப்பட்டவர் அப்போது ஹைதராபாத்தின் போக்குவரத்துத் துணைக் கமிஷனராக இருந்த திருமதி. தேஜ்தீப் கௌர் மேனன்.

அவர் இந்த அமலாக்கத்தைச் செயல்படுத்திய விதம் புதுமையானது. Helmet இல்லாமல் பிடிபடும் ஓட்டுனர்களை பிடித்துக் கொண்டு போய் ஒரு வகுப்பில் உட்கார வைத்து, அவருக்கு helmet அணிவதனால் என்ன பயன் என்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு விரிவுரை வழங்கப்படும். அந்த விரிவுரையைக் கேட்ட பின்னரே, பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார், ஆனால் அவருக்கு வேறெந்த அபராதமோ, தண்டனையோ விதிக்கப்பட மாட்டாது. இது ஒரு பரவலான jokeஆக அனைவராலும் பேசப்பட்டது. இந்த வகுப்பில் உட்காருவதற்கு பயந்தே அனைவரும் அவசர அவசரமாக helmet வாங்கி அணியத் தொடங்கினார்கள். Helmet எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்தன - எப்படியென்றால், பேருந்தில் செல்வதற்குக் கூட helmet அணிந்து கொண்டு இச்சட்டத்தை நக்கலடிப்பது போன்ற உத்திகளைக் கொண்டு. இது பற்றி ஈ-டிவி, மா-டிவியிலெல்லாம் பரபரப்பாக செய்திகள் வெளியாயின. பொதுமக்கள் பேட்டி எடுக்கப்பட்டார்கள். helmet அணிந்தால் தலை வலிக்கிறது, கழுத்து வலிக்கிறது என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகப் புலம்பினார்கள். "ஓ, அப்படியா? உலகெங்கும் helmet அணிகிறார்களே, அவர்களுக்கு வராத தலைவலி, கழுத்து வலியெல்லாம் இவர்களுக்கு வந்து விட்டதா?" என்று தொலைகாட்சித் திரையில் தோன்றி பதிலடி கொடுத்தார் மேற்கூறிய துணை கமிஷனர். கடமையைச் செய்யும் காவலதிகாரிகள் தூக்கியடிக்கப் படுவதைப் போல், இப்போது அவர் எந்தத் துறையில் தூக்கியடிக்கப்பட்டுள்ளார் என்றுத் தெரியவில்லை. ஆனாலும், அவரது சிறப்பான பணிக்காக ஒரு சர்வதேச விருது கிடைத்த செய்தியை இங்கு காணலாம்.

வேண்டா வெறுப்புடன் அணிய ஆரம்பித்திருந்தாலும், பழக்கமாகிவிட்ட காரணத்தால் தொடர்ந்து helmetஐப் பயன்படுத்துகிறேன். பெங்களூருக்கு மாற்றல் ஆகி வந்த போது இங்கும் helmet கட்டாயமாக்கப்பட்டது. ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருந்ததால் பிரச்சனையில்லை. ஆனால் வேறொரு மாற்றம் நிகழ்ந்தது. முன்பு scooter ஓட்டிக் கொண்டிருந்ததிலிருந்து இப்போது bikeஇற்கு மாறியிருக்கிறேன். இந்த அனுபவம் புதிதென்பதால் கொஞ்சம் பழக்கமாவதில் பிரச்சனை இருந்தது. ஒரு முறை கடும் மழையில் இரவு 3 மணிக்கு அலுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கையில், எதிரே வந்த கார் கொஞ்சம் zig-zagஆக என்னை நோக்கி வர, அதனால் கலக்கமடைந்து நான் முன் பிரேக்கை அழுத்த, வண்டி சறுக்கிக் கொண்டு விழுந்தது. விழுந்த அந்த கணத்தில் எனது தலை நேராக சாலையில் போய் மோதியது. அன்று helmet அணிந்திருக்காவிட்டால் விளைவுகளை எண்ணிப் பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது. வேறெந்தச் சேதமுமின்றி எனது பயணத்தைத் தொடர்ந்தேன். அதே போல் மழை நேரத்தில் முன் பிரேக்கை அழுத்தி மேலும் இரு முறை சறுக்கி விழுந்திருக்கிறேன். கடைசி முறை ஏற்பட்ட அனுபவத்தை விரிவாக இவ்விடுகையில் விளக்கியுள்ளேன் :)

இப்போது தமிழகத்தில் கட்டாயத் தலைக்கவச நிபந்தனை அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக அறிகிறேன். அது பற்றி வலைப்பதிவுகளில் பல விதமான கருத்துகள் :) ஒரு இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்ய helmet அவசியமே என்று எனக்குப் படுகிறது (அதன் வேகம், அதிகரிக்கும் விபத்துகள் / உயிரிழப்புகள், போன்ற காரணங்களால்). இந்த அடிப்படை ஒழுங்கை உறுதி செய்வதற்குக் கூட ஒருவர் பொது நல வழக்கு தொடுக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்தால் விரக்தியாக உள்ளது. இப்போது அரசும் பின்வாங்கிக் கொண்டுள்ளது.

வாங்கிய helmetஐ என்ன செய்வது என்று குழம்பிப் போயிருப்பவர்களுக்கு ஒரு யோசனை: அதை நீங்கள் அணிந்து கொண்டு பாதுகாப்பாகவே பயணம் செய்யலாம். இந்த யோசனை உங்களுக்கே தோன்றியிருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும்..........