ஞாயிறு, மார்ச் 04, 2007

எனது சிறந்தத் திரைப்படம்

கனவுகள் - வித விதமானவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை. ஒரு படத்தின் கதாநாயகன், கதாநாயகி, வில்லன், வில்லி, குணச்சித்திர நடிகர் / நடிகை ஆகிய எல்லாமே இக்கனவுகள்தான். கனவுகளுக்கிடையே நடக்கும் போராட்டங்கள், முரண்பாடுகள், ஒத்திசைவுகள்........... என்று படத்தின் எல்லா நிகழ்வுகளையும் நிர்ணயிப்பது இக்கனவுகள்தான். ஆரம்பமும் ஒரு கனவுக் காட்சியே.

இரு எஸ்கிமோ இனத்தைச் சார்ந்த நபர்கள் பனி படர்ந்த ஒரு குளத்தில் தூண்டிலிட்டு மீன் பிடித்துக் கொண்டிருகிறார்கள். ஒருவர் முதியவர். மற்றொருவர் இளைஞர். இளைஞருக்குப் பல சந்தேகங்கள். அவற்றை அவர் எஸ்கிமோ மொழியில் பெரியவரிடம் கேட்க, தனது எல்லாம் தெரிந்தத் தொனியில் அக்கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருக்கிறார் முதியவர். மீன் பிடித்தலில் ஆரம்பித்து, உரையாடல் வாழ்வியல் தத்துவங்களையெல்லாம் தொட்டுவிட்டுத் திரும்புகிறது (என்று subtitles தயவில் தெரிய வருகிறது). அதற்குள் தூண்டில் வலுவாக இழுபட, இருவரும் சேர்ந்து இழுக்கிறார்கள். இதுவரை கண்டிராத அளவுக்குப் பெரிய மீன் ஒன்று தூண்டிலில் சிக்கி, தண்ணீரிலிருந்து போராடிக் கொண்டே வெளிவருகிறது. தம்மிடமுள்ள சுத்தியலால் அதனை ஒரு போடு போடுகிறார்கள் - போராட்டம் நின்று மீன் தரையில் கிடத்தப் படுகிறது. அதை எப்படி கூறு போடலாம் என இருவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், மீன் உயிர்த்தெழுந்து காற்றில் நீந்தத் தொடங்குகிறது. நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இருவரையும் கடந்து ஒயிலாக ஒரு சுற்று சுற்றி, தூசான் (Tucson) நகருக்குப் பயணிக்கிறது, மீனும் கதையும்.

முன்பு கண்ட இரு நபர்களும் மறுபடியும் தோன்றுகிறார்கள், ஆனால் நவீன நகரத்து ஆட்களாக. முதியவர் கார் விற்பனையாளர். அவரோடு உள்ள இளைஞர் அவரது மருமகன். தொழில் கற்றுக் கொள்வதற்காக மாமனிடம் தஞ்சம் புகுந்தவர், பெற்றோர்களை விட்டு வெளியேறிய பின். மாமனின் கனவு, கார்களாக விற்றுத் தீர்த்து விடவேண்டுமென்பதே. அப்படி விற்ற கார்களை வரிசையாக நிறுத்தினால் அவை பூமியிலிருந்து சந்திர மண்டலம் வரை உள்ள தூரத்தை நிரப்ப வேண்டும். அவ்வாறாக கார்களை விற்று, பெரும் பணக்காரராக மாறி, சமூகத்தில் மதிப்பு மிக்க நிலையை அடைந்து விட வேண்டுமென்பதே அவரது குறிக்கோள். தனது கனவுலக வாழ்வின் நீட்சியாக, தனக்கு வயதில் மிகவும் குறைந்த ஒரு மாடல் பெண்ணையும் மணந்து கொள்கிறார். இந்தச் சூழலில் இளைஞர் தனது வாழ்க்கைப் பாடங்களை பெறுகிறார். அவர்களது கார் காட்சியறைக்கு வருகை தரும் இரு மேட்டுக்குடிப் பெண்களிடம் அவருக்குப் பரிச்சயமேற்படுகிறது.

அவ்விரு பெண்களில் ஒருவர் சற்று வயதானவர், ஆனால் கவர்ச்சியான தோற்றமுடையவர். அவர் ஒரு விதவை, மற்றும் அவருடன் வரும் இள வயதுப் பெண்ணின் வளர்ப்புத் தாய். இருவரும் தங்கள் நாட்டுப்புற பண்ணை வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஏதோ காரணத்தால் இளைஞருக்கு இப்பெண்களுடன் சென்று அந்தப் பண்ணை வீட்டில் வசிக்கும் வாய்ப்பேற்படுகிறது. அந்த மூத்தப் பெண்ணுடன் ஏற்படும் காதலும் ஒரு காரணமே. தலைமறைவாகும் மருமகனைத் தேடி வருகிறார் அவரது மாமன், கூடவே இளைஞனின் நண்பனும். முதிய பெண்ணிடம் பேசிப் பார்க்கிறார் தனது மருமகனை விடுவிக்கும் படி. பழைய காருக்கருகே ஒரு புதிய காரை நிறுத்தினால் எப்படியிருக்கும் என்றெல்லாம் உவமையளித்துப் பார்க்கிறார். (தனது சொந்தக் கதையை சௌகரியமாக மறந்துவிட்டு). "உனது மகனாக இருப்பதற்கேற்ற வயதுடையவன் அவன்" என்று சொல்லிப் பார்க்கிறார். "ஆனால் அவன் எனது மகன் கிடையாது, திருவாளரே, அவன் எனது காதலன்" என்று விடை கிடைக்கிறது. சலிப்படைந்து போய் வலுக்கட்டாயமாக மருமகனை இழுத்துக் கொண்டு போகப் பார்க்கிறார் மாமன், இளைஞனது நண்பனின் உதவியுடன். அப்போது அப்பெண்ணின் துப்பாக்கி பேசுகிறது. நீளமான வேட்டைத் துப்பாக்கியால் ஓட ஓட விரட்டப் படுகிறார் மாமன். இளைஞரின் நாட்டுப்புற வாசம் தொடர்கிறது.

தன் காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதாக இளைஞர் வசனம் பேச, அவர் முன் தனது கனவை விரிக்கிறார் அப்பெண்மணி. அவரது கனவு - ஆகாயத்தில் பறப்பது, ஒரு சுதந்திரப் பறவையைப் போல். விமானத்தில் அல்ல, தன் பட்டறையிலேயே உருவாக்கப்பட்ட ஒரு பறக்கும் இயந்திரத்தில். அவரது கனவை நனவாக்கும் வேலையில் இளைஞர் ஈடுபடுகிறார். ஆதிகாலத்தில் விமானத்தைக் கண்டுபிடிக்க என்னென்ன செய்தார்களோ, அனைத்தையும் தனது காதலிக்காக மீள் கண்டுபிடிப்பு செய்யும் பணியில் நாட்களைக் கடத்துகிறார். பல்வேறு காரணங்களால் இக்கண்டுபிடிப்பு தாமதப் படுகிறது. காதலியின் வளர்ப்பு மகளுக்கு இந்த விளையாட்டுகள் பிடிக்காததால், அவ்வப்போது இரவு நேரமாகப் பார்த்து, இயந்திரத்தை உடைத்து போடுகிறார் அப்பெண். அல்லது புயல் மழையால் அந்த இயந்திரத்தின் சிறகுகள் தாமாகவே பிய்த்துக் கொண்டு விடுகின்றன. அல்லது, சோதனையின் போது இயந்திரம் சிறிது தூரம் எழும்பி, மீண்டும் தரையிறங்கி விடுகிறது. ஒரு முறை, இயந்திரத்தை மூத்த பெண் செலுத்திக் கொண்டு செல்கையில், அட்டகாசமாக மேலெழும்பி, நன்றாகப் பறந்து விட்டு, கொஞ்சம் பலமாகக் காற்றடித்ததால் கட்டுப்பாடிழந்து வானுயரத்திலிருந்து தரையிலிருக்கும் ஒரு மரத்தின் கிளைகளின் மீது வந்து விழுகிறது (பெண்ணுடன் சேர்ந்து). உடல் முழுக்க கட்டுகள் போடப்பட்டு கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்படுகிறார் அப்பெண்.

வளர்ப்பு மகள் - தனது வளர்ப்புத் தாயின் போக்குகளுடன் கொஞ்சமும் உடன்பாடில்லாதவர். எப்பொழுதும் ஒரு அக்கார்டியன் இசைக்கருவியை வைத்துக் கொண்டு அதே ராகத்தைத் திரும்பத் திரும்ப இசைத்து, எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். இளைஞருக்கு அவர் மீது இயற்கையாகவே ஒரு வெறுப்பு மேலிடுகிறது. ஒரு இரவு நேரத்தில் எங்கோ கிடைத்த ஒரு கைத்துப்பாக்கியுடன் இந்த வளர்ப்பு மகளின் அறைக்குள் நுழைந்து விடுகிறார். தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து, முதுகைக் காட்டிப் படுத்திருக்கும் அப்பெண்ணைச் சுடுவதற்குக் குறி பார்க்கிறார். பிறகு கொஞ்சம் தயங்குகிறார். "ஏன் தயங்குகிறாய்? சுட்டு விடு!" என்று கட்டளையிடுகிறார் பெண் (அவருக்கென்ன முதுகிலும் கண்கள் உள்ளனவா என்று ஆச்சரியப் படவைக்கும் விதத்தில்.) இளைஞர் மறுத்து விட, "சரி அப்படியானால் வா, ஒரு மரண விளையாட்டு விளையாடலாம்" என்று இளைஞரை மேசைக்கு அழைக்கிறார். கைத்துப்பாக்கியிலுள்ள தோட்டாக்களில் ஒன்றை மட்டும் விட்டு வைத்து, மற்றவைகளை நீக்கி, இளைஞரை Russian roulette ஆட அழைக்கிறார். இளைஞர் மறுபடியும் தயங்க, "சரி, முதலில் எனது முறை" என்று தன் தலையைக் குறிவைத்து சுட்டுக் கொள்கிறார். துப்பாக்கி வெடிக்காது, உயிர் பிழைக்கிறார் இளம் பெண். அடுத்து உன் முறை என்று துப்பாக்கியை இளைஞரிடம் நீட்ட, இளைஞர் "எனக்கு இறந்து போக விருப்பமில்லை" என்கிறார். அது விளையாட்டு விதியை மீறுவதாகும் என்று கூற, இளைஞர் முதலில் தயங்கி, பின் ஒரு முறை சுட்டுக் கொள்கிறார். வெடிக்காததால் சலிப்பேற்பட்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை சுட்டுக் கொள்ள (அவையும் வெடிக்காமல் போக), பெண் அவரை நோக்கிப் பாய்ந்து அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைக் காப்பாற்றி, அவர் விளையாட்டு விதியை மீறியதாகக் கடிந்து கொள்கிறார். இச்சம்பவம் இருவருக்குமுள்ள உறவை மாற்றி ஒரு நட்புணர்வை ஏற்படுத்துகிறது. அந்த இளம் பெண்ணுக்கு, இளைஞரின் மீதுள்ளக் காதலும் வெளிப்படுகிறது.

(மூட் வரும்போது தொடரப்படும்)

2 கருத்துகள்:

மணியன் சொன்னது…

கடைசிவரை திரைப்படம் பேர் சொல்லவில்லையே ;)

Voice on Wings சொன்னது…

மணியன், நிச்சயமாக, படத்தின் பெயரை இறுதியில் சொல்லலாமென்றுதான் இருக்கிறேன் :) அதற்கு முன், படத்தைப் பற்றி ஒரு இரண்டு மூன்று இடுகைகளைப் படிக்க வேண்டியிருக்கும் :)