வியாழன், செப்டம்பர் 24, 2009

பாக்யதா பளேகாரா - ஒரு இளமையைத் தேடும் முயற்சி

இப்போது தமிழ்த் திரைப்படங்களில் வர்ற பாடல்களையெல்லாம் கேக்க முடியவில்லை. உதாரணங்கள் எதுவும் தேவையில்லைன்னு நினைக்கறேன். இந்த 'நாக்கு மூக்கு' ரகப் பாடல்களையெல்லாம் நம்மளால எவ்வளவு காலத்துக்கு தாக்கப்பிடிக்க முடியும்ன்னு நம்ம இசையமைப்பாளர்கள் கணித்து வச்சிருக்காங்கங்கிற தகவல் தெரிஞ்சா நல்லா இருக்கும். (அதுக்குப் பிறகு தமிழ்ல பாட்டு கேக்க ஆரம்பிக்கலாம்). நல்ல வேளையா இரவு பதினொண்ணு மணிக்கு சன் மியூசிக் தொலைக்காட்சியில் 'நினைத்தாலே இனிக்கும்'ன்னு ஒரு நிகழ்ச்சி வருது (அதே பெயரில் அண்மையில் வந்திருக்கும் திரைப்படத்தைப் பற்றிச் சொல்லவில்லை - அதிலுள்ள பாடல்கள் ஜவுளிக் கடை விளம்பரப்பாடல்கள் ரகம்), இந்த நிகழ்ச்சியில் நம்ம காலத்து (அதாவது 70, 80களில் வந்த) பாடல்களையெல்லாம் போடறாங்க. அவற்றையெல்லாம் கேக்கும்போதுதான் ஒரு உன்னதமான கலை வடிவத்திற்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை நினைச்சி கவலையா இருக்கு.

அண்மையில் சானல் மாத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு கன்னட இசை சானல் கவனத்தை ஈர்த்தது. தொலைக்காட்சி மற்றும் சுவரொட்டிகளில் அடிக்கடி பார்த்திருக்கும் ஒரு கதாநாயகரும் (பெயர் சிவராஜ்குமார் என்று பிறகு தெரிந்து கொண்டேன்) கதாநாயகி நவ்யா நாயரும் ஒரு டூயட்டுக்கு ஆடிக்கிட்டு இருந்தாங்க. இசை என்னோட கல்லூரி நாட்களில் தமிழில் வெளிவந்தத் திரையிசையை ஒத்திருந்தது. திடிரென ஆண்குரலில் இளையராஜா! பாடலும் அட்டகாசமான இளையராஜாவின் படைப்பு போல இருந்தது. உடனே கூகிளாண்டவரை துணைக்கழைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்தப் பாட்டு, அது இடம்பெற்ற படம் (பெயர்: பாக்யதா பளேகாரா, பொருள்: ராசியான வளையல்காரர்?), எல்லாமே இளையராஜாவின் இசையில் வெளிவந்ததுன்னு. முதலில் நான் தொலைக்காட்சியில் கேட்ட பாடலை (செந்துள்ளி, செந்துள்ளி) தரவிறக்கம் செய்தேன். பல இணையத் தளங்களில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் சிலாகித்து எழுதியிருந்ததைப் பார்த்ததால் மொத்த ஆல்பத்தையும் தரவிறக்கி சேமித்துக் கொண்டேன். (ஒரு தரவிறக்கும் தளம், பிற தளங்களும் உள்ளன)

எனக்குப் பிடித்துப் போன பாடல்கள் சிலவற்றைக் குறித்து சில வரிகள்:

1. பளேகாரா, பளேகாரா - ஒரு ராமராஜன் படப் பாடலைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் கொஞ்சம் variations, tempo changes என்று நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சும் குரலில் ஷ்ரேயா கோஷல், அபஸ்வரமாக குனால் கஞ்சாவாலா.

2. செந்துள்ளி செந்துள்ளி - என்னை தொலைக்காட்சியில் ஈர்த்த பாடல் இதுதான். அழகான நவ்யா நாயர்(videoவில்), கிரங்கடிக்கும் இளையராஜாவின் rustic குரல். தொண்ணூறுகளில் வந்த 'ஆனந்தக் குயிலின் பாட்டு' என்ற 'காதலுக்கு மரியாதை' படப் பாடலை நினைவுப்படுத்துகிறது.

3. கல்லு கல்லெனுதா - அட்டகாசமான கன்னட folk பாடல், இவ்வளவு அழகான மொழியா என்று வியக்க வைக்கும் பாடல். இளையராஜாவுக்கு folk இசை பிறந்த வீட்டைப் போன்றது என்பதால் அசத்தி விடுகிறார்.

4. மது மகளு செலுவே - இதை போன்ற ஒரு பழைய இளையராஜாவின் தமிழ்ப் பாடலைக் கேட்டது போல் உள்ளது. உதித் நாரயணனின் கொடுமையான குரலிலிருந்து பாடலைக் காப்பாற்றுவது சித்ராவின் தேன் போன்ற குரலும் பின்னணி கோரஸ் பாடகிகளும். இசை, குறிப்பிடத் தேவையன்றி உயர்தரம்.

5. நன்னன்னே நோடுவனு ('என்னையே பாத்த்துக்கிட்டு இரு'ங்கிறாங்களா? ஆச, தோச :) ) - இதுவும் (மௌனராகம் வகையாறா) பழைய பாடல்களை நினைவுப்படுத்தும் ஒரு அற்புதமான டூயட் பாடல். இளையராஜாவும், ஷ்ரேயா கோஷலும் பாடியிருக்கிறார்கள்.

6. பாக்யதா பளேகாரா - இன்னொரு அழகான டுயட் பாடல், புது பாடகர்களால் பாடப்பட்டது.

மொத்தத்தில், தூங்க வைக்கக் கூடிய இனிமையான பாடல்கள் ராஜாவிடமிருந்து. தமிழகத்தில் பாயவேண்டிய காவிரி, கன்னட நாட்டை நோக்கிச் சென்று விட்டது, நம்மை நாக்கு மூக்கர்களின் தயவில் விட்டுவிட்டு.

திங்கள், ஜூன் 01, 2009

GMail பயனர்களுக்கான OpenID

தமிழ்மணம் பரிந்துரை நிரல் இப்போது OpenIDயைக் கேட்கிறது. பிளாக்கர்.காம் / வேர்ட்பிரஸ்.காம் பதிவு வைத்திருப்பவர்கள் தங்களது பதிவின் முகவரியையே OpenIDஆகப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் பதிவர் அல்லாதவர்கள் எந்த OpenID முகவரியைத் தருவது என்று (நான் உட்பட) பலரும் குழம்பிப் போயிருக்கிறோம்.

Yahoo mail பயனர்கள் பிரச்சனையின்றி http://username@yahoo.com என்ற முகவரியை வழங்கி தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாமென்று தெரிய வருகிறது. ஆனால் Gmail அத்தகைய வசதியைத் தராமல் கொஞ்சம் சிக்கலான வகையில் OpenID ஆதரவைத் தருகிறது. தமிழ்மணம் போன்ற ஒரு தளத்தில் நமது Gmail முகவரி மூலமாக OpenID சோதனையைத் தாண்டுவது எப்படி? அதற்கான செய்முறை கீழே வழங்கப்பட்டுள்ளது:
  • OpenID பயன்படுத்துவதற்கு முன்பு http://openid-provider.appspot.com/ என்ற தளத்திற்குச் சென்று 'login' சுட்டியைச் சொடுக்குங்கள். Google தளத்திற்கு redirect செய்யப்படுவீர். அங்கு, பயனர் விவரம் மற்றும் கடவுச் சொல்லை அளித்து login செய்யுங்கள்.(Google தளத்திற்கே சென்று login செய்வதால் இது முற்றிலும் பாதுகாப்பானது. Phishing போன்ற கவலைகளுக்கிடமில்லை)
  • மீண்டும் http://openid-provider.appspot.com/ பக்கத்திற்கே redirect செய்யப்படுவீர். ஆனால் இப்போது அப்பக்கத்தில் உங்களுக்கான OpenID முகவரி தரப்பட்டிருப்பதைக் காணலாம். (அது http://openid-provider.appspot.com/gmail-username என்ற உருவில் இருக்கும்)
  • இந்த முகவரியையே தமிழ்மணம் மற்றும் (OpenIDயைக் கோரும்) இதர தளங்களிலும் வழங்கி உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

வெள்ளி, மே 29, 2009

சில தகவல்கள்

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழு இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலவரம் பற்றி விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டம் (special session) ஒன்றைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது பற்றி தெரிந்திருக்கலாம். சில நாட்கள் முன்பு தமிழ் சசியின் வேண்டுகோளின் படி எல்லா உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதால், அந்த நிகழ்வில் என்னதான் நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருந்தேன்.

அப்போது நடந்த உரையாற்றல்கள் எல்லாவற்றையும் கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம்:
இந்தத் தீர்மானத்தின் மீதான வோட்டெடுப்பு நிலவரம்:
ஆதரித்தவர்கள்(29): அங்கோலா, அசர்பைஜான், பஹ்ரைன், வங்காள தேசம், பொலிவியா, பிரேசில், பூர்கினா ஃபாஸோ, கேமரூன், சீனா, கியூபா, ஜிபூதீ, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மடகாஸ்கர், மலேசியா, நிகராகுவா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கதார், ருஷ்யா, சவுதி அரேபியா, சினிகல், தென் ஆப்பிரிக்கா, உருகுவே, மற்றும் ஜாம்பியா.

எதிர்த்தவர்கள்(12): பாஸ்னியா / ஹெஸகோவினா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லந்து, சுலோவகியா, சுலோவனியா, சுவிட்சர்லந்து, மற்றும் இங்கிலாந்து.

நடுநிலை வகித்தவர்கள் (6): அர்ஜன்டினா, கேபான், ஜப்பான், மோரிஷியஸ், கொரியா மற்றும் உக்ரேன்.

இந்த முன்னெடுப்பு பத்தி அதிக நம்பிக்கை வைக்கா விட்டாலும், சில தகவல்கள் கூடுதல் கவனத்தைப் பெற்றது. அவற்றை எந்தவொரு வரிசைப்படுத்தும் இல்லாம பட்டியலிடுவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.

  • முதலில் இந்தியா எடுத்த நிலைப்பாடு பற்றி (இந்த நாட்டுல வந்து பிறந்து தொலைச்ச பாவத்துக்காக, அதை முதலில் கவனிக்கத் தோன்றியது). நடைபெற்ற இனவழிப்பில் இந்தியா இலங்கைக்கு எந்த உதவியும் செய்யலன்னு பல முறை பல அதிகாரத் தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டு வந்தாலும் அதிலுள்ள நேர்மையின்மை வெளிப்படையாவே தென்பட்டுக்கிட்டு இருந்தது. இலங்கை தரப்பிலிருந்தே பல முறை 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல'ங்கிற மாதிரியான அறிக்கைகள் மூலமா இந்த உதவிகள் பற்றி வெட்ட வெளிச்சமாயிட்டு இருந்தது. மேற்கூறிய சிறப்புக் கூட்டத்தில் இரு வோட்டெடுப்புகள் நடைபெற்றதாம். அந்த இரு வோட்டெடுப்புகளிலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவா வோட்டளிச்சிருக்கு. நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈனத் தலைவர்கள் இதுக்கு என்ன பதில் சொல்லப்போறாங்கன்னு இனிமேதான் பாக்கணும். அது மட்டுமில்லாம, மேற்கூறிய நிகழ்வில் இந்தியாவின் பிரதிநிதியான கோபிநாதன் அச்சங்குளங்கரை என்பவர் (மலையாளியா? மலையாளிகளே, எங்க மேல உங்களுக்கு அப்படி என்ன பாசம்? கடைசி வரை இருந்து கழுத்தறுக்கறீங்களே? :) ) தெரிவித்த கருத்துகளையும் கவனிக்க வேண்டியிருக்கு. அவர் கூறியது:
    "இந்த சிறப்புக் கூட்டம் கூட்டியதற்கான நோக்கமே சந்தேகத்திற்குரியதா இருக்கு. இப்போதுதான் இலங்கை மிகவும் கடினமா போராடி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கு. சர்வதேச சமூகம் அதற்கு துணையா இருந்து சமரசம், போரின் காயங்களை ஆற்றுவது போன்ற வகையில் பங்களிப்பதுதான் இப்போதைய தேவை. அதை விடுத்து, இலங்கையையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது அரசியல் நோக்கங்களைக் கொண்டதாகும்"
    அப்படீன்னு நம்ம பிரதிநிதி உலக அரங்கில் போய் சொல்லிக்கிறாரு. :) (இங்க ஒரு 'ஜெய் ஹிந்த்' போட்டுக்கிறேன்) மேலும் அவர் சொன்னது,
    "non-state actors (அதாவது விடுதலைப் புலிகள்) செய்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேள்வி எழுப்பப் பட வேண்டும், அதற்கு சர்வதேச சமூகம் சற்றும் தயங்கக் கூடாது."

    (அப்படீன்னா state actors செய்த உரிமை மீறல்கள் பற்றி கேள்வியே கேக்கக் கூடாதுன்றாரா, சேட்டன்?)
  • சில நாட்களுக்கு முன்பு "நேபாளத்தில் நடந்த யுகப் புரட்சி", "நேபாளத்தில் நடந்த அதிசயம்" அப்படீன்னெல்லாம் சுய மைதூனப் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. அத்தகைய நேபாள நாட்டின் பிரதிநிதி தினேஷ் பட்டரை என்பவர் சந்தி சிரிக்கும் வகையில் கூறிய கருத்துகள் பின்வருமாறு:
    "விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தின் தோல்வியை நேபாளம் வரவேற்கிறது. இது இலங்கையின் பன்முகத்தன்மை, ஒற்றுமை, நாணயம், போன்றவற்றுக்குக் கிடைத்த வெற்றியாகும். இலங்கை அதன் ஜனநாயகப் பாதையின் மீது வைத்திருக்கும் தணியாத நம்பிக்கையையும் உறுதியையும், மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் போக்கையும் நேபாளம் பாராட்டுகிறது."

  • வங்காள தேசம்: சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ இன்றைய ஈழத்தின் நிலையிலிருந்து அவலங்களைச் சந்தித்து, பிறகு பிரிவினை ஏற்பட்டு விடுதலையான ஒரு நாடு. அதன் வோட்டும் இலங்கையை ஆதரித்துத்தான். நெல்சன் மண்டேலா புகழ் தென் ஆப்பிரிகா - மிக மோசமான இன ஒடுக்குமுறையிலிருந்து ஒரு பத்து - இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் விடுதலை அடைந்த ஒரு நாடு. அதன் வோட்டும் இலங்கைக்கு ஆதரவாகவே அமைந்தது.

  • சீனா, ருஷ்யா, கியூபா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா, மலேஷியா, எகிப்து, சவுதி போன்ற சர்வாதிகார நாடுகள் எப்படி ஒட்டளித்திருக்கும் என்று அனுமானித்திருந்ததால், அவற்றின் முடிவுகள் அவ்வளவாக வியப்பைத் தரவில்லை.

  • பின்காலனியாக்கம், மறுகாலனியாக்கம் என்றெல்லாம் பிதற்றும் அறிவுஜீவித்தன அரைவேக்காட்டுக் கருத்துரைகளைக் கடந்து நோக்கினால், ஒன்று தெளிவாகிறது. மனித உரிமைகளுக்காக சிறிதளவேனும் குரல் கொடுக்க முன்வரக் கூடிய நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளே.

  • பொது மக்கள் மனித கேடயங்களா பயன்படுத்தப்பட்டாங்கன்னு எல்லாருமே சாமியாடி இருக்காங்க. அது பற்றிய விவாதங்களுக்குள்ள போக விரும்பல. ஆனா அதிகார அமைப்பில் இருந்திக்கிட்டு இப்படிப்பட்ட குற்றச்சாட்டை வைக்கும் இந்த நபர்கள் ஒரு கேடயமும் இல்லாமதான் உலவிக்கிட்டு இருக்காங்களா? z-security, y-securityன்னு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லா பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்துக்கிட்டுதான் பாத்ரூம் கூட போகும் இத்தகைய நபர்கள், இத்தகைய குற்றச்சாட்டுகளை வைப்பதுதான் வேடிக்கை. ஒரு ஷூ கூட அவங்க மேல வந்து விழுந்து விடக்கூடாது, அல்லது ஒரு கறுப்புக் கொடி கூட அவர்களுக்கு முன்பு காண்பிக்கப் பட்டுவிடக் கூடாது என்றெல்லாம் முன்னேற்பாடு செய்து கொள்கிற அதிகார வர்க்கத்துக்கு இந்த குற்றச்சாட்டை வைக்க ஒரு தகுதியும் கிடையாது.

  • இந்த நிகழ்வுகளிலேயே உண்மையான அக்கறையோட பேசியவர்கள் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்தான்னு தெரிய வருது. அம்னெஸ்டி (இதை அழகா தமிழ்ப்படுத்தி எங்கயோ படிச்சிருக்கேன், நினைவுக்கு வரல்ல), Human Rights Watch போன்ற அரசு சாரா (அல்லது நம் சேட்டனின் மொழியில் சொல்லணும்ன்னா, non-state actors) அமைப்புகளிலிருந்து பேசியவர்கள்தான் கொஞ்சமாவது உண்மையை பேசியிருக்காங்க போலயிருக்கு. அப்படீன்னா அரசு என்ற ஒழுங்குப்படுத்தப்பட்ட அமைப்பே மக்களின் உரிமையைப் பறிக்கும் / நசுக்கும் ஒரு இயக்கம்தானான்னு யோசிக்க வைக்குது. அரசுகளே இல்லாத ஒரு வருங்காலம் ஏற்படுமானால் அப்போதுதான் மனித உரிமைகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் ஏற்படலாம்.

  • இது போன்ற நாடுகள் அங்கத்தினர்களா இருக்கும் வரை மனித உரிமைகள் எல்லாம் கானல் நீர்தான் என்பது இன்று ஈழத்தவர்களுக்கு மட்டுமில்லாம மனித சமுதாயத்திற்கே கிடைத்திருக்கும் ஒரு படிப்பினை ஆகும்.

ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

ஆபத்தான ஜெயா ஆதரவுப் போக்கு

ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிச்சி நிறைய பதிவுகள் வந்துக்கிட்டு இருக்கு. இரண்டு தினங்களுக்கு முன்புதான் அவரோட நேர்காணல் ஒன்றை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் (CNN-IBNன்னு நினைவு) பார்த்தேன். "இலங்கைத் தமிழர்கள் வேறு, புலிகள் வேறு", "பிரபாகரன் தீவிரவாதி கிடையாதுன்னு சொன்னதால கருணாநிதி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ஞ்சிருக்கணும் / ஆட்சி கலைக்கப் பட்டிருக்கணும்", "அதைக் கேட்டுக் கொண்டு சோனியா காந்தி ஏன் அமைதி காத்துக்கிட்டு இருக்காங்க? அவங்க காங்கிரஸ் தலைவி கிடையாதா? ராஜீவ் காந்தியின் விதவை கிடையாதா?"ன்னெல்லாம் பேசியது எல்லார் மனதிலும் பசுமையா இருந்திக்கிட்டு இருக்கும்போதே அடுத்த நாள் அந்தர் பல்டி அடித்து தமிழ் ஈழக் கோரிக்கையை வைக்கறாங்க. அவங்க இதுக்கு முன்னாடி பேசிய "ஈழத் தமிழர்கள்ன்னு யாரும் கிடையாது, இலங்கைத் தமிழர்கள்ன்னுதான் இருக்காங்கன்னு" கண்டுபிடித்துத் தெரிவித்த கருத்துகளெல்லாம் கூட யாரும் மறந்திருக்க முடியாது. இது போன்ற குறுகிய காலத்திற்குள் தெரிவித்த எதிர்மறையான கருத்துகளே நிறைய இருக்கும்போது, அவரது ஆட்சிக்காலத்தில் ஈழத்தவர்களுக்கு கிடைத்த அவமதிப்பு (காண்க இன்றைய கானா பிரபாவின் பதிவு) போன்ற நிகழ்வுகளை எல்லாம் நாம் மறந்தாலும் ஈழத் தமிழர்கள் மறக்கமாட்டாங்க.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ன்னு ஒருத்தர் இலங்கைக்குப் போய் விடியோ பிடிச்சிக்கிட்டு வந்தாராம். அதைப் பாத்து இவங்க மனம் மாறினாங்களாம். தமிழகத் தமிழர்கள் இந்தப் பூச்சுற்றலுக்கெல்லாம் காதைக் காட்டிக்கிட்டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. (அதுதான் நடந்துக்கிட்டும் இருக்கு). ஈழம்ங்கிற தனி நாடு கோரிக்கையை இவங்க ஆதரிக்கறாங்களா, அப்படீன்னா அந்த கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இவங்க ஆதரவு தெரிவிக்கறாங்களான்னு விவரமா தெரியல. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவங்க 'separate state' கோருவதா செய்தி வருது. அப்படீன்னா தமிழர்களுக்குன்னு ஒரு தனி மாநிலத்துக்குத்தான் இவங்க ஆதரவளிக்கறாங்களான்னு யோசிக்கத் தோணுது. (இவங்க வரும் நாட்களில் அப்படி ஒரு அந்தர் பல்டி அடிக்கவும் சாத்தியமிருக்கு) விடுதலைப் புலிகளை ஆதரிக்காம தனி ஈழத்துக்கு ஆதரவுங்கிற நிலைப்பாடு எடுக்கறவங்க எனக்கு ஆபத்தானவங்களாவே படறாங்க. மதில் மேல் பூனை போன்றவங்கதான் இவங்கல்லாம்.

தமிழக / புதுவைத் தொகுதிகள் நாற்பதும் இவங்க கையில் சிக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பிடிச்சிட்டு, பழையபடி (ஈழ விவகாரத்தைப் பொறுத்த வரை) முருங்க மரம் ஏறக்கூடியவங்களாதான் இவங்க எனக்கு தெரியறாங்க. தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் போலத் தெரியுது. அப்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைப் கைப்பற்றும் பட்சத்தில், அது பாஜகவின் இயல்பான கூட்டணிக் கட்சியா (கருத்தியல் / பாசிசம் போன்ற ஒற்றுமைகளின் அடிப்படையில்) அமைந்து விடும் வாய்ப்பிருக்கு. ஆக, அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் இந்துத்வாவுக்குக் கிடைக்கும் வெற்றியே. (மற்றும் ஈழப் போராட்டத்துக்குக் கிடைக்கும் தோல்வியே)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கும் அது சாதகமான நிலைமையாகவே இருக்கும்ன்னு எனக்குத் தோணுது.

வெள்ளி, பிப்ரவரி 20, 2009

போர்

கடைநிலைக் காவல் வீரருக்கும்
கடைநிலை வழக்கறிஞருக்கும்,
அதிகாரக் கைக்கூலியின்
சூழ்ச்சியின் பேரில்.

புலம்புகிறான் கைக்கூலி
தேசிய ஊடகங்களில், தன்
தேசியச் சார்பு நிலைப்பாட்டுக்குத்
தான் தரும் விலையென
(சொல்லாமல் விட்டது - அவனது
மாநில எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து)

ஊடகமும் ஆமோதிக்கிறது,
முட்டை எறிவைக்
கல்லெறிவெனத்
திரித்துக் கூறி.
எம் எழுச்சியை
உலகமே தூற்றட்டுமென.

கடைநிலைச் சமூகம்
குருதி தெறிக்கப் போர் புரிய,
இக்காட்டுமிராண்டித்தனத்தை
இவ்வுலகமே தூற்ற,
கள்ளச் சிரிப்புச் சிரிக்கிறது
பார்ப்பனியம்.
தன் சூழ்ச்சிக்கு
ஈடு இணையே
கிடையாதென...

வெள்ளி, பிப்ரவரி 06, 2009

கலைஞரைக் கும்முவது சரியா?

இந்தக் கேள்விதான் இப்போ பதிவுகளில் சூடாக விவாதிக்கப்பட்டு வருது. சரின்னு ஒரு அணியும், தவறுன்னு ஒரு அணியும், சரி - ஆனா அதைச் செய்வதற்கும் ஒரு தகுதி இருக்கணும்ன்னு (அதாவது, அவரது கடந்த கால எல்லா சாதக / பாதகச் செயல்களையும் விமர்சனமில்லாம ஆதரிச்சவங்களுக்குத்தான் இப்போ அவரைக் கும்மறதுக்கு தகுதியோ உரிமையோ இருக்குன்னு) மூன்றாவதா ஒரு அணியும் கருத்து தெரிவிச்சிக்கிட்டு இருக்காங்க.

என்னைப் பொறுத்தவரை, கலைஞரையோ, ஜெயலலிதாவையோ, மன்மோகனையோ, சோனியாவையோ கும்முவதில் ஒரு பயனும் இல்லை. அவர்களை என் உணர்வுகளை மதிப்பவர்களா, என் மக்களுக்காக எதுவும் செய்யக்கூடியவர்களா கருதுவதை நிறுத்தியே பல காலமாகி விட்டது. இப்போதைய உடனடி சிந்தனை பெருந்துயரத்தில் இருக்கும் நம் உறவுகளான ஈழத்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பதுதான். அதற்கு நம்மிடம் என்ன ஆயுதம் இருக்கு என்பதுதான் மற்ற எல்லா சிந்தனைகளையும் விட முன்னுரிமை பெறுவது. எந்தக் கட்சி சார்புகளும் இல்லாத ஒரு சாமானியனாக, என்னிடம் இருப்பது எனது வோட்டு என்ற ஒரே துருப்புச் சீட்டுதான். (முத்துக்குமாரைப் போல் உடல் என்ற துருப்புச் சீட்டையெல்லாம் வழங்கும் அளவுக்கு எனக்கு வீரம் கிடையாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்). பெரும்பாலனவர்களின் நிலையும் இதுதான்னு நம்பறேன்.

இந்த வோட்டு என்ற ஆயுதத்தை எப்படி மிகுந்த சக்தி வாய்ந்த விதத்தில் பயன்படுத்துவது? (How to use it in the most effective manner?) மற்ற சூழல்களில் சிறந்த ஆட்சியைத் தரக்கூடிய கட்சிக்கு வாக்களித்து அதைப் பயன்படுத்தலாம். ஆனால் இன்றைய சூழலிலோ அதைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் அதன் மிகுந்த வீரியமான பயன்பாடாக அமையும். தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள் - 'election ke din, aap vote nahi kare tho, aap so rahen hein'. (தேர்தல் தினத்தன்று நீங்கள் வோட்டளிக்கச் செல்லவில்லை என்றால் நீங்கள் தூங்கவதாகப் பொருள்) அந்தத் தூக்கம்தான் இப்போது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் செய்ய வேண்டியது. நம் துயரைக் கண்டும் காணாதது போல் இருக்கும் மத்திய அரசு, அதற்குத் துணை போகும் மாநிலக் கூட்டணிக் கட்சிகள்...... இவர்கள் அனைவரையும் எழுப்ப, நம் தூக்கத்தால்தான் முடியும்.

இந்த வோட்டு என்பது நம்மால் மிகக் குறைவாக மதிக்கப் படுகிறது என்று கருதுகிறேன். அண்மைய இடைத்தேர்தலில் ஒவ்வொரு வோட்டுக்கும் பல ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டதாக அறிகிறேன். அது போலவே, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற விலை மதிப்பு மிக்க பரிசுகளை வழங்கியே ஆட்சியைப் பிடித்திருக்கிறது தற்போதைய தமிழக அரசு. ஆகவே, ஒவ்வொரு வோட்டும் நிச்சயமாக பல ஆயிரம் ரூபாய்கள் (அல்லது அதை விட அதிக) மதிப்புடையது. இன்றைய சூழலிலோ அது நம் உயிருக்குச் சமானமானது; நம் இனத்தின் வருங்காலத்திற்குச் சமானமானது. அந்த வோட்டை ஒரு கட்சிக்கு ஆதரவாக வழங்குவதோ, தத்தமது கணவன் / மனைவியையே வேறொருவருக்கு விட்டுக் கொடுப்பதற்குச் சமானமானது. நிச்சயமாக அதைச் செய்ய நாம் விரும்ப மாட்டோம். இன உணர்வு என்றெல்லாம் கூறுவதை விட, சுயமரியாதை உள்ள எந்தத் தமிழனும், மனிதாபிமானம் உள்ள தமிழர் மற்றும் தமிழரல்லாத எந்தத் தமிழக / புதுவை வாக்காளரும், தமது வோட்டை தமது உயிருக்கும் மேலானதாகக் கருதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதை எந்தக் கட்சிக்கும் வழங்காதிருக்க வேண்டும்.

இதைப் பற்றி நான் எழுதிய முந்தைய பதிவு.

செவ்வாய், பிப்ரவரி 03, 2009

ஈழம்: இனி நாம் செய்யக் கூடியது

வருகிற நாட்கள் தமிழக மக்கள் இலங்கை நிலவரம் குறித்து தங்களது நிலைப்பாட்டை (அழுத்தமாக) வெளிப்படுத்தும் வகையில் அமையும்ன்னு நம்பறேன். நாளை ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறப் போகுது. அது மாபெரும் வெற்றியடையணும்ங்கறது என்னோட ஆழ்ந்த விருப்பம். கொஞ்சம் கூட வெட்கம், தன்மானம் போன்ற எதுவுமில்லாத திமுகவும் போர்நிறுத்தம் கோரி (யாரு கிட்ட?) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிப்ரவரி ஏழாம் தேதி ஒரு போராட்டத்தை அறிவிச்சிருக்கு. (தேசிய அளவில் கவனிப்பைப் பெறுவதற்காகவாவது திமுக போன்ற கட்சிகளின் பங்களிப்பு தேவைப்படுவது ஒரு வருத்தமான நிலை) மக்களாகிய நாம் உடனடியா செய்யக்கூடியது இது போன்ற போராட்டங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை வெற்றி பெறச் செய்வதுதான். அடுத்த கட்டமா என்ன செய்யலாம்ன்னு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை இங்க பதிவு செய்கிறேன்.

தற்போதைய தமிழக விரோத காங்கிரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருது. நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் வாக்கில் நடக்கலாம்னு தெரிய வருது. (இன்னும் மூன்று மாதங்கள்தான்). நம் ஆறு / ஏழு கோடி தமிழர்களின் தயவால் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இந்தத் தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பா.ஜ.க.வும் நம் முன் வந்து scavenging for votes நடவடிக்கையில் ஈடுபடப்போறாங்க. நாம் உறுதி செய்ய வேண்டியது, இவற்றில் மற்றும் இதிலிருந்து எந்தவொரு பிரதிநிதியும் இந்திய நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் படக்கூடாது. தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பாஜகவும் நம் தயவில்லாமலேயே மத்தியில் ஆட்சியை அமைத்துக் கொள்ளட்டும். நம்மை எவ்வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தாத இந்தக் கட்சிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டியதில்லை. இதன் நோக்கம் இந்தியா என்னும் அரசமைப்பால் நம் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுதான். இனிமேலும் இந்தியப் பாராளுமன்ற மக்களாட்சியில் நம்பிக்கை வைக்கத் தயாராயில்லை என்பதை அழுத்தமாகப் பதிவதுதான் இதனால் ஏற்படும் பலன்.

காஷ்மீர் தேர்தலில் 60% வாக்குப் பதிவு என்பதை வைத்து காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று நிறுவ முயலுகின்றன இந்திய ஊடகங்கள். அதே அடிப்படையில் இந்திய அரசுக்கு நம்மிடம் ஆதரவில்லை என்பதையும் நாம் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாமல் பதிவு செய்வோம். (இதன் விளைவாக என்னென்ன மாறுதல்கள் தமிழக வரலாற்றில் ஏற்படக்கூடும் என்பது எவரது கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது).

சற்றே ambitious ஆன மேற்கூறிய திட்டத்தைப் போலவே, மற்றொரு திட்டம். ஊடகப் புறக்கணிப்பு. நம்முடைய சந்தா / patronageஇன் அடிப்படையில் இயங்கிக் கொண்டு, ஆனால் நமக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளும் செய்தி / காட்சி ஊடகங்களைப் புறக்கணிப்பது. அமெரிக்கக் கறுப்பினப் போராட்டத்தில் Montgomery bus boycott என்ற நிகழ்வு குறிப்பிடத்தக்கது. அங்கு பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒதுக்குமுறைக்கு எதிராக அதன் பயணிகள் ஒட்டுமொத்தமாக பேருந்துகளைப் புறக்கணித்தனராம். அதன் விளைவாக அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, பிறகு அந்த ஒதுக்குமுறை சட்ட விரோதமானது என்று தீர்ப்பானது. Dangers of Tamil Chauvinism என்று பத்தி எழுதும் நாளிதழ்களை அவற்றின் சிங்கார சென்னைத் தலைமை அலுவலகத்திலேயே திவாலாகும் நிலையை நம்மால் ஏற்படுத்த முடியும். நம் பிரச்சனை குறித்து தேசியத் தொலைக்காட்சிகளை விடக் குறைவான coverage செய்யும் தமிழ் சீரியல் / மானாட்ட மயிலாட்டத் தொலைக்காட்சிகளை அனைவரும் புறக்கணித்தால், அவற்றின் TRP கணக்குகளெல்லாம் அடிவாங்கி அவற்றின் விளம்பர வருவாய்களை பாதிக்கும். அதன் பிறகாவது நம் பிரச்சனைகளை முன்நிறுத்துவார்கள் என்று தோன்றுகிறது. Let's vote with our (non) voting & (non) buying power.

தற்போது கொந்தளிப்பு நிலையிலிருக்கும் தமிழுணர்வாளர்கள், உயிர்த் தியாகம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடுத்து, தமது எதிர்ப்பை மேற்கூறிய உத்திகள் மற்றும் அதற்கான பரப்புரைகள், போன்றவற்றில் செலவிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

திங்கள், ஜனவரி 12, 2009

Geek Mafia – ஒரு சுவாரசியமான கதை

இப்போது ஆங்கிலத்தில் முன்னணி நாவலாசிரியர்கள்லாம் யார் யாருன்னு அவ்வளவா தெரியல. பள்ளி / கல்லூரி நாட்களில் சிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், ஜெஃப்ரீ ஆர்ச்சர், ஆர்தர் ஹெய்லி அப்படீன்னு நிறைய பேர் இருந்தாங்க. அந்த அளவு பிரபலமா இப்போது இருக்கும் நாலவாசிரியர்கள் பற்றிய தகவல் கிடைச்சா நல்லா இருக்கும். ஸ்டீஃபன் கிங் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டாலும், அவரோட நூல் எதையும் படிச்சது கிடையாது. மற்றபடி, பரபரப்பா பேசப்படும் / அவார்ட் வாங்கிய எழுத்தாளர்கள் அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, டாவின்சி கோட் எழுதிய டேன் பிரவுன், அனிதா தேசாய் போன்றவர்களின் படைப்புகளை வாங்கிப் படித்து விடுவதுண்டு.

அன்பளிப்பா கிடைத்த ஒரு மின் புத்தகப் படிப்பான் (e-book reader) கைவசம் இருப்பதால், அதற்கு தீனி போடுவதற்கு (அல்லது, என்னோட இலக்கியப் பசிக்கும் தீனி போடும் வகையில்) மின் புத்தக வேட்டை செஞ்சிக்கிட்டு இருந்தேன். Manybooks, Feedbooks போன்ற தளங்களில் நிறைய மின் புத்தகங்கள் இலவசமா கிடைக்குது. பெரும்பாலும் பழைய classics ரக நூல்கள். இவைகளை பெருமளவுக்கு பதிவிறக்கி படிச்சு முடிச்சாலும், (அவற்றில் பல வெகு சிறப்பா இருந்தாலும்), இப்போதைய நிகழ்கால எழுத்துக்களைப் படிக்கும் ஆர்வம் அதிகமாயிட்டு வருது. அதை மனதில் கொண்டு மேற்கூறிய தளங்களில் தேடிய போதுதான் கிடைத்தது இந்த அருமையான புத்தகம்.

கணினித் துறையில் இருக்கிறவங்க, மற்றும் ஆங்கிலப் புனைவுக் கதைகள் படிக்கும் ஆர்வமுள்ளவங்க நிச்சயமா இதை விரும்புவாங்கன்னு தோணுது. ஹேக்கர்களின் (hackers) வாழ்கையை அடிப்படையா கொண்ட கதை. தங்களின் அபரிமிதமான திறமையை கொண்டு சட்ட விரோதமான / சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுக்கும் சில மென்பொருள் மற்றும் இதர வல்லுனர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, ஒரு குழு (அதை Crew என்று கூறிக் கொள்கிறார்கள்) அமைத்துக் கொண்டு, ஒரு சமத்துவமான ஒரு சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் நிகழ்த்தும் ஏமாற்று வேலைகளிலிருந்து கிடைக்கும் பணத்தை விட, அந்த வாழ்க்கை முறை தரும் untraceability, அமைப்பு சாரா தன்மையே அவர்களை தொடர்ந்து அவ்வாறு வாழத் தூண்டுகிறது. வரிப் பணம் கட்டுவதில்லை, போலி கடனட்டைகள், போலி அடையாள அட்டைகள்ன்னு, ஒரு 'off-the-grid' வாழ்வே அவர்களோடது. ஆண் - பெண் பேதம் என்பதுவும் கிடையாது. இந்தக் கதையில் சொல்லப்பட்ட Crewவின் தலைமைப் பொறுப்பே ஒரு பெண்ணின் கையில்தான். மேலும், முடிவுகளை அனைவரும் சேர்ந்து எடுப்பது, மற்றும் கிடைக்கும் வருமானத்தை அனைவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதுன்னு, ஒரு ஜனநாயக, சமத்துவ, ideal சமூகம் அவர்களுடையது. ஒரே பிரச்சனை அவர்கள் செய்யும் ஏமாற்று / மோசடி வேலைகள்தான் :) வெறும் தொழில்நுட்ப விஷயங்கள்ன்னு மட்டுமில்லாம, எனது இதயத்திற்கு நெருக்கமான இடது / liberal கருத்தியல்களும் அதைச் சார்ந்த சில நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. (There's a liberal deep inside every programmer என்பது எனது இன்றைய அருள்வாக்கு).

இந்தப் புத்தகத்தைப் பற்றி விமர்சனங்கள் எப்படின்னு பாத்தா, மேல இருக்கும் சுட்டியிலேயே பலர் கருத்து / விமர்சனங்களைத் தெரிவிச்சிருக்காங்க. சுத்தமா நல்லாயில்லன்னு சில பேர்களும், ஆகா அபாரம்ன்னு சில பேரும் கருத்து தெரிவிச்சிருகாங்க. இடைப்பட்ட கருத்துகளே கிடையாது. அதிலிருந்தே இது ஒரு தீவிர வகை நூல்ன்னு தெரிய வரலாம் :) இருபத்தியோராம் நூற்றாண்டின் சிந்தனையாளர்கள்ன்னு நான் நினைக்கும் சிலர் Steven Levitt (Freakonomics நூலின் ஆசிரியர்), Malcolm Gladwell (Blink ஆசிரியர்), Seth Godin (Viral Marketing மற்றும் இதர பல நூல்கள்), மற்றும் Cory Doctorow (பிரபல Boing boing வலைப்பதிவின் ஒரு முக்கிய பங்களிப்பாளர்). இதில் கடைசி இருவரும் இந்த நூலைப் பரிந்துரை செய்திருக்காங்கன்னு தெரிய வருது. என்னோட தீர்ப்பு என்னன்னு கேட்டா - எனக்கு plot, groundன்னுல்லாம் சொல்லத் தெரியல. கதை பரவாயில்லை ரகம். எழுத்து நடை, சம்பவங்கள், விவரிப்புகள் ஆகியவை வெகுவாகக் கவர்ந்தன. முயற்சி செய்து பார்க்க விரும்பறவங்க மேலுள்ள சுட்டியிலிருந்து பதிவிறக்கி படிச்சிகோங்க :)

ஞாயிறு, டிசம்பர் 07, 2008

"வசிக்க ஒரு வீடு, பிழைக்க ஒரு வேலை"

'இப்படிக்கு ரோஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சியை உள்ளடக்கிய சில பதிவுகளைக் காண நேரிட்டது. ஈழம் பற்றி சில நாட்களுக்கு முன் அதிக பரபரப்போட பேசப்பட்டது. ஈழத்தில் / இலங்கையில் அமைதி திரும்பி அனைவருக்கும் ஏற்புடைய சமரசம் / தீர்வு ஏற்பட வேண்டியது நிச்சயமாக நமது நெடுங்கால இலக்காக இருக்கிறது. ஆனா அதற்கு முன்பு போர்ச்சூழலால் அவதிப்படும் மக்களின் துயரைத் துடைப்பதுவும் ஒரு அவசரத் தேவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். தேசிய / சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் உணவு மூட்டைகளை வெற்றிகரமாக அனுப்பி விட்டோம். அவ்வளவு மெனக்கெடாமலேயே அதை விட அதிகமாக அம்மக்களுக்கு நம்மால் செய்ய முடியுமென்று தோன்றுகிறது.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மேற்கத்திய நாடுகளில் பரவலாக வாழ்ந்து வந்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் நமது நாட்டில்தான் அதிக அளவில் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கறேன் (இந்தத் தகவல் தவறாகவும் இருக்கலாம்). மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தெரிய வருவது என்னன்னா, கொட்டும் மழையில் செங்கல்பட்டு வரை மனிதச் சங்கிலியாக நிற்பதை விட நம்மால் மேலும் பயனுள்ள வகையில் உதவ முடியும் என்பதுதான்.

தமிழகம் - இந்தியாவின் முன்னோடியான மாநிலங்களில் ஒன்று. (எந்த அடிப்படையில் பார்த்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுகிறது). தொழில்மயமாக்கம் (#1), அந்நிய முதலீடு (#3), ஏற்றுமதி (#3), பொருளாதாரம் (#3 - state's GDP = US$70 billion), அதிகமான வீட்டு உரிமையாளர்கள் (#3), இத்யாதி, இத்யாதி........ இப்படி செல்வச் செழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தால் நிச்சயமாக தன்னை நம்பி வந்தோருக்கு இதை விட அதிகமாகச் செய்து தர இயலும். நாம் கோருவதெல்லாம் 'வசிக்க ஒரு வீடு'. நாட்டிலேயே மிக அதிகமான வீடுகளைக் கொண்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்திலிருக்கும் தமிழகத்திற்கு இது ஒரு பெரிய சவால் கிடையாது என்று நம்புகிறேன். அதே போல், 'பிழைக்க ஒரு வேலை'. நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்து போய்விடவில்லை என்றும் நம்புகிறேன்.

நிறுவன உரிமையாளர்கள், அதிகாரப் பொறுப்பிலிருப்பவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பார்வைக்கு இந்த சிந்தனைகளை முன்வைக்கிறேன். மேலும், ஈழத்தவர்களை வேலைக்கு அமர்த்துவதிலோ, அல்லது அவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதிலோ ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்குமானால், அவற்றை உடனே நீக்குவதற்கு நம் தமிழக அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஞாயிறு, நவம்பர் 30, 2008

பாகிஸ்தான் கொடி?

அண்மையில் நடந்து முடிஞ்ச மும்பை தாக்குதல்கள் தொடர்பா ஊடகங்களில் நடைபெற்று வரும் விவாதங்கள் குறித்து எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. இவ்வளவு நாளா சாமானியன் அடி வாங்கியது போய், இப்போ ஏழு நட்சத்திர பார்ட்டிங்களுக்கும் அதே கதிதான்னு வரும்போது, நம்ம ஊடகங்கள், படித்த மக்கள், பண முதலைகள், அரசியல்வாதிகள்ன்னு சமூகத்தின் அதிகாரம் படைத்த எல்லாரும் முன்பை விட ரொம்ப அதிகமாவே ஊளையிடற மாதிரி ஒரு உணர்வு. எப்படியோ, இதுனாலல்லாம் சாமானியனுக்கும் இறுதியில் நன்மை கிடைக்கும்ன்னா, இவற்றையும் வரவேற்கலாம்ங்கிற நிலையில்தான் இப்போ இருக்கேன்.

இத்தகைய கசப்புணர்வோடயே இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்துக்கிட்டு இருந்தேன்.
ஒரு பொதுமக்கள் பங்கெடுக்கும் விவாத நிகழ்ச்சியில் 'சிமி கரேவால்'ங்கிற முன்னாள் பாலிவுட் நடிகை, வாழைப்பழத்தில் நச்சு தோய்ந்த ஊசியை ஏத்தற மாதிரி ஒண்ணைச் சொன்னாங்க. என்னன்னா, மும்பையில் குறிப்பிட்ட இடங்களிலுள்ள அடுக்கு மாளிகைகளிலிருந்து பார்வையிட்டால் தென்படக் கூடிய குடிசைப் பகுதிகளில், பல கொடிகள் காணக் கிடைக்குமாம். அவை, இந்திய நாட்டுக் கொடிகளோ, அல்லது காங்கிரஸ் / பாஜக போன்ற கட்சிகளின் கொடிகளோ கிடையாதாம். பாகிஸ்தான் நாட்டுக் கொடிகளாம் அவை. இந்தத் தகவலைத் தெரிவித்து, அவர்களெல்லாம் பாகிஸ்தான் நாட்டு விசுவாசிகள்ன்னு தேசிய தொலைக்காட்சியில் நிறுவ முயன்று கொண்டிருந்தார் அந்த முன்னாள் நடிகை. இதைக் கேட்டு வெகுண்டெழுந்த ஒரு இளைஞர், 'இந்தியாவின் எதிரிகள் முஸ்லிம்களோ, பாகிஸ்தானோ அல்ல, நீங்கள்தான் இந்தியாவின் எதிரி' என்று கூச்சலிட்டார். கொஞ்சம் உணர்ச்சி அதிகமான வெளிப்பாடுதான். இருந்தாலும் அவரது கொந்தளிப்பு நியாயமாப் பட்டது. (இறுதியில் அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது கொசுறுச் செய்தி).

எனது சொந்த அனுபவத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளிலேயே நானும் வாழும்படி அமைந்துவிட்டது. இந்தக் கொடி விவகாரம் எனக்கும் பரிச்சயமானதுதான். (கொஞ்சம் வசதி குறைவான) சில இஸ்லாமியர்களின் வீட்டு உச்சியில் பச்சை வண்ண முக்கோண வடிவிலான கொடிகள் பறப்பதைக் கண்டிருக்கிறேன். (அதன் ஓரங்களில் ஒரு பளபளா ஜிகினா வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும் :) ). அத்தகைய கொடிகளை மசூதிகளிலும் கண்டிருக்கிறேன். கல்லறைகள் அதே போன்ற ஒரு பசுமையான துணியால் போர்த்தப் பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். இவையெல்லாம் என்னை உறுத்தியது கிடையாது. வேறு யாரையும் உறுத்தியது கிடையாது என்றே நம்புகிறேன். ஒரு மத அடையாளமாகவே என்னாலும் (சட்டம் ஒழுங்கை உறுதி செய்யும் காவல் துறையினர் உட்பட) பலராலும் இந்தக் கொடிகள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். வட இந்திய இந்துக் கோவில்களில் இதைப் போன்ற காவிக் கொடிகளை காணலாம். மத நம்பிக்கை அதிகமுள்ள இந்துக்களும் (குறிப்பாக, குடிசைப் பகுதிகளில்) இத்தகைய கொடிகளால் தங்கள் வீடுகளை அலங்கரிக்கக் கூடும் (உறுதியாகத் தெரியவில்லை).

இந்தப் பச்சை வண்ணக் கொடி பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஒத்திருப்பதில் வியப்பேதுமில்லை. பாகிஸ்தான் ஒரு வெளிப்படையான இஸ்லாமிய நாடு, ஆகவே ஒரு இஸ்லாமிய அடையாளத்தை தாங்கிய ஒரு கொடியைப் பின்பற்றுகிறது. அது போலவே நேபாளம் இது நாள் வரை ஒரு இந்து முடியாட்சி நாடாகத் திகழ்ந்து வந்த காரணத்தால், அதன் கொடிக்கும் இந்துக்களின் கொடிக்கும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இப்படியாக, காலங்காலமாக ஒரு மரபை பின்பற்றும் ஒரு பிரிவினருக்கும் அதே மரபைப் பின்பற்றும் வேற்று நாடுகளுக்கும் ஏற்பட்டு விடும் ஒரு சில ஒற்றுமைகளால், இவர்கள் அந்நாடுகளின் விசுவாசிகள் என்று தேசிய அளவில் செய்யப்படும் விஷமத்தனமான பரப்புரை என்னை கவலைக்குள்ளாக்குகிறது.

இத்தகைய misinformation / போலிப் பரப்புரைகளை எதிர்கொண்டு சம்மந்தப்பட்ட விவரமறிந்தவர்கள், இஸ்லாமிய தரப்பினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எல்லா இஸ்லாமியர்களும் பாகிஸ்தானிய விசுவாசிகள், அங்கிருந்து ஏற்றுமதியாகும் தீவிரவாதத்திற்கு மறைமுக / வெளிப்படை ஆதரவளிப்பவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது. (ஏற்கனவே இவ்வாறெல்லாம் கூறி ஒதுக்கப்பட்டு வருவது தெரிந்ததுதான். மேலும் பாதிப்பு ஏற்படாதிருக்க வேண்டும் என்பதே நான் கூற வருவது).

சனி, அக்டோபர் 25, 2008

Eelam for Indians, Indians for Eelam

ஈழப் பிரச்சனை குறித்து தமிழிலேயே பெரும்பாலும் விவாதிச்சிக்கிட்டு இருக்கோம். அதனால தமிழரல்லாதவங்களுக்கு இதப் பத்தி போதிய அளவு தெரியாம போகும் வாய்ப்பிருக்கு. அதிலும் நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சியே கவிழக் கூடிய ஒரு முடிவை எடுக்கப் போறாங்க. அதற்கான காரணங்கள், பின்புலம் என்பதையெல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல நமக்கு மவுண்ட் ரோட் மஹா விஷ்ணுங்கதான் இருக்காங்க. அவர்கள் வெளியிடப் போகும் நச்சுக் கருத்துகளுக்கு ஒரு மாற்றுப் பார்வையாகவாவது நம் கருத்துகளைப் பதிவது அவசியமாகிறது.

இத்தகைய நோக்கங்களோட ஒரு ஆங்கிலப் பதிவு எழுதியிருக்கேன். அதை இங்கே காணலாம். இந்தப் பிரச்சனை குறித்து தெளிவு பெற விரும்பும் தமிழரல்லாத நட்பு வட்டங்களுக்கு (நீங்கள் விரும்பினால்) இதை சுட்டலாம். உங்களோட மதிப்பிற்குரிய கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

திங்கள், அக்டோபர் 20, 2008

அழையா விருந்தினனாக......... ஈழம் குறித்த தொடர்பதிவுகளில்

தோழர் தூயாவின் தொடர் பதிவு அழைப்பு கவனத்தைக் கவர்ந்தது. நான் பெரும்பாலும் தொடர்பதிவுகளில் பங்கு பெறுவதில்லை. ஆனால் இதில் அழைக்காமலே பங்கு பெற வேண்டும் போலிருந்தது. ஆகவே, இதோ ஆஜராயிட்டேன் :) இனி, கேள்வி - பதில்கள்:

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

கொஞ்சம் அதிகமாவே தெரியும்ன்னு சொல்லலாம். '83 கலவரங்கள் நடந்த சமயத்தில் நான் சென்னையில் பள்ளி மாணவனா படிச்சிக்கிட்டு இருந்தேன். எங்கள் பள்ளியிலும் எனது வகுப்பிலும் சில இலங்கைத் தமிழர்கள் வந்து சேர்ந்தாங்க. அவர்களோடு சேர்ந்து விளையாடிய (ஊர் சுற்றிய :) ) அனுபவங்கள் உண்டு.

ஒரு முறை நண்பர்களா சேர்ந்து மகாபலிபுரம் வரை (சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. இருக்கும்), சைக்களிலேயே போனோம். எங்கள் கூட்டத்தில் ஒருவர் ஈழத்தவர். அவருக்கு வழி நெடுக (அவரது ஈழத்தமிழைக் கேட்டு) பொதுமக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. ஒரு இடத்தில் தண்ணீருக்காக நிறுத்தினோம். அப்போது பொது ஜனம் ஒருவர் கையில் கொய்யாப் பழம் வைத்திருந்தார் (தான் உண்பதற்காக). என்னோட ஈழ நண்பரைப் பார்த்ததும் கையிலிந்த பழத்தை அவருக்கு வழங்கினார். ஆனா நண்பர் தான் மட்டும் எப்படி சாப்பிடறதுன்னு அதை மறுத்து விட்டார். இவ்வாறாக, மக்களுக்கு இயற்கையாவே ஈழத்தவர்கள் மீது ஒரு பாசம் அந்த சமயத்தில் இருந்தது என்பதை நேரில் கண்டிருக்கிறேன்.

பிறகு, கல்லூரி படித்த போது, இந்திய 'அமைதி' படைக்கும் புலிகளுக்கும் போர் மூண்டு பிரச்சனை திசை திரும்பியது. அப்போது, திலீபன் என்ற ஈழத்து இளைஞர் (உண்மையிலேயே) சாகும் வரை உண்ணா விரதம் இருந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிச்சி சில மாணவர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகிச்சாங்க. அதே சமயத்தில் இந்திய ஆங்கில ஊடகங்களில் புலிகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களா (human shields) பயன்படுத்தறாங்க, அதனால நம் படையினருக்குப் பின்னடைவுன்னு பரவலா செய்தி வந்துக்கிட்டு இருந்தது. ஆனா அவைகளில் வராத பல செய்திகள் (இந்தியப் படையின் வல்வெட்டித்துறை அராஜகங்கள்) குறித்து கடந்த சில வருடங்களா இணையம் / வலைப்பதிவுகள் மூலமா தெரிஞ்சிக்கிட்டு இருக்கேன்.

எப்படியோ, ராஜீவ் கொலை, அதைத் தொடர்ந்த man-hunt (or is it witch-hunt?) வரலாறு காணாத வகையில் 29 பேருக்கு தூக்கு தண்டனை (அதைக் குறைத்து ஆயுள் தண்டனை ஆனதுன்னு நினைக்கறேன்), என்று தொடர் சம்பவங்கள் நடந்து, அதன் பிறகு ஈழம் குறித்து அவ்வளவா கவனம் செலுத்தவில்லை.

நார்வேயின் அமைதி முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டப்போ, எங்கயோ இருக்கும் Norwayயால் முடிந்தது அருகில் இருக்கும் நம்மால் முடியாமலிருக்குமான்னு தோணியது. 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஒரு விதத்தில் கவனத்தை மீண்டும் கொண்டு வந்ததுன்னு சொல்லலாம் (ஆனா, நிறைய பேர் இதை மறுப்பாங்கன்னு தெரியும்).

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

காஷ்மீர், திபெத், பாலஸ்தீனம், ஆகிய நாடுகளைப் போலவே தமிழ் ஈழமும் ஒரு சுதந்திர நாடாக மலரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதையே நானும் வரவேற்கிறேன்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

உண்மையைச் சொல்லணும்னா, ஆர்வத்தோடல்லாம் படிப்பது கிடையாது. ஈழத்தமிழை பேச்சாகவும், எழுத்து நடையிலும் படிக்கப் பிடிக்கும்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

மிகவும் தாமதமாக ஒலிக்கும் குரல்கள். விவேக்கின் வசனமான 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தது'ன்னு நம்புவோம். மத்திய அரசியலில் இதனால் ஒன்றும் சாதிக்க முடியாவிட்டாலும், மக்கள் மத்தியில் இவை மனமாற்றம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

உணர்வுரீதியா - நம்பிக்கையைத் தளர விடாதீங்கன்னு சொல்லலாம். கவனமா இருங்கன்னு சொல்லலாம். புலம்பெயர்ந்தவர்களுக்கு, தொடர்ந்து உங்கள் பரப்புரையைச் செய்யுங்கள்ன்னு சொல்லலாம். முடிந்தவரை அதை ஆங்கிலத்தில், பிற உலக மொழிகளில் செய்யுங்கன்னு சொல்லலாம். இதுக்கு மேல சொல்றதுக்கு எனக்கு வேற எதுவும் தோணவில்லை.

பி.கு. - தொடர் பதிவு என்பதால் இதை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.

புதன், அக்டோபர் 15, 2008

என்னக் கொடும, சரவணன்?

பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் (துணைக்கு மாண்டேக் சிங் ஆலுவாலியாவும்) ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் இந்தப் பொன்னாளில், பங்குச் சந்தை, பொருளாதாரம் எல்லாம் சரிஞ்சி போச்சு. அதுக்கு அவங்கதான் காரணம்ன்னு சொல்ல வரல்ல. (அவங்க என்ன செய்வாங்க பாவம்?) ஆனா, அத சரி செய்யறேன் பேர்வழின்னு மக்களோட வரிப்பணம் ரூ.80,000 கோடி (ரொம்ப சின்ன தொகையா படுதுல்ல?) திருப்பி விடப்பட்டிருக்கு (கேட்டா infusing funds into the systemமாம்). என்னவோ liquidity crisisன்னு பேசிக்கறாங்க. இந்த மாதிரி விவகாரங்களில் ஒரு சாமானியனை விட மோசம்தான் என்னோட அறிவு. Google (என்ன மாதிரி moronகளுக்குல்லாம் அது ஒண்ணதானே இருக்கு?) பண்ணி பாத்தா, வாங்கின (அல்லது முதலீடு செய்து தயாரித்துள்ள) பொருள விக்கமுடியாம போறதுதான் liquidity crisisன்னு தெரிய வருது. ரொம்ப நல்லதுங்க. இதுக்கு ரூ.80,000 கோடி இல்ல, அதுக்கும் மேலயே தாராளமா infuse பண்ணலாம்.

என்ன, கொஞ்சம் யோசிச்சி பாத்தா liquidity crisisல்லாம் நமக்குப் புதுசான்னு கேக்கத் தோணுது. கடனை வாங்கி விவசாயம் செய்யறான். பிறகு அறுவடைக்கு அப்பறம் விளைச்சலுக்கு விலையா, போட்ட பணம் கூட திரும்பக் கிடைக்க மாட்டேங்குது. அப்போ யாரும் liquidity crisis பத்தி பேசலையே? ரூ.80,000 கோடி எல்லாம் திருப்பி விடப்படல்லையே பாதிக்கப்பட்டவங்களுக்கு? இதுல தமாசு என்னன்னா பங்குச் சந்தை சரிவால mutual fundகளும் சரிஞ்சிருச்சாம். (என்ன ஆஸ்ச்சர்யம்?) அதை சரிகட்டறதுக்காக ரூ.20,000 கோடி infuse செய்யப்பட்டிருக்கு. Mutual fund என்பதே பங்குச் சந்தை செயல்பாட்டைப் பொருத்ததுதான். தொலைக்காட்சியில் mutual fund விளம்பரத்தைப் பார்த்தா, அதில் வேக வேகமா ஒரு disclaimerஐ படிப்பாங்க. அது என்னன்னா, "Mutual fund investments are subject to market risks. Investors are requested to read the offer documents carefully before investing" என்பதுதான். ஆக, சேவை வழங்குனர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒரு சாத்தியம், அவர்களும் அவர்களது முதலீட்டாளர்களுக்கு சரியாக எச்சரிக்கை செய்து தயார்படுத்திய ஒரு நிகழ்வு, உண்மையில் நிகழ்ந்துவிட்டது. இதுக்கு ஏன் அரசாங்கம் 20,000 கோடியை infuse செய்யணும்? அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை FDயில் போடாமல் risk எடுத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு அரசு ஏன் மக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும்?

இப்படி மக்கள் (அல்லது அவர்களில் ஒரு சிறு பகுதியின்) நலன் காக்கும் அரசின் நடவடிக்கையை வரவேற்காம நான் ஏன் கேள்வி கேக்கறேன்னு தோணலாம். நாடு முழுக்க விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதோ, இல்ல சுனாமி வந்தப்பவோ, இல்ல பீஹாரில் வெள்ளம் வந்து கோடிக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த போதோ, எவ்வளவு ஆயிரம் கோடி liquidity infuse பண்ணப்பட்டதுன்னு தெரியல. ஆனா இப்பொ, IT துறையை ஒத்த டாம்பீகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிதித் துறையின் நலன் காக்க, மாத சம்பளக் காரரகளிடமிருந்து திரட்டப்பட்ட வரிப்பணம் (தண்ணியாக) செலவாகிக் கொண்டிருக்கறது. அப்பொன்னா, மக்கள் நலன் என்பதெல்லாம் அதில் ஒரு சிறு பகுதியினருக்குதான் (நிதி, வர்த்தகத் துறையினர்களுக்குத்தான்) பொருந்துமா? என்னக் கொடும, சரவணன்?

ஞாயிறு, அக்டோபர் 12, 2008

Caravanserai

எண்பதுகளில் கல்லூரியில் படிச்சவங்க, அதுவும் மேற்கத்திய இசை பரிச்சயம் உள்ளவங்களுக்கு Carlos Santanaவை தெரியாம இருக்காது. அவரோட Black magic woman ரொம்ப பிரபலம். மற்ற பாடல்களும்தான். முஸ்தஃபா...... முஸ்தஃபா....... பாட்டு கேட்டிருப்பீங்க 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மானோட இசையில். அதோட மூலம் Santanaவின் Esperando என்ற பாடல்தான். அவரோட Oye como va, Open Invitation, Soul Sacrifice, Jingo போன்ற பாடல்களையும் நீங்க எங்கயாவது கேட்டிருக்கக் கூடும் (இசைப்புயல் / வெள்ளங்களின் திரைப்பாடல்களாவோ, அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களாவோ). Santanaவோட பெரும்பான்மையான பாடல்கள் இது போன்ற radio-friendly (அதாவது, 'வெகுசன ரசனைக்கேற்ற'ன்னு தமிழ்ல சொல்லலாம்) எனப்படும் வகையைச் சார்ந்தவை. அந்தக் காரணத்தினாலயே தீவிர இசை ரசிகர்கள் மத்தியில் இத்தகைய பாடல்கள் பெரு மதிப்பைப் பெறுவது கிடையாது. ஆனா இதுக்குல்லாம் விதிவிலக்கா ஒரு ஆல்பம் தந்திருக்காரு Santana. அவ்வளவா பிரபலமடையாத அந்த ஆல்பத்தின் பெயர்தான் Caravanserai. அதைப் பற்றிய அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.

ஒரு பாலைவனத்தில் caravan ஒன்றுடன் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த இசைத் தொகுப்பின் நோக்கம். எதுக்கு பாலைவனத்தில் பயணம் செய்யணும்ன்னெல்லாம் கேக்க மாட்டீங்கன்னு நம்பறேன் :) ஒரு தனியறையில் வேண்டிய 'வசதிகள்' செய்து கொண்டு இத்தகைய பயணங்களை மேற்கொள்வது எல்லா வகையிலும் பயன் தரக்கூடும் :) ஒரு பாடல் தொகுப்பு என்ற உணர்வே ஏற்படாமல், முதலிலிருந்து இறுதி வரை ஒரே பாடலைக் கேட்பது போன்ற ஒரு உணர்வை வலுவாக ஏற்படுத்துகிறது இந்த இசைத்தட்டு. இது போல் இருப்பதை concept album என்பார்கள். ஒரு பொது கருத்துடன் எல்லா பாடல்களும் பொருந்தி வருவது போல் இருக்கும்.

இசை என்பது கருவிகளில் / குரலில் காட்டும் மேதமை என்பதைக் கடந்து, ஒரு அனுபவம், ஒரு உணர்வு, ஒரு ஆழ்மனப் பரிமாற்றம் (subconscious communication) என்ற தளங்களிலிருந்து அணுகினால் இந்த இசைத் தொகுப்பு ஒரு இணையற்ற விருந்தாக அமையக்கூடும். ஒரு மாதிரிக்காக ' பேரண்டத்திலுள்ள எல்லா அன்பும்' (All the love of the Universe) என்ற தலைப்பு கொண்ட இந்தப் பாடலை இங்கே இணைத்திருக்கிறேன்.



(பாடலின் climax கட்டம் கொஞ்சம் விடுபட்டுவிட்டது :) ஒட்டகங்களின் நாலு கால் பாய்ச்சலை முழுமையாக அனுபவிக்க முடியாததற்கு வருந்துகிறேன்)

குறிப்பட்டுச் சொல்லணும்னா, guitar, bass மற்றும் drumsஇன் இடைவிடாத உரையாடல்கள், மற்றும் மொத்தத்தில் அதன் காலத்தை வென்ற தன்மை (timelessness), ஆகியன இந்தத் தொகுப்பை மற்ற இசைத்தட்டுகளிலிருந்து வேறுபடுத்தும். Radio-friendly பாடல்களே பெரும்பாலும் பரிச்சயமானவர்கள் இந்த இசைத் தொகுப்பை அணுகும்போது ஒரு முழு விருந்துக்கு தயாராகச் செல்லுங்கள். மனரீதியாக என்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்ல முடியாததால், இதைத் தனிமையில் கேட்பது சிறந்தது.

பி.கு. - இது போன்ற நல்ல இசை பற்றிய பகிர்வுகளை இந்தத் தளத்தில் சேகரித்து வருகிறேன். விரும்பினால் அங்கேயும் வருகை தாருங்கள்.

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2008

பின்னூட்டப் படுத்தல்

என்னோட சொந்தத் தளம் ஒன்றை பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாம அனானிகளும் பின்னூட்டமிடும் வகையில் விட்டு வச்சிருந்தேன். ஒன்றும் புரியாத கன்னா பின்னா மொழியில் (ஆங்கில எழுத்துக்கள்தான்) ஒரு பின்னூட்டம் ஒண்ணு வந்தது. எதாவது தீவிரவாத சங்கேத பாஷையோன்னு கொஞ்சம் அரண்டு போய் அதை அழிச்சிட்டேன். சில நாட்கள் கழித்து திரும்ப அதே பின்னூட்டம். அதையும் அழிச்சிட்டு, அதை அனுப்பிய IP எண்ணையும் தடை செஞ்சேன். அப்பறமா, "உன் தளம் பிரமாதம்" அப்படின்னு ஒரு பின்னூட்டம், கூடவே free ringtonesன்னு போஸ்டரோட. அதுவும் ஒரு முறைக்கு மேல வந்து, அதை அழிச்சி, IPஐ தடை செஞ்சி, எல்லாம் நடந்தது. மறு நாள் பாத்தா, அந்த இடுகைக்கு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள், வயக்ரா, நயக்ரான்னு. அவசர அவசரமா IPஐப் பார்த்து தடை செய்யலாம்ன்னு போனா, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு IP எண்ணிலிருந்து அனுப்பப்பட்டிருக்கு (Distributed DoS attack). சரின்னு எல்லாத்தையும் mass delete முறையில் அழிச்சிட்டு திரும்பினா, இன்னும் இன்னும் வந்துக்கிட்டே இருக்கு பின்னூட்டங்கள். மூன்று நிமிடங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில். பின்னூட்ட மட்டுறுத்தல் வச்சாலும் அவற்றையெல்லாம் எப்படியும் நான்தான் அழிக்கணும். மேலும் இது போன்ற இயந்திரமயமான வருகைகளால் தரவுத்தளத்தின் அளவும் கூடிகிட்டே இருக்கு. அவ்வப்போது தளமும் memory போதாமையால் ஸ்தம்பித்து விடுகிறதோன்னும் தெரியல. (குறிப்பா admin பக்கங்கள்).

இதுக்கு இணையத்தில் மேய்ந்து ஆராய்ச்சி பண்ணி, anti-spam, akismetன்னு என்னல்லாமோ முயற்சி செஞ்சி பார்த்தேன். இறுதியில் captchaதான் கைகொடுத்தது. இப்போ ஒரு மட்டுக்கு பின்னூட்டங்கள் விழுவதில்லை, ஆகவே எனக்கு அவற்றை அழிக்கும் வேலையும் கிடையாது. அனானி பின்னூட்டங்களும் எனது ஒப்புதல் தேவையில்லாமல் போட முடியுது (captcha என்ற ஒரு கூடுதல் கட்டாயம் மட்டும் இப்போ சேர்ந்து கொண்டுள்ளது). ஆனா, இந்த தொடரும் DoS வருகைகளால் தளத்தின் வேகம் கொஞ்சம் கொறஞ்ச மாதிரி இருக்கு. இதாவது பரவாயில்லை - சில தாக்குதல்கள் நொடிக்கு ஒரு பின்னூட்டம் போடும் வகையில் அமைக்கப் பட்டிருக்குமாம். அந்த மாதிரி ஆகியிருந்தா அதன் விளைவை நினைச்சிப் பாக்கவே முடியல. எனக்கு வந்திருக்கும் தாக்குதல் மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறைதான், ஆனா கடந்த மூன்று நாட்களா தொடர்ந்துக்கிட்டு இருக்கு. இதை நிறுத்த சொல்லி என்னோட hosting சேவைக்கு ஒரு மடல் எழுதினேன். அதை கீழே குடுத்துருக்கேன்:

Hi,

My Drupal-based site is experiencing a spambot attack. I have enabled the Akimset module of Drupal and have also (unwillingly) turned on comment moderation for anonymous comments, to minimize impact. Is it possible to prevent the bot from accessing my site altogether? It seem that it has been setup to submit a comment every 3 minutes or so, on the following page of my site: http://www.mello.in/node/74. It is also changing the host ip address each time, so I am not able to ban it based on IP.

Another question - is it possible to increase the PHP memory limit to 24M? I am getting blank screen on certain admin pages as described here:
http://drupal.org/node/158043. I tried it using .htaccess, and also using ini_set() function of php, but to no avail.

Pls do the needful.

Thanks & Rgds.

Ravi

அதுக்கு அவங்க கிட்ட இருந்து வந்த பதில்:

Dear Ravi

Thank you for contacting XXXXXXX. For the Drupal site you can just install a captcha option (anti-spam) for the attacks to be controlled, as for the memory limit it cannot be done, the limit is 16MB.

Best Regards

SUPPORT

(நான் பணம் செலுத்தி பெறும் ஒரு சேவை, என்னோட வேண்டுகோளுக்கு, எவ்வளவு நாசூக்கா முடியுமோ அவ்வளவு நாசூக்கா, ஒரு உதவியும் தர முடியாதுன்னு பதில் தர்றாங்க. இதுதான் உலகம். நிலைமை இப்படி இருக்க, முற்றிலும் இலவசமா கிடைக்கும் ஒரு சேவையை பெற்றுக் கொண்டு, அதன் நிர்வாகிகள் என்னத்துக்கோ நமக்குல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும்ன்னு எதிர்பார்க்கும் நம் அறிவு ஜீவிகளை இங்கே கொஞ்சம் நினைச்சி பார்த்துக்கறேன் :) )

ஆக, நான் ஏற்கனவே செஞ்சிருக்கும் தீர்வுகளைப் பரிந்துரைத்தது போக, hosting வழங்குனர்கள் வேற ஒண்ணும் செய்யமாட்டாங்க. திருடனா பாத்து திருந்தினாதான் உண்டுங்கிற மாதிரி, இந்த இயந்திரர் (bot?) தானாகவே நின்னாதான் உண்டு. அதுவரை, "நன்றி மீண்டும் வருக"ன்னு (எப்படியும் மூன்று நிமிடங்கள் கழித்து வரத்தானே போகிறார்) அவரை வாழ்த்துவதைத் தவிர வேற ஒண்ணும் செய்யற நிலையில் நான் இல்லை.

வெள்ளி, ஜூலை 18, 2008

'))'))')) said...

நிறைய Blogger பதிவுகளில் பின்னூட்டப் பகுதியைப் பார்த்தா தலைப்பில் காட்டப்பட்ட மாதிரிதான் பின்னூட்டாளரின் பெயர் தெரியுது. இது ஏன் இப்படின்னு கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன். Firebug நீட்சியைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்த போது பின்னூட்டியவருக்கான code கீழ்க்கண்டவாறு இருந்தது:

<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>

ஒரே நிரல் எப்படி பல முறைகள் recurse ஆகியிருக்கு பார்த்தீங்களா? அதற்கு பதிலா, இப்படி இருந்திருந்தா இந்தப் பிரச்சினை இருந்திருக்காது:

<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>
[குறிப்பு: இது தவறாகும். கீழே 'பிற்சேர்க்கை' என்ற குறிப்பைக் காண்க]

அல்லது, இப்படி இருந்திருந்தாலும்:

யாத்திரீகன்

to_unicode() என்ற நிரல் எதற்காக புகுத்தப்பட்டிருக்குன்னு தெரியல. இடைப்பட்ட காலத்தில் (பிளாக்கர் பீட்டா காலத்தில்) தமிழ் எழுத்துகள் தெரியாம accented ஐரோப்பிய எழுத்துகளா தெரிஞ்சதை சரிபண்ண யாராவது (ஜெகத் / கோபி?) உருவாக்கியிருக்காங்களோ என்னவோ.

சரி, இந்தப் பிரச்சனை உங்க பதிவில் இருந்தா அதை எப்படி சரி பண்றதுன்னு ஒரு கேள்வி இருக்கலாம். அதற்கான (குத்துமதிப்பான) விடை:
1. பிளாக்கர் dashboard சென்று 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க.

2. அங்க Download Full Template அப்படீன்னு ஒரு சுட்டி இருக்கும். சொடுக்குங்க.

3. தரவிறங்கிய templateஐ இரு பிரதிகள் எடுத்து வச்சிக்கோங்க. ஒன்றுக்கு original.xml என்றும் மற்றொன்றுக்கு modified.xml அப்படீன்னும் பெயர் குடுங்க.

4. இப்போ, modified.xmlஐ Notepadஇல் திறந்து, கீழ்க்கண்ட string இருக்கும் வரியைத் தேடிக் கண்டுபிடிங்க:
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'>

5. அந்த மொத்த வரியையும் (அதாவது <a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'> என்பதில் தொடங்கி </a> என்பது வரை இருக்கும் நிரல் பகுதியை) கீழ குடுத்துருக்கிற மாதிரி மாற்றி அமையுங்க (i.e. replace the entire line as given below):
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>

இதைச் செய்த பிறகு, பலமுறை recurse ஆகும் <script>document.write(to_unicode.........</script> என்ற நிரல் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும் . அதுதான், நமது குறிக்கோள்.

6. இந்த திருத்ததை சேமித்துக் கொண்டு, மீண்டும் 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க. அங்க Upload a template from a file on your hard drive வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் மாற்றிய modified.xml கோப்பை வலையேற்றுங்க. இதைச் செய்யும்போது சில சமயம் "We're sorry, but we were unable to complete your request." என்பது போன்ற பிழைச் செய்திகள் வரலாம். அப்படீன்னா சரியான ராகு காலத்தில் இதைச் செய்யத் தொடங்கினீங்கன்னு அர்த்தம். ஒரு 1 - 2 மணி நேரம் கழித்து முயற்சி செய்து பாருங்க. வேலை செய்யலாம். (i.e. there's a problem at Blogger end, which might become ok after sometime).

7. திருத்திய templateஐ வலையேற்றிய பிறகு, பெரும்பாலும் இந்தப் பிரச்சனை சரியாகி இருக்கும். "உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா"ங்கிற மாதிரி புதுப் பிரச்சனைகள் எதாவது வந்ததுன்னா, எந்த மாற்றமும் செய்யாத original.xml கோப்பை வலையேற்றுங்க. பழைய பிரச்சனைகளோட இயங்கும் தளம் மீண்டும் கிடைக்கும்.

பிற்ச்சேர்க்கை:

நண்பர் சின்னப்பையனின் பதிவில் ' said...' என்றுதான் பின்னூட்டாளர்களின் பெயர் தோன்றுகிறது (அதாவது அவர்களின் பெயர் தோன்றுவதே இல்லை). பரிசோதனையில் தெரிய வந்தது, code கீழ்க்கண்டவாறு இருக்கிறது:
<script>
document.write(to_unicode('ச்சின்னப் பையன்'))
</script>

அதாவது no recursions. அப்படியும் கூட, to_unicode நிரல் இருப்பதாலேயே பின்னூட்டாளர்களின் பெயர் மறைந்து விடுகிறது. ஆகவே, அதை முற்றிலுமாக நீக்குவதுதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.

திங்கள், ஜூலை 14, 2008

16 வயதினிலே

மதன், ரதி. பருவத்தை எட்டிப்பார்க்கும் வயசு இருவருக்கும். தாய் தேவியின் பாதுகாப்பில் மதன். ரதியோ தந்தை சிவாவின் பொறுப்பில்.

சமூகம் உயர் கணினிகளின் உதவி கொண்டு இளவட்டங்களைக் கட்டிப்போட்டு வெகு காலங்களாகி விட்டது. அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் பெற்றொர்களுக்கு முப்பரிமாண ஒளிபரப்பு சென்று கொண்டே இருந்தது, அவர்களது கைக்கணினிகள், உடற்கணினிகள், இப்படி எதில் வேண்டுமானாலும். அதன் மூலமாகவே தங்கள் மக்களை இடைவிடாது கண்டித்துக் கொண்டிருந்தார்கள் அவ்வப்போது, "அங்கே அவனோடு என்ன பேச்சு?", "என்ன அவளைப் பாத்து ரொம்பத்தான் இளிக்கிற? பல்லெல்லாம் கழண்டு விழுந்துடப் போவுது!" என்ற ரீதிகளில். பெற்றோர் தம் குழந்தைகள் எதிர் பாலாரிடம் நட்பாயிருப்பதை விட ஒரே பாலாரிடம் நட்பு பாராட்டுவதை இன்னமும் தீவிரமாக எதிர்த்தார்கள்.

இந்நிலையில் ரதியும் மதனும் தங்கள் விதியை நொந்து கொண்டு, தத்தமது அறைகளிலிருந்து மின் நட்புத் தளங்களை வலம் வந்து கொண்டிருந்தார்கள் (அதுவும் பெற்றோர்களின் மேற்பார்வையைத் தப்பவில்லை). இந்த மின் நட்புத் தளங்களில் இள வயதினர் வேறொரு மொழியை உருவாக்கி அதிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள், வெளி உலகைச் சேர்ந்தவர்களுக்கு அது அவ்வளவாக விளங்கவில்லை. இம்மொழிக்கு விளக்கவுரைகளும் வந்து கொண்டுதானிருந்தன. ஆனால் இளைஞர்களோ அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே விளக்கவுரைகளும் பயன்றறுப் போய், பெற்றோர்களுக்கு தங்கள் மக்களின் மொழி புரியாமலேயே இருந்து வந்தது.

ரதியும், மதனும் கிடைத்த இந்த இடைவெளியில் காதல் பரிமாறிக் கொண்டார்கள். அதற்கு முன் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டார்கள். ரதி தனக்கு யூனிக்ஸ் (UNIX) பிடிக்குமென்றாள். மதன் வாயைப் பிளந்தான். தனது கணினியிலுள்ள விண்டோஸை கடந்து அவன் வேறெதையும் அறிந்ததில்லை. தனக்கு கவிதை நன்றாக வருமென்றும், குறிப்பாக பெண்ணை வர்ணித்து கவிதை எழுதுவது தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்றும் கூறினான். தன்னை வர்ணித்து ஒரு கவிதை கூறும்படி கேட்டாள். அதற்கு அவளுக்குக் கிடைத்த பதில், அதுவரை அவள் அறிந்திருந்த shell scripts அனைத்தையும் விஞ்சியது. காதல் வயப்பட்டார்கள்.

விரல் நுனிக்காதல் விரைவில் சலித்தது. கவிதைப் பரிமாற்றங்கள் விரகத்தை அதிகரிக்கவே செய்தன. அவசர நிலை விரைவில் எட்டப்பட்டது. இனியும் தாமதிக்காமல் செயலில் இறங்க வேண்டுமென்பதை இருவருமே உணர்ந்தார்கள். மின் நட்பு தளத்தின் 'சிறப்புச் சேவையை' நாடுவதென முடிவு செய்தார்கள். தங்கள் சேமிப்பைச் செலவிட்டு, அதற்குப் பதிவும் செய்து கொண்டார்கள். விரைவிலேயே இருவருக்கும் வந்து சேர்ந்தன, அதற்குத் தேவையான உபகரணங்கள், பாடப் புத்தகங்களோ என்று எண்ண வைக்கும் வெளித் தோற்றத்தோடு. கண்காணிப்புகளிலிருந்துத் தப்ப வேண்டுமல்லவா?

இனி தங்கள் நோக்கத்துக்கு இடையூறாக இருக்கப் போவது சிவாவும் தேவியும்தான் என்பதை உணர்ந்தார்கள். ரதிக்கு சிவாவைப் பற்றி அதிகம் கவலையில்லை. அவனது கணினியை ஏற்கனவே ஊடுருவி, அறிய வேண்டிய தகவல்களை அறிந்து கொண்டுவிட்டாள். ஆகவே, அவனது கண்காணிப்பான்களை ஏமாற்றுவது கடினமல்ல. ஏற்கனவே செய்து வருவதுதான். பிரச்சனை தேவியிடமிருந்துதான். ரதியைப் போலவே (அல்லது அவளை விடப் பன்மடங்கு) கணினியில் மேதமை படைத்தவள் தேவி. அவர்களது வீட்டையே ஒரு உயர்கணினியின் பாதுகாப்பில் வைத்திருந்தாள். வெறுத்துப் போய் அரற்றினான் மதன், 'ரதி, என்னை தேவியின் பிடியிலிருந்து காப்பாற்று' என்று. அவளுக்கே அதன் சாத்தியம் குறித்து சற்று சந்தேகம் இருந்த போதும், "கவலைப்படாதே, உன்னை எல்லா கட்டுக்காவலிலிருந்தும் மீட்கிறேன்" என்று ஆறுதல் கூறினாள்.

ரதியின் அறிவுறுத்தலின் பேரில் தனது கணினியில் அவள் அனுப்பிய நிரல்களை நிறுவினான். அது வடிவமைத்தபடி, தேவியின் கணினியிலும் சென்று நிறுவிக் கொண்டது. தனது மகனின் கணினி அறிவு பற்றி தெரிந்திருந்ததாலும், அவனது கணினியிலிருந்து ஊடுருவல் ஏற்படும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்காததாலும் இத்தகைய தாக்குதலிலிருந்து தேவி தன் கணினியைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு ஊடுருவப்பட்ட இரு பெற்றோர்களின் கண்காணிப்பான்களுக்கும் போலியான ஒளிபரப்புகள் அனுப்பும் ஏற்பாடுகள் செய்யபட்டன. ஒரு பதினைந்து நிமிட நேரம் நீடிக்கும் வகையில் இந்த போலி ஒளிபரப்பு அமைக்கப்பட்டது. அதற்கு மேல் என்றால் ஊடுருவிய நிரலியின் அளவு அதிகமாகி, வேண்டாத சந்தேகங்களைக் கிளப்பி விடும் என்று அஞ்சினாள் ரதி. இந்த போலி ஒளிபரப்புகள், தங்கள் மக்கள் படித்துக் கொண்டோ அல்லது வேறு வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டோ இருப்பது போன்ற தோற்றத்தை அந்த இரு பெற்றோர்களுக்கும் அளிக்கக் கூடியதாய் இருந்தன.

ஒரு பதினைந்து நிமிட ஏமாற்று நாடகத்தை ஏற்பாடு செய்த நிறைவில் மற்றும் மகிழ்ச்சியில், மதனும் ரதியும் அந்த 'சிறப்புச் சேவையை' பெறுவதற்கு ஆயத்தமானார்கள். விரைவஞ்சலில் (பாடப்புத்தக உறையில்) வந்த உணர்விகளையும் (sensors) உணர்விப்பிகளையும் ( ;) ) அணிந்து கொண்டு, மெய் நிகர் (virtual reality) அறைக்குள் இருவரும் பிரவேசம் செய்தார்கள், கலவியில் (அல்லது அதைப் போன்ற ஒரு அனுபவத்தில்) ஈடுபடுவதற்கு.

பிகு:

1. இது போட்டிக்குன்னு சொன்னா பொதுமாத்துதான் விழும். அதனால, இது சும்மா ஜாலிக்குதான்.
2.இதைப் படிச்சிட்டு "Keanu Reeves" நடிச்ச படம் எதாவது ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. ஏன்னா அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை, அல்லது பாதி தூக்கத்தில் பார்த்தேன், இப்படி எதாவது ஒண்ணை வச்சிக்கோங்க.
3. நூட்ப ரீதியா நோண்டாதீங்க. படிச்சா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.
4. நுண்ணரசியல் பார்ட்டிங்களுக்கு - மேலே (#3) சொன்னதுதான் உங்களுக்கும்.

சனி, ஜூலை 12, 2008

அண்மைய கொந்தளிப்புகள்

தங்களை 'அறிவுப் பூசாரிகள்' என்று அறிவித்துக் கொண்ட சிலர் அண்மைய சில தினங்களாக ரொம்பவே கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். அவர்களின் தரப்பிலும் ஓரளவுக்கு நியாயமில்லாமலில்லை. ஒரு வசதியை வெகு நாட்களாக அனுபவித்துவிட்டு அது இல்லாமல் போகும் தருணத்தில் ஏமாற்றம் ஏற்படுவது இயற்கையே. 'காமம்' உள்ளிட்ட பல பிரச்சனைக்குரிய சொற்கள் கொண்ட தலைப்புகளுக்கும், முதல் சில வரிகளுக்கும் 'தடா' விதித்துள்ளது தமிழ்மணம். இந்தச் சொற்களால் நிச்சயமாக எந்தப் பிரச்சனையும் கிடையாதுதான். இவற்றைக் காண நேர்வதால் கன்னியாகுமரியும் காஷ்மீரும் இடம் மாறி விடப்போவதில்லைதான். ஆனால், வணிகக் கட்டாயங்கள் உள்ள எந்தவொரு அமைப்பும் வெகுசனப் பார்வைக்கு ஒத்திசைந்தே தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ("ஒரு பேச்சிலராக உங்கள் படுக்கையறையில் நீங்கள் ஒட்டக்கூடிய கவர்ச்சி போஸ்டர்களை உங்கள் அலுவலக வரவேற்பறையில் ஒட்ட உங்கள் நிறுவனம் அனுமதிக்குமா?" என்பது போன்ற உவமைக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளவும்).

இந்த episodeஇன் உச்சப்பட்ச காமெடி என்று நான் நினைப்பது, இந்த அறிவுப் பூசாரிகளின் சந்நதத்தைத்தான். செத்துப்போன மார்க்கீ த சாதே / நீட்ஷேயின் ஆவி உடலுக்குள் புகுந்து கொண்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் "moronகளே, கேளுங்கள்!" என்று Zarathushtraவைப் போல் அருள்வாக்கு கூறினார் ஒருவர். புரட்டிப் போடும் எழுத்துக்குச் சொந்தக்காரரோ மண்டியிட்டு தோழமையுடனும் (கோழைமையுடனும்) தமிழ்மணத்திற்கு மன்னிப்பு வாக்குமூலம் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவரோ, "அவங்க மட்டும் படுக்கையறையில பின்னியெடுக்கறாங்களே?" என்று தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். இன்னொருவர் "கலாச்சாரக் காவலுக்கு எதிராக கணினி ரவுடி ஆவேன்" என்று சூளுரைக்கிறார். இந்த சூளுரையின் விளைவாக நமக்கெல்லாம் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என்பது குறித்து எந்தத் தகவலுமில்லை. அதை நினைத்து இன்னமும் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்........ இல்லை.

இப்படி தணிக்கைகள் நிறைந்த சூழலில் கலக எழுத்துக்கு இடமே கிடையாதா? என்றால் இருக்கிறது. எந்த ஒரு நிறுவன அமைப்பையும் சாராது ஒரு எதிர் அமைப்பை உருவாக்குவதுதான் இதற்கான தீர்வு. நான் முன்பே இது குறித்து எழுதியிருக்கிறேன். தேடல் என்ற இணையத்தின் மிக அடிப்படையான நுட்பத்தைப் பயன்படுத்தி, எந்தவொரு திரட்டியையும் சாராமல் பதிவர்களால் இயங்க முடியும். முன்பு எல்லாப் பதிவர்களுக்கும் பொதுவான தமிழ்ப்பதிவுகள் என்ற குறிச்சொல்லைப் பரிந்துரைத்தேன். இப்போது குறிப்பிட்ட வகையான எழுத்துகளுக்கு அதற்கேற்ற பெயரை யாரேனும் தேர்வு செய்து கொள்ளலாம். (உ-ம். 'காமம்', அல்லது 'கலகம்', இத்யாதி) அப்படித் தேர்வு செய்து கொண்டு, இத்தகைய தணிக்கைக்கப்பாற்பட்ட எழுத்துகளை அந்த பொதுவான குறிச்சொல்லைக் கொண்டு குறித்து, அதை வாசகர்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தினால், நாங்கள் திரட்டிகளில் படிக்க முடியாத அவ்வெழுத்துகளை தேடுபொறிகளின் வாயிலாகப் படித்துக் கொள்வோம். கலக எழுத்து என்றில்லை - சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவர் சமையல் குறிப்புகளுக்கென்று ஒரு திரட்டியை உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தார். அவ்வளவு மெனக்கெடத் தேவையே இல்லை. எல்லா சமையல் பதிவர்களையும் 'சமையல் குறிப்பு' என்று குறிச்சொல் இடுமாறு கேட்டுக் கொண்டால், அதற்கான தேடல் பக்கம், செய்தியோடை, என்று எல்லாமே தயாராக உள்ளது.

தேடுபொறிகள் என்றால் technorati இருக்கிறது. அதைத் தவிர Icerocket, Google Blog search, reddit, delicious போன்ற சேவைகளும் இருக்கின்றன. நமது நண்பர் மாஹிர் உருவாக்கிய தமிழூற்றும் இருக்கிறது. பெரும்பாலும் இந்தத் தேடுபொறிகள் தாமாகவே crawl செய்து உங்கள் இடுகைகளை தங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றன. அல்லது இவை எல்லாமே ping வசதியளிக்கின்றன. அவற்றைக் கொண்டு இத்தளங்களில் ping செய்து, உடனடியாக உங்கள் பதிவு தேடல்களில் கிடைக்குமாறும் செய்யலாம்.

நம் அறிவு ஜீவிகளுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த புரட்சிகளைப் பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்துள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதோடு, இன்றைய நிகழ்காலத்தில் நடக்கும் புரட்சிகளைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வார்களானால் நன்றாக இருக்கும். மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி ஏந்தும் எல்லா அறிவு ஜீவிகளும் தங்கள் பதிவுகளில் தவறாது பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தி இருக்கும் முரண்பாட்டைக் குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன்.

கண்டிப்பாக கலகம் செய்யுங்கள், ஆனால் அதை ஒப்பாரி வைக்காமல் செய்யுங்கள். அல்லது ஒப்பாரியும் ஒரு கலக வடிவமா?

ஞாயிறு, ஜூன் 29, 2008

இந்தோ - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து

முதலில் சில பின்னணி விவரங்கள்:
  1. உலகெங்கிலும் மின்சக்தி / எரிபொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே போகுது. இந்தியாவும் இதுக்கு விதிவிலக்கு கிடையாது. ஒரு பில்லியனுக்கு அதிகமான ஜனத்தொகை, அதுவும் பெருகிக்கிட்டே போகும் நிலையில் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுப்பது சுலபமானது கிடையாது.
  2. எண்ணை / நிலக்கரி வளங்கள் குறைஞ்சிக்கிட்டு வருது, ஒரு நாள் இவை மொத்தமா தீர்ந்து போய்விடக்கூடிய நிலையும் ஏற்படலாம். அவற்றின் விலையேற்றம், மற்றும் இந்த எரிபொருட்களால் உலகளாவிய சூடேற்றம் / வானிலை மாற்றங்கள் போன்ற பின்விளைவுகளும் ஏற்படுது. அவற்றுக்கு மாற்று எரிபொருட்கள்ன்னா சூரிய ஒளி, காற்று, அலைகள் போன்ற புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இருக்கு. ஆனாலும் அவையால் எண்ணை / நிலக்கரி போன்ற பரவலை அடைய முடியாது. ஆங்காங்கே முடிந்த அளவு தேவைகளை நிறைவேற்றலாம். முற்றும் முழுவதுமா அவற்றை நம்பி இருக்க முடியாது. ஆக, இந்த எண்ணை / நிலக்கரிக்கு ஒரு நம்பகமான மாற்றுன்னா அது அணுசக்தியாதான் இருக்க முடியும்.
  3. அணுசக்திங்கும் போது, அது அணு ஆயுதத் தயாரிப்புக்கும் திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது. இதைக் காரணமா வச்சிக்கிட்டு ஏராளமான அரசியல் முன்னெடுப்புகள் நடந்துக்கிட்டு இருக்கு, போர்கள் உட்பட.
  4. அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது முற்றிலும் பாதுகாப்பானதான்னு கேட்டா "நிச்சயமா" அப்படீன்னு அடிச்சு சொல்றதுக்கு தயாரா இருக்காங்க அணுசக்தித் துறையைச் சார்ந்தவங்க. அவங்க சொல்வதன்படி, அணுமின் நிலையங்களிலிருந்து உருவாகும் கதிரியக்கக் கழிவுகளை அதல பாதாளத்தில் ஆயிரங்காலத்துக்கு புதைத்து வைக்கணும், எந்தக் குறுக்கீடும் இல்லாம. அப்படி பாதுகாத்தா அவை கதிரியக்கத்தன்மையை முற்றிலும் இழந்துவிடும், அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களும் அகன்று விடும். கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. இன்னும் பத்து வருஷத்துக்குள்ள என்னல்லாம் நடக்கும்ன்னே சொல்ல முடிய மாட்டேங்குது. ஆயிரமாண்டுகளுக்கு நாம புதைத்து வைக்கிற கழிவுகள் ஒரு பாதிப்புமில்லாம அப்படியே பத்திரமா இருக்கும்ன்னு எந்த அடிப்படையில் உறுதி செய்து கொள்வது?
  5. அணு ஆயுதங்கள் தேவையா? தேவையில்லைன்னுதான் தோணுது, பின்ன ஏன் இந்த நிலைமை? இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேக்ககூடாதுங்கறீங்களா? அப்போ இதுக்கு விடைதான் என்ன? இதுவா? அப்படின்னா நம்மால் உடன்படக்கூடிய தீர்வுதானா இது?
  6. அணுசக்தி நமக்கு நிச்சயம் தேவை என்பதில் உறுதியா இருக்கோமா, அதோட அணு ஆயுதம் நமக்குத் தேவையில்லை என்பதிலும் உறுதியா இருக்கோமா? அப்படீன்னா இந்தோ - அமெரிக்க அணு ஒப்பந்தம் ஒரு சரியான முடிவுதான். இருந்தாலும், இந்த ஒப்பந்தம் இல்லாமலேயே நம்மால் அணுசக்தித் தன்னிறைவை அடைந்திருக்க முடியுமா என்ற கேள்வியும் வருது. அது முடியுமானால் நமக்கு ஒவ்வாத இந்த 123 ஒப்பந்தத்தையே கையெழுத்திட்டிருக்க வேண்டாமே?
  7. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களா மேற்கூறிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்காம இருந்திருக்கோம், அது ஒருதலைபட்சமா இருக்கு என்ற அடிப்படையில். இப்போ திடீர்ன்னு ஏன் நம் கொள்கையில் மாற்றம்? இந்த மாற்றத்துக்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது? சரி இந்தக் கொள்கை மாற்றம் தேவையானதுன்னு வச்சிக்கிட்டாலும், அதை வெளிப்படையா அறிவிக்கலாமே? அறிவித்து, நேரடியாக இந்த NPT தடை ஒப்பந்தத்திலேயே கையெழுத்திடலாமே? ஏன் 123 என்ற மறைமுகமான பின் வாசல் அணுகுமுறை? முட்டாள்களை அடிமுட்டாள்கள் ஆக்கும் முயற்சியா இது?
பின்வரும் பகுதியில், மேலே கேட்டிருக்கிற கேள்விகளை விரிவா விவாதிக்கலாம்.

நம்மோட மின்சக்தி உற்பத்தித் திறனை மிக அதிக அளவுக்கு அதிகரிக்கணும்ங்கிறதுல எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. நம்மோட கிராமங்களுக்கெல்லாம் தடையற்ற மின்சக்தி கிடைக்கணும், அவையும் உலகப் பொருளாதாரச் சந்தையில் போட்டி போடும் அளவுக்கு அவற்றை முன்னேற்றணும். அதுக்கு அத்தியாவசியமானது போதிய அளவு கிடைக்கக்கூடிய மின்சாரம் என்பதில் சந்தேகமே கிடையாது. மேலும், எண்ணை நிலக்கரி வளம் குறைஞ்சிக்கிட்டும் அவற்றோட விலை உயர்ந்துக்கிட்டும் இருக்கும் நிலையில், மற்ற புதுப்பிக்கக்கூடிய வளங்களைய்ல்லாம் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும்ன்னு உறுதியா தெரியல. ஆகவே, அவற்றுக்கு சரியான மாற்றாக அணுசக்தி ஒன்றுதான் இருக்க முடியுமென்பதிலும் சந்தேகமில்லை. ஏறகனவே உலகின் மொத்த மின்சார உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு அணுசக்தியிலிருந்துதான் வருது. இந்தியாவில் இந்த விழுக்காடு 3%தான். இதை 2050ஆம் ஆண்டுக்குள்ள 25%ஆ அதிகரிக்கணும்ங்கிற இலக்கு பற்றி பேசப்படுது. அதுக்குத் தடையா இருக்கக்கூடிய ஒரே காரணம், நம்மிடம் போதிய அளவுக்கு யுரேனியம் என்ற தாதுப் பொருள் இல்லாததுதான்.

அணுமின் உற்பத்தியில் ஒரு விரும்பத்தகாத அம்சமும் இருக்கு. அதுதான் கதிரியக்கக் கழிவுகள். அவற்றை அதல பாதாளத்தில் தனிமைப்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் பாதுகாப்பா விட்டு வைத்தால்தான் அவை கதிரியக்கத்தன்மையை இழக்கும். இந்தக் கழிவுகள் எரிபொருட்களின் மிச்சம் மீதி மட்டுமில்லாம, அத்தகைய பொருட்களோட தொடர்பு ஏற்பட்ட சாதாரண மற்ற பொருள்களும் ஆகும். அதாவது ஒரு கையுறை அல்லது ஒரு வேற உபகரணங்கள் கொண்டு கதிரியக்கப் பொருட்களைக் கையாளும் பட்சத்தில் அந்த உபகரணங்களும் கதிரியக்கத்தன்மை அடையுது. ஆகவே, அவற்றையும் சேர்த்து ஆயிரங்காலத்துக்கு பாதுகாக்க வேண்டியதுதான். இல்லைன்னா அவற்றால் உலகத்து உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அமெரிக்க நெவாடா மாநிலத்தில் ஏற்படுத்தப்படவுள்ள இத்தகைய நிலவறை மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் பற்றி இந்தப் பக்கத்தில் காணலாம். Seismic activity எனப்படும் நிலநடுக்கங்கள் எங்கெங்கே ஏற்படும், அதிலிருந்து முற்றிலும் பாதுகாப்பா இந்தப் பொருட்களை வைத்துக் கொள்ள முடியுமா என்பது போன்ற சந்தேகங்களெல்லாம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதோட, செர்னோபில் போன்ற ஆபத்துகளையும் மறக்க முடியுமா?

இப்போது, அணு ஆயுதங்கள் பற்றிய சர்ச்சை குறித்து: அணு ஆயுதங்கள் தயரிக்கப்பட்டது வருத்தமானதே. ஒரு முறை பயன்படுத்தப்பட்டதுவும் அதை விட வருத்தமானதே. அவை இன்றைக்கும் கணிசமான அளவில் கிடங்குகளில் காத்திருப்பது மிக மிக வருத்தமானதே. அப்படியானால் நாற்பது வருடங்களாக செயல்பட்டு வந்த அணுஆயுதத் தடை ஒப்பந்தங்கள் (NPT, CTBT போன்றவை) சாதித்ததுதான் என்ன? இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் வசம் 15000 அணு ஆயுதங்கள் உள்ளனவாம். (இந்தியா உட்பட) கையெழுத்திடாத நாடுகள் வசம் சில நூறு அணு ஆயுதங்கள் உள்ளனவாம். இதில் யாரால் அதிக ஆபத்து? இப்போ இந்த NPT ஒப்பந்தத்தைப் பற்றி: உலக நாடுகளை அணுஆயுதத் திறன் கொண்ட நாடுகள் அப்படீன்னும் அணு ஆயுதமற்ற நாடுகள் அப்படீன்னும் பிரிக்குது இந்த ஒப்பந்தம். ஆணு ஆயுதமுள்ள நாடுகள்ன்னு அமெரிக்கா, ருஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கு. மற்ற எல்லா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதமற்ற நாடுகள்தான். இதில் ஆயுதமுள்ள நாடுகள் என்ன ஒப்புதல்களை அளிச்சிருக்குன்னா, தங்களுடைய அணு ஆயுதங்களையும் தொழில்நுட்ப ரகசியங்களையும் பிற நாடுகளுக்கு வழங்க மாட்டோம்ன்னுதான். தங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்ங்கிற உத்தரவாதத்தை இந்த நாடுகள் வழங்கவில்லை என்பதை கவனிக்கணும். இந்த நாடுகள் மற்ற நாடுகளின் மீது போடும் நிபந்தனையென்னன்னு பாத்தா, "இப்போது இருக்கும் அணு ஆயுதமற்ற நிலையிலயே அப்படியே தொடர்வோம்" என்ற வாக்குறுதியைத்தான் இந்த நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து எதிர்பார்கின்றன. ஆதாவது, "அணு ஆயுத சோதனைகள், இன்ன பிற முயற்சிகளைச் செய்ய மாட்டோம்" அப்படீன்னு உத்தரவாதம் குடுக்கணுமாம் நாமல்லாம். ஆனா இந்த நாடுகளோ, ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும் "எங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது"ன்னு அறிக்கை விடறாங்க. அதாவது, தடை அவங்களுக்கு கிடையாது, நமக்குத்தான்.

இந்த ஒருதலைபட்சமான தடை ஒப்பந்தத்தை சரியான காரணத்திற்காகவே நாம நாற்பது வருடங்களா எதிர்த்து வந்திருக்கோம். அதனால் நமக்கு ஏற்பட்ட தீண்டத் தகாத நிலையையும் பொறுத்துக்கிட்டே, அதில் உறுதியா இருந்தோம். எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதும் அந்த நிலைப்பாட்டில் நாம மாறவில்லை. இப்போது திடீர் மாற்றத்துக்கான காரணமென்ன? இந்த 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அணு ஆயுத சோதனைத் தடையை ஏற்றுக் கொண்டது போலத்தான். அதாவது, கிட்டதட்ட NPTயில் கையெழுத்திட்டது போலத்தான். அதை இன்று செய்ய வேண்டிய நிர்பந்தம் என்னன்னுதான் புரியவில்லை. அப்படியொரு நிர்பந்தம் இருந்தது உண்மைன்னா அதை மக்களிடம் சரியாக் கொண்டு போயிருக்கலாமே? வெளிப்படையாவே இன்னின்ன காரணங்களால் நமது அணு ஆயுதக் கொள்கையில் மாற்றமேற்பட்டிருக்குன்னு அறிவிச்சிருக்கலாமே? அப்படியில்லாம, கொள்கையில் எந்த மாற்றமுமில்லைன்னு பொய் சொல்லிகிட்டு திரியறது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான்.

இந்த இறக்குமதி யுரேனியம் இல்லாத நிலையில், நம்மிடம் அபரிமிதமாக உள்ள தோரியம் என்ற மற்றொரு அணுசக்தி எரிபொருள் குறித்தும் சோதனைகள் நடந்துக்கிட்டு இருந்தது, இன்னமும் நடந்துக்கிட்டு இருக்கு. (உலகின் 25% தோரியம் வளம் நம்மிடம்தான் உள்ளது) இது மட்டும் வெற்றியடைஞ்சதுன்னா நம்முடைய எரிபொருள் கொண்டே தேவைப்படும் அணுமின்சாரத்தை தயரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனா, இந்த 123 ஒப்பந்தத்தினால் யுரேனியம் எளிதில் கிடைக்கக்கூடிய நிலையில், இத்தகைய சோதனை முயற்சிகள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயமுள்ளது. நமது வெளியுறவுக் கொள்கையை சமரசம் செய்யாமலேயே, அணு மின்சாரத் தன்னிறைவு அடைவதற்கான ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளதுன்னுதான் சொல்ல முடியும். ஆட்சி கவிழ்ந்த பிறகாவது இது பற்றியெல்லாம் யோசிப்பாங்களான்னு பாக்கணும்.

(This post in English can be found here)

வியாழன், ஜூன் 19, 2008

வயதில் பெரியோர்களின் கவனத்திற்கு

உங்களுக்கே உங்களுக்காக ஒரு இணையத்தளம் உருவாக்கியிருக்கேன். ஆர்குட், facebook, myspace போன்ற சமூக உறவாடல் தளங்கள் (social networking sites) பற்றி கேள்விபட்டிருப்பீங்க. அவற்றில் பெரும்பாலும் இளைஞர்கள் / பால்ய வயதினரோட ஆதிக்கமே அதிகமா இருப்பதையும் உணர்ந்திருப்பீங்க. அவங்களோட கும்மி, கூத்து, வெட்டிப்பேச்சு, (சில) புரோஃபைல்களிலுள்ள அரை நிர்வாணப் புகைப்படங்கள், இப்படி பல காரணங்களால அந்தத் தளங்கள் உங்களோட ரசனைக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்றவாறு இல்லாம போயிருக்கலாம். அல்லது அத்தகைய தளங்களில் உறுப்பினராவதால் ஏற்படக்கூடிய பயன்கள் ( :) ) பற்றியும் உங்களுக்குத் தெளிவில்லாம இருந்திருக்கலாம்.

மேலும் இந்த web 2.0, சமூக ஊடகம் போன்ற வளர்ச்சிகளில் நம்ம பெரியவர்கள் எந்தளவுக்கு கலந்துக்கறாங்கன்னும் தெரியல. எனக்குத் தெரிஞ்சி பல பெரியவர்கள் வலைப்பதியறாங்க. ஆனா, அதையும் விட எவ்வளவு பேர் (உ-ம். இங்க தீவிரமா வலைப்பதியும் பல இளவட்டங்களின் பெற்றோர்கள் மற்றும் வயதான குடும்பத்தினர்) இந்த வலைச்சூழலை விட்டு ஒதுங்கியே இருக்காங்கன்னும் யோசிக்கணும். ஒரு வேளை இணையம் என்பதே, இளைஞர்கள் மட்டுமே புழங்கக்கூடிய, மற்றவர்களுக்குக் கலாச்சார அதிர்ச்சிகளை வழங்கும் ஒரு இடமா ஆயிட்டதான்னு யோசிக்கத் தோணுது. சரி, பில்டப்பை நிறுத்திட்டு விஷயத்துக்கு வர்றேன்.

வயதில் பெரியோர்களை முதன்மைப்படுத்தியும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் அவர்களுக்குரிய இடமளித்தும் இயங்கும் வகையில் ஒரு சமூக உறவாடல் தளத்தை உருவாக்கியிருக்கேன். அதை www.mello.in என்ற முகவரியில் காணலாம். (பெயர்க்காரணம் - 'mellow' என்ற, 'முதிர்ச்சி', 'மென்மை' போன்ற குணங்களைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லின் திரிபு). இத்தகைய தளங்களின் பொதுவான அம்சங்களான புரோஃபைல் ஏற்படுத்திக் கொள்ளும் வசதி, மற்ற பயனர்களுடன் நட்புறவுகள் (relationships) ஏற்படுத்தும் வசதி, வலைப்பதிவு வசதி, குழுக்கள்(groups) ஏற்படுத்தும் வசதி, குழுக்களுக்குள் உரையாடும் வசதி (discussion forums), மின்னஞ்சல் முகவரி இல்லாமலேயே தனிச்செய்திகள் (private messages) பரிமாறிக்கொள்ளும் வசதி, போன்றவை இதிலும் இருக்கு. ஆனா அவை மட்டுமில்லாம சில சிறப்பு அம்சங்களையும் புகுத்தியிருக்கேன். அந்த சிறப்பு அம்சங்களாவன:
  • உறவுகளில் மூன்று வகையான தேர்வுகள் - நண்பர் (Friend), நெருங்கிய நண்பர் (Buddy), மற்றும் நலம் விரும்பி (Well-wisher) ஆகியவை
  • மேற்கண்ட உறவு முறை அடிப்படையில் தான் வெளியிடும் ஒரு படைப்பு / தகவலுக்கு பார்வையாளர்களைத் தேர்வு செய்யும் வசதி. அதாவது, எல்லா தகவல் / ஆக்கங்களையும் பொதுப்பார்வைக்கு வைக்கும் நிர்பந்தம் இல்லாமல், சில தகவல்கள் மற்றும் ஆக்கங்களை 'நண்பர்களுக்கு மட்டும்' அல்லது 'நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்' அப்படீன்னு வரையறுக்கும் வசதி.
  • வேலை வாய்ப்புகள் பகுதி - ஓய்வு பெற்ற / பெறப்போகும் நிலையில் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்புச் செய்திகள், மற்றும் அத்தகைய விளம்பரங்களுக்கு (CV கோப்புகள் இத்யாதிகளோடு) விண்ணப்பிக்கும் வசதி
  • உடல்நலம் சார்ந்த பகுதி - உடல்நலப் பதிவுகள் (Wellness updates - குடும்பத்தினர் / நெடுநாளைய நண்பர்களின் - அதாவது மேற்கூறிய 'நலன் விரும்பி' அப்படீன்னு குறிக்கப்பட்டவர்களின் பார்வைக்கு மட்டும் கிடைக்கக்கூடியவை), மருத்துவ / உடல்நலன் சார்ந்த துறையினருக்கு சிறப்புப் பயனர் கணக்குகள் (இந்த சிறப்புக் கணக்கை வேண்டும் மருத்துவத் துறையினர் மற்றும் இதர உடல்நலன் சார்ந்த நிபுணர்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். தயவு செய்து வழக்கமான கணக்கை ஏற்படுத்திக் கொண்டு, என்னைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கணக்கை மேம்படுத்தித் தருகிறேன்)
  • வோட்டுரிமை / பயனர் மதிப்பெண்கள் - நல்ல இடுகைகள், பின்னூட்டங்கள், மற்றும் பயனர்களை அடையாளம் காட்டி முதன்மைப்படுத்தும் வசதி
இப்படி சில தனித்துவங்கள் இருக்குன்னு சொல்லலாம். இவற்றை நான் சொல்றதை விட நீங்களே அனுபவித்து உணர்வது மேலும் சிறப்பா இருக்கும். இப்போதைக்கு நானும் என்னோட தசாவதாரங்களும்தான் அங்க உறவாடிக்கிட்டு இருக்கோம். உங்க நண்பர்கள் குழாமோட, குடும்பத்திலுள்ள பெரியவர்களோட வந்து இந்தத் தளத்தைச் சிறப்பிக்குமாறு எல்லா பதிவுலக நண்பர்களையும் கேட்டுக்கறேன். எம்மொழியும் சம்மதம் என்பதால் நீங்க எந்த மொழியில் வேண்டுமானாலும் உறவாடலாம், மற்றும் வேற்று மொழியினர் / வேற்று நாட்டவர்கள் உங்கள் நண்பர்களா இருந்தா, அவர்களையும் அன்போட அழைக்கலாம். இந்தப் பதிவை விட விரிவான அறிமுகம்(ஆங்கிலத்தில்) இங்க இருக்கு. அதற்கு மேலயும் சந்தேகங்களிருந்தா தயங்காமல் கேளுங்க.

தொழில்நுட்பக் குறிப்புகள் - இதை Drupal CMS கொண்டு உருவாக்கினேன். PHP, MySQL, Javascript, Jquery ஆகிய தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவைதான் இந்தத் தளம்.